முரளியின் வரவின் பின் அனைவரும் சந்நிதியில் வந்து ஒன்றுகூடி நிற்க பூஜை துவங்கியது.
“ரெண்டுபேரும் சேர்ந்து நில்லுங்க…” என முரளி, வித்யாவை அண்ணாமலை சேர்த்து நிறுத்த அனைவரின் கண்களும் நிறைந்தது.
முருகேஸ்வரிக்கு இன்னும் நம்பமுடியாத ஒன்றுதான் இந்த சம்பந்தம். மகளை கண்ணார கண்டு ரசிக்க முடியாமல் என்னவோ ஒன்று தடுக்க, அதையும் மீறி நெஞ்சை முட்டும் சந்தோஷம் தான்.
செண்பகம் கேட்டதும் அத்தனை சுலபத்திலா அவரும் சம்மதித்தது. நினைவுகள் ஆத்மாவின் வீட்டில் இருந்ததை அசைபோட துவங்கியது.
அன்று கோவிலுக்கு சென்றுவிட்டு வருகையில் செண்பகத்தின் வருகையை எதிர்பாராதவர் என்னவோ என்ற யோசனையுடன் தான் விசாலாட்சியுடன் வீட்டினுள் நுழைந்தார்.
உள்ளே வந்தவர் செண்பகத்தின் அருகிலேயே வராமல் சுவற்றோடு ஒண்டிக்கொண்டு நிற்க,
“எப்ப வந்தீங்க மதினி? என்ன திடுதிப்புன்னு இங்கிட்டு வரவு?…” என்றார் விசாலாட்சி இலகுவாய்.
“கொஞ்சம் முன்னாடி தான்…” என்ற செண்பகம் முருகேஸ்வரியை பார்க்க, அந்த பார்வையிலேயே அப்படியே அப்படியே அங்கிருந்து நழுவிவிட பார்த்தார்.
“ம்க்கும், நல்லாயிருக்கு….” என்று செண்பகம் நொடித்துக்கொள்ள ஆத்மாவும், ரிதுவும் திரும்பி பார்த்தனர் முருகேஸ்வரியை.
“அதானே?…” என்று விசாலாட்சியும் ஒத்து ஊத, முருகேஸ்வரி அங்கேயே தான் நின்றாரே தவிர்த்து அருகே வரவில்லை.
“வாங்க…” என்று மட்டும் குரல் வர அதனை கேட்டதை போலவே காண்பித்துக்கொள்ளவில்லை செண்பகம். மீண்டும் ஆத்மா முருகேஸ்வரியை பார்க்க,
“இங்க கிட்ட வந்து கேட்கும்படி தான் சொல்லேன் முருகேஸு. எதுக்கு முகத்தை திருப்பற நீ?…” என விசாலாட்சியும் கேட்க,
“நானா?…” என்று பார்த்தார் அவர்.
“இல்லையா பின்ன? உன் மூத்த மக வீட்டுக்கு அவளோட சின்ன மாமியார் வந்திருக்காங்க. என்னன்னாலும் நீ மரியாதை குடுக்கனும் தானே?…” என்றார் விசாலாட்சி வேண்டுமென்றே.
முருகேஸ்வரி தான் என்ன செய்துவிட்டோம் என்ற பார்வையுடன் ரிதுபர்ணாவை பார்க்க,
“இங்க வாங்க சித்தி…” என்றழைத்து,
“உங்ககிட்ட தான் பேசனுமாம். அதான் அத்தை வந்திருக்காங்க…” என்று சொல்ல அதற்குள் வித்யா கிளம்பி வந்துவிட்டாள் பள்ளிக்கு செல்லவென்று.
“கிளம்பிட்டியா வித்யா?…” என்ற விசாலாட்சி கோவிலில் இருந்து கொண்டுவந்த குங்குமத்தை அவளின் நெற்றியில் பூசிவிட்டவர்,
“சாப்பிட்டாச்சா?…” என்றார்.
‘இல்லை’ என்று தலையசைத்தவள் செண்பகத்தை பாராமல் முருகேஸ்வரியை பார்க்க,
“சாப்பிடாம போவியா நீ? இரு கண்ணு…” என்று வேகவேகமாய் முருகேஸ்வரி உள்ளே ஓடி சென்று மகளுக்கு தேவையானதை பேக் செய்து எடுத்து வந்துவிட்டார்.
“போய் பள்ளிக்கூடத்துல சாப்பிட்டுக்க…” என்று சொல்லி நீட்டவும் வாங்கிக்கொண்ட வித்யா, பொதுவாய் தலையசைத்து கிளம்ப,
“மத்தியானம் வீட்டுக்கு வா வித்யா…”என்றார் செண்பகம்.
“ஏன் ஏன்? என்கிட்ட சொல்லுங்க. நான் கேட்டுக்கறேன்…” என்று சடுதியில் ஒரு நடுக்கம் முருகேஸ்வரிக்கு.
எங்கே மகளிடம் எதையாவது பேசி அவள் அதனால் வருத்தப்படுவாலோ என்றொரு பயம்.
எதுவானாலும் தன்னை பேசட்டும். தாங்கிக்கொள்ளலாம் என அவர் செண்பகத்தை பார்த்துவிட்டு,
“நீ வா, நேரமாச்சுல…” என்று வாசல் வரை அழைத்து வந்தவர்,
“கண்ணு…” என்று மகளை அணைத்துக்கொண்டார்.
“நீயி என்னமும் நினைக்காத கண்ணு. அவங்க என்ன பேசினாலும் பேசட்டும். நாம நம்மபாட்டுக்கு இருப்போம். இல்லையா தொந்தரவில்லாம போவோம். வெசனப்படாம போயிட்டு வா…” என்று சொல்லி மகளிடம் எதுவும் கேட்காமல் அனுப்ப பார்த்தார்.
“இப்ப என்ன அங்கின இருக்க சங்கட்டமா இருந்தா உன்னைய காரணம் கட்டி நானும் வரேன். இங்கின ரிது புள்ளையல பார்த்து வளர்த்துவிட்டுட்டு இங்கின ஒரு இடத்துல இருந்துப்போம். இல்லைனா நீதேன் வேலைக்கி போறியே? நானும் ஒரு வேலையை பார்த்துக்கிட்டு போவோம்…” என்று சொல்ல சொல்ல வித்யாவின் மனது அலைகடலென பொங்கி எழும்பியது.
தாயிடம் என்ன சொல்லமுடியும்? அவரின் பேச்சை கேட்டுக்கொண்டே நின்றவள் தலையை கூட மறுப்பாய் அசைக்கவில்லை.
வாழ்க்கையில் என்ன கண்டுவிட்டார் அவர்? எதுவுமில்லை. சின்ன சின்ன ஆசைகள் கூட இல்லை.
இப்போதுமே இந்த அக்கறையுமே எதனால் என்று வித்யாவிற்கு தெளிவாய் புரிந்திருந்தது.
பலவருடங்களுக்கு பின் ரிதுபர்ணாவின் தாய்வீட்டு உறவுகள் அவளின் திருமணத்தின் மூலம் கிடைத்திருக்க, அந்த உறவில் தங்களை கொண்டு சின்ன விலகல், விரிசல் கூட வந்துவிட கூடாது என்பதில் கண்மூடித்தனமாய் இருந்தார் முருகேஸ்வரி.
ஆனால் காதல் புகுந்த மனதின் வேதனை ஊமையாய் உள்ளுக்குள் கண்ணீர் சிந்த அதன் கேவலை கூட காதுகொடுத்து கேட்பார் இல்லை.
“என்ன கண்ணு? சரித்தான?…” என்று முருகேஸ்வரி கேட்க, ‘சரி’ என்று தலையசைத்தாள் வித்திவ்யா.
“பொறவு, முரளி தம்பிக்கு கல்யாணம், காட்சின்னு அங்க ஊருக்கு உங்கக்கா கூப்பிட்டா நீயி வரவேண்டாம் தாயி. இங்கயே இரு சாமி. நல்லா போயிட்டிருக்கற காரியத்துல கால்ல குத்தின முள்ளாட்டம் வலிய குடுக்க கூடாது பாரு. அவங்க கண்ணுல படாம இரு…” என்று சொல்ல அதற்கும் தலையாட்டினாள்.
“ரிது கண்ணுக்கு பிரசவத்துக்கு கூட்டிட்டு போகனும். அங்கின நான் பார்த்துக்கறேன். நீயி இங்க இருக்கனுமின்னா இரு, இல்லைன்னா பள்ளிக்கூடத்து சிநேகிதிங்க யாராச்சும் தங்கிருக்கற விடுதில இடமிருக்கான்னு பாரு. புரியுதா கண்ணு…” என்று மகளின் மனதை பாசமெனும் வாளால் வெட்டி வீசிக்கொண்டிருந்தார்.
“ஹ்ம்ம்…” அதற்குமே அவள் தலையசைத்து சரி என்று சொல்லிவிட,
“சேரி, எம்புட்டு நேரம் காரு நிக்குது. நீ கிளம்பு…” என மகளின் கசங்கிய முகத்தை தன் புடவை முந்தானையால் துடைத்தவர்,
“கலங்கி போய் நிக்கிதியே. ஆனா அம்மா என்ன செய்யட்டும் சாமி? நம்ம நிலைமை அறிஞ்சு நடக்குததுதேன் எல்லாருக்கும் சரி…” என்ற வார்த்தை வித்யாவின் முகத்தில் வெந்நீரை அள்ளி வீசியதை போலிருந்தது.
எச்சிலை கூட்டி விழுங்கியவள் வலிக்கும் மனதை அடக்கிக்கொண்டு தலையசைத்து திரும்பினாள்.
செல்லும் அவளை பார்த்துக்கொண்டே நின்றிருந்த முருகேஸ்வரியின் தைரியம் எல்லாம் வடிந்ததை போல சட்டென கண்ணில் நீர் பொங்க கண்ணை துடைத்துக்கொண்டார்.
எந்த சூழ்நிலையிலும் தன்னை மாற்றாந்தாய் என்று ஒதுக்காமல் தாயாய் தன்னையும், உடன் பிறந்தவள் போல தன் மகள் வித்யாவையும் அங்கீகரித்த ரிதுபர்ணாவிற்காக அவர் எதையும் செய்ய தயாராய் இருந்தார்.
நன்றி விசுவாசம் என்னும் நெருப்பில் பெற்ற மகளின் பூஞ்சை மனது கருகிக்கொண்டிருப்பதை அறியாது போனார் முருகேஸ்வரி.
மகள் சென்ற திசையை பார்த்தபடி இருந்தவர் கண்ணீரை துடைத்துக்கொண்டு திரும்ப அங்கே ஆத்மாவும், செண்பகமும் முதன்மையாக நின்றிருந்தனர்.