“கூட என்னையும்ல செவனேன்னு உக்கார வச்சிருக்கீங்க? எல்லாம் என் நேரம். இனி ஒத்த வார்த்தை வந்துச்சு, இந்த பக்கம் என் புருஷன், அந்த பக்கம் செண்பகம் சித்தின்னு நடுவுல உங்களை உக்கார வச்சி பஞ்சாயத்து பண்ணிருவேன், பார்த்துக்கோங்க…” என்ற மிரட்டலில் கப்சிப் ஆகிவிட்டார் முருகேஸ்வரி.
“ஆத்தி கண்ணு…” என்று எழுந்து செல்ல போன முருகேஸை கையிலிருந்த சிறிய கம்பை கொண்டு நிறுத்தியவள்,
“இந்த கோட்டை தாண்டி நீங்க நகர்ந்தீங்க, பார்த்துக்கோங்க….” என்ற சபர்மதி,
“அட நீவேற அடங்குடி. உன் மாமியார் வேற இதுக்கு தனியா வந்து என் கழுத்தை அறுக்கும்….” என்றவள்,
“ஒரே மாமியார்கள் ராஜ்ஜியமப்பா. ஐ டோன் லைக் இட்…” என்று தலையாட்டி அட்டகாசம் செய்துகொண்டிருந்தாள்.
அது முரளி வினோகரன், வித்திவ்யாவின் திருமணம் நல்லவிதமாய் நடப்பதற்கான பூஜை.
இருவரின் திருமணத்தில் சிறுசிறு தடங்கல்கள் இருப்பதாய் கட்டங்கள் காண்பித்ததாக சொல்லியிருக்க, அவர் சொல்லியதன் முக்கியமான பூஜையை செய்ய அனைவரையும் கூட்டிவிட்டார் செண்பகம்.
ஊரில் அத்தனைபேருக்கும் தெரிந்திருந்தது முரளி, வித்யாவின் திருமண செய்தி. அதனை செண்பகத்தின் மூலமாகவே அறிந்துகொண்டனர்.
“இப்படி பொண்ணு வேணும், அப்படி பொண்ணு வேணும்ன்னு சல்லைடை போட்டு சலிக்காத குறையா எம்புட்டு பொண்ணை தட்டிவிட்டு போயும் போயும் இவளை…” என்று பேசியவளின் வாயை கிழிக்காத குறையாய் தூக்கி தொங்கவிட்டுவிட்டார் செண்பகம்.
“என் புள்ள கல்யாணம் என் இஷ்டம். இப்பவும் நானா தான் வித்யாவை விரும்பி கேட்டு என் புள்ளைக்கு முடிக்க போறேன். எவளுக்கு வலிக்குதாம்? எவளாச்சும் பேசினீங்கன்னு என் காதுக்கு வந்துச்சு, தேடிவந்து நாறடிச்சிருவேன்…” என்று சினந்திருந்தார்.
“எதாச்சும் லவ்வா இருக்கும். அதான் சத்தமில்லாம பேசி முடிச்சிக்கிட்டாங்க. ஒரே காம்பவுண்டுக்குள்ள வேற இருக்காங்க. யாரு கண்டா?…” என பேசிய பேச்சு அங்குமிங்குமாய் சுற்றி செண்பகத்தின் காதிற்கே வர, பேசியவரை ஒரு பொது இடத்தில் பார்த்ததும் பிடித்துவிட்டார் அந்த பெண்மணியை.
“லவ்வா இருந்தா இருந்துட்டு போகுது. உனக்கேதும் நட்டமா அதுல? பெருசா ராணுவ ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டியோ? வந்துட்டா சிஐடி ஆபீசர். என் வீட்டு காம்பவுண்டுக்குள்ள உன் மூக்கை நீட்டின நறுக்கி விட்டுருவேன் பார்த்துக்க….” என்று எகிறி இருக்க அதற்குமேல் ஒருவரும் பின்னால் கூட வாயை திறக்கவில்லை.
எங்கே யாரிடமும் பேசி, யாரின் மூலமாகவும் செண்பகத்திற்கு சென்றுவிடுமோ என்று அரண்டு அந்த பேச்சுக்களையே தவிர்த்தனர்.
‘பெரிய குடும்பத்து பொம்பளை. ஆனா யப்பா, ஒரு வார்த்தை யார்க்கிட்டயும் பேச முடியுதா?’ என்று புரணியும் பேசமுடியாமல் வீட்டிற்குள் அவர்களாகவே புலம்பிக்கொண்டனர்.
இப்போது அந்த ஊரே அசந்து போகும் அளவிற்கு பூஜையை ஏற்பாடு செய்திருந்தார் செண்பகம்.
“திருஷ்டி ஆகிடும் மதினி…” என்று விசாலாட்சி கூட சொல்லிவிட்டார்.
“திருஷ்டி கழியும் விசாலம். என் பிள்ளை கல்யாணத்துல எந்த குறையும் இல்லாம நல்லபடியா நடந்து ரெண்டுபேரும் நூறு ஆயுசுக்கும் சந்தோஷமா வாழனும்…” என்று சொல்ல ஆத்மாவின் மனதில் மெல்லிய நடுக்கம்.
அத்தனைபேரின் பிராத்தனையும், ஆசிர்வாதமும், வாழ்த்தும் நிச்சயம் வித்யாவின் ஆயுளை நீட்டிக்க செய்யும் என்று வேண்டிக்கொண்டான் ஆத்மா.
ரிதுபர்ணா ஒருபக்கம் அமர்ந்திருக்க, ஆண்கள் எல்லாம் அன்னதானம் நடக்கும் இடத்தில் கவனிக்க சென்றிருக்க, விசாலாட்சியும், ஆனந்தியும் மதிய உணவுக்கான பொருட்கள் எல்லாம் போதுமா, வேண்டுமா என்று கேட்டுக்கொண்டு நின்றிருந்தனர்.
அப்போதுதான் காலை உணவு நடந்துகொண்டிருந்தது. அன்று முழுவதும் கோவிலில் அவர்கள் சார்பில் அன்னதானம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரமங்களுக்கும் தனியே ஆத்மா சொல்லிவிட்டான்.
“என்ன கண்ணா, இன்னும் முரளியை காணும்?…” என்று அண்ணாமலை கேட்க,
“ஏன் நீங்களும் தான் சொன்னீங்க, போகாதன்னு. கேட்டானா? ரிது கர்ப்பமா இருக்கற நேரம், கூட இருங்கன்னு அவன் கிளம்பிட்டான். அவனுக்கு தான் எனக்கப்பறம் அங்க ஹார்பர்ல ஆளுங்களை தெரியும்….” என்றவன்,
ஹ்ம்ம், சரி. இந்த கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு அவங்க வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டா போதும்…” என்று சொல்லிய அண்ணாமலை திரும்பி பார்க்க அங்கே பள்ளி குழந்தையை போல முருகேஸ்வரி அமர்ந்திருக்க, அவரை குச்சியை நீட்டி என்னவோ அதட்டி பேசிக்கொண்டிருந்தாள் சபர்மதி.
“இந்த பிள்ளையால தான் இந்த பரத் பைய கொஞ்சம் உருப்படியா இருக்கான். பாரேன் அங்க…” என்று காண்பித்தார் மகனிடம்.
“மதிக்கிட்ட தான் அம்மாவையும் பார்த்துக்க சொல்லனும். வழிக்கு கொண்டுவந்திடுவா…” என்று ஆத்மாவும் கேலி பேசினான்.
அந்த மண்டபத்தின் நடுவிலிருந்த விக்கிரகத்தின் முன்னிலையில் அத்தனை பெரிதாய் வித்யா பூக்கோலம் போடுவதை பார்த்தே மனோவிற்கு மலைப்பானது.
“ரெடியா இருக்கும்மா. நீ போட்டு முடிச்சதும் ஏத்திடலாம்…” என்றவள் அங்கிருந்த விளக்குகளை காண்பித்தாள்.
மண் விளக்குகளில் மனோ திரியை போட, வித்யா எண்ணெய்யை விட இன்னும் இருவிளக்குகளுக்கு எண்ணெய் போதவில்லை.
“அடடா, இரு நான் போய் வாங்கிட்டு வரேன். நீ இதை ஏத்தி வை…” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.
பெருமூச்சுடன் ஒவ்வொரு விளக்கையும் பூக்கோலத்தை சுற்றி வைத்த வித்யாவிற்கு புடவையுடன் அதனை செய்ய சற்றே சிரமமாய் இருந்தது.
முதன்முதலில் புடவை கட்டியிருக்க, நடக்கும் பொழுது சரசரக்கும் புடவை எங்கே தன்னை தடுமாறி விழ செய்துவிடுமோ என்று எப்போதும் படபடப்பிலேயே தான் இருந்தாள்.
சபர்மதியை தான் ஒருவழி செய்துவிட்டாள் புடவை நழுவாதே, அவிழாதே என்று கேள்வி கேட்டேன்.
“உங்கம்மாவும், நீயும் ஒவ்வொரு டிஸைனா உயிரை வாங்கறீங்க. இன்னைக்கு என் புருஷன் முகத்துல முழிக்கும் போதே நினைச்சேன் நான்…” என்று அவள் ஒருபக்கம் புலம்பல்.
அதனை எண்ணி சிரித்துக்கொண்டே விளக்குகளை கோலத்தை சுற்றி வைத்துவிட்டு, அவற்றில் தீபங்களை ஏற்ற, எண்ணெய் இல்லாத அந்த விளக்கில் எண்ணெய் நிரப்பப்பட்டது முரளி வினோகரனால்.
“உன் கண்ணுல கூட தீபம் ஏத்தலாம் போல….” என கொள்ளை கொள்ளும் புன்னகையுடன் கண் சிமிட்டினான் முரளி.
பட்டுவேஷ்டி சட்டையில் அமர்க்களமாய் நின்றவன் முகம் அவனின் அகத்தின் மகிழ்ச்சியை எடுத்துரைத்து அவளிடம்.
வெகுநாட்களுக்கு பின்னான முழுமையான சந்தோஷமும், பூரிப்புமாய் அவனின் புன்னகை.
செண்பகம் சென்னை வந்து பேசி, வித்யாவையும், ரிதுவையும் அழைத்துக்கொண்டு கரூர் வந்து இத்தனை நாட்களாகி முரளியை பார்க்கமுடியவில்லை.
இடையில் பேச்சுக்கள் கூட இல்ல. வெகுநாட்களுக்கு பின் அன்றுதான் காண்கிறாள் அவனை.
அதுவும் தனக்கானவனாய், தன் குடும்பத்தினர் தன்னிடம் அவனை முழுமையாய் தந்திருக்க கண்களில் அதன் காதல் மின்னியது.
“பர்ஸ்ட் டைம் புடவைல பார்க்கறேன். நாட் பேட்…” என்று வேறு அவன் சொல்ல, லேசாய் முறைத்தவள் மீண்டும் அமர்ந்து விளக்கை ஏற்ற அவன் விழிகள் அவளழகை மனதில் ஏற்றியது கார்த்திகையின் தீபமாய்.
காதலாய் கவிதையாய் தன் காத்திருப்பின் நிறைவை அவளிடம் வரிக்க கோடி பன்னீர் பூக்களாய் வார்த்தைகள் அலைமோத, அவனால் ஒருவார்த்தை கூட உதிர்க்க முடியவில்லை.
பாரிஜாத மணமாய் சுவாசத்திற்குள் உயிர் தந்த அந்த வார்த்தைகளை மௌனமொழியாள் தன் விழிகொண்டு பாஷைகளற்ற அரங்கேற்றத்திற்கென மேடையேற்றியிருந்தாள்.
மௌனமாய் அவ்வுணர்வை அசைபோட்டு, ஆராதித்து, கடவுளின் பாதத்தில் தன் மனதின் விருப்பங்களை சரணடைய செய்தான் முரளி வினோகரன்.