“வித்யாவோட எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு நான் கவலைப்படாத நாளே இல்லை. என்னதான் சீர்வரிசை, எல்லாம் குடுத்து மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சாலும் அவன் அவளை புரிஞ்சுக்கறவனா இருக்கனுமேன்னு ஒவ்வொருதடவையும் யோசிப்பேன். இப்ப என்னவோ அவ்வளோ சந்தோஷம்…” என்றவள்,
“முதல்ல முரளியான்னு அவ்வளோ ஷாக். அத்தை ஒத்துக்கவே மாட்டாங்கன்னு ஒருபக்கம் தோணினாலும், செண்பகம் அத்தை பட்டுன்னு பேசக்கூடியவங்க. வார்த்தையை விட்டுட்டா சித்தி உயிரையே விட்டுடுவாங்க. அந்த நேரத்துல நான் பட்டபாடு. முரளிக்கிட்ட வித்யா விஷயத்துல உண்மையை பார்த்தேன். அதேநேரம் அவன் விருப்பம் அங்கீகரிக்கப்படாதோன்னு அவனுக்காகவும் கவலையா இருந்தது…”
“ஆனா இப்ப அது எல்லாம், எல்லாமே கனவு மாதிரி, எல்லா கஷ்டங்களும் கலைஞ்சுட்ட மாதிரி இந்த நிமிஷம் என்னை மாதிரி சந்தோஷமா இருக்கறவங்க யாருமே இல்லை…” என்றாள் நெகிழ்ந்த குரலில்.
“வாவ், சூப்பர் ஸ்பீச்…” என்று ஆத்மா கலாய்க்க,
“என் எமோஷன் உங்களுக்கு ஸ்பீச்சா? எந்திச்சு போங்க…” என்று தலையணை கொண்டு அவனின் மேல் தாக்க,
“நீ பேசின தானே? அது ஸ்பீச் தானே?…” என்றவன் சிரிப்போடு எழுந்துகொண்டான்.
“ஓகே, நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு. துணைக்கு அம்மாவை அனுப்பறேன். குழந்தை தூங்கட்டும்….” என்று சொல்ல,
“இல்லை, மனோவை அனுப்புங்க. நான் அங்க வரேன். அத்தையை அனுப்பினா உங்க தாய்மாமா வீட்டுல வந்து உக்கார்ந்துப்பாங்க. அத்தை அங்கயே இருக்கட்டும்…” என்றவள்,
“அவங்க பார்வை இருக்கே? அப்பப்பா…” என்று வேறு தலையை ஆயாசமாய் ஆட்டி வைக்க,
“பின்ன அவங்க தட்டி தூக்க பார்த்த மாப்பிள்ளை முரளி. புகையும் தானே?…” என்று சிரித்தான் ஆத்மா.
“ஆமா, அந்த விஷயம் மறந்தே போச்சு எனக்கும்…”
“செண்பகம் சித்தி ஒத்துக்கலைன்னதும் அவங்க மேலையும் கோவம். அந்த ஆத்திரம் தான் அன்னைக்கு வித்யாக்கிட்ட அந்தம்மாவை அவ்வளோ பேச வச்சது….”
“பல்லை கொட்டிட்டு கட்டுப்பல்லு கட்ட வச்சது. நல்லா வேணும்…” என்று ரிதுபர்ணா முணுமுணுக்க,
“சரி, நீ இரு. இப்ப அங்க மேடைக்கு வாழ்த்து சொல்ல தான் வந்திட்டிருக்காங்க. நீ வந்தா கசகசன்னு இருக்கும். கொஞ்சநேரம் இரு. அப்பறம் வரலாம்…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான் ஆத்மா.
அடுத்தடுத்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்து மறுவீட்டிற்கு மணமக்களை அழைத்து செல்ல கிளம்பிவிட்டனர்.
முதலில் முரளியின் இல்லம் சென்றுவிட்டு விளக்கேற்றும் வைபவம் இனிதே நடந்து முடிய அடுத்து முருகேஸ்வரி வீடு.
அன்றே சென்று திரும்பவேண்டும். இரவு சடங்குகள் முரளியின் வீட்டில் தான் ஏற்பாடாகிக்கொண்டிருந்தது.
இப்போது மணமக்களை அழைத்துக்கொண்டு முரளியின் வீட்டிலிருந்து வித்யா வீட்டிற்கு வர,
“என்னையெல்லாம் வலதுகால் வைக்க சொல்லமாட்டீங்களா? டூ பேட்….” என்று சொல்லி வலதுகால் வைத்து உள்ளே நுழைந்தான் முரளி.
“விளக்கேத்தறது கிடையாதா? இதென்ன பொண்ணுங்களுக்கு மட்டும் பர்ஸ்ட் ப்ரையாரிட்டி? ஆம்பளைங்களுக்கு அநியாயம் நடக்குது. தட்டி கேட்கமாட்டீங்களா?…” என்று அலப்பறையை கூட்டியவன்,
“முதல்ல நீ பால், பழம் சாப்பிட்டு குடு. லேடீஸ் பர்ஸ்ட்…” என்று சொல்லி,
“வேணும்னா உங்கம்மாக்கிட்ட கேளேன். நான் சொல்றது சரின்னுவாங்க. எங்க என் மாமியார்?…” என்று முருகேஸ்வரியை பீதியாக்கினான்.
திருமண வேலைகள் ஒவ்வொன்றிலும் முருகேஸ்வரியை ஒதுங்கி நிற்கவிடாமல் அவன் அவரை முன்னிலைப்படுத்த அவர் தான் அரண்டுபோயிருந்தார்.
“காலத்துக்கும் நல்லா வாழனும். என்னை போய் நிப்பாட்டறீங்களே?…” என்று ஒதுங்க,
“எங்க அந்த குச்சியை. கண்ணுக்கு கண்ணுமண்ணு தெரியாம பேச மட்டும் தெரியும். மூச்…” என்று ட்ரில் மாஸ்ட்டரானாள் சபர்மதி.
இப்போது வரை முரளி அவரை இழுத்து பிடித்து முன்னிறுத்த அவன் பண்ணிய அட்ராசிட்டியை அத்தனைபேரும் ரசித்தனர்.
செண்பகத்திற்கு தான் அத்தனைபேரின் கண்களும் கவிதையாய் அரங்கேறிக்கொண்டிருக்கும் அந்த திருமண நிகழ்வுகளை அழகாய் களவாடிக்கொண்டிருக்க கண்டு மனம் பதைத்தது.
அத்தனை கண்களின் ஆவலாதியையும் திருஷ்டி கழித்து சுட்டெரிக்க நினைத்தார்.
முரளி அந்த வீட்டிற்குள் முன்புமே வந்திருந்தாலும் கூடத்தை தாண்டி உள்ளே நுழைந்ததில்லை.
இப்போது பூர்விதா கைபிடித்து அழைத்து சென்று ஒவ்வொன்றாய் காண்பிக்க கூடவே வித்யாவும் வந்தாள்.
“இதெல்லாம் நீ காமிக்கவேண்டியது….” என்று அவளிடம் சிரிப்புடன் சொல்லியவன்,
“உன் ரூம் நல்லாயிருக்கே. சின்னதா, எல்லாமே கைக்கெட்டுற தூரத்துல, கைக்கடக்கமா…” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் அவள் முகம் பார்த்து,
“குட்டியா ஒரு மேஜை, அம்சமா உன் போட்டோ. உட்கார அதிகமில்லாம ஒரே ஒரு சேர். நம்ம சேர்ந்து உக்கார்ந்துக்கலாம். சின்ன கட்டில். டபுள்காட். ரொம்ப தள்ளி தாராளமா எல்லாம் தூங்க தேவை இல்லை. எதெதுல கஞ்சத்தனம் வேணுமோ, அததுல இருந்தா தான் அழகு….” என்றவன் கைகள் அவளின் இடையில் தெரிந்த சிறிய வெளிச்சத்தில் விரல்களை மெல்ல நகர்த்த,
“ம்ஹூம்…” என்றவள் சட்டென தட்டிவிட்டு தள்ளி சென்று நின்றாள்.
“ம்ஹூம் எல்லாம் ம்ஹூம் தான். புரியுதா?…” என்றவன் அவளின் நெற்றியில் லேசாய் முட்ட,
“சித்தப்பா…” என்று மீண்டும் உள்ளே ஓடிவந்தாள் பூர்விதா.
“என்னடா குட்டி?…” என்று அவளிடம் மண்டியிட்டு கேட்க அவனின் கழுத்தை கட்டிக்கொண்ட குழந்தை,
“என்கூட நீங்க பின்னாடி காணும்…” என்று அவன் தோளில் அழகாய் சாய்ந்துகொண்டது.
“என் முன்னாடி குட்டிம்மாவை காணுமா? அதான் உன் சித்திட்ட தேட சொல்லி கேட்டுட்டிருந்தேன். இப்ப பின்னாடி வரட்டுமா?…” என்று கேட்டவன் வித்யாவை பார்த்து கண் சிமிட்ட,
“போலாம்…” என்றாள் பூர்விதா.
அனைவரும் அமர்ந்திருக்க நடுவில் சென்றவன் மாப்பிள்ளை கெத்தை காண்பித்தபடி சிரிக்க சிரிக்க பேச, ஆத்மாவின் விழிகள் தம்பியின் முகத்திலும், அவனின் சந்தோஷ பேச்சிலும் தான் பதிந்திருந்தது.
“ஆத்மா ஸார், பேஷண்ட் தலையில உறைஞ்சிருக்கற ப்ளட் க்ளாட் லேசா மூவ் ஆகிருக்கு. ப்ரைனுக்கு போற நரம்புகளோட சேர்ந்து நிக்குது. திரும்ப அதோட மூவ்மென்ட் இருந்தாலோ, இல்லை அதோட பருமன் உயர்ந்தாலோ நிச்சயம் எந்த கேரண்டியும் சொல்லமுடியாது….” என்று சொல்லியிருந்த மருத்துவர்கள்,
“சர்ஜரி பன்றதும் பாஸிபிள் கம்மி தான். ஆனா…” என்று அவர்கள் கேள்வியாய் நிறுத்திய அந்தநிமிடம் நடுநெஞ்சில் ஈட்டியை பாய்ச்சி இருந்தது அவனுக்கும், முரளிக்கும்.
“ரிஸ்க் எடுத்து பார்த்துடுவோமா?…” என்று ஆத்மா கேட்டாலும் ஒருவேளை சர்ஜரியில் வித்யா திரும்பி வரவில்லை என்றால்?
“அப்பாக்குட்டி….” என்று பூர்விதா ஆத்மாவின் கையை பிடித்து இழுக்கவும் தெளிந்தவன் சுதாரித்து கீழே பார்த்தான்.
“தாத்தா கூப்பிட்டாங்க…” என்று சொல்லிய குழந்தையை பார்த்ததும் ஆழ்ந்த பெருமூச்சுடன் பிள்ளையை தூக்கிக்கொள்ள,
“அப்பாக்குட்டிக்கு ஷிவராகுது. ஃபீவரா?…” என்றாள் பூவிதா ஆத்மாவின் உடலில் தென்பட்ட மெல்லிய நடுக்கத்தில்.
“நோ டா குட்டிம்மா. தாத்தா எங்க?…” என்றவன் பேச்சை மாற்றி வெளியே வந்துவிட்டான்.
அவன் செல்லும்வரை முரளியின் பேச்சுக்கள் சுற்றியிருந்தவர்களிடம் இருந்தாலும் பார்வை தன் அண்ணனிடமும், தள்ளி அமர்ந்திருந்த மனைவியிடமும் தான்.
ரோஜா கூட்டத்தின் அத்தனை மென்மையையும் மொத்தமாய் சுமந்திருப்பவளின் புன்னகை கண்டவன் தன் நெஞ்சத்தை இன்னுமே வலிமையாக்கினான்.
ஆர்ப்பரிக்கும் புன்னகை குறைந்து, இதழ்கள் லேசாய் புன்னகையை சிந்த, விழிகள் அவளிடம் நிலைபெற்றது.
‘பார்க்கலாம், என்னை விட்டு போகக்கூடிய தைரியமும், துணிவும் உனக்கிருக்கான்னு. எப்பவும் நீ என்னோட தான் திவ்யா.’ என மனதார சொல்லிக்கொண்டவனின் திடீர் அமைதியில்,
“கண்ணம்மா கம்முன்னு கிட…” என்று சபர்மதி இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கண்களை உருட்ட,
“ஆரம்பிச்சிட்டீங்களா?…” என்று சுந்தரியும், ரிதுவும் தலையில் கைவைத்துவிட்டனர்.
சற்றுநேரத்தில் மீண்டும் முரளியின் இல்லத்திற்கு மணமக்கள் அழைத்துசெல்லப்பட இரவு விருந்தும் முடிந்து இருந்த உறவுகள் எல்லாம் கலைந்து சென்றனர்.
“எல்லாரையும் மத்த வீடுங்கல்ல தங்க சொல்லுங்க. இங்க நம்ம வீட்டாளுங்க மட்டும் இங்க இருந்தா போதும்…” என்று சொல்லிவிட்டார் விசாலாட்சி.
“இவ்வளோ பெரிய வீட்டுல தங்கவா இடமில்லைன்னு பேச போறாங்க ம்மா…” சுந்தரி சொல்ல,
“நான் கூட்டிட்டு போறேன். யார் பேசுவா? போங்கன்னா சொல்ல போறோம். வாங்கன்னு நான் கூப்பிட்டுக்கறேன். விசாலம் அவ கூப்பிடட்டும். குமரிக நீங்க எதுக்குடி இருக்கீங்க? பிள்ளைங்களை எல்லாம் நீங்க ஒண்ணா சேர்த்துக்கங்க. ஒருவீட்டுல அதுங்க பாட்டுக்கு விளையாடிட்டு தூங்கட்டும். மத்தவங்களும் அப்படியே வந்துட்டு போறாங்க…” என்ற ஆனந்தி,
“செண்பகம் உன் வீட்டாளுங்கள நான் கூப்பிட்டுக்கறேன். அங்க வரட்டும்…” என்று சொல்லிவிட அதன்படி அனைவருமே சொந்தங்களோடு பேசிக்கொண்டு இருக்கவென அப்படியே கிளம்பினார்கள்.