“என்ன வித்யா?…” என்று ரிதுபர்ணா வந்து தோளை தொட்டு அழைக்கும் வரை சிலையாய் சமைந்திருந்தாள் வித்திவ்யா.
முரளி அனுப்பியவற்றிலிருந்து இன்னும் வெளிவரமுடியாமல் தத்தளிப்புடன் அவள் தள்ளாடிக்கொண்டிருக்க ரிதுபர்ணாவின் அழைப்பு இன்னும் பதட்டமாக்கியது.
“வித்யா?…” கேள்வியாய் தங்கையை பார்த்த ரிதுபர்ணா, வித்யாவின் விழிகளின் தடுமாற்றமும், இந்த பதட்டமும் புதிதாய் தெரிய யோசனையாய் புருவம் சுருக்கினாள்.
ரிதுவின் பார்வையை கவனித்தவளுக்கு மேலும் பதட்டம் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.
சட்டென்று உடலில் ஊடுருவிய நடுக்கத்தையும் மறைக்கமுடியாமல் எழுந்துகொண்டவள் கைகள் தனது கைப்பேசியையும் பத்திரமாய் பற்றிக்கொண்டது.
தங்கையிடமிருந்து இத்தகைய மாற்றத்தை எதிர்பாராதவளுக்கு என்னவென்று ஆராயும் பார்வையாய் மாற,
“தூக்கம் வரலைன்னு உக்கார்ந்திருப்பா. இது ஒரு கேள்வியா?…” என ரிதுவின் அருகில் வந்து நின்ற ஆத்மா பேச,
“அப்படியா?…” என்ற ரிது,
“காத்து எவ்வளோ ஜில்லுன்னு அடிக்குது. இவளுக்கு வேர்க்குது பாருங்களேன்?…” என அதையும் சொல்லி தங்கையின் கன்னம், கழுத்தை தொட்டு பார்க்க முயல வேகமாய் பின்வாங்கினாள் வித்யா.
“என்னாச்சு உனக்கு?…” என்ற ரிதுபர்ணா வித்யா தடுமாறி விழாமல் பிடித்துக்கொள்ள, அந்த கைகள் அவளின் நடுக்கத்தை உணர்ந்தது.
“உடம்பும் சில்லுன்னு இருக்கு. ஆனா நடுக்கமும், இப்படி வியர்த்தும் போயிருக்கே?…”
“குளிர் காய்ச்சலா இருக்கும். அநியாயம் பண்ணிட்டிருக்க நீ. அவ விசாரணை கைதியா என்ன? இத்தனை கேள்வி கேட்கிற? பேசாம இருக்கமாட்டியா?…” என்றவன்,
“நீ போய் தூங்கு வித்யா. டாக்டர் இவ்வளோ நேரம் முழிச்சிருக்க கூடாதுன்னு சொன்னாங்க இல்ல?…” என்றதும் வித்யா தலையசைத்தாலும் அந்த வார்த்தைகள் அத்தனை நிம்மதியை தந்தது.
லேசாய் சிரிக்க முயன்று பின் ஒருவாறு நடுக்கத்துடன் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
தன் மீது அன்பு கொண்டவர்களிடம் மறைக்கிறோம் என்ற எண்ணமே அவளை பாடாய் படுத்தியது.
ஆனாலும் தன் எண்ணங்களை பகிரக்கூடிய நிலையில் அந்த கடவுள் தன்னை வைக்கவில்லையே என்ற வருத்தமும், அந்த கொடுப்பினை தனக்கில்லை என்னும் கழிவிரக்கமும் வித்யாவின் உறக்கத்தை கெடுத்தது.
ஆசைகொண்டவனின் ஆராதிக்கும் காதலை அனுபவிக்கும் பாக்கியமற்றவளாய் தன்னை நினைத்து தன் நிலையை நிந்தித்துக்கொண்டாள்.
இப்போது ரிதுபர்ணாவின் பதட்டமும், அக்கறையும் அவளை வெகுவாய் சோர்வுற செய்ய, முரளியின் காதலில், அவன் அனுப்பியதின் சந்தோஷத்தில் உறக்கம் தொலைப்பதற்கு பதில், தன் நிலை எண்ணி உறக்கம் தவிர்த்தாள்.
வித்யா சென்ற திசையையே பார்த்து நின்ற ரிதுபர்ணாவின் குழப்பமான முகம் கண்ட ஆத்மா,
“எவ்வளோ நேரம் இப்படியே நிக்க போற? அவ போயாச்சு…” என்றான்.
“ப்ச், என்னவோ வித்யாக்கிட்ட சேஞ்ச்…” என்றபடி ஆத்மாவின் முகம் பார்த்தாள் ரிதுபர்ணா.
“வாழ்க்கைனா மாற்றங்கள் இருக்கத்தானே வேணும்? இது வித்யாவுக்கான மாற்றம். ஆனா நீங்களாம் மாறவிடனுமே?…” என்றான் பூடகமாக.
“என்ன சொல்ல வரீங்க? தெளிவா சொல்லுங்க…”
“இதைவிட தெளிவா என்னடி சொல்ல? அதான் தெரியுதே உனக்கே?…” என்றவன் தன் அருகில் மனைவியை இழுத்துக்கொண்டான்.
“சித்திக்கு விருப்பமிருக்காது…” விஷயத்திற்கு நேரடியாக வந்துவிட்டாள் ரிதுபர்ணா.
தன் கேள்வியையும் கூட தெளிவாய் கண்டுகொண்டு அந்த கட்டுக்குள் வந்து நிற்பவள் மீதான பித்தம் மேலும் கூடியது ஆத்மாவிற்கு.
“அப்போ உன் சித்தி தான் பிரச்சனையா?…”
“செண்பகம் அத்தை ஒத்துக்கவே மாட்டாங்க…”
“வித்யாவுக்கு விருப்பம் இருந்தா?…” என்ற ஆத்மாவின் கேள்வியில் லேசாய் புன்னகைத்தவள்,
“இருந்தாலும் சொல்லமாட்டா. சூழ்நிலையை மட்டுமில்லை, உறவுகளையும் புரிஞ்சு நடந்துக்கறதுல அவளை மாதிரி இருக்க யாராலையும் முடியாது. நானுமே தான்….”
“ஸோ உனக்கு அவளோட மாற்றம் புரியுது தானே ரிது?…” என்றவனின் கேள்வியில் முகம் கசங்கினாள் ரிதுபர்ணா.
“இன்னும் என்ன ரிது? உனக்கே புரியுது. ஆனாலும் எதுக்காக இந்த அமைதி?…” என்றதும் விழிகள் கலங்கிவிட்டது அவளுக்கு.
“முரளியை வித்யாவுக்கு முடிக்கிறதுல உனக்கு ஒரு பர்சண்ட் விருப்பமில்லைன்னு சொல்லு. நான் அடுத்து எதுவுமே பேசமாட்டேன்…” என்று ஆத்மா கேட்கவும்,
“ஒரு பர்சண்ட் கூட விருப்பமில்லைன்னு சொல்லமுடியாதே? நூறு சதவீதம் மனசு முழுக்க அவ்வளோ ஆசை. வித்யா மேல அவன் வச்சிருக்கற அந்த எதிர்பார்ப்பில்லாத அவனோட விருப்பம் எத்தனை உண்மையானதோ அதே அளவுக்கு செண்பகம் அத்தை அவன் மேல வச்சிருக்கற எதிர்பார்ப்பும் பொய்யாக கூடாதுன்னு நினைக்கறேன்…”
“ரிது…”
“ப்ச், சும்மா வித்யா, முரளின்னு மட்டும் பார்க்காம எல்லாரையும் தான் நாம பார்க்கனும். வித்யா முரளியை கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கப்பறம் எப்பாவாவது அவளுக்கு அத்தைக்கும் சிறு பிசகல்ன்னாலும் அது எல்லாரையும் பாதிக்கும். எல்லாரும்ன்னா நம்மளையும் சேர்த்து மட்டுமில்லை, முரளி வித்யாவையும்…”
“கல்யாணம்ன்னா சண்டையில்லாமையா? எல்லார் லைஃப்லையும் சண்டை இருக்கும் தானே? ஈவன் நம்மளையும் சேர்த்து தான்…”
“என்னை புரியவைக்க நான் பக்கம் பக்கமா பேசுவேன். என் நியாயத்தை தெளிவு படுத்துவேன். ஆனா வித்யா அப்படி பேசக்கூடியவ இல்லை. அவளால பேசமுடியாதுன்ற அர்த்தத்துல சொல்லலை. எல்லாத்தையும் வெளிப்படையா பேசாம மனசுக்குள்ள வச்சுப்பா…” என்றவள்,
“ஏன் இங்கையுமே வந்து வேலைக்கு போகனும்ன்னு சொன்னப்போ அவ நம்மக்கிட்ட வெளிப்படுத்தின விதம்? என்னால இப்பவும் மறக்கமுடியாது. எனக்கு என்னை விட என் தங்கச்சி முக்கியம் கண்ணத்தான். அவ வாழ்க்கை இதுவரை இருந்தமாதிரி இல்லாம சந்தோஷமா இருக்கனும்…” என்று சொல்ல ஆத்மாவிடம் அமைதி.
“உங்க கேள்விக்கான பதில், வித்யா எதிர்காலம் முரளியோட இருந்தா என்னைவிட யாருமே அதிகமா சந்தோஷப்பட்டுடமாட்டாங்க. ஆனா அந்த சம்மதம் முழுமனசா, எந்த கட்டாயமும், நெருக்கடியாலயும் எடுக்கப்பட்ட சம்மதமா இல்லாம இருக்கனும்….”
“அதோட முடிஞ்சதா என்ன? அடுத்துதான் இருக்கு. முருகேஸ்வரின்ற ஒரு அப்புராணி ஜீவன் இருக்கு. அவங்களை நிமிர்த்தவும் கூட நாம கொஞ்சம் கஷ்டப்படனும். அத்தனை சீக்கிரம் சம்மதிக்கனுமே? பார்க்கலாம்…”
“பார்க்கலாம்…” என்றான் அவனுமே அவளை போலவே.
“ஓஹ், அப்போ இப்ப பார்க்கலையா?…” என்று அவனை வம்பிழுக்க,
“ரூம்க்கு வந்து பார்க்கறேன். உன்னோட இந்த ஆசை பலிக்கனும்ன்னு வேண்டிக்கோ. உன் வேண்டுதலால கூடிய சீக்கிரம் நம்ம வீட்டுல கல்யாண களை கட்டிடும்…” என்றான் ஆத்மா.
“என்ன ஜோஸியமா?….”
“அப்படியும் சொல்லலாம். நீ போ…” என்று அவளை அனுப்பியவன் முரளிக்கு அழைத்தான்.
“சொல்லுங்கண்ணா…” என்றவன் குரலில் அப்படி ஒரு உற்சாகம்.
கேட்டுக்கொண்டிருந்த ஆத்மாவிற்குமே முரளியின் குரலில் இருந்த குளுமை மனதை குளிர்வித்தது.
“ரொம்ப சந்தோஷம் போலடா?…”
“ஆமாண்ணா, கொஞ்சநஞ்சம் இல்லை. நிறையவே. நானே உங்களுக்கு கால் பண்ணனும்ன்னு இருந்தேன்…”
“அதுக்கு முன்ன வித்யாவுக்கு ஒரு ஷாக் குடுத்திருக்க? அப்படித்தானே?…” கிண்டலாய் ஆத்மா கேட்க,
“ரகசியம்….” என சிரித்தான் முரளி ரகசிய குரலில்.
“பத்திரமா வச்சுக்கோ. இங்க பிள்ளை ப்ரீஸ் மோட் போயாச்சு. அவ்வளோ சந்தோஷமா?…”
“பின்ன இல்லையா? தி கிரேட் டெரர் செண்பகம் அம்மா கையில முரளி, திவ்யா ஜாதகம். கோவில் பூஜை கூடையில…” என்றான் உயிரெல்லாம் பூக்கள் பூக்க.
“முரளி…” ஆத்மாவிற்கு அவனின் சந்தோஷத்தில் பெரும் சந்தோஷம்.
“நானே இதை எதிர்பார்க்கலை தெரியுமா?…” என்றவன் ஒவ்வொன்றாய் சொல்ல,
“அடப்பாவி, முருகேஸ் அத்தை வீட்டை காலி பண்ணிட்டு போற அளவுக்கு கலாட்டா பண்ணிருக்க நீ…” என்றான்.
“அவ்வளோ சீக்கிரம் என் மாமியாரை அனுப்பிடுவேனா என்ன? வேணும்னா ஒன்னு பன்றேன், எங்க கல்யாணம் முடியவும் அவங்களை பேக்கப் பண்ணி மூத்த மருமகன் வீட்டுக்கு விருந்தாட அனுப்பிட்டு, அந்த வீட்டுல நானும் திவ்யாவும் தனிக்குடித்தனம் பண்ணிடறோம்…” என்று சொல்ல,
“ரொம்ப வேகமா போறீங்க தம்பி. நிதானம், நிதானம்…” என்று சொல்லிய ஆத்மா,
“ரொம்ப சந்தோஷம் முரளி. சீக்கிரமே சித்தி நல்ல முடிவுக்கு வந்திருவாங்க…”