“இங்க என்னை பாரேன் மிஸஸ். முரளி…” என்றதும் மீண்டும் நிமிர்ந்தாள்.
“ஹ்ம்ம், உனக்கு இந்த பேர் அவ்வளோ பிடிக்கும். இல்லையா?…” என்றதும் அந்தநேர பதட்டம் விலகி லேசாய் புன்னகை மெலிதாய் அவள் இதழ்களை விரிய செய்தது.
“என்கிட்ட திவ்யா என்னைக்கும் இப்படியெல்லாம் நிக்கவோ, பயப்படவோ கூடாது. வேணும்னா ஃபார் எ சேஞ்ச் நான் உன்னை பார்த்து பயப்படறேன்னு வச்சுக்கோ….” என்றதும் சட்டென்று இதழ் விரிந்த புன்னகை வித்யாவிடம்.
“அழகு…” என்றவன் முகம் இன்னும் அவள் முகத்தோடு நெருங்க அந்த சிரிப்பு அப்படியே உறைந்து கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் வித்யா.
“ஏன் இங்க வரதுக்கு முன்னாடி யாரும் உனக்கு கிளாஸ் எடுத்தாங்களா என்ன?…” என அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் கேட்க, ‘இல்லையே. அம்மா எதுவும் சொல்லலை’ என்று கையசைத்தாள் வேகமாய்.
“என் மாமியார் ஏன் சொல்ல போறாங்க? இன்னைக்கு இந்த விஷயங்கள் பத்தி சீனியர்ஸ் எதுவும் சொல்லிருப்பாங்களே?…” என்று கேட்க, வெட்கத்துடன் ‘இல்லை’ என்று தலையசைத்தவள் முகத்தில் மீண்டும் புன்னகை.
“அதானே, சொல்லித்தர நான் இருக்கும் போது சொல்லிருவாங்களா என்ன?…” என்றவன் அவளை இலகுவாக்க அங்கே நின்றபடி பேச்சுக்கொடுத்து மெல்ல மெல்ல இயல்பாக்கி அவளும் சரளமான பதில்களை கண்ஜாடையில் தந்ததும் சட்டென தன் கையில் அள்ளிக்கொண்டான் முரளி.
அவனின் திடீர் செயலில் தடுமாறி அவன் கழுத்தை இருகைகளாலும் சுற்றி வளைத்து நெஞ்சில் சாய்ந்துகொண்டவள் பார்வை அவனை பார்க்க,
மெல்ல கட்டிலில் அமர்த்தியவன் அவளின் பாதங்களுக்கருகே செல்ல கால்களை புடவைக்குள் மறைக்க பார்த்தாள் வித்யா.
“ஜஸ்ட் சின்னதா, ரசிச்சு ஒரு கிஸ். வேற ஒண்ணுமில்லை. ஏன் கூடாதா? திவ்யாவுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்…” என்றான்.
முகம்மாறாமல் அவன் சொன்ன விதத்தில் மறைந்திருந்த மருதாணி பூசிய பாதங்கள் அவனுக்கு மெல்ல தங்கள் தரிசனத்தை காண்பிக்க, இதழ்களுக்குள் புன்னகைத்தவன் பார்வை அவளை அணைத்திருந்தது காதலாய்.
அவளின் பாதத்தை தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டவன் விரல்கள் பாதத்தில் வைத்திருந்த மருதாணியின் வளைவுகளில் கோடிழுத்தது.
“கரெக்ட்டா வச்சுட்டேன்ல. இந்த லைன் எல்லாம் சரியா இருக்கு தானே? நேத்தும் பார்க்க முடியலை. இன்னைக்கு மெட்டி போட்டுவிடும் போதும் கவனிக்க முடியலை…” என்றவன் அந்த கோடுகளையும், வைத்திருந்த புள்ளிகளையும் வட்டமிட்டு சுற்றிவளைத்து பெண்ணின் மனதை கலங்கடித்துக்கொண்டிருந்தது.
அத்தனை நிதானம். அவ்வளவு மெதுவாய், கண்கள் கூச அவன் பார்வை, காது மடல்கள் சிவக்க அவன் பேச்சு, உள்ளங்கால் குறுகுறுக்க அவன் தொடுகை.
திண்டாடிக்கொண்டிருந்தாள் அவன் அருகாமையில். கால்களை விலக்கவும் முடியவில்லை.
சிறைபட்டுக்கொண்டதை போல உடலில் மின்சாரம் பாயும் உணர்வில் அசையாமல் அமர்ந்தவளில் மெல்லிய நடுக்கம்.
“ஸோ சாப்ட். ஆனா ஸ்மெல் பண்ணலையே மருதாணி வாசத்தை…” என்றவன் முகம் அவளின் பாதத்தில் பதிந்து மீசை முட்கள் அழுத்தமாய் தீண்ட அச்சாரம் தொடுக்க ஆரம்பித்தது.
மெல்ல மெல்ல மென்மையாய் தந்த முத்தங்கள் வன்மையாய் அழுத்தம் கொடுத்து இறுக்கம் கூட்டவும், தாளமுடியா உணர்வில் சட்டென்று கால்களை இழுத்துக்கொண்டு சுருண்டு உடலை குறுக்கி முகம் மறைத்து படுத்துவிட்டாள் வித்யா.
வெட்க புன்னகை அவளுக்கு மட்டுமா? அவனுக்குமல்லவா! தன் செயல்கள் உள்ளுக்குள் வெட்கத்தை குளிர்விக்க குறுஞ்சிரிப்போடு எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு வந்தான்.
எதுவும் சொல்லாமல் அவள் மீது ஒரு கையை மட்டும் படரவிட்டு அணைவாய் பிடித்தபடி தானும் படுத்துவிட சிலநிமிடங்கள் வரை வித்யா அப்படியே இருந்தாள்.
வெகுநேரமாகியும் முரளியிடம் அசைவில்லை. சீரான மூச்சுக்காற்றில் அவன் உறங்கிவிட்டான் என்று புரிய முகம் உயர்த்தினாள்.
தான் தவிர்க்கிறோம் என்று நினைத்து தவிப்புகளை அடக்கி உறங்கிவிட்டானோ என்று தோன்ற வருத்தமாகி போனது.
அவனை வருந்த செய்துவிட்டோம் என்ற உணர்வில் மெல்லிய விளக்கொளியில் அவன் முகம் பார்த்தபடியே அவள் நிமிர்ந்து பார்த்த விதத்திலேயே அசைவற்றிருக்க,
“ப்ச், தூங்குடா திவ்யா. நோ நீட்…” என்றான் அவளிடம் கண் திறவாமல்.
சொல்லியவன் கைகள் வித்யாவின் தலையை தன் தோளில் சாய்த்துக்கொள்ள என்ன நினைக்கிறானோ என்று படபடப்புடன் அண்ணார்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அவள் பார்த்தபடியே இருப்பதை உணர்ந்தவன் விழி மலர்ந்து அவள் நெற்றியில் இதழ் பதித்து,
“இப்ப இந்த நிமிஷம் நீ என் கைக்குள்ள. இது என்னோட எத்தனைவருஷ காத்திருப்பு. கொஞ்சம் இதையும் அனுபவிச்சு நானும் நிதானமாகிக்கறேன். அவசரமில்லாம, ஆர்ப்பரிப்பு இல்லாம, அனுசரணையான ஒரு ஆரம்பமா இருக்கனும்…” என்றவன் நெற்றி அவளின் உச்சந்தலையோடு ஒட்டியிருக்க விழிவிரித்து பார்த்தாள் வித்யா.
“ஹேய் இப்படியெல்லாம் பார்த்தா என் உறுதி ஸ்வாஹா போல?…” என சிரித்தவன் குரலில் பேதம் கண்டாள்.
அவன் விழிகளில் அவளுக்கான தேடல் பொங்கி ததும்ப தன்னைக்கொண்டு அவன் தள்ளி நிற்கிறான் என்று புரிந்தது.
இதற்குமேல் தான் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல், தடுமாறி, தள்ளாடி அவனின் தோளை இறுக்கமாய் பற்றியவள் முகம் இன்னும் அவனை நெருங்க முரளியின் கைகள் மொத்தமாய் அவளை அணைத்தது.
“நீ உணராத நேரத்துல, மத்தவங்க பார்வைக்கு என்னை உணர வைக்க நான் தந்தது, நீ நினைவோடு உணர இப்ப தருவேன். திருப்பி ஒன்னுக்கு நூறா ஆயிரமா எல்லாம் இல்லை. கணக்கில்லாம, எல்லையில்லாம நீ தந்துட்டே இருக்கனும். இந்த ஜென்மம் முழுசும்…” என்றவன் தன் சாசனத்தை அவள் இதழ்களில் புரிய ஆரம்பிக்க முத்தங்களின் சங்கமத்தில் முரளியின் விழியோரம் சிறு கண்ணீர் துளி.
அவள் உணராமல் அதனை அவளின் கன்னத்தோடு இழைந்து ஒற்றியவன் அணுகுமுறை மென்மையிலும் மேன்மையாய் கையாள கூடியதாய் இருந்தது.
அவள் முகம் பார்த்து, விழி பார்த்து தங்களின் வாழ்விற்கு மகுடம் சூட்டியவன் கரைகாணா காதலில், அவனால் காதலுற்றவள் மொட்டுக்களை தழுவும் காற்றின் ஸ்பரிசம் போல கலைந்து களைத்து போனாள்.
“திவ்யா என் அந்தமும் நீ தான்…” என்றவனின் இதழணைப்பில் அவன் சொல்லியதன் பொருளை உணராமல் அவன் காதலில் திளைத்தவள் கைகள் அவனை விட்டு பிரியாத அணைப்பில் நெஞ்சம் நெகிழ சாய்ந்திருந்தது.
பிரிவுகள் நிரந்தரமில்லை. நிரந்தரமாய் வாழ்க்கையுமில்லை. நேசம் கொண்ட நெஞ்சங்கள் நினைவுகளிலும் காதலில் சுவாசித்திருக்கும்.