மருத்துவ உபகரணங்கள் வித்யாவின் உயிரை பிடித்து வைத்திருக்க மூடிய இமைகளின் அசைவுக்காக காத்திருந்த ஜீவனொன்று குற்றுயிராகிக்கொண்டிருந்ததை அவனின் சொந்தங்கள் கண்கொண்டு காணமுடியாது தவித்தனர்.
“டாக்டர் சொல்லிட்டு போனதுல இருந்து இப்படியே இருக்கானே? எனக்கு பயமா இருக்கு கண்ணா…” என்று ஆத்மாவிடம் இளவரசு வருத்தமாய் பேச அவருக்கு எந்தவிதத்திலும் ஆறுதல் சொல்லமுடியாமல் தவித்தான் ஆத்மா.
முரளியின் நேரங்கள் எல்லாம் வித்யாவின் அருகில் தான். அவளின் கையை பிடித்துக்கொண்டு தன்னுணர்வுகளை தொடுகையால் மட்டுமே கடத்திக்கொண்டிருந்தான்.
‘திவ்யா’ என்னும் பெயரை தவிர வேறு சொல் இல்லை அவனிடத்தில். அதனை மட்டுமே மந்திரம் போல உச்சாடனம் செய்துகொண்டிருந்தான்.
“அவங்கட்ட அமைதியா பேசுங்க. நினைவு திரும்ப வாய்ப்பிருக்கு….” என்று மருத்துவர்கள் சொல்லியிருக்க அத்தனைபேரும் பேசி பார்த்துவிட்டனர்.
“கண்ணு, எந்திச்சுக்கடி. அம்மாவ பாருத்தா…” என்று முருகேஸ்வரி கூட வந்து வாயை திறந்துவிட்டார்.
“நான்லாம் வாழ்ந்து முடிச்சிட்டேன். என்னிய எடுத்துக்க தெய்வமே…” என்று செண்பகம் பேசியிருந்தார்.
அண்ணாமலைக்கு அத்தனை குற்றவுணர்வு. தன்னால், தன்னால் மட்டுமே வித்யாவுக்கு இந்நிலை என்று உள்ளுக்குள் அழுந்திக்கொண்டிருந்தார் அண்ணாமலை.
அன்றைக்கு தான் மட்டும் அவ்விடத்தில் நின்றிருந்தால் வித்யா எழுந்து சென்றிருக்கவும் போவதில்லை. அந்த விபத்து அவளுக்கு நேர்ந்திருக்கவும் போவதில்லை.
இன்றளவும் அந்த காட்சி கண்ணை விட்டு அகலவில்லையே அவருக்கு. மீண்டும் மீண்டும் அன்றைய நாள் தான் அவரின் கண்களுக்குள்.
பரத்தின் நிச்சயத்தன்று கோவிலில் தெய்வத்திற்கு பூக்கோலம் இட்டுக்கொண்டிருந்தவள், தானும் அந்த சன்னிதிக்கு வந்து வித்யாவை பார்த்து அங்கிருந்து சென்றதுமே, தான் எழுந்து தன்னை தாண்டி சென்றாளே?
நிச்சயம் தானாய் சென்றிருக்கமாட்டாள். எங்கே தான் தெய்வத்தை வணங்காமல் செல்ல அவள் காரணமாக வேண்டாம் என்று ஒதுங்கி சென்ற பெண்ணின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் தன்னால் என்பதே அவரை உறுத்தியது.
“மனசெல்லாம் ரணமா கிடக்கு தாயி. வந்திரு சாமி. எங்க எல்லாரோட உசுரும் இப்ப உன்னோட விழிப்புல தான் இருக்கும்மா. அம்மாடி, வித்யா…” என்று அண்ணாமலை அவளிடம் மன்றாட ஆத்மா தான் தந்தையை அணைத்துக்கொண்டான்.
ரிதுபர்ணாவும், விசாலாட்சியும், சபர்மதியும் பேச பேச எவ்வித அசைவும் இல்லை அவளிடத்தில்.
மனோவும், சுந்தரியும் கூட வந்துவிட்டனர் விஷயம் கேள்விப்பட்டு. அத்தனை அழுகை இருவருமே.
தங்களிடமும் சொல்லவில்லையே என்று முரளியையும், ஆத்மாவையும் கேட்டு புலம்பினர்.
இப்படி ஒவ்வொருவரும் தங்களின் ஆற்றாமையை வாய்விட்டு வார்த்தைகளால் வித்யாவிடம் சேர்ப்பித்திருக்க முரளியிடம் மௌனம் மட்டுமே.
வந்துவிடு என்னும் அழைப்பும் இல்லை. அவன் அவளுக்கு உணர்த்திக்கொண்டிருந்தது தன்னுடைய ஸ்பரிசத்தை மட்டுமே.
‘திவ்யா’ என்ற மூன்றெழுத்தின் மூச்சுக்காற்றை அவளுள் கடத்திக்கொண்டிருந்தான் மௌனமாய்.
‘ஏன் நான் பேசினா தானா? உனக்கு என்னை ஞாபகமில்லாம எப்படி போகும் திவ்யா? நான் கூப்பிட்டா மட்டும் தான் வருவியா நீ?’ என்று மானசீகமாய் ஒரு அறப்போராட்டம் மௌனத்தின் பின்னணியில்.
மற்றவர்கள் கண்ணீரின் மூலம் தங்களின் கனத்தை கரைக்க முரளியின் விழிகளில் ஒரு துளி நீரில்லை.
“அப்படி என்னடா உனக்கு அழுத்தம்? அழுது தொலையேன்….” என்று தம்பியை அணைத்துக்கொண்ட ஆத்மா,
“வித்யாவுக்கு எதுவுமாகாது. இப்ப உன்னை பார்க்க தான் எங்களுக்கு பயமா இருக்கு முரளி. இப்படி இருக்காத. வாயை திறந்து பேசு. அட்லீஸ்ட் அழுதுடு…” என்றான் ஆத்மா தாங்கமுடியாமல்.
“அழனுமா? மனசு விட்டு நான் அழுதுட்டேனா அவ இல்லைன்னு ஆகிடுமே ண்ணா? அழமாட்டேன். ஏன் இப்ப என்ன? அவ எழுந்து வர லேட் பண்ணுது. டைம் எடுத்துக்கட்டும்….” என்று வித்யாவின் பக்கம் பார்வையை திருப்பியவன்,
“இது அவளுக்கு சின்னதா நான் குடுக்கற ஓய்வு. எழுந்து வந்த பின்னாடி என்னோட காதல் அவளை இப்படியெல்லாம் ஒரே இடத்துல இருக்கவிடாது. இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு பழி வாங்கனுமே. பார்த்துக்கறேன்….” என்று மென்னகை புரிய ஆத்மா கலங்கி போனான்.
“முரளி…”
“எங்க நான் பேசியும் திவ்யா முழிச்சிக்க லேட் பண்ணிட்டா என்னோட நம்பிக்கை உடைஞ்சிருமோன்னு பயமா இருக்குண்ணா. அவ என்னை பார்க்காத இந்த கொஞ்சம் நேரமே என்னால இங்க இருக்க முடியலை. பேசி பேசி எங்க அழுதுடுவேனோன்னு தான் பேசலை…”
“ஏன் பேசனும்? என் மனசு என்ன பாடுபடும்ன்னு அவளுக்கும் தெரியும். இப்ப இந்தநிமிஷம் என்னோட உணர்வை அவளால உணர முடிஞ்சாலும் பதில் சொல்ல முடியாத நிலையில இன்னுமே போராடிட்டு இருப்பா. அதுவும் அவளுக்கு எவ்வளோ கஷ்டம்….”
“ஆனா கஷ்டப்படாம எதுவுமே இல்லைல. நாங்களும் இல்லை. முன்னாடியே சொல்லலைன்னு அத்தனை அழறா. சொல்லியிருந்தா சீக்கிரமே கல்யாணம் செஞ்சிருப்பாளாம். அவளோட மனசு புரிஞ்சதா? சின்ன சின்ன நிமிஷங்களையும் கூட தவற விட்டுட்டோமேன்னு பயந்து போயிருக்கா….”
“நான் திவ்யாவை விரும்ப ஆரம்பிச்ச காலங்கள் வேணா நீண்டிருக்கலாம். ஆனா அவ என்னை ஏத்துக்கிட்டு என்னோட கலந்து வாழ்ந்த நாட்கள் எல்லாம் அதுக்கு பலமடங்கு அதிகம்ன்னு சொல்லுவேன். அவளோட ஒவ்வொரு பார்வையும் என் மேல அவ வச்சிருக்கற அன்பை சொல்லும். எப்படிண்ணா விட்டுட்டு போவா?…”
முரளி பேசிய ஒவ்வொன்றும் நினைவுகள் மங்கிக்கொண்டிருந்தவளின் மூளைக்குள் செல்ல ஓய்ந்திருந்த மனமெல்லாம் அதிர்வு.
‘என் சொந்தம் இங்கிருக்க, என்னை அழைத்து செல்வதா?’ என்றவளின் மௌன மன்றாடல் ஒருபுறம், அதற்கு ஒத்துழைக்காத உடல்நிலை ஒருபுறம் என்று பெரும் அதிர்வு.
வித்யாவின் மனதிற்கும், மூளைக்குமான அதிர்வில் உடலின் இயக்கங்கள் வேறுவிதமாய் வேகமெடுக்க ஆரம்பித்தது.
மீண்டும் முரளி வந்து வித்யாவின் கையை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக்கொள்ள இன்னும் அவள் கால் கொலுசு அவனின் கைகளுக்குள் தான்.
இருவரின் இணைவாய், உயிர் கொடியாய், இதய துடிப்பாய் இரு மனங்களை இழுத்து பிடித்திருந்தது.
அந்த தொடுகையும், அவனின் குரலும் அதில் வழிந்தோடிய தேடலும் வித்யாவின் ஆழமான உணர்வுகளை தட்டி எழுப்பியது.
வெளியேற முடியாமல் அடைபட்ட சுவர்களை கடந்து வர பெரும் சிரமம் எடுத்தது அவ்வுயிர்.
‘முரளி’ என்னும் பெயரும், அவனின் காதலும் உயிருக்கு உயிர் தர இதோ முரளியின் உயிர் அவனை நோக்கி தன் நினைவுகளை மீட்டு அவன் பக்கமாய் வந்து நிற்க போராடி தத்தளிப்பதை பார்ப்பவர்கள் கண்கள் உணரவில்லை.
ஆனால் தன் கைக்குள் வைத்திருந்த வித்யாவின் உள்ளங்கையின் மாற்றத்தை உணர்ந்தான் முரளி.
“அண்ணா, அண்ணா இங்க பாருங்க. இதுவரை இவ்வளோ சூடில்லை. இங்க பாருங்க. தொட்டு பாருங்க…” என்று சொல்லி ஆத்மாவை வேகமாய் அழைத்தவன் வித்யாவின் உள்ளங்கையை தொட்டு பார்க்க சொல்ல, அது லேசாய் வெம்மையை காண்பித்தது.
ஆனாலும் ஆத்மாவினால் நம்ப முடியவில்லை. முரளியின் முகம் காண அவன் பார்வை வித்யாவின் கன்னம் தொட்டு, நெற்றி தடவி அவளின் விழி திறக்க காத்திருந்தது.
“திவ்யா, திவ்யா…” என்ற அழைப்பை தவிர அவளிடம் இப்போதும் வேறெதுவும் அவன் பேசவில்லை.
கண்களில் நீர் நிறைந்து அவளின் உருவத்தை மறைக்க முயல புறங்கையால் அதனை துடைத்துவிட்டு அதே ஈரத்துடன் வித்யாவின் கன்னம் பற்றி தட்டினான் முரளி.
‘வந்துருடாம்மா, நரகமா இருக்கு. என்னை சுத்தி நெருப்பு வச்சுட்டு நிக்கிற மாதிரி வெந்துட்டு இருக்கேன்ம்மா. திவ்யா. திவ்யாம்மா’ என்றவனின் மானசீக குரல் அழுகையாய் வெளிப்பட துவங்க ஆத்மா அதற்குள் மருத்துவர்களை அழைத்துவிட்டான்.
வந்தவர்களும் உடனடியாக வித்யாவை பரிசோதிக்க அவளின் ரத்தவோட்டம் தாறுமாறாக மாறியது.
அதுவரை உணர்வின்றிய உடலின் அசைவு அசாதாரணமாக போக விழிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
மருத்துவர்கள் கண்களில் அத்தனை பீதி. அனைவருக்குமே அந்த நிமிடம் கடினமானதாக இருந்தது.
வித்யாவின் தற்போதைய நிலை அவர்களுக்கு நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் போகலாம்.
அந்த அவசரத்திலும் அங்கேயே முரளியும் இருப்பதை கவனித்து வெளியேற்ற முயல,
“ப்ளீஸ், இவரை கூட்டிட்டு போயிருங்க…” என்றனர் மருத்துவர்கள்.
“வாடா, முரளி. வித்யாவுக்கு எதுவுமில்லை. வந்திருடா…” என்று முரளியை இழுத்து வர ஆத்மா படாதபாடுபட,
“இல்லண்ணா, இல்ல…” என்று தன்னிலை மறந்தவன் அங்கேயே ஆத்மாவின் கைகளிலிருந்து விடுபட திமிற,
“முரளி…” என்ற ஆத்மாவின் கத்தலில் சுயம் பெற முயன்று பார்த்தான்.
“ஆத்மா ப்ளீஸ், காம் டவுன்…” என்று மற்ற மருத்துவர்கள் சொல்லவும்,
“ப்ளீஸ்டா. வா. நான் இருக்கேன்ல…” என்று முரளியின் கைபிடித்து ஆத்மா அழைக்க திசையறியா குழந்தையாய் அவனை பார்த்தான் முரளி.
“உன்னை இப்படி பார்க்க முடியலைடா. ரொம்ப வேதனையா இருக்கு. எங்களுக்கு நீயாவது வேணும்…” என்று சொல்லியேவிட்டான் ஆத்மா.
அவனுக்கு நம்பிக்கை சிறிது சிறிதாய் குறைந்துகொண்டிருக்க, அதற்கு ஏற்ப மருத்துவர்களும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று சூசகமாக சொல்லிவிட்டனர்.
மனதை திடப்படுத்திக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. முரளியையாவது பார்க்கவேண்டுமே என்று நினைத்தவனின் வாய்தவறி அவன் சொல்லிவிட திக்பிரம்மை பிடித்த பாவனையில் முரளி தன் அண்ணனை பார்த்தான்.