“பிள்ளை பிடிபட்டுட்ட மாதிரி உன் அண்ணிக்கிட்ட பேந்த பேந்த முழிக்கிறா. உன் அண்ணி என்னன்னா குளிர் காய்ச்சலான்னு ஆராய்ச்சி செய்ய, வித்யா மயக்கம் போடாத குறை தான். நான் தான் போய் தூங்க சொன்னேன்….”
“காப்பாத்தி விட்டிருக்கீங்க. தெய்வம் அண்ணா நீங்க…”
“ஹ்ம்ம், விசாலம் அத்தை கூட இப்ப அதான் சொல்லிட்டு போனாங்க…”
“மறக்காம அத்தைக்கு ஸ்பெஷல் கவனிப்பு கவனிச்சிடு முரளி. அவங்க தான் சத்தமில்லாம வித்யா ஜாதகத்தை சித்திக்கிட்ட குடுத்தது. சும்மா போய் பொருத்தம் பாருங்களேன்னுசொல்லி பேசி பேசி கரைச்சிருக்காங்க….”
“வாவ், இது தெரியாதே?…” முரளிக்கு இன்னும் சந்தோஷம்.
“நேரம்டா, குடும்பமே என்ன பண்ணிட்டிருக்காங்க பாரு?…”
“இதெல்லாம் பெருமையா? கடமை அண்ணா…” என அதற்கும் முரளி குதூகலிக்க,
“முரளி…” என்ற ஆத்மாவின் குரல் இப்போது அழுத்தமாக மாறியது.
அவனின் அந்த அழைப்பின் பேதத்தை முரளியுமே கண்டுகொள்ள அதுவரை பொங்கிக்கொண்டிருந்த உற்சாகமும், சந்தோஷமும் மெல்ல அடங்கி அலையற்ற கடலாய் மாறியிருந்தது.
“இது ரிஸ்க் இல்லை முரளி. உண்மையை மறைக்கிறது. நான் அப்பாக்கிட்ட கூட சொல்லலை. திரும்பவும் செண்பகம் அத்தையை ஏமாத்தற மாதிரி இருக்குடா…” என்றான் ஆத்மா கரகரத்த குரலில்.
“பயப்படறீங்களா ண்ணா?…” என்ற முரளியின் கேள்வியில் கிஞ்சித்தும் சஞ்சலமில்லை.
“எப்படிடா நீ இப்படி இருக்க?…” என்ற ஆத்மா,
“உனக்காகவே உன் மனசுக்காகவே நீயும் வித்யாவும் நூறு வருஷம் ஒண்ணா சந்தோஷமா வாழனும்டா முரளி…” என்றான் ஆத்மார்த்தமாக.
“நிச்சயமா ண்ணா. பாருங்க, வானத்துல எவ்வளோ தேவதைகள் உங்க வாக்கு பலிக்கும், அது நடக்கும்ன்னு ததாஸ்து சொல்லிட்டிருக்காங்கன்னு….” என்று ஆத்மாவை இலகு படுத்த முயன்றான் முரளி.
மருத்துவமனையில் வைத்து அவனின் வார்த்தைகளுக்கு கட்டுக்களை போட்டுவிட்டான் முரளி.
வித்யாவின் உடல்நிலை குறித்தான பயமில்லாத விஷயங்களை மட்டுமே விஷயம் தெரிந்திருந்தவர்களுக்கு பகிர்ந்திருந்தவர்கள், மருத்துவர்கள் விடுத்திருந்த எச்சரிக்கையை தங்களுக்குள் புதைத்துக்கொண்டனர்.
“வித்திவ்யாவுக்கு சர்ஜரி பண்ணினா முழுமையான நம்பிக்கை தரமுடியாது. சர்ஜரி சக்ஸஸ் ஆகற சாதகம் இருக்கற அதேநேரம், தவறினா கோமாவுக்கும் போகலாம். இல்லை உயிரும்…” என்றவர்கள் அந்த பாதகத்தையும் சொல்லியிருக்க கல்லாய் தன் மனதை திடப்படுத்திக்கொண்டான் முரளி.
“அத்தனை சீக்கிரம் போக கூடிய உயிரா? அவ உயிர் என்கிட்ட இருக்கே? என் மேல ஆணை. சத்தியமா நீங்க இதை பெரிப்பாவுக்கோ, அப்பாவுக்கோ, முக்கியமா அம்மாவுக்கோ சொல்லவே கூடாது…” என்றுவிட்டான் முரளி.
மறுத்த ஆத்மாவை பேசி சமாளித்து, என்னென்னவோ சொல்லி கரைத்து தன் வார்த்தைகளுக்கு உறுதி தர வைத்துவிட்டான் முரளி.
“உங்களுக்கு நம்பிக்கை இல்லையாண்ணா? நாங்க நல்லா இருப்போம்…” என்று சொல்லி ஆத்மாவிடம் அந்த ரகசியத்திற்கு பூட்டு போட்டுவிட்டான்.
அவன் சரி என்றதும் சட்டென அந்த சம்மதத்தில் முகமெல்லாம் பூவாய் மலர்ந்தவன் முகம் கண்டு உள்ளம் சிதறியது ஆத்மாவிற்கு.
“உன்னால எப்படிடா சகஜமா இருக்க முடியுது முரளி?…” என அங்கே வைத்தே ஆத்மா கேட்க,
“நம்பிக்கை சாமி மாதிரி. நான் அதை நம்பறேன் ண்ணா….” என்றவனை பிரமிப்புடன் ஆத்மா பார்க்க,
“அதுமட்டுமில்லை. நீங்களும் நார்மலா இருங்க. சும்மாவே எதுக்கு வந்திருக்கோம்ன்னு தோண்டி துருவிட்டு இருக்கறவக்கிட்ட சோகமா போய் நின்னு இதுதான் ரகசியம்ன்னு சொன்னா முடிஞ்சது. முரளி அந்த நிமிஷம் செத்தான்…” என்றான் அதையுமே சிரித்துக்கொண்டே.
இதழ்கள் சிரித்தாலும் விழிகள் கலங்கி நின்றிருக்க முயன்று அதனை உள்ளிழுத்தவனை இழுத்து அணைத்துக்கொண்ட ஆத்மாவை துக்கம் விழுங்கியது.
“உன்னோட சாமியை நானுமே வேண்டிக்கறேன். நம்பிக்கை வைக்கறேன். எண்ணங்கள் நம்மோட நம்பிக்கையை வலுவாக்கட்டும் முரளி…” என தம்பிக்கு தோள் கொடுத்து தகப்பனாய் மாறி நின்றான் ஆத்மா.
“நீங்க என் கூட இருக்கும்போது எதை வேணுமானாலும் நான் தாங்கிப்பேன் ண்ணா. இது போதும்…” என நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள இருவரின் கைகளும் இறுக்கம் பெற்றது.
அந்த நியாபகங்களை அசைபோட்டபடி ஆத்மா இன்னும் அங்கேயே நின்றிருக்க ரிதுபர்ணா வந்துவிட்டாள்.
“என்னை போக சொல்லிட்டு நீங்க என்ன பன்றீங்க?…”என்று கேட்க,
“பூர்வி தூங்கிட்டாளா?…” என்றான் மனைவியின் முகம் கண்டு மனதை இலகுவாக்க முயன்று.
“ஹ்ம்ம், ஒரே வாய். அவ்வளோ பேச்சு. சுத்தமா முடியலை. அதான் வித்யாக்கிட்ட விட்டுட்டேன். அவக்கிட்ட என்னவோ கதை பேசிட்டிருக்கா…” என்றவள் தன் வயிற்றை பிடித்தபடி பார்த்தவள்,
“பாப்பாவுக்கு தம்பி பாப்பா வேணுமாம். அவளை மாதிரி கேர்ள் பேபி வேண்டாமாம்…” என்று சிரிப்புடன் சொல்ல,
“ஏனாம்? என் பொண்ணு அப்படியெல்லாம் சொல்லமாட்டாளே?…” என்றான் ஆத்மா.
“ம்க்கும், மெச்சிக்கோங்க. ஊர்ல நீங்க ரெண்டுபேரும் பண்ணின அழிச்சாட்டியம் பார்த்துட்டு சுந்தரியக்கா தான் வம்புக்குன்னே சொல்லிருக்காங்க. அடுத்து பொம்பள புள்ளை பிறக்கட்டும், அப்பாக்குட்டி அவளை அம்முக்குட்டின்னு தூக்கிட்டு போயிடுவார். அப்ப என்கிட்ட தான் நீ வரனும்ன்னு சொல்ல ரெண்டுபேருக்கும் ஒரே சண்டை…”
அடக்கப்பட்ட சிரிப்புடன் ஆத்மா பார்க்க அவனை அப்பட்டமாய் முறைத்தாள் ரிதுபர்ணா.
“அவளை சமாளிக்க நான் பட்டபாடு. எவ்வளோ பேச்சு பேசறா. அதுவும் சுந்தரியக்கா பேச்சுக்கு பதிலுக்கு பதில் பேசவும், புரியலைன்னா அந்த வார்த்தைக்கு என்ன மீனிங்ன்னு மதிக்கிட்ட கேட்டு, மதி ஒன்னு சொல்ல பெரிய ரகளையே ஆகிடுச்சு. எல்லாம் உங்களால…” என்று பேச மௌனமாய் புன்னகைத்தவன்,
“வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்….” என்றவன்,
“ஆனா அந்தமாதிரி எதிர்த்து பேசும் போது கண்டிக்காம இருக்காத நீ. தப்புன்னா வாய்லையே போடு…” என்றவன்,
“அங்கயே என்கிட்ட சொல்லியிருக்கலாமே?…” என்று கேட்டபடி அவளுடன் பேசிக்கொண்டே உள்ளே வந்துவிட்டான்.
திறந்திருந்த வித்யாவின் அறையில் எட்டி பார்க்க பூர்விதா பேச பேச அவளருகே சாய்ந்திருந்த வித்யா எப்போதோ குழந்தையின் பிஞ்சு விரல் ஸ்பரிசத்தில் மனகிலேசங்கள் குறைய உறக்கத்தை தழுவியிருந்தாள்.
“அவ தூங்கிட்டா. இவ இன்னும் பேச்சை பாருங்க…” என்ற ரிதுவை பார்த்தவன்,
“ப்ச், அமைதியா பேசு. இரு, நான் கூட்டிட்டு வரேன்…” என்று உள்ளே சென்று மகளை அழைக்கவும், சத்தமின்றி வந்து தகப்பனின் கழுத்தை கட்டிக்கொண்டாள் குழந்தை.
ரிதுபர்ணாவிற்கு எட்டாம் மாதம் ஆரம்பித்துவிட்டது. இடையில் பார்க்கவந்த ஆனந்தியும், முருகேஸ்வரியும் ஒன்பதாம் மாதம் ஆரம்பித்ததுமே கரூருக்கு அவளை அழைத்து சென்றுவிடவேண்டும் என்று சொல்லியிருந்தனர்.
‘முதலில் ஆரம்பிக்கட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.’ என்றுவிட்டான் ஆத்மா.
அண்ணாமலையிடம் சொல்ல அவருமே அதை தான் கூறியிருந்தார். அதனால் மாதம் நெருங்கவும் செண்பகத்தை தவிர்த்து மற்றவர்கள் பத்துநாட்களுக்கு ஒருமுறை யாரேனும் மாற்றி மாற்றி சென்னையில் ரிதுபர்ணாவுடன் இருந்து வந்தனர்.
ஆத்மாவுக்கும், முரளிக்கும் அத்தனை யோசனை. ஏன் இன்னும் செண்பகம் மௌனம் காக்கிறார் என்று தெரியவில்லை.
தான் பேசட்டுமா என்று ஆத்மா கேட்டதற்கும் முரளி மறுத்துவிட்டான். எதுவாக இருந்தாலும் அவரே தொடங்கட்டும் என்று சொல்லிவிட்டான்.
பேச்சிற்கு கூட இந்த பேச்சை தாங்கள் இம்முறை ஆரம்பிக்க வேண்டாம் என்பதில் தெளிவாய் இருந்தான் முரளி.
செண்பகம் தானாகவே கனிந்துவரட்டும் என்று உறுதியாய் இருக்க செண்பகத்தின் மாற்றங்கள் சிறுக சிறுக மற்றவர்களுக்கும் புரிய ஆரம்பித்தது.
அதில் கடைசியாக புரிந்துகொண்டது முருகேஸ்வரி தான். முன்பை போல முருகேஸ்வரியை பார்த்தால் பெரிதாய் முகம் காண்பிப்பதில்லை.
இல்லையென்றால் செண்பகத்தின் முகத்தில் அதிருப்தியும், ஆதங்கமும் அப்பட்டமாய் தெரியும்.
இப்போதெல்லாம் அப்படி இல்லாமல் சாந்தமாகவும், அமைதியாகவும், ஏமாற்றமில்லாத ஒரு உணர்வும் அதில் தெரிந்தது.
“ஏன்க்கா பொண்ணு எதுவும் அமைஞ்சிருச்சோ? முரளி தம்பியும் சரின்னு சொல்லிருப்பாரோ? செண்பகம் மதினி இப்பலாம் நல்லா பார்க்கறாங்களே?…” என்று அப்பாவியாய் முருகேஸ்வரி அவர் அளவில் ஒரு கணிப்பில் சொல்ல,
“ஆமா, வயசு பொண்ணு நீ. உன்னை இப்பத்தான் அவங்க நல்லா பார்க்காங்க. போயிரு பார்த்துக்கோ. நல்லா வருது என் வாயில…” என்று விசாலாட்சி தலையில் அடித்துக்கொண்டார்.