“இல்ல கொஞ்சநாளா மூஞ்சியை திருப்பிக்காம போறாங்க. அதேன் எனக்கு பட்டதை சொன்னேன்? கோவிச்சிக்கிட்டீங்களாக்கா?…” என்று பாவம் போல் கேட்பவரை கோவிக்கவும் முடியவில்லை.
“முருகேஸு உன்னை என்ன சொல்றதுன்னே தெரியலை. உன் மனசுக்கு தான் நீ இனிமேட்டு நல்லா இருப்ப. உன் கண்ணுக்கு முன்னால நீ பார்க்க கண் நிறைஞ்சு வித்யாவும் நல்லா சந்தோஷமா இருப்பா…” என்றார் விசாலாட்சி மனமெல்லாம் நிறைந்த வாழ்த்துடன்.
“அப்படி மட்டும் நடந்துட்டா போதும். எனக்கு வேற என்ன வேணும் இந்த உலகத்துல?…” என கண்ணீரை துடைத்துக்கொண்டார் முருகேஸ்வரி.
இதோ இன்னும் நான்குநாட்கள் மட்டுமே இருந்தது ரிதுபர்ணாவிற்கு ஒன்பதாம் மாதம் துவங்க.
நல்லநாள் பார்த்து அழைத்து சென்றுவிடுவோம் என்று விசாலாட்சி, முருகேஸ்வரி, இருவரும் வந்திருந்தனர் சென்னைக்கு.
இடைப்பட்ட இத்தனை நாட்களில் முரளியும் சென்னை வரவில்லை. வித்யாவும் கரூர் செல்லவில்லை.
அதற்காக நித்தமும் அலைபேசி பேச்சுக்களும் என்றெல்லாம் இல்லை. காத்திருப்பின் சுகத்தை இருவருமே அனுபவிக்க, வார்த்தைகள் குறைந்து, எண்ணங்களின் நினைவுகள் நிஜமென விழிகளுக்குள் விரிந்தது.
அதனைகொண்டே நாட்கள் நகர இதோ அவர்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை தீர்மானிக்க அந்த தருணம்.
அதிகாலை அழகாய் விடிந்தது. விடியல் அவளுக்கு தரவிருக்கும் மகிழ்ச்சியை எதிர்பாராமல் அழைப்பு மணி சத்தத்தில் தானே சென்று கதவை திறந்தாள் வித்திவ்யா.
கதவை திறந்ததும் சூரிய கதிர்கள் வீட்டினுள் நுழைந்து அவளின் கண்களை கூச செய்ய, விழிகள் சுருங்க வந்திருந்தவரை பார்த்தவள் முகத்தில் நம்பமுடியாத பாவனை.
கண்ணை சிமிட்டி மீண்டும் பார்த்துவிட்டு நின்றவளின் தோற்றம் கண்டவருக்கும் உள்ளூர புன்னகை.
“என்ன இப்படியே கிளம்பிடட்டுமா? இல்ல உள்ள வரனுமா?…” என்றார் செண்பகம் அதட்டலுடன்.
“ஹாங்…” என்று அதிர்ந்த வித்திவ்யா வழிவிட்டு உள்ளே வரும்படி கையசைத்து அழைத்தாள்.
“இன்னும் ஒருத்தரும் இங்க காணும்? எங்க எல்லாரும்?…” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வர, தான் கூட்டி வருவதாய் சொல்லி திரும்ப பார்க்க,
“நில்லுடி, ஆமா உனக்கு தலைவலி, ட்ரீட்மென்ட் எடுக்காங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க. நீ என்னடான்னா இந்த பனில தலைக்கு குளிச்சிட்டு ஈரத்தோட சொட்ட சொட்ட நிக்கிற? இதான் உன் அக்கா உன்னைய பார்த்துக்கற லட்சணமா?…” என்று வேறு கேட்க திகைத்து விழித்தாள் வித்யா.
“இதுல எக்ஸ்ட்ரா பிட்டிங் மாதிரி உன் அம்மாவும், உன் பெரிம்மாவும் வந்திருக்காங்க. அவங்களுமா கவனிக்கல? நல்லா இருக்கு. போய் தலையை உனத்து…” என்று வரிசையாய் அவளை போட்டு தாக்க, மலங்க மலங்க விழித்தாள் வித்யா.
“சமைக்க வர்ற பொண்ணும் இன்னும் வரலை போல?…” என்று கேட்டுக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தார் செண்பகம்.
பின்னோடே சென்றவள் விழித்துக்கொண்டே நிற்க கண்டாலும் செண்பகம் அங்கிருந்த பாத்திரத்தை பார்த்து எடுத்து,
“பால் எங்க?…” என்றார்.
அப்போதுதான் வாங்கி வைத்திருந்த பாத்திரத்தை காண்பித்த வித்யாவிற்கு என்னவோ என்று நெஞ்சம் படபடத்தது.
“உனக்குத்தான் தெரியுமே எனக்கு விடிஞ்சதும் முதல்ல ஒரு தம்ளர் காபி உள்ள போனாதான் உடம்பு வேலையே செய்யும்ன்னு….” என்று அடுப்பை பற்ற வைத்து பாலை பாத்திரத்தில் ஊற்ற வித்யா அவர் கேளாமலே பில்டர் காபி, நாட்டு சர்க்கரை எல்லாம் எடுத்து வைத்தாள்.
மனதிற்குள் மெச்சிக்கொண்டவர் அவளை அப்பட்டமாய் முறைத்து பார்க்க ஏனென்று புரியாத பார்வை தான் அவரின் மருமகளிடத்தில்.
இன்னும் தலையில் நீர் சொட்டிக்கொண்டிருக்க அவரின் முறைப்பில், ‘இதோ போறேன்’ என்று கையசைத்துவிட்டு வெளியே வந்து தலையை துவட்டிக்கொண்டே கண்ணாடி ஜன்னல் வழியே உள்ளே செண்பகத்தை பார்த்தபடி தவிப்புடன் நின்றிருந்தாள்.
செண்பகம் திரும்பி பார்க்கவும் சட்டென வேறு திக்கில் திரும்பியவள், சிலநொடிகளுக்கு பின் தன்னருகே காபியின் வாசம் நாசியை நிறைக்க,
“நீ இன்னும் காபி குடிக்கலையா?…” என்று கேட்டபடி இருவருக்கும் கலந்து எடுத்து வந்திருந்தார்.
“பிடி, தனியா குடிச்சு சலிச்சு போச்சு…” என்று அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்துகொள்ள வித்யாவிற்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
அவளுமே குளித்து முடித்து வந்திருக்க, தோட்டத்தில் அமர்ந்திருந்த செண்பகத்தை கண்டு திகைப்புடன் பார்த்து நின்றாள்.
அதற்குள் ஜாக்கிங் சென்றிருந்த ஆத்மாவும் வியர்த்து விறுவிறுத்து வந்து நின்றான் அவரின் வரவை எதிர்பார்க்காமல்.
“கோயம்பத்தூர்ல கல்யாணத்துக்கு போறதா சொன்னானே முரளி?…” என்ற யோசனையுடன் முணுமுணுத்தபடி வந்தவன்,
“வாங்க சித்தி…” என்று வரவேற்றான்.
“நீயாவது வாங்கன்னு கூப்பிட்டியே. இங்க உன் பொண்டாட்டி என்னன்னா இன்னும் சிலை மாதிரி நிக்கிறா. அவ தங்கச்சி என்னைய வீட்டுக்குள்ள விடுவேனான்னு மறிச்சு நிக்கிறா. எல்லாம் என் நேரம்…” என்று அங்கலாய்க்க ஆத்மாவிற்கு புரிந்து போனது.
“யார் எப்படி நின்னா என்ன சித்தி? அவங்க கிடக்கறாங்க விடுங்க. இது உங்க மகன் வீடு. உங்க வீடில்லையா? முதல்ல இந்த ரெண்டுபேரையும் கரூருக்கு கடத்தனும்….” என்று அவரின் கையை பிடித்துக்கொண்டு அருகே அமர்ந்துகொண்டான் ஆத்மா.
“அதான் வந்தவாக்குல நானே காபியை போட்டு இவளுக்கும் குடுத்தா இன்னும் குடிக்காம உக்கார்ந்திருக்கறதை பாரு. பேசாம நான் இப்படியே கிளம்பிடுவேன்…” என்று அலப்பறையை கூட்டினார்.
அதில் வித்யா ‘வேண்டாம் வேண்டாம்’ என்று இருகைகளையும் அசைத்து சொல்லி ஒரே மடக்கில் காபியை குடித்துவிட்டு, ‘குடிச்சிட்டேன். போகாதீங்க. நான் வேணா போகவா?’ என்று ஆரம்பித்துவிட்டாள்.
“அடிச்சேன்னு வையி. நான் எல்லாம் என் உங்கம்மா, உங்கக்கா மாதிரி கொஞ்சிட்டே இருக்கமாட்டேன். சும்மா கண்ணீர் வடிச்ச கண்ணு முழியை நோண்டிருவேன், புரியுதா?…” என்று கேட்க இன்னும் ரிதுபர்ணா நம்பமுடியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன ரிது? அப்படியெல்லாம் செய்யமாட்டேன்னு நினைக்கிறியா? எனக்கு அந்த உரிமை இருக்கு தானே?…” என்று அவளை நெருங்கி செண்பகம் கேட்ட நொடி சத்தமிட்ட அழுகையுடன் அவரை கட்டிக்கொண்டு ரிது கண்ணீர் சிந்த,
“இந்தா போட்டேனா பாரு. கொஞ்சநாள் தள்ளி நின்னா அப்படியே போயிருவேனா? அதுசரி, உனக்கு உன் சித்தி தான அம்மா மாதிரி. என்னைய என்னிக்காச்சும் சொல்லிருக்கியா நீ? ஆனா நான் அப்படித்தான்டி நினைச்சிட்டிருக்கேன்….” என்று பேச பேச இன்னுமே கரைந்தாள் அவள்.
வித்திவ்யாவுக்கு புரிந்தும் புரியாத நிலை. மூச்சுவிடவும் மறந்து அவள் நின்றிருக்க,
“சரி அழாத. எங்க உன் சித்தியும், பெரிம்மாவும். இம்புட்டு நேரத்துக்கு வராம இருக்கமாட்டாங்களே?…” என்று கேட்க,
“ம்க்கும், என் மாமியார் அதுக்கு மேல. இந்த வேலை எல்லாம் எனக்கு குடுத்தா பம்பரமா சுத்துவேன். முருகேஸ் அத்தையை காவல் காக்கற பொறுப்பை குடுத்து அந்தம்மா அப்பப்ப எதையாச்சும் புலம்பி என் பிபியை ஏத்துது…” என்று தன்னருகில் அமர்ந்திருந்த முருகேஸை கொலைவெறியுடன் பார்த்தாள் சபர்மதி.
“அதுக்கில்ல கண்ணு, கண்ணு பட்டுடும்ன்னு…” என்று முருகேஸ் பயந்துகொண்டு சபர்மதியிடம் பேச,
“அதான் அம்புட்டு கண்ணையும் உங்க வாய்க்குள்ள வச்சிருக்கீங்களே? அப்பறமும் வந்து போடறாங்க கண்ணு. ஷட்அப். பேசினீங்க பார்த்துக்கோங்க…” என்று அதட்டினாள்.