திருமதி முரளி வினோகரனாய் வித்திவ்யா முழுமையாய் அவனின் வாழ்வின் அங்கமாக, முரளியின் விழிகள் அவளை சொந்தமாய் அள்ளி கொண்டாடி தீர்த்தது.
“மெட்டி போட்டுவிடு முரளி….” என்று விசாலாட்சி முரளியிடம் கூற, மணவறையின் ஓரத்தில் மஞ்சள் பூசப்பட்ட அம்மிக்கல்லின் முன் வந்து நின்றாள் வித்திவ்யா.
முரளியின் முகமெல்லாம் புன்னகை. அவனின் நெஞ்சத்தின் வாசத்தை அங்கே அனைவருக்கும் மணம் பரப்பியது.
“இதென்ன புதுசா இருக்கு ஆனந்தி? நம்ம வழக்கத்துல இந்த முறை இல்லையே?…” என்றார் ஆனந்தியின் அண்ணி.
“ப்ச், சும்மா இருங்க. இப்ப எங்க வச்சு மெட்டி போட்டா என்ன?…” என்று அவரை அதட்டி வைக்க பார்த்தார் ஆனந்தி.
“என்னண்ணி இப்படி பேசறீங்க? நீங்க வீட்டோட மூத்தவங்க. இதெல்லாம் சொல்லமாட்டீங்களா? நாத்தனார் முறை உள்ளவங்க தான வளையல் போட போகும்போது நகை குடுத்து, மெட்டியை போட்டுவிட்டுட்டு நலுங்கு வச்சிட்டு வரனும்? அப்போ நேத்து அந்த சடங்கு ஒன்னும் செய்யலையா?…” என்று விடாமல் கேட்க,
“அடுத்தவாட்டி சொல்லி அனுப்பும் போது வாங்க. நீங்க பார்க்க பதமா செய்யறோம். சரியா?…” என்று இருவருக்கிடையில் தலையை நீட்டிய சபர்மதி,
“பெரிம்மா உங்களை பெரிப்பா தேடறாங்க. இங்க என்ன வெட்டி பேச்சு? வீட்டு பெரியமனுஷி சபையில நிக்காம இங்க என்ன? வாங்க…” என்று ஆனந்தியை இழுத்துக்கொண்டு சென்றாள் அவள்.
செல்லும் பொழுதே ஆனந்தியின் அண்ணியை திரும்பி பார்த்து, ‘சாப்பிட்டுவிட்டு கிளம்பு’ என்பதை போல கையால் சைகை காண்பித்துவிட்டு தோள்பட்டையில் நாடியை இடித்துக்கொண்டு திரும்பினாள்.
“கொழுப்பெடுத்தவ, அவ மாமியாருக்கு தப்பாம வந்து வாய்ச்சிருக்கா…” என்ற முனுமுனுப்புடன் மேடையை வேடிக்கை பார்த்தார்.
அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து நிற்க வித்யாவின் பாதத்தை எடுத்து தன் உள்ளங்கைக்குள் வைத்த முரளி மெட்டியை அணிவிக்க மருதாணியிட்ட பாதத்தின் அழகுக்கு அழகு சேர்த்தது அவன் அணிவித்த மெட்டி.
முத்துக்கள் கொண்ட மெட்டியை பார்த்தவன் தன் பெருவிரலால் லேசாய் வருடிவிட்டு நிமிர்ந்து பார்க்க, அவனின் பார்வையே சொல்லியது என்ன செய்வான் என்பதை.
சட்டென வித்யா பாதத்தை விலக்கிக்கொள்ள அதுவரை மௌனமாய் சிரித்தவன் இதழ்கள் அழகாய் விரிந்தது புன்னகையில்.
“அடுத்த காலை காமி வித்யா. என்ன பார்த்துட்டே நிக்கிற?…” என ரிதுபர்ணா சொல்ல தலையசைத்தவள், அடுத்த பாதத்தையும் நீட்டி முரளி மெட்டியை அணிவித்ததுமே உருவிக்கொண்டாள்.
அனைவரும் புன்னகையுடன் பார்க்கவும் அவளருகே வந்து நின்றவன் லேசாய் தலை சாய்த்து,
“தங்க பொண்ணுக்கு, தங்க நிற முகூர்த்த புடவை. செம்ம ஆப்ட் போ…” என்றான் முரளி ரசனையாக.
புடவை எல்லாம் தங்க சரிகையும் இடையிடையே குங்குமமும், அடர்ந்த ரோஜாவர்ணமும் கலந்த நிறத்தில் சிறுசிறு முத்துக்கள் போன்ற வடிவமைப்புமாய் அந்த புடவை வித்திவ்யாவை பாந்தமாய் தழுவி இருந்தது.
அவளின் புடவை தேர்வு நிச்சயம் செண்பகத்தின் தேர்வு மட்டுமே. மகனின் திருமணத்தை திருவிழா போல நடத்த நினைத்தவர் அதனை நடத்தியும் காட்டிவிட்டார்.
அவரின் ஆசைகள் ஒவ்வொன்றையும் அவர் நிறைவேற்ற முரளியும், வித்யாவுமே முழுமனதாய் ஏற்றனர்.
இப்போது இருவரையும் இணையாக பார்த்த செண்பகத்தின் கண்கள் நெக்குருகி கலங்கியது.
அத்தனை அழகாய், பாந்தமாய், இவளுக்காகவே இவன், அவனுக்காகவே அவள் என்பதை போன்ற தோற்றத்தை தருவித்தது அவர்களின் நிறைவான சந்தோஷமுகம்.
அவர் பார்த்து பார்த்து ரசிக்க சுந்தரி, மனோவின் கவனம் வித்யாவின் மெட்டியிட்ட பாதத்தில் தான்.
“ஆமா காலுக்கு மெஹந்தி எப்போ வச்ச வித்யா? நேத்து கூட நாங்க பார்க்கலையே?…” சுந்தரி அதிமுக்கிய கேள்வியாக அப்போதே அதனை கேட்க,
“மருதாணி அன்னைக்கு வித்யாவோட காலுக்கு வைக்கலையா?…” என்று செண்பகமும், விசாலாட்சியும் வேறு கேட்டுவைக்க படீரென்று அவர்களுக்கு மத்தியில் குபீரென்று குறுக்கே விழுந்தாள் சபர்மதி.
“ஆத்தீ, என்னிய பஜன்லால் சேட்டாக்கிட்டாங்களே. எல்லாம் இந்தண்ணாவால…” என முணுமுணுத்துக்கொண்டவள்,
“இருக்குற சடங்குல இவங்களுக்கு ஆராய்ச்சி வேற. இவிங்க மத்தில நான் படறபாடு. நகருங்க நகருங்க….” என்று சபர்மதி அவர்களை கலைத்துவிட பார்த்து கையை அசைக்க அதில் மருதாணியை அரைத்ததன் அடையாளம் சிவப்பாய் தெரிய,
“பட்சி சிக்கிடுச்சு. பார்த்தியா?…” என்று சுந்தரி மதியை பிடித்துக்கொண்டாள்.
“ஐ ஆம் யுவர் பெஸ்ட் ப்ரதர் வொய்ப். இப்படியெல்லாம் ஈஸியா கண்டுபிடிச்சா நான் எப்படிடா பெர்பாமென்ஸ் பன்றது?…” என்ற மதி,
“வழியை விடுங்க, போய் மணமக்களை ஆசிர்வாதம் பண்ணனும். அவ்வளோ வேலையும் என் தலையில…” என்றவள்,
“அப்பறம் அண்ணி, உங்களுக்கு மருதாணி அரைக்கனும்ன்னா இனிமே கிரேட் கண்ணு முருகேஸ் பிரீயோ ப்ரீ. அரைச்சு வாங்குங்க. இல்லைன்னா நான் வாங்கி தரேன்…” என்று சொல்ல அவளின் கலாட்டாவில் மனோ வாய்பொத்தி சிரிக்க,
“அநியாயம் பன்றடி நீ…” என்றாள் சுந்தரி அவளின் தலையில் தட்டி.
அதற்குள் ரிதுபர்ணாவின் கையில் இருந்த குழந்தை பசியில் சிணுங்க விசாலாட்சி மருமகளை அனுப்பினார்.
“நீ எங்க தனியா போற ரிது? இப்பத்தான் பிள்ளை பெத்த உடம்பு. இவ்வளோ அலட்டிக்கற…” என்று அவளுடன் வந்துவிட்டாள் சபர்மதி.
“ரூம்க்கு தானே அண்ணி? பசியாத்த போறேன். இதுக்கு ஒரு ஆளா?…” என்று சிரித்தாள் ரிதுபர்ணா.
தங்கையின் திருமணம் அவளின் கனவு என்றே சொல்லலாம். அவர்கள் உறவுகளிலேயே அத்தனை பெரிதாய் முருகேஸ்வரி, வித்யாவை மதித்ததோ, கண்டுகொண்டதோ, பொருட்படுத்தியதோ கிடையாது.
அதனைகொண்டே தானுமே மற்ற உறவுகளிடமிருந்து தன் சித்தி, தங்கைக்காக எட்டி நின்றுகொண்டாள்.
எந்த ஊர் அவர்களை அலட்சியமாக பார்த்ததோ அதே ஊரின் மத்தியில் எழில் குழுமத்து வாரிசின் இரண்டாவது மருமகள் வித்திவ்யா.
அதுவும் அவளை அவளுக்காகவே நேசித்து, ஆராதித்து, காத்திருந்து கைப்பற்றும் ஒருவனின் அன்பிற்கென அவள் அக்குடும்பத்திற்கு வந்து சேர்ந்ததை போன்றிருந்தது.
‘இந்த பொண்ணுக்கு எல்லாம் சாதாரண மாப்பிள்ளை கூட கிடைக்கிறது கஷ்டம்’ என்று அனுதாபத்தோடு பரிதாபமாக பார்த்தவர்கள் முன்னிலையில் அந்த ஊராரின் பார்வையில் தங்கையின் வாழ்வை பார்த்து பூரித்து தான் போனாள் ரிதுபர்ணா.
பரிசுத்தமான பேரன்புகள் கொண்ட நெஞ்சம் இரண்டும் இணைந்திருக்க அவர்களை சுற்றிலும் உள்ளார்ந்த பாசம் கொண்ட உறவுகள்.
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தாங்கள் என்று நினைத்தபடி அமர்ந்திருந்தாள் ரிதுபர்ணா.
“எவ்வளோ நேரம்டி கனவு கண்டுட்டு இருப்ப?…” என்ற ஆத்மாவின் சத்தத்தில் திரும்பி பார்க்க சபர்மதி வெளியே சென்றிருந்தாள்.
“நான் தான் அனுப்பிவச்சேன். குழந்தை தூங்கிட்டான் பாரு…” என்று மகனை வாங்கிக்கொண்டவன் தோளில் போட்டு தட்டிக்கொடுக்க,
“முரளியோட உக்கார்ந்திருக்கா. விவரம் தெரிஞ்சதும் அவர் பார்க்கிற கல்யாணம். மனோ கல்யாணத்தப்போ அவ ரொம்ப குழந்தை. அதனால ஒன்னும் தெரியலை. இப்ப அவனோட உக்கார்ந்துட்டு இது எதுக்கு, அது ஏன்னு கேட்டிட்டிருக்கா…” என்று சிரித்தவன் குழந்தையை படுக்கையில் கிடத்தி தானும் லேசாய் சாய்ந்தமர்ந்தான்.
“உங்களை தேட போறாங்க கண்ணத்தான். கீழே போகலையா நீங்க?…”
“ஹ்ம்ம், போறேன். நீ திரும்பி திரும்பி மேடையை பார்த்துட்டே போன இல்லையா? அதான் வந்தேன்…” என்றவனின் பேச்சில் ரிதுபர்ணாவின் முகத்தில் நிறைவான வாழ்வின் பூரிப்பு.
“இதுக்காக வந்தீங்களா? சும்மா பார்த்தேன்…” என்று சொல்லியவள் குரல் லேசாய் கலங்கி இருந்தது.