“விடு விடு. சின்ன பையன் தானே?…” என்று அவரும் சொல்ல,
“இதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும் போல? என்னை பெத்தவங்களும் இருக்காங்களே?…” என்று வேண்டுமென்றே அவரை வம்பிழுத்தான்.
“முடிஞ்சுபோனதை நினைச்சு பெருமூச்சு விட்டா ஆச்சா? பொறுப்பான இடத்துக்கு வந்துட்ட. அதை பாரு…” என்றார் அண்ணாமலை அதட்டலாய் அவர் பாணியில்.
“இந்தா வந்துட்டார்ல அதட்டல் அண்ணாமலை…” என்ற முணுமுணுப்புடன் திரும்பிக்கொண்டான்.
“பொண்ணு வந்தாச்சு…” என்ற சத்தத்தில் அங்கே பார்க்க வித்யாவை அனைவரும் அழைத்து வந்தனர்.
மாலை அணிவிக்கப்பட்டு நலுங்கு வைக்கப்பட ஆரம்பிக்க ஆத்மாவும் அவளை ஆசிர்வாதம் செய்துவிட்டு வந்து முரளியின் அருகில் அமர்ந்துகொண்டான்.
“என்னண்ணா இங்க வந்துட்டீங்க?…” என்று முரளி கேட்க,
“ஏன்டா நீ சித்தியை டென்ஷன் பன்ற?…” என்று அவனின் தோளில் ஒரு அடி வைத்தான் ஆத்மா.
“அம்மாவை டென்ஷன் பண்ணனும்ன்னு எல்லாம் இல்லை. ஆனா எனக்கு இதை பார்க்கனும். இந்த நிச்சயத்துல என் பார்வை இருக்கனும்ன்னு அவ்வளோ ஆசை. அதான் இருக்கேன்….” என்ற முரளி,
“ஆமா என்னை எல்லாம் நலுங்கு வைக்க கூப்பிட மாட்டாங்களா?…” என்றான் குலுங்கி சிரித்த சிரிப்புடன்.
“இதுவேறையா?…” என்று செண்பகத்தை ஒரு பார்வை பார்த்த ஆத்மா,
“என்னவோ என்னை கேட்டுட்டு தான் நீ போய் கொலுசு குடுத்த மாதிரி, எவ்வளோ அடக்க ஒடுக்கம்டா உனக்கு?…”என்றான் அவனிடம்.
“இல்லையா பின்ன? பேசிக்கலி நான் கொஞ்சம் ஷை டைப் அண்ணா. உங்களுக்கு தெரியாதா?…”
“உன்னோட ஒவ்வொரு வெர்ஷன் பார்த்து அண்ணாமலைக்கு ஹார்ட் வீக்காகாம இருந்ததே பெருசு. உன் நல்ல நேரம், அவர் சாப்ட்டா மாறிட்டார். இல்ல உன்னை வாயல போட்டு சாப்பிட்டிருப்பார். அடக்கி வாசி தம்பி…”
“நான் அடக்கி வாசிக்கிறது இருக்கட்டும்? என்ன நீங்க பொண்ணுவீட்டுக்காரர், பொண்ணுக்கு அப்பா மாதிரின்னு சொல்லிட்டு இப்ப வீட்டு மாப்பிள்ளையை அடக்கி வாசிக்க சொல்றீங்க? என்ன விஷயம்?…” என்றான் முரளி மிதப்பாக.
“அடேய் சேட்டை பயலே? கொஞ்சம் முன்னாடி தான் அண்ணன், தம்பின்ன. இப்ப என்னடான்னா?…”
“சபைல அப்படி இப்படி சொன்னாத்தான் உண்டு. போங்க போங்க. பொறுப்பா நிச்சயத்தை கவனிங்க…”
“டிஸ்டர்ப் பன்றீங்க. எந்திச்சு போங்கன்னு நேராவே சொல்லியிருக்கலாம்…” என்று ஆத்மா சொல்ல,
“அச்சோ அண்ணா, நிஜமாவே ஓவரா போய்ட்டேன்…” என்று அவனின் தோளை பற்றி அமர வைத்தபடி சிரிப்புடன் முரளி சொல்ல,
“கொஞ்சமும் மரியாதை இல்ல? நான் பொண்ணு வீட்டுக்காரன்டா. ரொம்ப பேசின, பொண்ணு இல்ல ஆமா…” என்று ஆத்மா வேஷ்டியை மடித்து கட்ட,
“அப்படியெல்லாம் சொல்லப்படாது…” என்று தன் அண்ணனின் கன்னத்தை பிடித்து முரளி கொஞ்ச, ஆத்மா மிஞ்ச என அவ்விடத்தில் அவர்களின் கலகலப்பில் அனைவரின் கவனம் அங்கே திரும்பியது.
“என்னடா திடீர் சைலன்ட்?…” என்று இருவரும் திரும்பி பார்க்க,
“சும்மா பேசிட்டிருந்தோம் மாமா…” என்று இருவரும் ஒன்றுபோல சொல்ல,
“இந்த பயலுங்க என்னமோ சில்மிஷம் பன்றானுங்க…” என்று ஏழுமலை அண்ணாமலையிடம் சொல்ல அண்ணாமலை ஆத்மாவை முறைத்தார்.
“பேசி விளையாடிட்டிருக்காங்க. நீங்க பாருங்க. மத்தவங்க எல்லாம் சாப்பிட வாங்க…” என்ற விசாலம்,
“முருகேஸு, வா வா. அங்க போய் கவனிப்போம்…” என்று அவரையும் அழைத்துக்கொண்டு செல்ல ரிதுபர்ணா ஆத்மாவை ஆயாசமாய் பார்த்தாள்.
“இவங்க ரெண்டுபேரும் பன்ற அலும்பு இருக்கே? அதுவும் இந்த கல்யாணம் பேசினதுல இருந்து மாத்தி மாத்தி கிண்டல் பண்ணிக்கறேன்னு அநியாயம் பன்றாங்க…” என்றாள் அவள்.
“நீ முதல்ல அலட்டிக்காம உக்காரு. எப்ப பாரு வெடுக்குன்னு ஏந்திக்க, திரும்பன்னு. எனக்கு பக்குன்னு வருது…” என்ற ஆனந்தி,
“இந்த ராணி எங்க?…” என்று தேடினார்.
“அவங்க எதுக்குத்தை?…” ரிது கேட்க,
“அப்ப இருந்து உனக்கு சாப்பாட்டை தனியா எடுத்து கொண்டுவந்து வைன்னு சொல்லிட்டிருக்கேன். வச்சாளா என்னன்னே வந்து சொல்லலை…” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம். நான் வித்யாவோட பந்தில உக்கார்ந்து சாப்பிட்டுப்பேன்…” என சொல்லிக்கொண்டிருக்க,
“என்னம்மா?…” என்று வந்துவிட்டான் ஆத்மா.
மகன் வந்ததும் அவன் வந்து நின்ற வேகத்தில், ‘இப்பதானே அங்க நின்னான்?’ என ஒருநொடி திகைத்தவர் பின்,
“ரிதுவுக்கு சாப்பாட்டை வீட்டுக்கு கொண்டுட்டு வர சொன்னேன். பந்தி ஆரம்பிச்சிருச்சு. கூட்டத்துல போய் என்னன்னு சாப்பிடுவா? அதான்…” என்று மகனிடம் கூற,
“விசேஷங்கல்ல தான் பந்தில உக்கார்ந்து எல்லாரோடையும் சேர்ந்து சாப்பிட முடியும். எல்லா நாளுமா சாப்பிடுவா? நாங்க பந்தில உக்கார்ந்துக்கறோம். கொஞ்சம் நேரமாகட்டும்…” என்று சொல்லிவிட்டான் அவன்.
“இல்ல கண்ணா…” என்று ஆனந்தி சொல்ல,
“ப்ச், ரிது உனக்கு பசிக்குதா இப்போ?…” என்று மனைவியை பார்த்து கேட்க,
“இல்லையே…” என்றாள் அவளும்.
“ம்மா…” மகன் தாயிடம் திரும்ப,
“புரிஞ்சுபோச்சு…” என்று நகர்ந்துவிட்டார் ஆனந்தி.
அவரின் முகம் போன போக்கை கண்டு ரிதுபர்ணா சிரிப்பை அடக்கிக்கொள்ள ஆத்மா இதழ்விரியா புன்னகையுடன் மனைவியின் தலையில் லேசாய் தட்டினான்.
“என்ன ஒரு சந்தோஷம் உனக்கு?…” என்று.
“அதிருக்கட்டும். பேசாம இங்க நில்லுங்க. அங்க என்ன முரளியோட அரட்டை?…” மனைவி அதட்ட,
“உத்தரவுங்க மேடம்…” என்று விளையாட்டாய் சொல்லியவன் அவளருகே அமர்ந்துகொண்டான்.
“முரளிக்கு இந்த நிச்சயம் அவன் கண்ணு முன்னாடி நடக்கனுமாம். வித்யாவோட சந்தோஷத்தை அவன் பார்த்துட்டே இருக்கனுமாம். அதான் பிடிவாதமா உக்கார்ந்திருக்கான்…”
“உங்களை விட பிடிவாதம். எங்கருந்து முரளிக்கு இப்படி ஒரு அழுத்தமும், பிடிவாதமும் வந்துச்சோ…” என திண்ணையில் அமர்ந்திருந்தவனை பார்த்துக்கொண்டே ஆத்மாவிடம் கூறினாள் ரிதுபர்ணா.
திண்ணையில் அமர்ந்து கால்களை ஒன்றன் மேல் ஒன்றாய் போட்டு கைகளை மார்பின் குறுக்கே கட்டியிருந்தவன் தலையோ தூணில் சாய்ந்து, தன் பூவிழியை கண்மலர்ந்து ரசித்துக்கொண்டிருந்தான்.
வருபவர்கள் அனைவரிடமும் பூவாய் புன்னகைத்து, அவர்கள் ஆசிர்வதித்த மஞ்சள் பூசிய அரிசி தலையிலிருந்து கீழ தன் புடவையில் விழ இமை சிமிட்டி கண்ணோரம் லேசாய் சுருங்க அவனுக்கு கவிதையாகிக்கொண்டிருந்தாள் நொடிக்கு நொடி.
காதலாய், காதலால், காதலுக்கென்றே அவன் அவளின் நிழலாக அமர்ந்திருக்க அவ்வப்போது முரளியை பார்ப்பதும், பின் தன்னிடம் வருபவர்களை பார்ப்பதுமாய் வித்யா இருக்க முரளியின் விரல்கள் சில்லிட்டது.
சந்தானம் பூசிய கன்னங்கள் தன்னை தொட்டுக்கொள்ளேன் என்றழைக்கும் இம்சையை அவஸ்தையுடன் அனுபவித்தான்.
கட்டியிருந்த இரு கைகளில் ஒன்று துடிக்கும் நெஞ்சத்தை லேசாய் வருடிக்கொள்ள இதழ்கள் குறும்பாய் புன்னகை சிந்தியது ரகசிய பாஷையுடன்.
அவனின் எண்ணங்கள் அவளை அழைத்துக்கொண்டத்தை போல வித்திவ்யாவும் முரளியின் முகம் பார்க்க,
“சந்தானம் தொட்டுக்கறேன்…” என தன் கன்னத்தில் வெறும் விரல் கொண்டு பூசி காண்பித்ததும் இன்னும் விழி விரித்தவள், அருகிலிருந்த சபர்மதியின் கையை பற்றிக்கொண்டாள் சட்டென.
“என்ன வித்யா, எதுவும் வேணுமா?…” என்று மதி கேட்க, வித்யாவின் பார்வை முரளியை காண்பித்தது.
“அவ்வளோ தானே? போய் கூட்டிட்டு வரட்டுமா?…” என்றாள் கிண்டலாக.
“ம்ஹூம்…” வித்யா மறுக்க,
“உங்கம்மாட்ட சொல்லிட்டா உடனே போய் கூப்பிட போறாங்க? எங்க இந்த கண்ணு கண்ணம்மா? கம்முன்னே கிடக்காதே? எங்க காணும்?…” என்றாள் முருகேஸ்வரியை தேடுவதை போல.