அண்ணாமலை விஷயத்தை கேள்விப்பட்டும் கூட நம்பமுடியாமல் துடிதுடித்து மகனுக்கு அழைத்து கேட்க வலியுடன் ஒப்புக்கொண்டான் ஆத்மா.
“இப்படி செஞ்சிட்டீங்களேப்பா?…” என்று வேதனையோடு சொல்லியவர் தான்.
அதன்பின்னர் ஒதுங்கி தளர்ந்து அமர்ந்துவிட்டார் முரளியின் முகம் காண முடியாமல்.
தன்னை காப்பாற்ற போய் அந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையாகி போனதே என்று நினைத்து நினைத்து மருக அதற்கும் வழியின்றி மருத்துவர்களின் பேச்சுக்கள்.
“உடனடியா சர்ஜரி பண்ணிடறது பெட்டர். இல்லைன்னா வேதனையோட தான் வாழனும். அதுவும் சிலகாலம். ரெண்டு நாளோ, ரெண்டு மாசமோ, எதுவோ ஒன்னு…” என்றிருந்தவர்கள்,
“இதனால முதல்ல அவங்களோட கண்பார்வை தான் பாதிக்கப்படும். கொஞ்சம் கொஞ்சமா பார்வையை இழக்க ஆரம்பிப்பாங்க. அடுத்து நினைவுகளை…” என்றும் சொல்லியிருக்க உடனடியாக சென்னை கிளம்பினர்.
பரத்தும், ஏழுமலையும் அங்கேயே இருந்துகொள்ள மற்ற அனைவருமே கிளம்பிவிட்டனர் சென்னைக்கு.
சென்னை மருத்துவமனைக்கு செல்ல அங்கே அவர்களுக்காக தயாராய் ஆத்மா, ரிதுபர்ணா, ஆனந்தி மூவரும் நின்றிருந்தனர்.
அக்காவை பார்த்ததுமே வித்யாவின் உடல்மொழி துவண்டுவிட ஓடி சென்று அணைத்துக்கொண்டாள் அவளை.
“சரியாகிடும்டா. உனக்கு ஒண்ணுமில்லை…” என்று சொல்லிய ரிதுவின் வார்த்தைகள் வெகுவாய் தடுமாறியது.
மனதும் அதனை தான் வேண்டிக்கொண்டே இருந்தது. தங்கைக்கு எதுவுமே இல்லை என்று தங்களிடம் மீண்டு வந்துவிட வேண்டும் என்று.
வித்யாவை தாண்டி ரிதுவின் பார்வை முரளியை காண அவனின் முகத்தில் அமைதியான மென்னகை.
“எல்லாரையும் விட நீ உயர்ந்துட்ட முரளி…” என்றாள் விழிகள் கலங்க ரிதுபர்ணா.
“என்ன தியாகி பட்டமா? நீங்களே வச்சுக்கோங்க. நான் எந்த தியாகமும் பண்ணலை. எதுக்கு இவ்வளோ கண்ணீர்? சந்தோஷமா எதிர்பாருங்க. சர்ஜரி முடிச்சிட்டு வருவா. நாங்க வாழவேண்டாமா?…” என்று இலகுவாய் சொல்ல முயன்றான்.
அப்போதும் செண்பகம் மகனை தான் பார்த்தார். முகம் அழுகையில் மீண்டும் கசங்க மனதோ துடிப்பை நிறுத்திவிடுவேன் என்று அச்சமூட்டியது.
‘அம்மா எங்க?’ என்று வித்யா கேட்கவும் தான் அங்கே முருகேஸ்வரி இல்லாததை அனைவரும் கவனித்தனர்.
“உள்ள தான் இருக்காங்க. வா…” என்று ஆத்மா அழைத்து செல்ல அங்கே மருத்துவமனையின் நடுவிலிருக்கும் பிள்ளையார் சன்னிதியில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவர் எதையோ முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.
முகமெல்லாம் வேதனையை சுமக்கமுடியாத வலி. விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து ஒருவார்த்தை பேசவில்லை.
எத்தனை அழுது ஆர்பாட்டம் செய்வாரோ என்று பயந்து நின்றிருக்க, அதற்கெல்லாம் மேலே சென்று மௌனத்தால் அனைவரையும் பந்தாடிவிட்டார் முருகேஸ்வரி.
“சித்தி…” என்ற ரிதுபர்ணாவை திரும்பி பார்த்தவர் அவளருகில் நின்ற மகளையும், மருமகனையும் கண்டு பெரும் கேவலெடுத்து அழுது அரற்றி மகளை இரு கை விரித்து அழைக்க ஓடி சென்று சேயாய் அவரின் கைகளுக்குள் பொதிந்துகொண்டாள் வித்யா.
துடைக்க துடைக்க இருவரின் கண்களும் கண்ணீரை வடிக்க எதுவும் கேட்கவில்லை மகளிடம்.
ஆனால் தலைமுதல் பாதம் வரை தொட்டு தடவி, அழுதபடி வித்யாவுக்கு முத்தம் கொடுத்து தன் பெற்ற வயிற்றை பிடித்துக்கொண்டவர் மீண்டும் இறைவனிடம் சரண் புகுந்தார்.
“சொன்னதுல இருந்து எதுவுமே பேசமாட்டேன்றாங்க முரளி…” என்றான் ஆத்மா.
முரளி அவரின் அருகில் சென்று ஒற்றை காலில் மண்டியிட்டு அமர அவனை பார்த்தவரின் கண்களில் நீர் குறைந்து சிலநொடிகள் மௌனமாய் பார்த்தார்.
“என்னவாம்? ஊர்ல இருந்து மருமகன் வந்திருக்கேன், என்கிட்ட பேசமாட்டீங்களா த்தை?…” என்று சிரிப்புடன் கேட்டவன்,
“இதுவும் நல்லதுக்கு தான். அப்பறம் உங்களை யார் சமாளிக்க? நீங்க மட்டும் சர்ஜரி முடிஞ்சு திவ்யா கண்ணு முழிக்கிற வரை இந்த மௌனவிரதத்தை கண்டினியூ செய்ங்க. உங்களுக்கு நான் சுத்தி போடறேன். ஏனா அவ்வளோ கண்ணு பட்டிருக்கும்….” என்று கேலி போல சொல்லவும் முரளியின் கையை பிடித்தவர் கதறிவிட்டார்.
“என்னத்தை நீங்க?…” என்றவன் அவரை தன் தோளோடு தாயாய் அரவணைத்துக்கொண்டாலும் அவனின் விழிகளும் கலங்கி சிவந்திருந்தது.
“நேரமாகுது, நாம உள்ள போய் பார்க்கனும் முரளி….” என்று ஆத்மா அழைக்கவும் வித்யாவின் கண்கள் தாயை தன் மனதிற்குள் நிரப்பிக்கொண்டது.
அனைவரும் எழுந்து செல்ல முருகேஸ்வரி அங்கேயே அமர்ந்துவிட்டார். தன் மகள் வருவரை இவ்விடத்தை விட்டு அசையமாட்டேன் என்பதை போல வார்த்தைகளை விழுங்கிக்கொண்டார்.
அனைவரும் நகர்ந்து உள்ளே செல்ல முருகேஸ்வரியை பார்த்த செண்பகமும் அங்கேயே அவருடன் அமர அப்போதுதான் செண்பகத்தை எண்ணியே பயம்.
அச்சத்துடன் முருகேஸ்வரி எச்சிலை விழுங்கியபடி அவரை பரிதாபமாக பார்க்க, செண்பகம் பரிவுடன் பார்த்தார்.
“என்னடி முழிக்கிற? என் பிள்ளை என்கிட்ட மறைச்சிருந்தாலும் இந்த நிமிஷம் அவன் நம்பிக்கையை உடைக்கிற எதையும் நான் செய்யமாட்டேன். இப்ப அவ என் மருமக. எனக்கு எல்லாரை விட என் மகனும், மருமகளும் முக்கியம். நீ பேசாம சாமி கும்பிடு. நான் பேசறேன் அந்த கடவுள்கிட்ட…” என்றார் கண்ணீருடன்.
“ம்மா…” என்ற முரளியையும், அவனருகே நின்ற வித்யாவையும் பார்த்தார்.
“உனக்கொன்னுமில்லடி. போய்ட்டு வா. போய்ட்டு சீக்கிரம் வந்துரு சாமி…” என்று சொல்லியவர் அங்கேயே அமர்ந்துவிட, வித்யாவை மருத்துவர்களை காண அழைத்து சென்றனர்.
இப்போது உடன் ரிதுபர்ணாவும் செல்ல ஆத்மாவிற்கு மனதெல்லாம் பதறியது. இப்படி இருக்கிறது என்று சொல்லியதற்கே அத்தனை பேசிவிட்டாள்.
இப்போது இதையெல்லாம் தாங்க முடியுமா அவளால் என்று சொல்லியும் பார்க்க, ஒற்றை பார்வையில் ஆத்மாவை அடக்கி வைத்தாள் ரிதுபர்ணா.
உடனடியாக வித்யாவை பரிசோதித்து அவளின் நிலைமையின் தீவிரத்தை மருத்துவர்கள் கலந்தாலோசித்தனர்.
“நாம நினைச்சதை விட ப்ளட் க்ளாட் மூவிங் ரொம்ப டேஞ்சர். அவங்களுக்கு சர்ஜரி பன்றத தவிர வேற ஹோப் இல்லை. நம்பிக்கையா இருங்க. கடவுளும் கை கொடுப்பார்….” என்று நம்பிக்கை தரும் விதமாக சொல்லி, வித்யாவுக்கு மற்ற பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.
“இப்பவும் வித்யாவோட முழு நிலைமை என்னன்னு சொல்ல முடியாதுல உங்களுக்கு? தலையில் ரத்தம் உறைஞ்சிருக்கு, அதனால அவளுக்கு ஆபத்து, கண் பார்வை மங்கிருக்குன்னு மட்டும் தானே சொன்னீங்க? இன்னும் என்ன தான் இருக்கு?…” என்று ரிதுபர்ணா வெடித்துவிட்டாள் அங்கேயே.
“டெஸ்ட் எல்லாம் முடியட்டும். பேசலாம் ரிது. இங்க காரிடார்ல வச்சு பேசற விஷயமா இது?…” என்றான் ஆத்மா கிலி பிடித்த பாவனையுடன்.
“பேசலாம், பேசலாம்ன்னு எவ்வளோ பெரிய விஷயத்தை மறைச்சிருக்கீங்க? இந்த விஷயம் முதல்லையே தெரிஞ்சிருந்தா அப்பவே அவளுக்கு ட்ரீட்மென்ட் பண்ணியிருப்போம் தானே?…” என்று அவள் கிடந்து தவித்தாள்.
ஆனாலும் அவளால் அவர்கள் மறைத்ததை ஏற்கவே முடியவில்லை. கணவன் மீது கோபமும், ஆதங்கமும் ஒருங்கே எழுந்தது.
அழுது அரற்றி தவிப்பவளை அணைத்து ஆறுதல்படுத்த முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது ஆத்மாவால்.
“ஸார் பேஷண்டை ரூம்க்கு ஷிப்ட் பண்ணியாச்சு…” என்று நர்ஸ் வந்து சொல்லும்வரை ரிதுபர்ணாவின் கேள்விகள் தொடர்ந்தது.
“முரளி நீ போய் பாரு…” என்று ஆத்மா சொல்லிவிட்டு ரிதுவை அழைத்துக்கொண்டு தனியே வந்தான்.
“எந்த சமாதானமும் சொல்லாதீங்க கண்ணத்தான். எவ்வளோ காரணம் சொன்னாலும் நீங்க செஞ்சதை என்னால சரின்னு ஒத்துக்கவே முடியாது…” என்று முகத்தை மூடி அழ,
“காரணம் சொல்லலை. ஆனா நடந்ததை சொல்லலாம் தானே? கேளு ரிது…” என்ற ஆத்மா,
“பரத் நிச்சயதார்த்தம் அன்னைக்கு அப்பா மேல விழ இருந்த கோவில்மணி வித்யா தலையில விழுந்தப்போ நடந்த சர்ஜரில தான் ஆரம்பிச்சது. சர்ஜரி முடிஞ்சு அடுத்த கட்ட செக்கப்ல தான் அவளோட தலையில சின்னதா ரத்தம் கசிஞ்சு உறைஞ்சிருக்கிறதா டாக்டர் சொன்னாங்க….”
“ஆனா அதை திரும்பவும் சர்ஜரி பண்ணினா ஆபத்துன்னு சொன்னவங்க, மருந்து மாத்திரையில அதை கரைக்க கூடிய சிகிச்சையை தான் தொடர்ந்தாங்க. டாக்டர்ஸ்க்கும் சின்ன கட்டி தான். கரைஞ்சிட்டா ஆபத்தில்லைன்னு நம்பிக்கை…”
“அப்பப்ப கொஞ்சம் ஹெல்த் இஷ்யூ வரும். மத்தபடி பிரச்சனை இல்லைன்னாங்க. கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கவும் சொன்னாங்க. அதான் வித்யாவை கண்பார்வையில் நம்ம கம்பெனியோட இருக்க சொன்னது. ஆனா இங்க ஆபத்து எப்போ ஆரம்பிச்சது தெரியுமா?…”
“பரத் வித்யாக்கிட்ட கம்பெனில கோபமா பேசி அங்க அவ தலையில அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோமே. அப்போ திரும்ப பிரச்சனை விபரீதமாகியிருக்கு. முரளியோட காதல் எல்லாருக்கும் தெரிஞ்ச அன்னைக்கு தான் வித்யாவை பத்தின விஷயம் முரளிக்கும் தெரிஞ்சது…”
“ஆனா அங்க கரூர் ஹாஸ்பிட்டல்ல சொன்ன அந்த விஷயம் தான் எங்களை ரொம்பவே பாதிச்சது. திரும்ப அடிபட்டதுல வித்யா தலையில உறைஞ்சிருந்த ரத்தக்கட்டி பக்கத்துல வீக்கம் உருவாகிருக்கு. அதோட அழுத்தம் அந்த சின்ன ப்ளட் க்ளாட் லேசா நகர ஆரம்பிச்சு இப்போ…” என்று சொல்ல அதன் தாக்கத்தில் ரிதுபர்ணா மொத்தமாய் மயங்கி சரிந்தாள்.
“ரிது, ரிது?…” என்று அவளை தாங்கியவன் விசாலாட்சியை அழைத்து தண்ணீரை எடுத்துவர கூறி அவளை தெளிய செய்தான்.
மயக்கம் தெளிந்தவளுக்கு அப்படி ஒரு அழுகை. அவளால் அதன் பாரத்தை சுமக்கவே முடியவில்லை.
இத்தனை வருடங்கள் தன் கணவன் எப்படி சுமந்தானோ? இத்தனை மாதங்கள் முரளி எப்படி தாங்கினானோ என்ற எண்ணத்தில்,
“எந்த தைரியத்துல முரளி இந்த கல்யாணத்துக்கு…”
“அவன் காதல் மேல உள்ள நம்பிக்கையில. அதுவே தைரியம் தானே?…” என்றான் வலியுடனான புன்னகையுடன்.
ஆத்மா எல்லா விஷயத்தையும் போட்டுடைத்திருக்க, அங்கே அறையில் முரளியும் வித்யாவிடம் விஷயத்தை, அவளின் உடல்நிலையை சொல்லியிருந்தான் அவளிடம்.
“நீ தெரிஞ்சுக்கனும் வித்யா. உனக்கு என்ன சர்ஜரி, எதனால எப்படின்னு. இப்ப ஏன் சொல்றேன்னா இந்த நிமிஷத்துல இருந்து என்னோட உயிரையும் உன் கையில தரேன். இப்ப இங்க இந்த டாக்டர்ஸ் தவிர்த்து, அந்த கடவுளை தாண்டி நான் நம்புறது உன்னை தான்…” என்றவனின் முகத்தையே அசையாமல் பார்த்தாள் வித்யா.
“என்னடி பார்வை இது? உன்னை நீ நம்பு. எனக்காக. இப்ப உனக்கு மனவலிமை ரொம்பவே அவசியம். சீக்கிரம் இந்த மெடிக்கல் பீல்ட், ட்ரீட்மென்ட் எல்லாத்தையும் தாண்டி அத்தனையையும் தூக்கி போட்டுட்டு என்கிட்ட வந்துடனும்ன்னு வைராக்கியமா இருடா திவ்யாம்மா…” என்றவன் அவளின் உள்ளங்கையை அழுத்திக்கொடுத்து,
“இருப்ப தானே?…” என்றான் பரிவும், பரிதவிப்புமாய் தன் உயிரை கண்களில் தேக்கி அவளிடம்.
விழிகள் அவனுக்கான பதிலை தந்துகொண்டிருந்ததே. அவளெதிரே அமர்ந்திருந்தவன் இப்போது அவள் அருகாமையில் வந்தமர்ந்து அவளின் தோளில் தலைசாய்த்தான்.
“குழந்தைங்க கேட்ட தானே? எத்தனை பெத்துக்கலாம்? சொல்லு…” என்று கேட்க வித்யாவின் விழிநீர் அவனை சுட்டது.
“இன்னும் ஒரே ஒரு உண்மை உன்கிட்ட நான் மறைச்சது. சொல்லிடறேன். அதையும் கேட்டுட்டு போய்ட்டு வா…” என்றவன் நிமிர்ந்து அவளின் கன்னம் தாங்கினான்.
“இப்போ இந்த பிரச்சனை இல்லைன்னாலும், இதுக்கு முன்ன உனக்கிருந்த அந்த ப்ளட் க்ளாட் பிரச்சனையினால நாம குழந்தை பெத்துக்கறது ரிஸ்க்ன்னு சொல்லியிருந்தாங்க….” என்று சொல்லவும் மௌனமாய் கண்ணீர் சிந்தியவள் உதடு வெடிக்க சத்தமிட்டு அழுது அவனின் நெஞ்சில் அத்தனை அடி அடித்தாள்.
அவள் அலறலில் லேசாய் திறந்திருந்த கதவின் சத்தத்தில் அனைவரும் உள்ளே வர முரளி தன்னை முழுதாய் ஒப்புக்கொடுத்து அனைத்தையும் வாங்கிக்கொண்டு புன்னகைக்க, அந்த புன்னகை தான் வித்யாவின் உயிரை சுருட்டியது.
மனதின் வலிகளுக்கு மேல் இந்த வலியெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டா என்பதை போல் அவளை பார்த்தான்.
எல்லாவற்றிற்கும் மேல் வித்யாவின் அழுகை, கண்ணீர் எல்லாம் முரளியை செதில் செதிலாய் பிரித்து போட்டது.
அத்தனைபேரும் வந்தாலும் யாரும் அவர்களை நெருங்க முடியாமல் கண்ணீருடன் பார்த்து நிற்க வித்யாவிற்கு தன் எண்ணங்களை சொல்ல கூட கை ஜாடைகள் ஒத்துழைக்கவில்லை.
கட்டிலில் இருந்து இறங்கியவள் அந்த அறையெல்லாம் காகிதத்தையும், பேனாவையும் தேடி திரிய அவளின் அலைபாய்தலை நெஞ்சை கிழிக்கும் வேதனையுடன் பார்த்தான் முரளி.