“யூ மீன் இந்த தூது பொண்ணு. உங்க ரெண்டுபேருக்கு பின்னாடி லாலாலா பாடற வெள்ளை ட்ரெஸ் பொண்ணு, இட்ஸ் மீ. ஓஹ் காட். நல்லா வச்சு செய்யறீங்க போங்க. என்னிக்கு முருகேஸை கண்காணிக்கிற கண்ணிவேடில கால வச்சேனோ அன்னைக்கு ஆரம்பிச்சது? சரி பொழைச்சு போங்க…” என்று சொல்லியவள் அவன் கேட்டபடி அரைத்து தந்துவிட்டாள்.
அத்தனைபேரும் இரவு உறங்கியிருக்க வித்யாவிற்கு செய்தியனுப்பியவன் கிளம்பி பின்னாலிருக்கும் கொட்டகைக்கு வர சொல்லியிருந்தான்.
முடியாதென்ற வார்த்தைகள் கூட வித்யாவிடமிருந்து வரவில்லை. முழுதாய் ஒருவாரமாக அவனை காணாமல் இருந்தவள் மனது வெகுவாய் தன் குழப்பங்களில் தவித்திருந்தது.
இப்போது அவனே அழைத்திருக்க யோசிக்கவே இல்லை. யாரும் காணாமல் எழுந்து சத்தமின்றி வெளியேறி வர மாட்டு தொழுவத்தில் மெல்லிய விளக்கொளியில் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் முரளி.
அவனை காணும் வரை அத்தனை வேகத்தில் வந்துவிட்டவள் கால்கள் அதற்குமேல் நகராமல் நின்றுவிட சென்றுவிடுவோமா என்றொரு எண்ணம் வெறும்.
“வா…” என்றவனின் ஒற்றை வார்த்தையில் சிறைபட்டிருந்த கால்கள் விடுதலையாய் நகர மெல்ல அவனிடம் சென்றாள் வித்திவ்யா.
மெல்லிய, மிக மெல்லிய கொலுசொலியும் அசைந்துவரும் அவளின் நகர்வுமாய் மனம் அள்ளிக்கொள்ள பார்த்தான் முரளி.
“என்ன திவ்யா? தூங்கிட்டியா?…” என்று மென்குரலில் கேட்டவன் மனம் அவளின் வாசத்தை நாசியில் நிரப்பு சுவாசத்தில் கலக்கவிட்டது சுகமாய்.
“ம்ஹூம்…” என்றவளின் மெல்லிய சப்தமும், அவள் அசைந்ததில் கைகளில் அணிந்திருந்த வளையல்களும் அசைந்தாட முரளியின் கைகள் மெல்ல மேலெழுந்து தன் தலையை அழுத்தமாய் கோதிக்கொண்டது.
“திவ்யா, திவ்யா…” என்றவன் தன் இரு கை கொண்டு முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டான்.
“நல்லவேளை ஞாபகப்படுத்தின. உட்கார்…” என்று அவளின் கை பிடித்து கல் மேடையில் அமர வைக்க, ‘யாராவது வர போறாங்க’ என்றாள் பயத்துடன்.
“வந்தா? என்ன பண்ணிடுவாங்க? நீ உட்கார்…” என்று சொல்லியவன்,
“இதுக்கு தான் வர சொன்னேன்…” என்று தன் கையிலிருந்த கிண்ணத்தை காண்பித்தான்.
அரைக்கப்பட்ட மருதாணியின் வாசம் வித்யாவின் நாசியை துளைக்க அருகில் இழுத்து நுகர்ந்தாள்.
முகமெல்லாம் பூவாய் மலர்ந்து விரிந்தது அதனை கண்டதும். அடுத்தநொடி அந்த புன்னகை சலிப்பாய் மாற, தன் கையிரண்டையும் உயர்த்தி காண்பித்தாள்.
‘வச்சுக்க முடியாது. ஏற்கனவே மெஹந்தி வச்சுட்டாங்க.’ என்று முரளியிடம் கையசைத்து சொல்ல,
“கைல வச்சுக்க முடியாதுன்னு எனக்கு தான் தெரியுமே…” என்றவன் சிரிப்போடு அவளின் அருகில் கீழே இன்று சிறிய கல்லிருக்க அதில் அமர்ந்தான்.
வித்யா என்ன செய்ய போகிறான் என்பதை போல திகைப்பாய் பார்க்க அவளின் வலது காலை பிடித்து பாதத்தை தன் மடியின் மீது வைத்ததும், அதிர்ந்து துள்ளி விலக பார்த்தாள் அவள்.
“விழுந்து வச்சுடாதடி. நாளை மறுநாள் கல்யாணம் இருக்கு…” என்று அதட்டிய முரளி,
“சத்தமில்லாம உட்காரனும் பார்த்துக்கோ. மூச்…” என்று அதட்ட, ‘வேண்டாமே?’ என்றாள் கெஞ்சுதலாய்.
“இப்ப நீ உட்கார போறியா? இல்ல எல்லாரையும் கூப்பிட்டு எல்லார் முன்னாடியும் வைக்கட்டுமா?…” என்றதும் அடுத்து எவ்வித மறுப்பையும் காண்பிக்கவில்லை அவனிடம்.
எதையும் செய்துவிடுபவன் இவன் என்று என்றோ அவள் அறிந்தது தானே? என எண்ணியபடி அவனை பார்க்க சிரத்தையாய் சின்ன சின்ன உருண்டைகளாய் எடுத்து பாதங்களுக்கு அவன் அழகாய் மருதாணியை பூச அதன் குளிர்ச்சியில் உயிர் சிலிர்த்தது.
“எங்கேஜ்மென்ட்ல கவனிச்சேன் உன் காலுக்கு ஏன் மருதாணி வைக்கலைன்னு. இப்பவும் வச்சிருக்கமாட்டன்னு ஒரு கெஸ். அதான்…” என்று பேசிக்கொண்டே வைத்தவன் கைகள் அவளின் பாதத்தில் பதிந்து பாவி, வருட அதன் தாக்கத்தில் அடிவயிற்றை உள்ளிழுத்து இதழ்களை மடக்கி கடித்தபடி அசையாது அமர்ந்திருந்தாள் வித்யா.
நிதானமாய், ஆசையாய், அனுபவித்து அவளின் இரு பாதங்களுக்கும் பூசி அழகுபடுத்தியவன் விரல்கள் அவளின் உள்ளங்காலில் குறுகுறுப்பை மூட்ட கைகொண்டு முகம் மறைத்தாள் வித்திவ்யா.
மௌனமாய் சிரித்துக்கொண்டவன் கண்கள் கனிந்து காதலில் சுகித்திருக்க அவளின் முகம் காணமுடியாமல், பாதத்தை நோக்கி குனிந்தவன், கொலுசோடு சேர்த்து பாதத்தில் முத்தம் பதிக்க துள்ளி இறங்கிவிட்டாள் கல்லிலிருந்து.
“ஹோய் எங்க போற?…” என்று அவளை வளைத்து பிடித்தவன் கைகள் இரண்டும் சிறியேன அவளின் இருபுறமும் அந்த கல்லில் ஊன்றி இருக்க அவன்மீது பட்டுவிடாமல் வித்யா பின்னால் சாய்ந்திருந்தாள்.
“முத்தம் குடுத்து ஆரம்பிச்சது, நிச்சயம் நடந்து இப்ப கல்யாணமும் முடிவாகிருச்சு. இப்ப வரை உனக்கு என்னை எவ்வளோ பிடிக்கும்ன்னு சொல்லவே இல்லையே மிஸஸ். முரளி?…” என்றான் தன் மூச்சுக்காற்று அவள் முகம் உரச.
காதலும், கூச்சமும், கூடுதலாய் மிரட்சியுமென அவனை விழிவிரித்து பார்த்தவள் அழகில் சாய்ந்தவன்,
“சொல்லிடு. விட்டுடறேன்…” என்று கூற,
“ம்ஹூம்…” என்றாள் அவள்.
“என்ன ம்ஹூம்? சொல்லமாட்டியா?…” இன்னும் நெருங்கி,
“நான் சொல்லவா?…” என்றான்.
அவளால் கையசைத்து செல்லவேண்டும் என்றும் கூட சொல்லமுடியாத ஒரு ஸ்தம்பித்த நிலை.
“வார்த்தை சொல்லிடுமா திவ்யா? என்னால வார்த்தையால சொல்லிட முடியுமான்னு தெரியலை. ஆனா நான் வார்த்தையா சொல்லலை. அதுதானே நிஜம். அன்னைக்கு எல்லாரும் என் காதலை பார்த்தாங்க. நீ பார்க்கவும் இல்லை. உணரவும் இல்லை….” என்று சொல்ல சொல்ல என்ன கூற வருகிறான் என்று தடதடக்கும் நெஞ்சத்துடன் பார்த்தாள்.
“எனக்கும் இன்னொருமுறை உணரனும், உணர வைக்கனும்ன்னு தோணுது. நெஞ்சை எல்லாம் அந்த ஆசை இழுத்து பிடிச்சு அடைக்குது. மூச்செல்லாம் முத்தம் வாங்க தவிக்குதே? தரவா?…” என்று சொல்லியவன் முகத்தில் வசீகர புன்னகை மயக்கும் விதமாய்.
“ஏற்கனவே மொத்தமா சாய்ஞ்சிட்டேன். இப்ப நீயும் சாய்ஞ்சு என்னை இன்னும் சாய்ச்சு…” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லியவன் அவளின் முகத்தை இன்னும் நெருங்க சட்டென அவனை நிமிர நிறுத்தி அவன் மார்பில் முகத்தை பதித்தாள் வித்திவ்யா.
அணைக்கவில்லை. கைகள் தழுவவில்லை. அவளின் வீரகள மட்டுமே அவனுடல் தீண்டாமல் சட்டையை பற்றியிருக்க முன்னேற்றி அவன் நெஞ்சப்பகுதியில் முட்டி நின்றது.
“இன்னும் நேரமிருக்கு. மொத்தமா எனக்குள்ள உன்னை வாங்கிக்க…” என்றவனின் இதழ்கள் அவளின் உச்சந்தலையில் மென்மையாய் பதிய, மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் வித்திவ்யா.
கண்கள் இரண்டும் கலங்கி சிவந்திருக்க அவனின் நேசம் எப்போதும் போல இப்போதும் அவளை புரட்டிக்கொண்டிருந்தது.
‘என்னை அவ்வளோ புடிக்குமா?’ என்றாள் தன் கைகளை அவன் கண்களுக்கு பாஷையாக்கி.
அதற்கும் முரளி புன்னகையை பதிலாக தர, ‘நானில்லைன்னா?’ என்னவோ ஓன்று அந்த வார்த்தை அவளுள்ளிருந்து என்துவிட ஒருநொடி உயிர்பற்ற பார்வை அவன் கண்களை வெறுமையாக்கி செல்ல சுதாரித்து பார்த்தவன் இதழ்களில் உறைந்த புன்னகை.
“நான் இருப்பேன். நான் தானே நீ. உன்னோட ஞாபகங்கள் என்னோட எனக்குள்ள இருக்கற வரைக்கும் நீயும் என்னோட தானே இருப்ப திவ்யா?…” என்றான் ஆழமான குரலில்.
நெஞ்சை அடைத்தது அவனின் பேச்சுக்களும், அந்த வார்த்தைகளில் சாராம்சமும்.
எதுவும் கேட்க முடியவில்லை. முரளியின் இரு கைவிரல்களை பற்றிக்கொண்டவள் தன் முகத்தோடு வைத்துக்கொள்ள அவளின் விழிநீர் அவன் கரங்களில் சூடாய் இறங்கியது.
விழிநீருடன் இதழ்களின் ஸ்பரிசமும் அவனின் மனதை தொட. ஒன்றும் சொல்லாமல் அவளின் பின்னந்தலையில் கைகொடுத்து தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான் முரளி வினோகரன்.
இருநொடிகள் தான். மெல்ல விலகியவன் அவளின் கன்னத்தில் தட்டிகொடுத்து புன்னகைத்து,
“போய் தூங்கு. நாளைக்கு பார்க்கலாம்…” என்று அனுப்பிவைக்க, தலையசைத்தவள் அவனை திரும்பி பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.
மனங்களின் கோர்வையில் இருவரின் உணர்வுகளும் சங்கமித்திருக்க, உறவாய் சங்கமிக்கும் நாளுக்கான விடியலுக்கு காத்திருந்து அவர்கள் மட்டுமல்லாது, அவர்கள் குடும்பங்களும்.
அத்தனை வருடங்களின் காத்திருப்பின் காதல் இதோ அனைவரின் ஆசிர்வாதங்களுடன், முகம் நிறைந்த மகிழ்ச்சியுடனான சொந்தங்களின் வாழ்த்துக்களுடன், ஊர்மக்களின் பார்வையில், அட்சதை பூக்கள் மழையாய் பொழிய அவனின் மௌனமொழியாள் முரளியின் வாழ்வின் பாஷையாகினாள்.
இருவரின் திருமணம் கோலாகலமாக, நிறைவாய், மகிழ்வாய், உயிர்ப்பாய் நடந்தேறியது.