அனைவரையும் விட இன்று அனைவருக்கும் மேல் முருகேஸ்வரிக்கு தெய்வம் போல் தெரிந்தார் விசாலாட்சி.
அந்த வீட்டிற்கு அவர் வந்த நாளில் இருந்து அவரையும், அவர் சூழ்நிலையும் புரிந்துகொண்டு துவேஷம் காண்பிக்காமல், முகம் திருப்பாமல் தன்னை அரவணைத்துக்கொண்ட ஜீவன் அவர் ஒருவரே.
இன்றுவரை தன்னை தாங்கி, இப்போதும் தாயாய் தன்னை அதட்டி, வழிநடத்தும் அவரின் காலில் பணிந்து விழ பார்க்க,
“வேற என்னதான் தெரியும் உனக்கு? எப்ப பாரு பொசுக்குன்னு கால்ல விழறது…” என்று அதற்கும் அதட்ட செண்பகத்தின் மனதில் அத்தனை வருத்தம் முருகேஸ்வரியை எண்ணி.
இதே வேறு ஒருவராய் இருந்தால் இந்த பணிவு, சகிப்புத்தன்மை, அனுசரணை என்று இருந்திருப்பார்களா என்று பார்த்திருந்தார்.
இப்படி ஒருவரின் மீது ஒருவரின் மனதில் முகிழும் எண்ணங்களின் சேர்க்கையில் உறவுகள் இன்னும் பலம் பெற்றது.
முருகேஸ்வரி வாய்விட்டு இன்னும் சம்மதம் சொல்லாத நிலையில் பெருமூச்சுடன் பார்த்த ஆத்மா அவரின் முன்னே வந்து நின்றான்.
“அத்தை நான் வித்யாவுக்கு ஒரு வரன் கொண்டு வந்திருக்கேன். எனக்கும், உங்க மூத்த மகளுக்கும் முழு சம்மதம். வித்யாக்கிட்டையும் பேசிட்டோம். எங்க விருப்பம்ன்னு சொல்லிட்டா. இப்ப நீங்க சொல்லுங்க….” என்றவன்,
“மாப்பிள்ளை என் சித்தப்பா மகன் முரளி வினோகரன். நல்ல பையன். எங்களுக்கு பிடிச்சிருக்கு. மூத்த மருமகனா வித்யாவுக்கு தகப்பன் ஸ்தானத்துல இந்த வரனை பேசி முடிக்க எனக்கு உரிமை இருக்கு தானே?…” என்று கேட்க,
“தம்பி…” என்றவர் என்னவோ போச வர,
“வந்தேன் பச்சைமிளகாயை வச்சு வாயில இறுக்கிருவேன். இம்புட்டு பேர் சொல்றோம். கண்ணீரும் கம்பலையுமா நிக்கிற. கண்ணை துடை…” என்று செண்பகம் அதட்ட சட்டென சொல்லியதை செய்யும் பிள்ளை போல முருகேஸ்வரி துடைத்தார்.
“மகளுக்கு கல்யாணம். வாயை திறக்காம சிரிச்ச முகமா எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் பாரு. நீ வாய திறந்தாலே பிரச்சனை தான். அதனால மூச்…” என்று சொல்லியவர்,
“விசாலம் அந்த பூஜை தட்டை கொண்டா…” என்று வாங்கி அதில் இருந்த வெற்றிலை பாக்குடனான, கொஞ்சம் பூவையும் எடுத்தார்.
“நீங்க எல்லாம் சாட்சி…” என்று சொல்லிவிட்டு முருகேஸ்வரி கையில் அதனை திணித்தவர்,
“தாம்பூலம் மாத்தி நிச்சயம் பண்ணியாச்சு. அடுத்து கல்யாணம் தான். புரிஞ்சதா?…” என்றார் தடாலடியாக.
“என்ன கண்ணா? கரெக்ட்டா?…” என்று ஆத்மாவிடம் கேட்க,
“சித்தி பேச்சுக்கு நம்ம வீட்டுல மறுபேச்சு ஏது? பர்பெக்ட். எனக்கு ரொம்ப சந்தோஷம்….” என்றான் அவன் மனதார.
“என் புள்ளைக்கு என் கண்ணே பட்டுடுச்சா? சாமி நீ தான் காப்பாத்தனும்…” என்று அதற்கும் அவசரமாய் வேண்டுதல் வைத்து நின்றவரை கண்ட சபர்மதி,
“அந்த சாமியை நான் தான் காப்பாத்தனும். புறப்படுவோமா? இனி நிச்சயதார்த்தம் வேற இருக்கு…” என்று அவரை நகர்த்திக்கொண்டு வரும் வரை பெரும்பாடாகி போனது அவளுக்கு.
அடுத்த இரண்டுநாட்களில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, ரிதுபர்ணாவின் பிரசவம் முடிந்த இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
ஊரில் அநேகம்பேரை அழைத்திருந்தனர் நிச்சயத்திற்கு. உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதால் மண்டபம் பிடிக்க முடியாமல் தங்களின் காம்பவுண்டுக்குள்ளேயே பெரிதாய் பந்தலை போட்டுவிட்டனர்.
“இந்த இடமே மண்டபம் மாதிரி இருக்கு. இதுல தனி மண்டபம் வேறையாக்கும்?…” என்று கிண்டல் பேசினாள் சுந்தரி.
அனைவரையும் அழைத்தாலும், ஆனந்தியின் அண்ணன் குடும்பத்தை அழைக்கவே கூடாதென்று சொல்லிவிட்டார் செண்பகம்.
ஆனந்தியும் அதனை பெரிதாய் எடுக்கவில்லை. அவர்களுக்கு தேவைதான் என்று புரிந்துகொண்டார்.
மாலை விளக்குகள் அவ்விடத்தை வண்ணமயமாக மாற்ற, பார்ப்பவர்களின் மனதை ரம்யமாய் கவர்ந்தது.
நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க இன்னும் சற்று நிமிடங்களே இருக்க விருந்தினர்கள் அனைவரும் நிறைந்துவிட்டனர்.
“சொன்னது ஞாபகம் இருக்கட்டும். அடங்கி ஒடுங்கி கம்முன்னு வீட்டுக்குள்ள இருக்க சொல்லுங்க. நம்மள்ல மாப்பிள்ளை நிச்சயத்துக்கு வர்ற பழக்கம் இல்லை. நல்லா உரைக்கும் படி சொல்லுங்க…” என்று இளவரசுவை வைத்துக்கொண்டு செண்பகம் மகனிடம் சொல்ல இதழ்களுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கினான் முரளி.
“கேட்டுச்சா?…” இளவரசு கேட்க,
“நாலைஞ்சு நாளா என் காது கேட்காது…” என்றான் அவனும்.
இன்னும் மகனிடம் நேரடியாக பேசவில்லை செண்பகம். அது ஒருவகையான செல்ல கோபம்.
‘தான் புத்தியற்று அப்படி பேசினால், இவனும் பேசுவானா அதே போல?’ என்று மகன் மீது ஆதங்கத்தில் இருந்தார் செண்பகம்.
ஆனால் மகனை பார்த்து, அவனின் மகிழ்ச்சியை பார்த்து அகமகிழ்ந்து பூரித்து பெற்றவயிறு குளிர்ந்து நின்றார்.
“சரி சரி. நீங்க கிளம்புங்க…” என்றவன் ஜன்னலின் அருகே வந்து நின்றான்.
மகனை வெளியே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு பெரியவர்கள் எல்லாம் சபையில் நிறைந்துவிட்டனர்.
சம்பிரதாயமான பேச்சுக்கள் ஆரம்பிக்க ஆத்மா சீர் தட்டுக்களை அத்தனைபேரும் மலைக்கும்படி நிறைத்துவிட்டான் அங்கே.
“என் பொண்ணுக்கு செய்ய யாரும் மறுப்பீங்களா என்ன?…” என்ற வார்த்தையில் அண்ணாமலை பெருமிதமாய் பார்த்தார்.
அடர்ந்த பச்சை நிற புடவையில் மணமகளாய் வித்திவ்யா சபையில் நிறைந்தாள். அவள் வந்தமரவும் நிச்சய பத்திரிகை வாசிக்க ஆரம்பிக்க, தாம்பூலம் மாற்ற தயாராய் எழுந்து நின்றனர்.
அதுவரை ஜன்னலில் நின்றிருந்த முரளி மெதுமெதுவாய் வெளியே வந்து முகம்கொள்ளா சிரிப்புடன் தன் பூரண நிலவை கண்டு சிலிர்த்து நின்றான்.
“மாப்பிள்ளையா எல்லாம் வரலை. ரிலேட்டிவா வரேன் டா. கல்யாண பொண்ணுக்கு சின்னதா ஒரு கிப்ட்…” என்று சொல்ல,
“இதென்ன இல்லாத வழக்கமா இருக்கு…” என்று சில பெருசுகள் கேட்க,
“தாத்தா, கல்யாண பொண்ணு என் அண்ணனோட கொழுந்தியா. அவங்க நிச்சயத்துல அண்ணனுக்கு தம்பியா நான் தலையை காமிக்கனும்ல. அதுதானே முறை. அதான் வந்தேன்…” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,
“அநியாயம் பன்றடா நீ…” என்று ஆத்மாவும் எழுந்து வந்துவிட,
“இந்த கிப்ட்டை குடுக்கலாம்ன்னு வந்தேன் ண்ணா…” என்றவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சிறிய நகை பெட்டியை எடுத்தான்.
“செயினா இருக்குமோ?…” சபர்மதி யோசிக்க,
“பிரேஸ்லெட்டா இருக்கும்…” மனோ சொல்ல,
“இனி இவன் வேற டிஸைன் டிஸைனா வாங்கி தருவானே? ஒரு ஜிமிக்கிக்கே இங்க இன்னும் முடிஞ்சபாடில்லை. இதுல இதுவேறையா?…” சுந்தரி அலுத்துக்கொள்ள,
“சுந்தரிக்கா…” என்றாள் சிணுங்கலுடன் ரிதுபர்ணா தன் காதில் குடை ஜிமிக்கிகள் கூத்தாட.
முரளியின் கையிலிருந்த அந்த பெட்டியை பிரிக்க அதில் தங்க கொலுசு மெல்லிய சங்கிலியாய் அழகிய அழுத்தாத வேலைபாடுகளுடன், ஒருபக்கத்தில் மட்டும் மூன்று முத்துக்களை வைத்திருந்தது.
“இதையும் வச்சு குடுங்க…” என்று நிச்சயப்பட்டு வைக்கப்பட்டிருந்த தட்டில் புடவைக்கு மேல் வைத்தவன்,
“பொண்ணுக்கு பிடிச்சிருக்கான்னும் கேட்டு சொல்லுங்க…” என்று சத்தமாய் சொல்ல அத்தனைபேரும் சிரிக்க,
“யப்பா டேய், போதும்டா…” என்று சிரித்த ரிதுபர்ணாவுடன் சேர்ந்து ஆத்மா தட்டை மாற்றிக்கொண்டான்.
நிறைவாய் ஒரு நிச்சயம். அவனுக்கானவள் அவனுக்கே என்று ஊர் அறிய, உலகறிய, உணர்வறிய, உயிர்கள் பூக்க உறுதி செய்யப்பட்டது.
அங்கேயே சற்று தள்ளி நின்றவன் பார்வை வித்திவ்யாவை தீண்ட அதன் தொடுகையில் நிமிர்ந்து பார்த்தாள்.
“கடத்த வரவா?…” என்று இதழசைத்து அவளை போலவே லேசாய் தலைசாய்த்து பார்த்து கண்சிமிட்ட, அசையாத பார்வையுடன் கண்களில் பெருகும் காதலுடன் பார்த்தவள் நெஞ்சம் அவனின் பேரன்பில் கலங்கி நின்றது.
அதன் உள்ளார்ந்த நேசத்தின் ஊற்றெடுப்பில் நீக்கமற தன் நெஞ்சில் நிறைந்திருப்பவளை விழிகளால் அணைத்து நின்றான் முரளி வினோகரன்.