‘நம்ம குழந்தை’ என்று அவள் உணர்த்துகையில் அவள் முகத்தில் வந்துபோன உணர்வுகளில் உள்ளுக்குள் குமுறலுடன் மரித்தான் முரளி.
‘குழந்தை உங்களை மாதிரி இருக்குமா, என்னை மாதிரியா?’ என்றாள் அடுத்ததாக.
கண்களில் அத்தனை ஆசை கனவுகளுடன் வலம் வர முரளிக்கு அந்த நிமிடத்தை கடக்க பெரும்பாடாக இருந்தது.
‘என்னை மாதிரி இருந்தா?’ என்று அதையுமே அவள் சாதாரணமாக கேட்க தன்னை இயல்பாக காண்பிக்கவே அத்தனை அவஸ்தையாக இருந்தவனுக்கு அந்த கேள்வியில் முகமும், மனமும் கலங்கியது.
‘சொல்லுங்க’ என்றாள் வித்யா எதிர்பார்ப்புடன். அவன் என்ன சொல்வான் என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன்.
“உன்னை மாதிரி இருந்தா என்னை படைச்ச சாமி மாதிரி பார்த்துப்பேன்….” என்றவன்,
“ஓகே, நான் போய் குளிச்சிட்டு வரேன்…” என்று எழுந்துகொள்ள, ‘கூட வரனுமா?’ என்றாள் வித்யா கண் சிமிட்டி.
அதன் அழகில் மனம் லயிக்காமல் சஞ்சலம் பூண்டு அவன் உயிரை உயிர்வதை செய்தது.
“வா…” என்று அவளை நோக்கி கை நீட்டியவன்,
“எப்பவும் என்னோட நீ என் கூடவே வந்துட்டே இரு. எந்த இடமா இருந்தாலும் உன் பக்கத்துல நான் இருந்தா போதும். என் பக்கத்துல உன்னோட மூச்சுக்காத்து பட்டா போதும்…” என்றவன் அவளின் விழிகள் சுருங்க கண்டு,
“முரளி எப்பவும் வித் திவ்யாவோட…” என்று அவளருகில் வந்து நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்துவிட்டு,
“என்னை பாடா படுத்தறடி நீ….” என்று சிரிப்புடன் சொல்லி செல்ல அவனை பார்வையால் தொடர்ந்தவள் குழந்தை சிணுங்கியதில் அவனுடன் சாய்ந்து படுத்தவள் கண்களை மூடினாள்.
குளியலறை சென்று நீருக்கடியில் நின்றவனின் கண்ணீர் கரைந்துகொண்டிருந்தது எவரும் காணாமல்.
அவனுக்கு திடம் தருவதும் அவளே. பலம் கொடுப்பதும் அவளே. மொத்தமாய் பலமின்றி பலனின்றி நிற்க செய்வதும் அவளே ஆனாள்.
வெகுநேரம் நீருக்கடியில் நின்றவன் மனது கரைந்து காணாமல் போவதை போலிருக்க அவனின் கண்ணீர் அவன் மனோபலத்தை சோதிப்பதை போலிருக்க முயன்று தன்னை மீட்டுக்கொண்டான்.
குளித்து வெளியே வர அங்கே குழந்தையோடு குழந்தையாய் வித்யாவும் உறங்கிக்கொண்டிருக்க ஊமையாய் அழுத மனதை இழுத்து கட்டி வெளியே வந்தான் முரளி.
மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்டு நேரமே புறப்பட்டுவிட்டனர் ஆத்மா குடும்பத்தினர்.
சிலநாட்கள் இப்படி காலை எழுந்துகொள்ள முடியாதளவிற்கு உறக்கத்தில் இருப்பவள் தான்.
இருந்தாலும் ஒருமணிநேரத்தில் வந்துவிடுவதாய் சொல்லியே அவன் கிளம்பியிருக்க, முரளி கிளம்பிய சிறிதுநேரத்திற்கெல்லாம் வித்யாவின் தலைக்குள் என்னவோ உருண்டது.
உறங்கவும் முடியாமல், பேரவஸ்தை நெஞ்சை கவ்வ, தலையை ஒற்றை கையால் பிடித்தபடி வெளியே வந்தாள் வித்யா.
பார்வைகள் மங்கலாக தெரிய, ‘இது என்ன புதிதாய் தனக்கு வலிக்கிறது?’ என நினைத்துக்கொண்டே லேசாய் தலையை தட்டிக்கொண்டு வந்தவளுக்கு சுளீரென்ற தாக்குதல்.
ஆவென்ற சத்தத்துடன் நடுக்கூடத்தில் வந்துவிட்டவள் இரு கைகளாலும் தலையை அழுத்தி பிடித்துக்கொண்டு நிற்க,
“என்னடி வித்யா? என்னாச்சு?…” என்று வெளியில் அமர்ந்திருந்தவர் வந்துவிட உடன் விசாலாட்சியும், சபர்மதியும்.
“என்னம்மா?…” என்று அவர்கள் இருவரும் பதற, ஏற்கனவே வலியில் துவண்டிருந்தவளுக்கு பேச்சு குரல்கள் மட்டுமே கேட்க கண்களின் பார்வை குறைந்துகொண்டே வந்தது.
யாரிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இறுக்கமாய் கண்ணை மூடி திறந்தவள் மீண்டும் அவர்களை பார்க்க முயன்றாள்.
“என்னடி? என்னாச்சு வாயை திறந்து சொல்லித்தொலையேன்…” என்று வித்யாவின் கையை பிடித்தபடி செண்பகம் இரைய, அதுவரை வலியில் சுருண்டிருந்தவள் அவரின் இந்த கோபத்தில் ஸ்தம்பித்து போனாள்.
என்ன சொல்ல முடியும் தன்னால்? யார் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல், வாய்விட்டு என்ன தனக்கு நிகழ்கிறது என்றும் சொல்லமுடியாமல் அவள் உறைந்து போய் பார்க்க,
“கேட்டுட்டே இருக்கேன். நீ என்னன்னா?…” என்ற பின்னர் தான் செண்பகத்திற்கு உணர்வே வந்தது வித்யாவை எண்ணி.
அதுவும் அவளின் அதிர்ந்த அந்த முகமும், குழந்தையாய் விழித்து உதடு துடிக்க நின்றதும் மனதை கொன்றது.
அதற்குமேலும் நில்லாமல் தன் கைகளால் துழாவி செண்பகத்தை பிடித்து அவர் தான் என்று கண்டுகொண்ட வித்யா அவரிடம்,
“பே…” என்றவள் கைகள் தன் தொண்டையை பிடித்து காண்பித்து பயந்த பார்வையுடன் கருவிழிகள் அலைபாய சப்தமிட்டு அழ,
“ஐயோ…” என்ற கேவலுடன் அவளின் முகத்தை தன் மார்போடு சாய்த்துக்கொண்டார் செண்பகம்.
“மன்னிச்சிக்கடி தெய்வமே…” என்று அவர் அரற்றி அழ, அப்போது தான் வேறு விஷயமாக வீடு வந்த அண்ணாமலையும், இளவரசுவும் என்னவோ என்று பதறி வந்தனர்.
———————————-
கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாவின் மூடிய விழிகள் இங்குமங்கும் சுழன்று விழி மலரும்பொழுது கண்டது வெளிறிய முகத்துடனான முரளியை தான்.
அவன் அமர்ந்திருந்த தோற்றமே அவளை கொன்றுவிட்டது. மனதில் என்னவோ ஒரு பயம்.
மயக்கத்தில் யார் யாரோ என்னென்னவோ பேச, எல்லாம் மங்கலாய், பனி படர்ந்த பாதையற்ற சாலையாய் தெரிய மூளைக்குள் என்னென்னவோ தோன்றியது.
அதில் ஒன்று, தன்னிடம் என்னவோ, தனக்கு என்னவோ என்பது தான். அந்த எண்ணமே அவளை நெஞ்சறுக்க விழியோரம் நீர் கசிந்து வழிந்தது.
“ப்ச், இப்ப எதுக்கு அழுகை? அதான் கண்ணு முழிச்சு எனக்கு உயிர் குடுத்துட்டியே?…” என்று முரளி சொல்லவும் அவளின் அழுகை இன்னும் அதிகமாவதை போலிருக்க இன்னும் நெருங்கி தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான் அவளை.
“திவ்யா, செகெண்ட் ஹனிமூன் போவோமா? சென்னைக்கு…” என்று குரல் தழுதழுக்க இலகுவாய் கேட்க முயன்று உடைந்த குரலில் முரளி யாசிக்க, அவள் விழிகள் நிமிர்ந்து அசைவில்லாமல் அவனை பார்த்தது நிராசையுடன்.