அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அட்டையை கண்டவள் வேகமாய் அதனை எடுக்க, அவள் கையிலிருந்து வேகமாய் பறித்தான் முரளி.
“எதுவானாலும் நீயே சொல்லு. உன்னோட உணர்வு புரியாதவனா நான்? எழுதி காமிக்க நினைக்கிற?…” என்று அதனை தன் பின்னே மறைத்துக்கொண்டவன்,
“இப்ப எதுவும் சொல்ல முடியலைன்னா ஒன்னும் அவசரமில்லை. சர்ஜரி முடிஞ்சு வா. நான் ஃப்ரீ தான். பேசலாம். வாழ்க்கை முழுக்க. என் ஜென்மம் முடியும் வரை…” என்றவனின் இதழ்களை கைகொண்டு கண்ணீரோடு மூடியவள் கோபமாய் முறைத்து அழ,
“சரி, நம்ம வாழும் வரை. நாம சேர்ந்து வாழும் வரை. இப்ப எதுவும் எனக்கு கேட்கவேண்டாம்….” என்றான் அழுத்தமாய் அவளிடம்.
முரளி சொல்லவும் இரு கைகளையும் கொண்டு தலையை தாங்கியவள் அங்கே நின்றிருந்த ரிதுபர்ணாவிடம் சென்று அழ, ஒவ்வொருவரிடமும் அவள் எதையோ சொல்ல அதன் முழு சாராம்சத்திலும் ‘எங்கே முரளியை தான் தனித்து விட்டு சென்றுவோடுவோமோ’ என்னும் பயமே மிதமிஞ்சி இருந்தது.
“அதான் சொல்றேன்லடி. என்னை விட்டு போகமாட்டேன்னு. நான் நம்பறேன். உனக்கு நம்பிக்கை இல்லையா? இப்படி நம்பிக்கையில்லாம என்னை கொன்னுட்டு போயிடாத. அவ்வளோ தான்…” என்று அண்ணாமலையின் அருகில் நின்ற வித்யாவை பார்த்து இரைந்து கத்தியவன் விரல்கள் எச்சரிக்கும் விதமாய் அவளை நோக்கி நீட்டியிருக்க முரளியின் மொத்த உடலும் நடுங்கியது.
“முரளி என்னப்பா?…” என்று ஒவ்வொருவரும் கேட்க,
“என்னோட தைரியமே அவளோட சிரிப்பும், பார்வையும் தான். அதை எனக்கு தரமாட்டேன்னு சொல்றாளே? நான் என்ன பண்ணட்டும்? என் கையில எதுவுமே இல்லாத மாதிரி இருக்கே?…” என துவண்டு போய் இரு கால்களை ஊன்றி மண்டியிட்டு முகத்தை மூடி அவன் அமர்ந்துவிட அவன் நிலை காணவே சகிக்கவில்லை.
வித்யா அவனருகில் சென்று தானும் மண்டியிட்டு அமர்ந்து முரளியின் கைகளை விலக்க நிமிர்ந்து அவளை பார்த்தவன் முகத்தில் மீண்டும் புன்னகை.
“என்கிட்ட சொல்ல, பேச உனக்கு பேப்பர் பேனா தேவையா திவ்யா?…” அவன் அதையே கேட்க, வித்யாவிற்கு பதில் சொல்ல முடியவில்லை.
“பேசு, என்ன பேசனும்? நானில்லைன்னாலும் நீ நல்லாயிருக்கனும்ன்னு பேத்தல் டயலாக் டெலிவரி பண்ண, முரளியோட கோபத்தை பார்ப்ப நீ…” என்றான் அவளிடம் அமைதியாய்.
வார்த்தைகளுக்கு மாறாய் அவனின் முகபாவனை இருக்க தலைசாய்த்து அவன் விழியோடு கலந்தவள், ‘உங்களை கட்டிக்கனும். வரவா?’ என்றாள் ஏக்கமும், எதிர்பார்ப்புமாய்.
திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாகிவிட்டது. ஆனாலும் அவளாக வெகு சொற்பமான நேரங்களில் தான் அணைவாய் அவனை பிடித்திருப்பாள்.
“புருஷனை கட்டி பிடிக்க கூட வெட்கப்படறது இந்த உலகத்துலையே நீயா தான் இருந்திருப்ப…” என்று அவ்வளோ கேலி பேசுவான் முரளி.
இப்போது தானாக கேட்க முரளியின் முகத்தில் புன்னகை பூத்தது. தன்னிரு கைகளையும் விரிக்க நினைத்தவன், பின் மனதை அடக்கினான்.
“எனக்கு நீ வேணும்ன்னு தான் இவ்வளோ பன்றேன். உனக்கு வேணும்னா நீயா தான் வரனும். என்கிட்ட பர்மிஷன் வேறையா?…” என்று சொல்லவும் வேகமாய் அவனை அனைத்துக்கொண்டவளின் விசும்பலும், கண்ணீரும் அவனின் சட்டையை நனைக்க, அதனை பார்த்தவர்கள் மெல்ல வெளியேறினார்கள்.
கரூரில் வித்யா அனுமதிக்கப்படவுமே அவளின் தற்போதைய உடல்நிலையை அங்கிருந்த மருத்துவர்கள் இங்கே பகிர்ந்திருக்க, ஆத்மாவின் மூலம் அறுவை சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.
வித்யாவின் திருமணத்தின் முன்பு சென்னையில் அவளை பரிசோதித்த அந்த சிறப்பு மருத்துவரும் அந்தநேரத்தில் வேறொரு மருத்துவ கலந்துரையாடலுக்காக சென்னை வந்திருக்க, இன்னும் பலமாய் இருந்தது அவர்களுக்கு.
“என்னண்ணே செய்யறது இப்போ? அத்தனை நம்பிக்கையா சொல்லமாட்டிக்கிறாங்களே?…” என்று விசாலாட்சி அண்ணாமலையிடம் கேட்க அவர்கள் பார்வை எல்லாம் முரளி, வித்யா மேல் தான்.
முரளியை வெளியே இருக்க சொல்லிவிட்டு அன்றிரவு வித்யாவை சிகிச்சைக்கு தயார் படுத்தினார்கள்.
“எப்படியாச்சும் எங்க பிள்ளையை காப்பாத்தி குடுத்திருங்க டாக்டர்…” என்று அண்ணாமலையும், இளவரசுவும் மருத்துவர்கள் கையை பிடித்துக்கொள்ள,
“எங்க பெஸ்ட்டை கண்டிப்பா குடுப்போம். நம்பிக்கையா இருங்க…” என்று சொல்லி சென்றனர்.
முரளி வெளியே வந்து நிற்க ஆத்மா அவனருகில் வந்திருக்க மற்றவர்களும் முரளியை சூழ்ந்துகொண்டனர்.
அவர்களுக்கு பதில் சொல்லியவன் செண்பகம், முருகேஸ்வரியை தேடி சென்றான்.
விடாத வேண்டுதலோடு இருவரும் அமர்ந்திருக்க நெஞ்சம் கனக்க அவர்களை நெருங்கியவன் இரவு அறுவை சிகிச்சை என்று சொல்லவும் இருவரின் முகமும் பதட்டத்தை கொண்டது.
“நான் திவ்யாவோட இருக்கனும். வரேன் ம்மா….” என்றவன் முருகேஸ்வரியை பார்த்துவிட்டு மீண்டும் வித்யாவை அனுமதித்திருக்கும் அறையின் முன் வந்து நின்றான்.
நேரம் செல்ல செல்ல பதட்டம் தான் சூழ்ந்தது. இன்னும் ஒருமணிநேரத்தில் அறுவை சிகிச்சை என்று நேரம் நெருங்கியிருக்க செண்பகம் அங்கே வந்தார் கையில் விபூதி, குங்குமத்துடன்.
“இன்னும் உள்ள போக கூப்பிடலைம்மா…” என்றான் முரளி.
“அவளுக்கு ஒன்னுமாகாதுடா….” என்று சொல்லியவருக்கு இப்போது மகன் தன்னிடம் மறைத்ததெல்லாம் பொருட்டாய் தெரியவில்லை.
இத்தனை மாதங்கள் இதனை அவன் மனதிற்குள் போட்டு எத்தனை கலங்கியிருப்பான் என்று பார்த்தார்.
அனைவரின் முன் சிரித்து, உள்ளுக்குள் அழுது தவித்து போயிருப்பானே என்று பெற்ற மனம் கலங்கியது.
“ஸார் இது உங்க மிஸஸ் ஜ்வெல்ஸ். கொலுசு மட்டும் இன்னும் கழட்டலை. உங்களை கூப்பிடறாங்க…” என்று வித்யா அணிந்திருந்த நகைகளை எல்லாம் முரளியின் கையில் தந்திருக்க அதில் திருமாங்கல்யம் முதற்கொண்டு இருந்தது.
“ம்மா…” என்று செண்பகத்தின் கையில் தந்தவன்,
“நான் போய் பார்த்துட்டு வரேன்…” என்று உள்ளே நுழைந்தான் முரளி.
அங்கே சிகிச்சைக்கான உடை மாற்றப்பட்டு, உடலில் பொட்டு நகையின்றி முழுதாய் மழிக்கப்பட்ட தலையுடன் அமர்ந்திருந்தாள் வித்யா.
பார்த்தவனின் உயிரெல்லாம் ரணவேதனை. எப்படி இருந்தவளின் இந்த அழுத கோலம் தாங்கமுடியவில்லை.
பயத்துடன் அவளின் பார்வை. எங்கே அவனை விட்டு சென்றுவிடுவோமோ என்று அத்தனை பயந்துபோயிருந்தாள்.
“இன்னும் பயம் போகலையா திவ்யாவுக்கு?…” என்று அவளை நெருங்கி கன்னம் தாங்கி முரளி நிற்க, ‘பயமா இருக்கு’ என்றாள் உதட்டை பிதுக்கி.
‘நான் நான் இப்படியே இருக்கவா?’ என்று கேட்டு சிறுபிள்ளையாய் அவனை பார்க்க மெல்ல அவளின் கன்னம் வருடினான்.
“நல்ல பிள்ளையா போய்ட்டு சீக்கிரம் வந்துடுவியாம். நீ இப்படி சின்ன சர்ஜரிக்கு பயந்தா எப்படி நம்ம குழந்தைங்களுக்கு தைரியம் சொல்லுவியாம் நீ?…” என்று கேட்க முரளியின் கைகளுக்குள் சாய்ந்திருந்த அவளின் கன்னத்தை விழிநீர் நனைத்தது.
‘குழந்தையா?’ என கேட்டவளுக்கு அவனை விட்டு செல்கிறோம் என்ற எண்ணம் ஒன்றே பிரதானமாய் இருந்தது.
‘என்கிட்ட ஏன் சொல்லலை? முன்னாடியே சொல்லியிருந்தா’ என்று மீண்டும் அவனின் சட்டையை பிடித்து ஆற்றாமையுடன் வித்யா கேட்க,
“சொல்லியிருந்தா முரளி வேண்டாம்ன்னு சொல்லி இருப்பியா நீ?…” என்றான் அதையும் புன்னகையுடன்.
‘ம்ஹூம், கொஞ்சம் சீக்கிரம் கல்யாணம் பண்ணியிருப்பேன். கூட கொஞ்சநாள் உங்களோட சேர்ந்து இருந்திருப்பேன்ல. இப்ப எப்படி போவேன்? நான் பாவமில்ல’ என்றவளின் கை ஜாடையில் சிதறி போனான் முரளி.
‘தலை வலிக்குது இப்போ. விட்டுட்டு போயிருவேனோ? அங்க எனக்கு யாரையும் தெரியாது. நீங்க இல்லாம எப்படி இருப்பேன்? ரொம்ப பயமா இருக்கு. என் கையை பிடிச்சுட்டு கூடவே இருங்க’ என்று சொல்ல சொல்ல அவன் தான் வித்யாவின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் மரணத்தை தழுவிக்கொண்டிருந்தான்.
‘உங்க பேர் சொல்லி கூப்பிடனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா’ என்றவள் பார்வை அவனை குதற, வன்மையாய் அவளுக்கு வலிக்கும்படியான ஒரு அணைப்பு முரளியிடம்.
“ஏன்டி என்னையும் பலமிழக்க செய்யிற? கேட்கவே மாட்டியா?…” என்றவன் விழிகளில் நீர் ருண்டு விழ, அவனின் அணைப்பில் தானுமே தன் வலி குறைக்க முயன்றாள்.
காதலுற்ற உள்ளங்கள் பிரிவின் கொடுமையை ஏற்க மருகி உயிர்வலியை தாங்கமுடியாது சித்தம் கலங்கிக்கொண்டிருந்தது.
நேரமாவதை உணர்ந்த முரளி மெல்ல விலக அவனின் விலகளை வித்யா அனுமதிக்கவில்லை.
இன்னும் இழுத்து அணைக்க அணைக்க அவளிடமிருந்து இதயம் வலிக்க விலகுவதிலேயே தான் குறியாய் இருந்தான் முரளி.
‘ஏன்?’ என்றவளின் கேள்வியான பார்வையோடு அவனை முத்தமிட நெருங்கியவளை விட்டு இன்னும் தூரம் சென்றான்.
இதழ்கள் துடிக்க கெஞ்சலாய் அவனை தன் அருகில் வரவேண்டி அழைத்தாள் வித்திவ்யா.
‘கொஞ்சநேரம் உங்க கைக்குள்ள. சின்ன சின்னதா முத்தம். ப்ளீஸ்.’ என்று இறைஞ்சியவளின் பார்வையை கண்டவனின் ரத்தநாளங்கள் எல்லாம் கொதித்தது.
“ம்ஹூம், இல்லை. கிட்ட வரமாட்டேன். நீ வா. என்னை அணைச்சுக்க, என்னை ஆற்றுப்படுத்த, அரவணைக்க, வாழ வைக்க, சிரிக்க வைக்க, முரளியா உணர்வோட நடமாட வைக்க திவ்யா வரனும். முழுசா என்கிட்ட மிஸஸ். முரளியா திரும்பி வரனும்….” என்றவன் வித்யாவின் பாதத்தின் அருகில் நின்றான்.
மெல்ல வலிக்காமல் அவளின் இரு பாதங்களையும் விரல் கொண்டு வருடியவன் இதழ்கள் பாதங்களில் முத்த அர்ச்சனை செய்ய வித்யாவின் மனம் படாதபாடுபட்டது.
கண்ணீர் தடத்துடனான முத்தங்களில் கரைந்தவன் அந்த கொலுசை கழற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு மனைவியை நிமிர்ந்து பார்த்தான்.
“காத்துட்டிருப்பேன்டி. வந்துடு. வந்து எல்லாம் தா. இந்த இடமெல்லாம் வறண்டு போச்சு திவ்யா….” என்று தன் குரல்வளையை தொட்டு காண்பித்தவன்,
“திரும்பவும் சொல்றேன், நீ பிழைச்சு என்னை காப்பாத்திடு. இப்பவாவது நம்பிக்கையா போ…” என்று சொல்ல வித்யாவின் நெஞ்சத்தில் ரத்தம் கசிந்தது.
“நீ திரும்பி வரலைன்னா உன்கிட்ட உன்னை தேடி கண்டிப்பா வரமாட்டேன் நான். ஆனா நித்தம் நித்தம் இங்க செத்துட்டிருப்பேன். அந்த நரகத்தை எனக்கு குடுக்க நினைச்சிடாத. எனக்காக உன்கிட்ட நான் மண்டியிட்டு கேட்டுக்கறேன். என்னோட முத்தம் உன்னை நிறைக்கும். அதுக்காக உன் உயிரை என் கண்ணுல வச்சு காத்துக்கிட்டிருப்பேன்….” என்று சொல்லியவன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
அதன் பின்னர் அவனை பார்க்கவில்லை வித்யா. அனைவருமே வந்து தைரியம் சொல்லி செல்ல, வித்யாவின் மனது முரளிக்காக அவனை தேடி அவன் அருகாமை நோக்கி சென்றது.
மெல்ல அந்த உலகம் அவளுக்கு உடைபட அறுவைசிகிச்சை அறைக்குள் மயக்கத்தில் மனதிற்குள் முரளியின் நினைவிற்குள் கட்டுண்டு நிற்க முயன்றாள் வித்யா.
தன் உயிரை அவனிடம் கொடுத்திருக்க, அவன் உயிரை தன்னுடலிலிருந்து விடுபட விடாமல் இழுத்து பிடித்து போராட ஆரம்பித்தாள் வித்திவ்யா.
சிகிச்சை முடிந்திருந்தாலும் இத்தனைமணி நேரத்திற்குள் வித்யா கண்விழிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தனர் மருத்துவர்கள்.
மருத்துவர்கள் சொல்லியிருந்த நேரத்தை தாண்டியுமான வித்யாவின் நீண்ட மௌனம் ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்றுகொண்டிருந்தது முரளி என்றொருவனின் நினைவுகள் சுமந்திருந்த செல்களை எல்லாம் சிந்தாமல் சிதறாமல் சிறிதுசிறிதாய் அழித்துக்கொண்டே.
“அவங்க மயக்கம் தெளியலை மிஸ்டர் முரளி. இனிமே கடவுளை தான் நம்பனும். நினைவுகள் தப்பிருக்கு. பல்ஸ் ரேட் குறையவும் கூடவுமா இருக்கு. எங்களால முடிஞ்ச முயற்சியை நாங்க பண்ணிட்டு தான் இருக்கோம். ஆல்மோஸ்ட் கோமா ஸ்டேஜ் நெருங்கிட்டிருக்காங்க…” என்று சொல்லி சென்றுவிட்டனர் மருத்துவர்கள்.
கண்ணாடி அறைக்குள் உயிரை பிடித்துவைக்க போராடும் வித்யாவின் முகம் பார்த்த முரளி நகர்ந்து வந்து ஒரு இருக்கையில் அமர்ந்து இரு கைகளாலும் கண்களை மூடினான்.
மூடிய இமையை தொட்டு குளிர்ந்தது வித்யாவின் கால் கொலுசுகள் ‘இனி உனக்கு நான் மட்டுமே துணை என்பதை போல.’
மூச்சுக்கு ஏங்கியவனின் சுவாசத்தை சீராக்க முடியாமல் தோற்றுக்கொண்டிருந்தாள் அவனின் உயிரான பூவிழி மொழியாள்.