“என்னடி கலாட்டா பண்ணிட்டிருக்க? போய் உன் மாமியார் என்ன பன்றாங்கன்னு போய் பாரு…” என்று செண்பகம் சபர்மதியிடம் வந்து நின்றார்.
“இங்க பாருங்க சித்தி, இந்த மதி ஒரே பிஸி. சும்மா சும்மா அங்க பாரு, இங்க பாருன்னுட்டு இருந்தீங்க அவ்வளோ தான். ஆமா கல்யாண வீட்டுக்காரம்மா, நீங்க என்ன பார்த்தீங்க? அங்க பாருங்க. சாப்பிடாம நிக்கிறாங்க. இதுதான் உங்க கவனிப்பா?…” என்று விரட்ட,
“நான் கல்யாண வீடுனா நீ யாராம்டி…” என்றவர்,
“ஆமா எங்க உன் வீட்டாளுங்க. காணும்?…” என்றார் செண்பகம்.
“என் மாமியார்ட்ட எதாச்சும் சொல்லி வகையா வாங்கி கட்டிட்டு இங்கின தான் எங்கினயாச்சும் முறுக்கிக்கிட்டு நிப்பாங்க. இன்னைக்கு நான் சமாளிக்கிற மூட்ல இல்லை. அதான் இங்கினவே நிக்கிறேன்…” என சபர்மதி சொல்ல,
“உன்னை கூப்பிடலையா? இல்ல கிட்ட வரலையா?…”
“கூப்பிட்டாங்களே. என் மாமியார் என்னை இங்கவே நிக்க சொல்லிருக்காங்க. இல்லன்னா பெரிய பிரச்சனையாகிரும்ன்னு சொல்லி வச்சிருக்கேன். நாளைக்கு காலையில காது கிழிய கிழிய பேசுவாங்க. கேட்டுக்குவோம். இதெல்லாம் அசால்ட்டு…” என்றாள் சபர்மதி.
அவள் சொல்லிய பாவனையில் சிரித்தபடி சபர்மதியின் கன்னத்தை கிள்ளிவிட்டு நகர்ந்தார் செண்பகம்.
விருந்தினர்கள் அனைவரும் கிளம்பியிருக்க வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
அதற்குள் அத்தனை களைப்பு. இன்னும் வீட்டினர் உணவருந்தவில்லை. ரிதுபர்ணாவை அழைத்துக்கொண்டு சாப்பிட செல்ல தானும் சபர்மதி, மனோ, சுந்தரி பிள்ளைகள் மட்டுமே வித்யாவுடன் இருந்தனர்.
“நிச்சயதார்த்தமே முடிஞ்சது. புதுசா ஒருத்தர் இப்பதான் வர்றார்…” என்று மனோ கிண்டலாய் சொல்ல,
“எப்ப வந்தாலும் என்னோட வரவு ஸ்பெஷல் தான். அது உனக்கெல்லாம் புரியுமா? போய் பிள்ளையை பாரு…” என்று மனோவின் தலையில் தட்டியவன்,
“உரிமைப்பட்டவன், நான் தானே முதல்ல பூசி இருக்கனும்? என்னை கூப்பிடலை பாரேன்…” என்று சொல்ல வித்யாவின் முகத்தில் புன்னகை.
மூன்று விரல்களில் சந்தனத்தை தொட்டவன் விழிகள் அவளிடம் உயர, வித்யாவின் முகத்திலும் எதிர்பார்ப்பு.
“பூசவா?…” என்றான் அவளிடம் கேள்வியாய்.
‘வேணாம்ன்னு சொல்லட்டுமா?’ என்று குறும்புடன் வித்யாவும் கையசைக்க மெல்ல மௌனமாய் ஒரு சிரிப்பு சிரித்தான் முரளி.
கைகள் உயர்ந்து அவளின் கன்னம் தொட அவனை பார்த்துக்கொண்டிருந்தவள் இமைகள் லேசாய் நிலம் நோக்கி கவிழ்ந்தது.
அட்சதை பூக்களை அள்ளி எடுத்தவன் அவளின் உச்சந்தலையில் தெளிக்க லேசாய் கண் கூசி தலை சாய்த்து வாங்கிக்கொண்டவல் முகமெல்லாம் பூரிப்பின் உற்சவம்.
“நிச்சயம்ன்னா பொண்ணுக்கு மட்டும் தானா? எனக்கில்லையா மிஸஸ்.முரளி?…” என்றதும் வித்திவ்யாவின் விழிகள் அப்படி ஒளிர்ந்தது.
எத்தனை நாட்களாகிற்று, இல்லை இல்லை மாதங்களாகி இருந்ததே அவன் இதனை சொல்லி?
கேட்கையில் அன்றைக்கு போல இன்றைக்கும் உணர்ந்து உருகி பார்த்தாள் வித்யா.
“ஊர் கூடி எனக்கு உன்னை நிச்சயம் செஞ்சாங்க. இப்ப எனக்கான நீ உனக்காக என்னை நிச்சயம் பண்ணிக்கோயேன் திவ்யா…” என்றான் முரளி யாசிப்பின் வழியே.
வித்யாவின் விழிகள் அவனை சுற்றிலும் சுழல, அவள் மற்றவர்கள் கவனிப்பார்களோ என்று பார்க்க கண்டு,
“யாருமே இல்லை. நீ பூசு. நான் போயிடறேன்…” என்றான்.
முதலில் மறுத்தவள் பின் அவனின் பேச்சில் மெல்ல சந்தனத்தை விரல்களில் எடுத்தாள்.
முரளி அவளை நோக்கி லேசாய் முகம் குனிந்து காண்பிக்க, மனம் நிறைந்த சந்தோஷத்துடன் முரளியின் கன்னத்தில் சந்தனத்தை பூசி, தலையில் அட்சதை தூவி அவனை தனக்காக முழுதாய் வரித்துக்கொண்டாள் வித்திவ்யா.
“நானு, நானு…” குழந்தைகள் அனைவரும் சூழ்ந்துகொள்ள அத்தனைபேரும் அட்சதையை எடுத்து இருவருக்குமாய் ஆசிர்வதிக்க, குழந்தையின் உருவில் கடவுள்கள் அங்கே சங்கமித்திருந்தனர்.
“என்னடா, என்னென்னமோ பன்ற?…” என்று சுந்தரி கேலி பேச,
“என்னை பத்தி என் பொண்டாட்டிக்கு இருக்கற கவலை யாருக்கு இருக்கு? பார்த்தீங்களா?…” என்று சொல்லியவன் வீட்டிற்குள் செல்லாமல் பந்தி நடக்கும் இடத்திற்கு சென்று அனைவருக்கும் தெரிய ஒரு நடை நடந்துவிட்டு வீட்டிற்கு திரும்ப,
“காமிக்கிறதுக்குன்னே வந்திருப்பான். இந்த பிள்ளைங்க எல்லாம் வித்யாவை விட்டுட்டு இங்கிட்டு வரவுமே புரிஞ்சு போச்சு….” என்றார் செண்பகமும்.
“இப்ப என்ன செய்வேன் நான்? முதல்ல பிள்ளைங்க மொத்தத்துக்கும் சுத்தி போடனும்…” என்று விசாலாட்சி சொல்ல,
“ராணியை கூப்பிடு. பூசணிக்காய் வாங்கி வச்சாச்சு. எல்லாரும் சேர்ந்து நிக்க சொல்லி சுத்துவோம். வந்தவங்க அம்புட்டு கண்ணும் குடும்பத்து மேல தான்…” என்றார் ஆனந்தியும்.
இவ்வாறாக நிச்சயதார்த்தம் நல்லவிதமாய் நடந்தேற அதன்பின்னர் திருமணத்திற்கான வேலைகள் ஒருபுறமும், ரிதுபர்ணாவின் பிரசவ நேரம் ஒருபுறமும் அவர்களை சுருட்டிக்கொண்டது.
அடுத்து இருபது நாளில் ரிதுபர்ணா ஒரு ஆண்மகவை பெற்றெடுக்க அத்தனைபேரின் கவனமும் அவர்கள் மீது தான்.
“என் பேபி, என் பேபி. தம்பிக்குட்டி…” என்று பூர்விதாவை கையில் பிடிக்கமுடியவில்லை.
“அப்பாக்குட்டி அப்பாக்குட்டி…” என்று தகப்பனையும் ஒட்டிக்கொண்டே திரிந்தாள் குழந்தை.
குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு ஆனந்தியின் அண்ணனும், அண்ணியும் மருத்துவமனைக்கு வந்து நின்றனர்.
அதனை எதிர்பார்க்காத ஆனந்தி அண்ணாமலையை, ஆத்மாவை பதட்டமாய் பார்த்தார்.
“இவங்க வருவாங்கன்னு எனக்கே தெரியாது கண்ணா…” என்று மகனிடம் சொல்லி கணவனை பார்க்க அவர் எதுவும் பேசவில்லை.
வந்தவர்களை விரட்டமுடியாதே என்று விலகி ச்நேற்று அவரின் மரியாதையுடன் நின்றுகொண்டார்.
அறையில் ரிதுபர்ணா, வித்யாவுடன் செண்பகமும், விசாலாட்சியும் இருக்க இவர்கள் வந்ததை கண்டவர்கள் வாங்க என்றும் அழைக்கவில்லை.
“எப்படிம்மா இருக்க?…” என்று ரிதுவை நலம் விசாரித்துவிட்டு வித்யாவை பார்க்க அவள் விசாலாட்சி பக்கம் செல்ல போக,
“நீ எங்க போற? என் பக்கத்துல நில்லு…” என்றார் செண்பகம் வித்யாவிடம் அதட்டலாய் அவர்களை பார்த்துக்கொண்டே.
இன்றைக்கும் செண்பகத்திடம் அடிவாங்கிய அவமான உணர்வு அத்தனை சுலபத்தில் மறையவில்லை.
ஆனால் அதற்காக அண்ணாமலை, ஆத்மாவின் உறவை முறித்துக்கொள்ள முடியாதே?
பிள்ளை பிறந்ததை சாக்குவைத்து வந்துவிட்டனர் உறவை புதுப்பித்துக்கொள்ள நினைத்து.
“சரிம்மா, பார்த்துக்கோ…” என்று பதிலே சொல்லாத ரிதுவிடம் பேசிவிட்டு வெளியே வந்துவிட்டனர்.