“தப்பு என்மேல தான். நான் அன்னைக்கு வாய்க்கு வந்தபடி ஏதோ ஒரு ஆணவத்துல பேசிட்டேன். அதுக்காக மொத்தமா ஒதுக்கி வைக்கிறது எந்தவிதத்துலண்ணே சரி? முரளி தம்பி நிச்சயத்துக்கு கூட சொல்லலை. அந்தளவுக்கா வேண்டாதவங்களா போய்ட்டோம் நாங்க?…” என்றார் குருமூர்த்தி மனைவி.
“ஆமா, எனக்கு வேண்டாதவங்க தான். என் மருமகளை என் முன்னாடியே நீ பேசுவ. உன்னை நடுவீட்டுல உக்காரவச்சு பக்குவம் பார்க்கவா முடியும்? நான் தான் சொல்ல கூடாதுன்னேன்…” என்று பின்னோடே வந்த செண்பகம் சொல்ல,
“சித்தி விடுங்க…” என்றான் ஆத்மா.
“என்னன்னாலும் நீரடிச்சு நீர் விலகுமா? ஊரெல்லாம் கேட்கறாங்க. உங்களுக்கு சொல்லலையான்னு அவமானமா இருக்கு. நம்ம குடும்ப பிரச்சனை எதுக்கு எல்லாருக்கும் தெரியும்படி இருக்கனும்?…”
“நீ என் குடும்பமே கிடையாது. உன்னை எதுக்கு நாங்க அழைக்கனும்?…” என்றார் செண்பகம் மீண்டும்.
“கண்ணா கூட்டிட்டு போ…” என்ற அண்ணாமலை,
“ஆனந்தி…” என்ற ஒற்றை அழைப்பில் அவருக்கு புரிந்துவிட்டது.
எதிலும் வித்யாவை கேட்கவே இல்லை. அவளிடம் கேட்டாலும் இன்னொருவர் பதில் சொல்ல மீண்டும் பழையபடி தான் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பதை போன்ற பிரம்மை வித்யாவிற்கு.
அதுவும் குருமூர்த்தியும், அவர் மனைவியும் வந்ததிலிருந்து மனதிநோரம் சிறு சஞ்சலம்.
காதலென்று மனம் கனிந்திருந்தாலும், அன்று அவர் சொல்லிய வார்த்தைகள் இன்றும் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது.
அதுவே வித்யாவை சோர்வுற செய்ய முருகேஸ்வரி வேறு, அவ்வப்போது எப்படி இருக்கவேண்டும் என்பதை போன்ற பேச்சுக்களில் அவளை கட்டி போட்டார்.
திருமணம் நெருங்க நெருங்க முரளியிடமும் அத்தனை சுலபத்தில் பேசிவிடவில்லை.
வீட்டில் கைக்குழந்தை வேறு இருக்க அதை கவனிக்கவும், திருமண வேலைகளை பார்க்க்கவுமாய் இருக்கவே சரியாக இருந்தது.
பெரும் ஆறுதல் அவ்வப்போது இருவரும் விழிகளால் சந்தித்துக்கொள்வது தான்.
“நீ பாட்டுக்கு பேச கூப்பிட்டாங்கன்னு போகாத கண்ணு. கல்யாணம் முடியட்டும்…” என்றிருந்தார் முருகேஸ்வரி.
வித்யாவை முரளியின் கண்ணிலிருந்து ஒளித்து வைக்காத குறையாய் தான் வைத்திருந்தார்.
ஒரு கூட்டிற்குள் இருக்கிறோம், என்ன இருந்தாலும் இருவருக்கும் பேசி முடித்திருந்தாலும் மற்றவர்கள் பார்வைக்கு ஆளாக வேண்டாமென்று கவனமாய் இருந்தார்.
அவரின் பதட்டத்தில் யாருக்கும் எவ்வித குறையுமில்லை. கூடுதலாய் சிரித்துக்கொண்டனர்.
“இவளுக்கு வேற வேலையே இல்லை. பேசாம முரளியை சென்னைக்கு அனுப்பிருவோம். நிம்மதியா இருப்பா…” என்று விசாலாட்சி கூட செண்பகத்தையும் வைத்துக்கொண்டு சொல்ல,
“ஆத்தீ, அப்படியெல்லாம் இல்லைங்க அக்கா…” என்று பதறி போனார் முருகேஸ்வரி.
“அட நீவேற கம்முன்னு இருக்கமாட்டியா? கல்யாணம் வரைக்காச்சும் நெஞ்சை புடிக்காம இருக்கட்டும் இவ. இவ பதட்டத்துல எனக்கு தான் பயந்து வருது…” என்ற செண்பகம்,
“இனிமேட்டு நீ ஆத்தீன்னு நெஞ்சுல கையை வைய்யேன். அப்பறம் இருக்கு…” என்று முருகேஸை மிரட்ட,
“குச்சி ரெடியா வச்சிருக்கேன். இந்தாங்க சித்தி…” என்று நீட்டினாள் சபர்மதி.
அவர்கள் மொத்தமாய் சேர்ந்துவிட்டால் முருகேஸ்வரியை ஒருவழி செய்துவிடுவார்கள்.
அதோ இதொவென்று திருமண நாளும் நெருங்கிவிட்டது. இன்னும் இடையில் ஒருநாள் மட்டுமே இருக்க செண்பகம் பக்கத்து சொந்தங்களும் வந்துவிட்டனர்.
வீடே நிறைந்துவிட்டது. வந்திருப்பவர்களை கவனிக்கவும், மண்டபத்தில் நடக்கும் வேலைகளை பார்க்கவுமே சரியா இருக்க அனைவரும் பம்பரமாய் சுழன்றனர்.
ஆனந்தியின் அண்ணன் வீட்டிற்கு இளவரசுவும், ஏழுமலையும் மட்டுமே சென்று பத்திரிக்கை வைத்துவிட்டு வந்தனர். அதற்கே செண்பகம் மறுக்க,
“நம்ம கடமைக்கு வச்சிருக்கோம். அவ்வளோ தான். வீட்டுக்கா அழைச்சோம்? கூப்பிடும்போதே கல்யாணத்துக்கு வந்துடுங்கன்னு மட்டும் தான் சொன்னோம்…” என்றுவிட்டார்.
ஆனந்தியிடம் தன் அண்ணி கேட்டதற்கு மண்டபத்திற்கு வந்தால் போதும் என்றுவிட்டார் ஆனந்தி.
போக விருப்பமில்லை. ஆனாலும் போகவேண்டிய சூழ்நிலை. தலையை காண்பித்துவிட்டு தங்களுக்குள் எந்த சச்சரவுமில்லை என்று பொதுவில் பறைசாற்றவேண்டிய அவசியத்தில் இருப்பதனால் வேறு வழியில்லை அவர்களுக்கு.
மறுநாள் திருமாங்கல்யம் வைத்து பூஜை. பெண்ணிற்கு நகை, வளையல் எடுத்து சென்று அணிவித்து வரும் வைபவம்.
அதனால் முதல்நாளே அனைவரும் மருதாணி வைத்துக்கொள்ள அழகு நிலையத்தில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
பந்தக்கால் ஊன்றியதில் இருந்து வித்யாவை எங்கும் பார்க்க கூட முடியவில்லை முரளியால்.
மாலை வீட்டிற்கு வரும்பொழுதே அத்தனை பெண்களும் கைக்கு மெஹந்தி இட்டுக்கொண்டிருக்க யோசனையுடன் பார்த்த முரளி ரிதுவிற்கு அழைத்துவிட்டான்.
“அண்ணி எல்லாருக்குமா மெஹந்தி?…” என்று எடுத்ததும் கேட்க,
“இருங்க, நான் என் மொபைல்ல கூப்பிடறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டு தனது கைப்பேசியில் இருந்து வித்யாவை புகைபப்டம் எடுத்து முரளிக்கு அனுப்பிவிட்டு அழைத்தாள்.
புகைப்படத்தில் அமர்ந்தவாக்கில் லேசாய் ஒருபக்கமாய் தலையணையில் தலை சாய்த்து கைகள் இரண்டையும் விரித்து காண்பித்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள் வித்யா.
அதனை கண்டுவிட்டு முகமெல்லாம் சிரித்துக்கொண்டே சபர்மதியின் அழைப்பை ஏற்றவன்,
“பார்த்துட்டேன்…” என்றான்.
“ஹ்ம்ம், ஒரு டிஸைனும் செலெக்ட் பண்ணலை உங்காளு. மூஞ்சியை மூஞ்சியை பார்க்கறா. கடைசி நானும், மனோவும் தான் செலெக்ட் பண்ணோம்…” என்று சொல்ல,
“ப்ரெஷா இல்லை பறிச்சு அரைச்சு வைக்கிற மருதாணி தான் பிடிக்கும் அவளுக்கு. கோன்ல உள்ளதை வைக்க சொன்னா எப்படி வைப்பா?…” என்றான் அவளிடம்.
“அட ஆமா, அவ கூட வேண்டாம்ன்னா. ரிதுவும் சொன்னா மருதாணி கேட்கிறான்னு. நானும் சுந்தரி மதினியும் தான் சொன்னோம். கல்யாணத்துக்கு இப்படி இருந்தா தான் கிராண்டா இருக்கும்ன்னு…”