கரூரில் இருந்த மருத்துவமனையில் அத்தனை விவாதங்கள் சென்றிருந்தது. அதிலேயே களைத்து போயிருந்தான் ஆத்மா.
ஆபத்தில்லை என்ற ஒன்றினால் இத்தனை வருடங்கள் கடந்து மீண்டும் பேராபத்து என்று வந்து நிற்க தாளமுடியவில்லை.
“ஸ்வெல்லிங் இருக்காதுன்னு நம்பினோம் மிஸ்டர் ஆத்மா. ஆனா அவங்களோட ஓவர் ப்ரஷர் அன்ட் ப்ளட் க்ளாடோட மூவிங் தான் இவ்வளோ ரிஸ்க்கா வந்து நின்னுடுச்சு….” என்றிருந்தனர்.
மருத்துவர்கள் அவர்கள் ஆயிரம் உயிர்களை பார்ப்பவர்கள். இறப்பையும் பிறப்பையும் நித்தமும் கடவுளாக கடந்து வரும் மனவலிமை கொண்டவர்கள்.
ஆனால் தங்களுக்கு அப்படியா? குடும்பத்தின் ஆணிவேர் வரை ஆட்டம் கண்டுவிடும் விஷயம் அல்லவா?
அதைவிட வித்யாவின் உயிர் அது முரளியிடம். வித்யாவின் உயிர் முரளியையும் சேர்த்தே கொண்டு சென்றுவிடுமோ என்ற பயத்தின் எல்லைக்கு சென்று நிற்க வைத்திருந்தது அவளின் உடல்நிலை.
“என்னாச்சு? எவ்வளோ நேரம் அந்த போட்டோவை ஜூம் பண்ணி பார்த்துட்டே இருப்பீங்க?…” என்றாள் ரிதுபர்ணா.
“ப்ச், நத்திங்…” என்று ஆத்மா அவளிடம் கைப்பேசியை தர,
“உங்க முகமே சரியில்லையே? என்ன கண்ணத்தான்?…” என்றாள்.
“முரளியோட சந்தோஷத்தையும், வித்யாவோட சிரிப்பையும் பார்த்தேன். அவங்க வாழ்க்கையே இப்போ மாறிடுச்சு இல்ல? அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்…” என அவளிடம் சொல்ல,
“எனக்குமே. நான் ரொம்ப சந்தோஷப்படறேன் கண்ணத்தான். ஆனா அதையும் தாண்டி என்னவோ ஒரு பயம். ஏன்னு சொல்ல தெரியலை. ஒருவேளை செண்பகம் அத்தையை நினைச்சு இந்த கல்யாணம் சரிவராதுன்னு நான் நினைச்சிட்டே இருந்ததால இருக்குமோ என்னவோ…” என்றதும்,
“ப்ச், அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே…” எனும்பொழுதே முரளியும், வித்யாவும் வந்துவிட்டனர்.
“ரெடியா எல்லாரும்…” என்றபடி பரத்தும் வர,
“நல்லநேரத்துக்கு கோவிலுக்கு போகவேண்டாமா? வாங்க…” என அதட்டலுடன் அண்ணாமலை அனைவரையும் விரட்டினார்.
கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பிரகாரம் சுற்றி வருகையில் பெண்கள் ஒரு குழுவாக பிரிய, ஆத்மா பரத்துடன் பேசியபடி வர முரளி அந்த கோவில் மணியின் முன் நின்றான் அதனை பார்த்துக்கொண்டே.
அதனை கண்டுவிட்ட பரத் ஆத்மாவை சத்தம் போடவேண்டாம் என்பதை போல சைகை காண்பித்துவிட்டு, சத்தமின்றி முரளி எதிர்பாராத நேரத்தில் அவனை அந்த பெரிய மணியை நோக்கி தூக்கிவிட,
“ஹேய்…” என்ற முரளயின் சத்தத்தில் அனைவருமே அவனை திரும்பி பார்த்தனர்.
“டேய் வெய்ட்டா இருக்க. சீக்கிரம் பெல் அடிடா…” என்றான் பரத் மூச்சிரைத்துக்கொண்டே.
கீழே குனிந்து அவனை பார்த்த முரளி, பின் தான் வீட்டு பெண்களுடன் நின்ற வித்யாவையும் பார்த்துவிட்டு அந்த மணியை அண்ணார்ந்து பார்த்தான்.
தொண்டை அடைக்க அந்த மணியை தொட்டவன் லேசாய் அசைக்க முயல அத்தனை கனத்தது.
‘நீ தந்த கனம் இப்போ வரை என்னால சுமக்க முடியலை. அந்த தெய்வத்துக்கு சமமா உன்னையும் பார்க்கறேன். உன் கனத்தை எடுத்துக்கோ. இல்லை எனக்கு திருப்பிடு.’ என மானசீகமாய் நினைத்தவன் வேகமாய் தன் கையை அழுத்தி தள்ள அனைவரின் காதுக்குள்ளும் டங் என்னும் பேரொலி எச்சரிக்கும் விதமாய்.
“ஹப்பாடா…” என்று பரத் இறக்கியதும் அவனை திரும்பி அணைத்துக்கொண்ட முரளி,
“தேங்க்ஸ்டா…” என்றான் அவனிடம்.
“ஹ்ம்ம், தூக்கினதுக்கா? அதுக்கிட்ட நீ ஏன்டா ப்ரப்போஸ் பன்ற மாதிரியே பேசற? இதான் சாக்குன்னு என்னை சுமக்க விட்டுட்டியோ?…” என்று தோளில் தட்டியபடி பரத் சிரிக்க,
“ஆத்தீ, இந்த உம்மணாமூஞ்சிக்கு சிரிப்பெல்லாம் பப்ளிக்கா வருதே? இதுவே எனக்கு இப்ப தான் தெரியுது. இந்த லட்சணத்துல நான் குடும்பம் நடத்தி ஒரு புள்ளையும்…” என்றபடி திரும்பிய சபர்மதி விசாலாட்சயின் முறைப்பில்,
“மாமியார் லுக்காகும்? பயந்துட்டேன். நல்லா வளர்த்திருக்கீங்க புள்ளையை. வீட்டுக்கு வாங்க. புல்லை ஆஞ்சு போடற மாதிரி ஆஞ்சு விடறேன்…” என்று மேவாயை தோளில் இடித்துக்கொண்டு திரும்பி நடந்தாள் சபர்மதி.
அவளின் பேச்சில் சிரித்துக்கொண்டே இங்கே திரும்ப முரளி பரத்தின் கேள்வியில் ஒருநொடி நிதானித்து பின் புன்னகைத்தான்.
“சரி, சரி கிளம்புங்க…” என்று இளவரசு சொல்லவும் அனைவரும் முன்னே நடக்க ஆத்மாவின் கைகள் முரளியின் தோளை ஆதரவாய் அணைத்து பிடித்தது.
அந்த வாரம் முழுவதும் திருமண விருந்து, சொந்தங்களுடன் கலகலப்பு என்று எல்லாம் நல்லவிதமாகவே சென்றுகொண்டிருந்தது.
பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது முரளி, வித்யாவின் திருமணம் முடிந்து. முருகேஸ்வரி நித்தமும் மகளை பார்த்து பார்த்து பூரித்து, திருஷ்டி கழித்து என்று சுற்ற, அவரை வெருப்பேற்றவென்றே சபர்மதி அவரின் பின்னால் சுற்றினாள்.
மறுநாள் ரிதுபர்ணா சென்னை கிளம்பவேண்டும். அதற்குமேல் அங்கே இருக்கமுடியாதென ஆத்மாவும் சொல்லிவிட அவர்களுடன் ஆனந்தியும், முருகேஸ்வரியும் செல்வதாய் முடிவானது.
மகளின் திருமணம் முடிந்து அதற்குள் அவளை விட்டு செல்வதா என முருகேஸ்வரி தயங்கி பார்க்க,
“உன் மகளை என்ன சிங்கம், புலிக்கிட்டையா விட்டுட்டு போற? எங்கிட்ட தான? ரிது கைப்பிள்ளையை வச்சிட்டு அல்லாடறா. நீ என்னன்னா முழுங்கி முழுங்கி நிக்கிற? இங்க யாரும் பார்த்துக்க மாட்டோமா என்ன? அவ என் மருமக. நினைப்புல இருக்கா?…” என செண்பகம் போட்ட போட்டில் வாயை மூடிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார்.
“நல்லா சொல்லு. எங்க என் பேச்சை கேட்கறா? நானும் சரி நான் பார்த்துக்கறேன், நீ இருன்னு சொல்லிட்டேன். அதுக்கும் மனசு கேட்கலை….” என்று ஆனந்தியும் சொல்ல,
“பேசாம நீ இருந்து உன் மகளையும், மருமகனையும் பார்த்துக்கோயேன். நான் ரிதுவுக்கு துணைக்கு போறேன். பச்சை உடம்புக்காரி, அப்படியே விடமுடியுமா?…” என செண்பகம் சொல்லவும் முழுமனதாகவே கிளம்ப ஆரம்பித்துவிட்டார்.
“ஏன் கண்ணு, என்னிய நீயி எதுவும் நெனைக்கலைல?…” என்று ரிதுபர்ணாவிடம் வேறு புலம்பல்.
“உங்களை என்ன தான் செய்யறது சித்தி? இப்படி யோசிச்சு பயப்படறதை முதல்ல நிப்பாட்டுங்க…” என்று அதட்டல் போடவும் அமைதியானார்.
ரிதுபர்ணா தன் உடமைகள், பிள்ளைகளது என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்க குழந்தை அபய்பிரதன் வித்யாவிடம் இருந்தான்.
குட்டி குழந்தை கையை காலை ஆட்டியபடி, ஒற்றை விரலை வாயில் திணித்துக்கொண்டு கெக்கை போட்டு சிரிக்க, அவனின் கையை எடுத்துவிட்டாள் வித்யா.
மீண்டும் விரலை வாயில் வைக்க, வித்யா எடுத்துவிட என்று அந்த விளையாட்டில் அப்படி ஒரு சிரிப்பு அவளின் முகத்தில்.
“இங்க தான் இருக்கியா நீ?…” என்றபடி உள்ளே வந்த முரளி தன் சட்டை பட்டனை கழற்றியபடி,
“அடடே, குட்டி ஹீரோ இங்க இருக்காரா?…” என்று கட்டிலின் மறுபுறம் வந்தமர்ந்தான் முரளி.
‘போய் குளிங்க’ என்று வித்யா சொல்ல அவளின் கன்னம் பற்றி இழுத்து தன் மார்போடு அணைத்து விடுத்தவன்,
“வாயேன், நீயும் ஜாயின் பண்ணிக்கோ…” என்றான் உல்லாச குரலில் கண்சிமிட்டி அவளை அழைத்து.
இந்த ஒருவாரமாக தான் கம்பெனிக்கு சென்றுகொண்டிருக்கிறான் முரளி. வித்யாவை உடன் அழைக்க செண்பகம் விடவில்லை.
இப்போதும் கம்பெனிக்கு சென்றுவிட்டு வந்தவன் அதற்கும் நான்கைந்து அடிகளை பெற்றுக்கொண்டவன் லேசாய் அலறுவது போல் சப்தமிட்டு நடிக்க குழந்தை கண்ணை உருட்டி அவர்களை பார்த்தது.
“ஒன்னுமில்லடா குட்டி, உன் சித்தி மேல ஒரே ஸ்வெர்ட்டிங் ஸ்மெல். என்னை கட்டி பிடிக்காதன்னா பாரு கேட்டாளா? அதான் ஒரு ஹெல்ப்பிங் மைன்ட். நீ இதை கண்டுக்காத ராசா…” என்றான் பிள்ளையின் கன்னத்தை லேசாய் நிமிண்டி.
அதற்கும் அவனை கட்டிலை விட்டு தள்ளிவிட பார்த்தவள் முடியாமல் போக சிரிப்போடு அவன் அருகாமையில் தலை சாய்த்தாள்.
“அப்பறம் அண்ணாவோட உன் மம்மியை பேக் பண்ணியாச்சு. நம்ம ஹனிமூன் ஸ்டார்ட் பண்ணிருவோம்…” என்று கண் சிமிட்டியவன்,
‘இல்லை’ என்று உடனே தலையசைத்து பதிலளித்தவள் அவன் பேச்சை கேட்டிருக்க,
“நம்ம ஹனிமூன் இங்க நம்ம வீட்டுல திவ்யா பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த அந்த வீட்டுல. நமக்கே நமக்கான சிலநாட்கள். இதைவிட பெஸ்ட் ஹனிமூன் ஸ்பாட் தேடி பார்த்தாலும் கிடைக்காது….” என்றான் அவளிடம் உள்ளார்ந்து.
அவனின் பேச்சுக்களில் மனம் மயங்கியவள் விரல்கள் மெல்ல மெல்ல பிள்ளையை ஆசையாய் வருடியது. அவளின் வருடலில் குழந்தை உறங்கி போக,
“நல்லா விளையாடிட்டிருந்தான். இப்படி தூங்க வச்சிட்ட. உண்மையை சொல்லு, என்னோட ஜாயின் பண்ணிக்க போற தானே?…” என்றான் அவளிடம் கலாட்டாவாக.
லேசாய் தலையில் தட்டிக்கொண்டவள் சிரிப்போடு அவனை தலைசாய்த்து பார்த்து, ‘நம்ம குழந்தையும் இப்படி குட்டி குட்டியா கை காலோட அழகா நம்மக்கிட்ட வரும்ல?’ என்று முரளியிடம் கேட்க, அவன் ஸ்தம்பித்து பார்த்தான்.
தான் சொல்லியதை கவனித்தானா இல்லையா என்ற குழப்பத்தில் மீண்டும் அவனின் தோளில் தட்டியவள், ‘என்னாச்சு?’ என்றாள் கை விரித்து.
“ஹாங், என்ன… என்ன சொன்ன திவ்யா?…” என்றான் அதிர்வு தெளிந்தவனாக.