“ண்ணா…” என்ற முரளி மறுப்பாய் தலையசைத்து வித்யாவை பார்க்க உயிர் வதை அது.
அத்தனை நேரம் அசைவற்று கிடந்த உடலில் தனக்கான ஜீவனை இருத்தி வைக்க முயலும் அவளின் போராட்டம்.
அது அவனின் ஜீவன். அவர்கள் உயிரின் ஜீவன். அதுவன்று வாழ்வேது இருவருக்கும்?
சிலநொடிகள் கூட பார்க்க முடியாத அந்த ஜீவ, மரண போராட்டத்தை வெறித்த பார்வை பார்த்தவன் அவளின் பாதம் நோக்கி சென்றான்.
“மிஸ்டர்…” என்று ஒரு மருத்துவர் அவனை நெருங்கும் முன்,
“போயிடறேன். ப்ளீஸ், ஒரே ஒரு… ஒரு நிமிஷம்…” என்று தொண்டை அடைக்க சொல்ல,
“முரளி, என்னடா?…” என்று ஆத்மா அருகில் வந்தான்.
“போயிடறேன். என்னால இதை பார்க்க முடியலைண்ணா…” என்றவன் தன் மனைவியின் வேதனை சுமந்த முகத்தை விழிகளில் நிரப்பிக்கொண்டான்.
அவனின் இதயத்துடிப்பும் சீரற்று துடிக்க ஆரம்பித்தது அவள் துடித்து தவிப்பதை போல.
இரு கைகளாலும் அவளின் பாதத்தை பிடித்தவன் விழி நீர் அவள் பாதம் நனைக்க லேசாய் குனிந்து அவள் பாதத்திற்கு முத்தம் வைத்தான்.
ஒருவாரத்திற்கு முன்பு தான் மருதாணியின் தடம் குறைய கண்டு மீண்டும் அவளின் பாதங்களுக்கு மருதாணியை பூசியிருந்தவன் இப்போதும் அதன் வாசத்தை நுகர்ந்தான்.
நுரையீரலை சென்றடைந்த வாசம் உயிர் முழுவதும் பரவியது. குனிந்து பாதம் பற்றியிருந்தவன் தலை தூக்கி வித்யாவின் முகம் பார்த்தான்.
“என்னால தனியா இருக்க முடியும்ன்னு தோணலை திவ்யா. நீ என் சாமிடி. நான் வேண்டிக்கறேன். இப்ப உன்னோட நானும் வருவேன்னு. நீ எங்க இருக்கியோ அங்க தான் என்னால மூச்சு விடமுடியும். இப்ப நெஞ்சை அடைக்குது. முடியலைடி. என் தைரியம் எல்லாம் உன்னோட இந்த துடிப்புல அடங்கிடுச்சு திவ்யா…” என்று சொல்ல வித்யாவின் தொண்டைக்குழி எதற்கோ சிரமம் கொண்டது.
‘உங்க பேரை சொல்லனும்ன்னு ரொம்ப ஆசை.’ என்று அவள் சொல்லியது இப்போதும் மனக்கண்ணில் படமாய் விரிய, இந்தநொடி அவள் தன்னை அழைக்க முயல்வது புரிந்தவன் கதறிவிட்டான்.
“திவ்யா…” என்றவனின் அலறலில் ஆத்மா அவனை இழுத்தணைத்துக்கொள்ள,
“இத்தனை கஷ்டபடறா. அண்ணா என்னால பார்க்க முடியலை. எங்களுக்கு ஏன் இப்படி?…” என்றவன் கேவல் சத்தம் அவளின் போராட்டத்தை அதிகரித்தது.
“அங்க தானே வித்யா இருக்கா மாமா. வித்யாவோட தானே முரளி இருக்கனும். எதுவானாலும் சரி, அவங்க சேர்ந்தே இருக்கட்டும்…” என்று சொல்லிவிட்டு சோர்வாக அமர்ந்துவிட்டாள் ரிதுபர்ணா.
மருத்துவர்களிடம் பேச அவர்கள் முதலில் மறுத்து, இது என்ன விந்தை என்று வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டனர்.
“கூட ஒருத்தர் மட்டும் இருங்க…” என்றவர்கள்,
மாற்றி மாற்றி வித்யாவை கவனிப்பதில் இருக்க மூன்றுமணி நேர போராட்டத்திற்கு பின் முரளியின் திவ்யாவின் நினைவு திரும்பியதாக மருத்துவர்கள் வந்து சொல்லும்வரை ஒருவருக்கும் உயிரில்லை.
“எங்களோட கண்கண்ட தெய்வமா தெரியறீங்க நீங்க. ரொம்ப நன்றிங்க…” என்று தலைமை மருத்துவரின் கைகளை பிடித்துக்கொண்ட அண்ணாமலை சிறுபிள்ளையாய் தேம்ப,
“அப்பா…” என்று அவரை அணைத்துக்கொண்டான் ஆத்மா.
“உனக்கு தெரியாது கண்ணா. இதை நினைச்சு நான் நோகாத நாளில்லை. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டுன்னு சொல்லுவாங்க. அது நல்லதோ? கெட்டதோ? ஆனா அந்த பலன் நம்மை அடைஞ்சே தீரும் இல்லையா? இதுவும் அப்படித்தான்….” என்றவர்,
“முன்னாடி நான் இருந்த மனநிலையே வேற. அந்த சூழ்நிலையில நடந்த விஷயம்…” என்றவரின் கையை பிடித்துக்கொண்ட ரிது,
“இதுக்கு நீங்க காரணமில்லையே மாமா…” என்றாள்.
“நேரடியா காரணம் இல்லைன்னாலும் மறைமுகமா நானும் ஒரு காரணம் தானம்மா? அந்த இடத்துல எங்க நான் சாமி கும்பிடாம கிளம்பறேனோன்னு தான் வித்யா பயந்து எனக்கு முன்னாடி விலகி போனா. இல்லைன்னா இந்த நிலைமை அவளுக்கு இல்லைல…” என்று சொல்ல,
“பேஷண்டை இப்ப பார்க்க முடியாது அவங்க மயக்கத்துல இருக்காங்க…” என்று நர்ஸ் சொல்ல,
“சிஸ்டர், முரளி…” என்றனர் அனைவருமே.
“அவரும் மயக்கத்துல தான் இருக்கார். டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டனர்.
வித்யாவின் படுக்கைக்கு எதிரே பக்கவாட்டில் முரளியை அனுமதித்திருந்தனர் சிறிய படுக்கையில்.
கையில் செலேன் மூலம் மருந்து ஏறிக்கொண்டிருக்க விழிகளை சுழற்றியவன் இதயத்துடிப்பு இன்னும் சீராகவில்லை.
ஆனால் ஏதோ ஒருவித அமைதி. அவனவள் அவளுடன் வந்துவிட்டதன் நிம்மதியை ஆழ்மனம் உணர விழிகள் எதிர்திசையில் பயணித்தது.
சீரான சுவாசத்தோடு அவனின் வித்யா. சற்றுமுன் தான் கண்டு கதறிய அந்த போராட்டமின்றி ஆழ்ந்த உறக்க நிலையில்.
‘வாடாம்மா’ என்றான் மானசீகமாய் அவளிடம். மீண்டும் அவனுக்காகவே அவள் வந்து சேர்ந்துவிட்டதை முரளியின் மனது அவனின் மூளைக்கு எடுத்துரைக்க முயன்றது.
சட்டென எழுந்து செல்ல முயலவில்லை. அவனிடம் அசைவுமில்லை. ஆனால் பார்த்தபடியே இருந்தான்.
எத்தனை நேரம் பார்த்தபடியே இருந்தானென்று அவனுமே அறியவில்லை. இதோ அவன் உயிர் பூக்க செய்யும் அந்த நொடிகள்.
ஆம், வித்திவ்யாவின் மூடிய இமைக்குள் விழிகள் அசைவை துவங்கியது. அவனின் தேடல் அவளை இட்டுக்கொண்டு வந்திருந்தது.
இமைகளை பிரிக்க முயன்றவள் லேசாய் தலையை அசைக்க வலியை உணர்ந்தாள் வித்யா.
காய்ந்த அதரங்கள் லேசாய் அசைந்து விரிந்தது. இரு இதழ்களும் என்னவோ சொல்ல முயல முரளியின் விழிகள் இன்னுமே பெரிதாகியது.
ஆம். வித்யா அவனின் பெயரை சொல்லி அழைக்க முயல்கிறாள். இவன் அதரங்களும் விரிய கனவோ என்னும் எண்ணம் ஒருபக்கம் பதட்டத்தை விதைக்க சட்டென எழுந்தமர்ந்துவிட்டான் முரளி.
இல்லை, கனவே இல்லை. இதோ அவனின் அசைவில், அவனின் இருப்பை உணர்ந்தவளின் பார்வை அவனிடமல்லவா திரும்பியிருந்தது.
மீண்டுவிட்டாள். அவனை மீட்டுவிட்டாள் என்பதுமே சரியான பொருத்தமான வர்ணனையாக இருக்கும் அந்த காட்சியில்.
முரளியின் உயிர் திரும்பியிருந்தது. ஊசலாட்டத்தின் ஒருமுனையில் நின்றவனை மறுமுனையில் நிறுத்தி, வேரறுக்க முயன்று, மனிதரில்லா வெளிஉலக பிம்பத்தை தொட்டு தழுவ முயன்று இறுதியாய் அவனின்றி வேறு உலகமில்லை என்று அவனை சேர்ந்துவிட்டாள் முரளியின் பிரபஞ்சம்.
காணவே முடியாதோ என்னும் அந்த பார்வையில் வலிந்து தன்னை சிறைபடுத்திக்கொண்டவனை கண்ணார ரசித்து பார்த்தவள் விழிகள் உடைப்பெடுக்க, இதோ லேசாய் தலை சாய்த்து அவனை பார்த்தவள் இதழ்களும் விரிய முயன்று அதீத சந்தோஷத்தை காண்பித்து மீண்டும் மயக்க நிலைக்கு செல்ல முரளியின் உயிர் திரும்பிற்று.