“இல்லம்மா, நீ உட்கார். இப்பத்தான் சாப்பிட்டு வந்தேன். இந்தநேரம் வேண்டாம். கிளம்புபோது குடிக்கறேன்…” என்று சொல்லியவர்,
“தம்பி வித்யா விஷயமா சொன்னானாம்மா?…” என்று கேட்க பதிலின்றி அமர்ந்திருந்தார்.
“இல்ல எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம். அவளுக்கு சரியாகிடும்ன்னு சொன்னாலும் எனக்கு சந்தோஷம் தான். ஆனா…” என்ற செண்பகத்தை கையமர்த்தி தடுத்தவர்,
“இங்க பாரும்மா, இன்னைக்கு எல்லா செக்கப்பும் பண்ணிட்டாங்க. ரத்தக்கட்டி இருக்கிற இடம் ஆபத்தில்லாம தான் இருக்கு. என்ன ஒன்னு ஆப்பரேஷன் பண்ணினா தான் பிரச்சனை. ஆனா கட்டியை கரைக்க கூடிய மருந்துகளை மாத்தி குடுத்திட்டிருக்காங்க. கூடிய சீக்கிரம் வித்யாவுக்கு முழுசாவே குணமாகிரும்….” என்ற அண்ணாமலை,
“உன்னோட பயமே அதுதானே? வித்யாவுக்கு எதுவும்னா முரளி எதிர்காலம் என்னவாகுமோன்னு. இப்ப நீ பயந்தமாதிரி எதுவுமில்லைன்னு செக் பண்ணி சொல்லிட்டாங்க. உன்னை வற்புறுத்தி சம்மதிக்க சொல்றதுக்காக பேச வரலை. உன்னோட பயம் அவசியமில்லைன்னு சொல்லத்தான் வந்தேன்…” என்றார்.
“இதுக்கு மேல உன்னோட விருப்பம். இது கல்யாணம், ஒவ்வொருத்தரையும் இழுத்து பிடிச்சு பண்ண வைக்க முடியாது. வித்யாவும், முருகேஸும் உனக்கு பிடிக்காதுன்னு தான் ஒதுங்கி போறாங்க. அவங்க அதுக்கு மேல யோசிக்கலை. நீ யோசிஎன். சரின்னு தோணிச்சுன்னா எல்லாரும் சந்தோஷமா நடத்தலாம் இந்த கல்யாணத்தை…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.
“என்னண்ணே ஒண்ணுமே சாப்பிடாம போறீங்க?…” என்று இளவரசு கேட்க,
“வித்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னதே எனக்கு எனக்கு இன்னைக்கு மனசு நிறைஞ்சு போச்சு. அது போதும். போய் வேலையை பாருடா. சும்மா அதையே செண்பகத்துக்கிட்ட பேசாத. யோசிக்கட்டும்…” என்று கிளம்பிவிட்டார் அண்ணாமலை.
வீட்டினுள் வந்த இளவரசு செண்பகத்தை தேட அவர் பூஜையறை சென்று அமர்ந்திருந்தார்.
‘இவ்வளோ பாசத்தை மனசுல வச்சுக்கிட்டு எவ்வளோ முரண்டு பன்றா? இவளுக்கு தப்பாம இருக்கான் என் மகன்’ என்று நினைத்தபடி முரளிக்கு அழைக்க,
“வந்துட்டே இருக்கேன் ப்பா…” என்றான் முரளி.
“இப்பதான் அண்ணே வந்து அம்மாக்கிட்ட பேசிட்டு போனார் முரளி…”
“ஓஹ், சரி…”
“என்னடா வெறும் சரின்ற?…”
“ஆமா, அம்மா எப்படியும் எதுவும் சொல்லியிருக்க போறதில்லை. இல்லைன்னா சைலன்ட்டா கேட்டுட்டு இருந்திருப்பாங்க. வேறென்ன நடந்திருக்கும்?…” என்றவனை எண்ணி வியந்தவர்,
“சரித்தான். அப்போ உங்கம்மா கல்யாணத்துக்கு சம்மதிப்பான்னு எதாச்சும் ஆருடம் சொல்லிட்டேன் நீயே? நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்…” என்று சொல்ல முரளியின் புன்னகை தான் அவரை அடைந்தது.
“என்னடா சிரிக்கிற?…” என்று இளவரசு கேட்க,
“சந்தோஷமா சிரிக்கறேன். புரிஞ்சுக்க வேண்டாமா? இதுவே ஆருடம் தான்…” என்றான் மீண்டும் புன்னகையுடன்.
“நீ சந்தோஷமா இருக்கனும்டா. அதைவிட எனக்கு வேற என்ன வேணும்? பத்திரமா வா…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தார் இளவரசு.
முரளி வீட்டின் வளாகத்திற்குள் நுழைகையில் முருகேஸ்வரி கோவிலுக்கு சென்றுவிட்டு உள்ளே வந்துகொண்டிருக்க,
“என்னத்தை எனக்கெல்லாம் பிரசாதம் இல்லையா?…” என்று நிறுத்தினான் அவரை.
அவனை பார்த்துவிட்டு தான் அங்கிருந்து வேகமாய் விலகி செல்ல நடக்க அதற்கு முன் அவரை பிடித்துக்கொண்டான்.
“உங்ககிட்ட தான் கேட்டேன்…” என சிலையாய் நின்றுவிட்டவரிடம் மீண்டும் கேட்க,
“கோவிலுக்கு போனேன் தம்பி…” என்றார் அவர் பாவமாய்.
“அதனால தான் பிரசாதம் கேட்டேன். தரமாட்டீங்களா?…” என்று கேட்க விசாலாட்சியும் வந்துவிட்டார்.
“அவன் தான் கேட்கான்ல. குடேன்…” என்று அவரும் சொல்ல, முருகேஸ்வரி முரளியிடம் பூஜை கூடையை நீட்டினார்.
“அட கூடவே பிரசாதமும் இருக்கே…” என்று அந்த இலையில் இருந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டான்.
விட்டால் போதும் என்பதை போல முருகேஸ்வரி ஓட நினைக்க, அவரை விடாமல் நிறுத்தியவன்,
“அட நில்லுங்க த்தை. எவ்வளோ நாளாச்சு உங்ககிட்ட பேசி?…” என்று கேட்டு,
“கல்யாணம் நல்லபடியா நடக்கனும்ன்னு வேண்டுதலா த்தை?…” என அவரை ஸ்தம்பிக்க செய்தான்.
“ஆமா,,,, இல்ல ….யார், யார் கல்யாணம்?…” என்று தடுமாறி கேட்க,
விசாலாட்சிக்கு அவனின் கலாட்டாவில் சிரிப்பு வந்தாலும், முருகேஸ்வரியின் அதிர்ந்த முகம் கண்டு பாவமாய் இருந்தது.
அவருக்கு முரளி எதை பூடகமாய் சொல்கிறான் என்றே தெரியவில்லை. ஆனால் மகள் மீது எவ்வித சந்தேகமும் இல்லை.
முரளி எதுவும் செய்வானோ என்று தான் அவனை அரண்டுபோய் பார்த்தார் முருகேஸ்வரி.
“அடடா, பிரசாதம் சாப்பிட்டதனால நெத்தில இந்த கையோட எப்படி வச்சுக்க? நீங்களே வச்சுவிடுங்க த்தை…” என்று அடுத்ததாய் கேட்க முருகேஸ்வரி இன்னுமே பயந்து போய் பார்த்தார்.
எங்கே செண்பகம் வந்துவிடுவாரோ என்றோருபக்கம் அச்சம் என்றால், இவன் என்ன இன்று இத்தனை செய்கிறான் என்ற பயப்பந்தும் அவரை சுழற்றியது.
“அதான் கேட்கிறான்ல. இப்பத்தான் பொண்ணு வீடு கூடி வந்திருக்கு. நல்லபடியா சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு நெத்தில வச்சுவிடு முருகேஸு…” என்றார் விசாலாட்சி.
“இல்லக்கா நீங்களே?…” என முருகேஸ்வரி மறுக்க,
“ப்ச், உளுந்தை தோண்டிட்டு அரிசியை போட்ட கையோட வந்துட்டேன். சரியா கூட கழுவலை. நீயே வை…” என்று சொல்ல தாமரைக்குளம் அருகில் முழுமுதற்கடவுளான விநாயகர் முன்னிலையில் முருகேஸ்வரி முரளியின் நெற்றியில் விபூதி, குங்குமத்தை வேண்டுதலுடன் வைத்துவிட்டார்.
“என்னன்னு வேண்டிட்டு வச்சீங்க?…” என்று சிரிப்புடன் அவன் கேட்க,
“உங்கம்மா பார்க்கிற பொண்ணை அவங்க மனசு போல கல்யாணம் பண்ணிட்டு நிறைஞ்ச வாழ்க்கை வாழனும்ங்க தம்பி….” என்றார் முருகேஸ்வரி.
“கண்டிப்பா எங்கம்மா மனசு போல தான் என் கல்யாணம் நடக்கும். உங்க ஆசிர்வாதமும் நிறைவேறும். தேங்க்ஸ் த்தை…” என்று சொல்ல,
“ப்ச், நான் சொல்ற உறவுமுறை சரிதான த்தை? அதான் கேட்டேன்…” என்றவன்,
“மருமகனா இல்லையா?…” என்று கிடுக்கிப்பிடி போல,
“மருமகன் தானுங்க தம்பி…” என்று சொல்லுவதற்குள் முருகேஸ்வரிக்கு உயிரே மிரண்டது.
எங்கே செண்பகம் இதனை கேட்டு தன்னை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிடுவாரோ என்று.
“அப்போ மருமகனுக்கு நாளைக்கும் இதே மாதிரி கோவில் பிரசாதம் வாங்கிட்டு வாங்க. இப்ப போகலாம்…” என்று சொல்ல, அடுத்தநொடி ஓட்டம் பிடித்தார் முருகேஸ்வரி.
“என்னடா, உங்கம்மா சரின்னு சொல்லியாச்சா? இந்த போடு போட்டுட்ட? பாவம் மிரண்டுட்டா…” என விசாலாட்சி சொல்ல,
“எப்ப பார்த்தாலும் ஓட்டம் பிடிக்கறாங்க இல்ல? அதான் சும்மா ஒரு ட்ரையல். எப்படி?…” என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டான் முரளி.
“அழகுடா முரளி. எப்பவும் இதே சந்தோஷத்தோட இதே சிரிப்போட நீ குடும்பமா வித்யாவோட வாழறதை நாங்க கண் நிறைக்க பார்க்கனும். என் கண்ணே பட்டுடும். முதல்ல உனக்கு சுத்தி போடனும். இரு வரேன்…” என்று உள்ளே ஓட சிரிப்புடன் தலையசைத்தபடி திரும்ப அங்கே செண்பகமும் கோவிலுக்கு சென்று வந்ததை போல கேட்டின் அருகே நின்றிருந்தார்.
“போச்சுடா…” என்று முரளி அசட்டு சிரிப்புடன் தலையில் கை வைக்க,
“இந்த நடிப்புக்கொண்ணும் குறைச்சல் இல்லை….” என்று முறைப்புடன் அவனை கடந்து செண்பகம்.
“என்னடா இது?…” என்று அதிசயித்து பார்த்தவனின் கால்கள் தரையில் பாவவில்லை.
“யாஹூ…” என்று சுற்று சுற்று சுற்றி திரும்பியவன் தன் கைப்பேசியை எடுத்து வித்திவ்யாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
மாடியில் மயில்மாணிக்க செடியின் அருகில் கடலலையை பார்த்தபடி அமர்ந்திருந்தவள், அவனின் செய்தி வந்தடைந்ததுமே எடுத்து பார்த்தாள்.
ஊருக்கு சென்றிருப்பானோ என்று நினைத்தபடி நேரத்தையும் கணக்கிட்டுவிட்டு அதனை திறந்து பார்க்க குரல்வழி செய்தி. அதனை தொட்டதுமே,
“திவ்யா…” என்ற துள்ளல் குரலோடு பின் தொடர்ந்து வந்தது முத்தச்சத்தம்.
“இன்னைக்கு உன் தூக்கமும் போச்சு. என்னை மாதிரியே நீயும் தவிக்க ஆரம்பிடி….” என்று மீண்டும் முத்தம் முற்றுபெறாமல் அவளை முற்றுகையிட்டது.
கையிலிருந்த கைப்பேசி மடியில் நழுவி விழ இதனை எதிர்பார்க்காதவள் காதுக்குள் உயிராய் அவனின் அழைப்பும், கொள்ளை காதல் கொண்ட முத்த தித்திப்பும்.
எங்கும் ஒளிந்துகொள்ள முடியாதபடி அலை ஓசையை தாண்டி அவனின் உயிரோசை அவளை வாரி சுருட்டிக்கொண்டது காதலாய்.