அன்று அறுவை சிகிச்சை முன் எத்தனை முறை கேட்டாள்? எத்தனை கெஞ்சலாய், கண்ணீருடன் யாசித்தாள்? நினைக்கையில் அவன் மனம் கரைந்தது.
அவளின் அணைப்பில் லேசாய் கலங்கவிருந்த மனதையும், கண்ணையும் சுதாரித்து இந்த நிமிடத்தை அனுபவித்தான்.
அவனின் எண்ணம் போல் தான் வித்யாவும் இந்த அனைப்பிர்காக, அவனின் கைகளுக்குள் தானிருக்கும் நிமிடத்திற்காக எத்தனை போராட்டம்?
கண்ணீர் லேசாய் வழிய அவளை நிமிர்த்தியவன் அந்த கண்ணீரை இதழ்களால் துடைத்து மெல்லிய முத்தங்களை அவள் முகத்தில் பரவவிட்டு,
“நீ வந்துட்டியே? என்னை என்கிட்ட முழுசா தந்துட்ட திவ்யா. இது போதும்டி எனக்கு. இந்த ஜென்மத்துக்கு நான் வாழ நீ மட்டும் போதும்…” என்றவன் மீண்டும் தன் நெஞ்சத்திற்குள் அவளை பத்திரமாய் அடைகாத்துக்கொண்டான்.
சிலநேரம் அணைப்பு. சிலமணித்துளிகள் முத்தங்கள். சில நொடிகள் இளைப்பாறல். சுவாச பூக்களில் கோர்த்த மொழியில்லாத கவிதை நாழிகைகள் அவை.
கடந்து சென்ற வலிகளை நகர்ந்துகொண்டிருக்கும் வழியில் அவர்கள் பகிர்ந்துகொள்ளவே இல்லை.
இரு உடலில் ஓருயிர். நிகழ்வுகள் இருவருக்குமே பொதுவாய் உணர முடிந்திருக்க அவை எல்லாம் தெரிவிக்கவும், தெரியப்படுத்தவும் அவசியமே இல்லாது போனது.
திவ்யா என்ற நாதத்தின் முன் அவளின் மெல்லிய சிணுங்கல் சப்தம் மட்டுமே அவ்விடத்தை ஆட்சி செய்ய மெல்ல அவனிடமிருந்து நிமிர்ந்தவள் பார்வை அங்கிருக்கும் கண்ணாடியில் பதிந்தது.
நன்றாய் மெலிந்து, கண்ணுக்கு கீழ் கருவளையம் பூத்து, இந்த சில நாட்களில் அவளின் முகத்தின் மாற்றம் கண்டாள்.
அதிலும் தலையில் கட்டுடன் கூந்தலற்ற வெற்று முன்நெற்றியும் தடவி பார்த்துவிட்டு முரளியை பார்த்து விழிக்க அழகிய புன்னகை அவன் முகத்தில்.
“குட்டி குழந்தைங்களுக்கு மொட்டை போட்டு சந்தானம் பூசின மாதிரி அழகா இருக்குடா…” என்றான் அவளின் கன்னம் வலித்து தன்னிதழ்களில் பதித்தவனாக.
‘நிஜமா?’ தலைசயத்து உண்மையா என்று அவனிடம் கேட்டவள் குரல்வளை ஏறி இறங்க,
“முரளி சொல்லு…” என்றான் அவளிடம்.
இமை விரித்து, புருவம் உயர்த்தியவள் எப்படி என்பதை போல் பார்த்திருக்க அவனின் விழிகள் அவளிடம் கேட்டு நிற்க, ‘மு’ என்ற எழுத்தை தவிர மற்றவை எல்லாம் வடிவமற்று அவனிடம் சரண் புகுந்தது.
“இது போதுமே. என்னை கூப்பிடனும்ன்னு எவ்வளோ ஆசைல…” என்று சிரித்தவன் அவளின் நெற்றியில் வலிக்காமல் முட்டினான்.
“அன்னைக்கு கேட்டியே? குழந்தைங்களை பத்தி. நிறைய குழந்தைங்க பெத்துக்கலாம் திவ்யா. உன்னை மாதிரி, என்னை மாதிரி. நம்ம ரெண்டுபேரும் சேர்ந்த மாதிரி. இப்படி நிறைய…” என்று சொல்ல வித்யாவின் கண்கள் ஒருகணம் குறும்பில் சிரித்தாலும், அடுத்த நொடி அவன் சொல்லியதில் தான்சென்று நின்றது.
அவள் கேளாமலே அந்த எண்ணவோட்டத்தை கண்டுகொண்டவன் இதழ்கள் மென்னகை புரிய,
“இப்ப பெத்துக்கலாம். உன்னோட உடல்நிலை சரியா, தலையில காயங்கள் எல்லாம் ஆறின பின்னாடி ஒரு கம்ப்ளீட் செக்கப் முடிச்சுட்டு…” என்று சொல்லியும் நம்பாத பாவனை பார்த்தாள் வித்யா.
“நம்புடி, அன்னைக்கு இருந்த சூழ்நிலை. உன்னால அதிகபட்ச வலியை தாங்க முடியாது. அதுக்கு உன் உடல்நிலை இடம் தராதுன்னு டாக்டர்ஸ் சொல்லியிருந்தாங்க. அதனால குழந்தை பத்தி நான் யோசிக்கலை. ஆனா அன்னைக்கு நீ கேட்டப்போ நான்… நான்…” என்றவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
சட்டென்று அன்றைய நாளின் தாக்கம் அவனை தூக்கி பிடித்துக்கொள்ள எச்சிலை கூட்டி விழுங்கியவன் லேசாய் சரிந்து வித்யாவின் மதி சாய்ந்தான்.
“திவ்யா…” என்றழைக்க,
“ஹ்ம்ம்…” என்றவளுக்கு அவனின் தலையை கோத,
“திவ்யா…” என்றான் மீண்டும்.
“ஹ்ம்ம் சொல்லுடாம்மா…” என அவளின் அமைதியில் அசைக்க,
“ஹ்ம்ம்…” என்றாள் அவள் அவனின் சொல்லுக்கிணங்க.
அவள் மதி சாய்ந்திருந்த முரளியின் இதழ்கள் லேசாய் விரிய அதே புன்னகையுடன் அவளின் கைகளை எடுத்து தன் கழுத்தில் கோர்த்துக்கொண்டான்.
“நான் கூப்பிட கூப்பிட பதில் தந்துட்டே இரு…” என்றவன் மீண்டும் மீண்டும் திவ்யா என்றழைக்க அவனின் அழைப்பிற்கான பதில் அவளிடமிருந்து தவறாது வந்துகொண்டிருந்தது.
எத்தனை நேரம் சென்றதோ இருவருமே அறியவில்லை. கதவு தட்டப்படும் சப்தம்.
முரளி நிமிர்ந்தமர்ந்து பார்த்தவன் வித்யாவை சாய்ந்து அமர செய்துவிட்டு சென்று கதவை திறந்தான்.
அவளை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவரும், உடன் உதவிக்கு இன்னொரு செவிலி பெண்ணும் வந்திருந்தனர்.
“ஹலோ மிஸ்டர் முரளி…” என்றவர்,
“மிஸஸ் முரளி எப்படி இருக்கீங்க?…” என்றார் வித்யாவிடமும்.
நன்றாய் இருப்பதாக தலையசைத்தவள் முகத்தில் சந்தோஷத்தின் கூப்பாடு. கண்கள் ஒளிர புன்னகைத்தவளை கண்டவர்,
“குட். கீப் ஸ்மைலிங்…” என்றார் அவளிடம்.
அதற்கும் தலையசைத்து வித்யா என்னவோ கேட்க மருத்துவர் குழப்பமாய் பார்த்தார்.
“இப்ப திவ்யா அவளுக்கு எப்படி இருக்குன்னு கேட்கிறா உங்ககிட்ட…” என்றான் முரளி மொழிபெயர்த்து.
அவனின் முகம் கண்டே என்னவோ கேட்க போகிறான் என்று வித்யா வேகமாய் தலையாட்டி வேண்டாம் என்க,
“இப்போ என்ன கேட்கிறாங்க முரளி?…” என்றார் மருத்துவர் வித்யாவை கவனித்துவிட்டு முரளியிடம்.
“டாக்டர், எப்போ இந்த காதுல, கழுத்துல, கால்ல எல்லாம் அக்ஸசரீஸ் போடலாம்?…” என்றவன் அவர் கவனிக்காமல் மனைவியிடம் கண் சிமிட்ட, ‘இதையா கேட்டேன்?’ என்றாள் பாவம் போல் அவனிடம் கையசைத்து.
“இப்போ என்ன சொல்றாங்க முரளி?…” என மருத்துவர் பரிசோதனை எல்லாம் பார்த்துவிட்டு அவனிடம் கேட்க,
“சீக்கிரம் சரியாகிட்டா, சீக்கிரம் குழந்தை…” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் ஒரு கையினால் அவனை இழுத்து பிடித்தவள் அவனின் வாயை கை கொண்டு மூட பார்க்க,
“ஹேய் பார்த்துடா. என்ன பன்ற?…” என்றான் முரளி பதட்டமாய்.
ஒரு கையில் இன்னும் செலேன் போடப்பட்டிருக்க அதையும் கருத்தில் கொள்ளாமல் சட்டென்று இப்படி வித்யா செய்ததில் பதறிவிட்டான்.
நொடியில் அவன் முகம் அச்சத்தில் என்னவோ என்று வெளிறி போக, மருத்துவரை பார்த்தான் அவன்.
“பதட்டப்படாதீங்க முரளி. உங்க வொய்ப் எல்லா பிரச்சனையையும் தாண்டி வந்துட்டாங்க. அதனாலையோ என்னவோ முன்பை விட மனசளவுல, உடலளவுல பலம் அதிகம் தான்….” என்றவர் வித்யாவை பார்த்தார்.
“குழந்தை தானே? முதல்ல இந்த மெடிசின்ஸ் முடியனும். அதுக்கப்பறம் இந்த மருந்துகளோட தாக்கம் உன் உடம்புல குறையனும். அப்பறம் என்ன சந்தோஷமா பெத்துக்கலாம். எங்க ஹாஸ்பிட்டலுக்கே வாயேன் டெலிவரிக்கு…” அவளின் கன்னம் தட்டி மருத்துவர் சொல்லிவிட்டு,
“அட்வான்ஸ் கங்க்ராட்ஸ்…” என்றுவிட்டு சென்றார் இருவருக்கும் பொதுவாக.
வெட்கத்திலும், மகிழ்ச்சியிலும் தன்னருகில் நின்றவனின் வயிற்றோடு முகம் புதைத்தவள் உச்சந்தலையில் இதழ் பதித்தான் முரளி.
————————————————–
“என்னவோ தூக்கிட்டு போனாங்க. எனக்கும் தெரியலை…” என்று சபர்மதி மொத்த குடும்பத்தையும் கூட்டிவிட்டாள் செண்பகத்தின் வீட்டிற்கு.
அன்று வித்திவ்யாவின் பிறந்தநாள். காலையே கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு திரும்பியிருந்தனர்.
அறுவைசிகிச்சை முடிந்து எட்டு மாதங்கள் கடந்திருந்தது. முன்பை விட அனைவரின் கவனிப்பிலும் அவள் நன்றாகவே தேறியிருந்தாள்.
அவளின் இந்த பிறந்தநாளுக்கு ரிதுபர்ணாவும் குழந்தைகளுடன் கரூர் வந்திருக்க அனைவரையும் விட்டுவிட்டு முரளி மட்டும் வெளியே சென்றிருந்தவன் வருகையில் பெரிய பார்சலை கொண்டுவந்திருந்தான்.
நடுக்கூடத்தில் வைத்திருக்க பிற்பகல் பொழுதில் அனைவரையும் இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள் சபர்மதி.
“என்ன முரளி கிப்ட்டா?…” என்று ஆத்மா கேட்க,
“ஏன் அதை எங்க முன்னாடி எல்லாம் குடுக்க கூடாதா?…” என்றாள் சபர்மதி.
“அவன் எண்ணமும் குடுத்துட்டு போறான். உனக்கென்ன?…” பரத் அவளை கடிய,
“கைக்கு அடக்கமா குடுத்திருந்தா யார் கேட்க போறா? அதுவுமில்லாம சல்லு சல்லுன்னு ஒரே சத்தம். என்னன்னு தெரிய வேண்டாமா?…” என்றவள்,
“நீங்க காமிங்கண்ணே…” என்றாள்.
“கண்டிப்பா காமிக்க தான் போறேன். நானே கூப்பிடணும்ன்னு நினைச்சேன். தங்கச்சிக்கு பெரிய மனசு, என் வேலையை மிச்சம் பண்ணினதுக்கு…” என்று கேலியாய் முரளி சொல்ல,
“இந்த குடும்பத்துல எனக்கு பல்ப் குடுக்கறது நீங்க ஒருத்தர் தான். இதெல்லாம் பார்த்தா ஆகுமா?…” என்றதும் அனைவரும் சிரித்துவிட,
பார்த்ததுமே சிலருக்கு பொறிதட்ட ரிதுபர்ணா தங்கையை வந்து அணைத்துக்கொள்ள,
“அப்படியா விஷயம். கள்ளி…” என்று சபர்மதியும் அணைத்துக்கொள்ள அனைவருமே முரளியையும், அவன் வாங்கி வந்திருந்த பரிசையும் பார்த்தனர்.
“நானே காமிச்சிடறேன்…” என்றவன் வித்யாவை பார்த்து கண் சிமிட்டிவிட்டு அந்த பார்சலை பிரித்தான்.
அட்டை பெட்டிகள் எல்லாம் தூர செல்ல அதற்குள்ளிருந்ததை கண்டவர்கள் கண்கள் அகன்றது.
குழந்தைக்கான தொட்டில் அது. மரத்திலாலான தொட்டிலில் வெள்ளி சங்கிலி கோர்க்கப்பட்டு சங்கிலியின் ஒவ்வொரு பகுதியிலும் கொலுசில் வைக்கப்படும் சிறு சிறு முத்துக்கள் சதங்கைகளாய் அவை அசைவுகளில் சங்கீதமாய் சப்தம் எழுப்பியது.
வித்யாவுக்குமே அது ஆச்சர்யம் தான். எப்படி இப்படி யோசித்து வாங்கியிருக்கிறான் என்று.
முதல்நாள் இரவு தான் இருவருமே அவ்விஷயத்தை ஊர்ஜிதம் செய்திருக்க, அதற்கு முன்பே இதனை வடிவமைத்து கொடுக்காமல் இன்றைக்கு வந்திறங்கி இருக்குமா?
முரளியை பார்க்க அவன் மற்றவர்களிடமிருந்து விலகி வித்யாவிடம் வந்து நின்றான்.
“எப்படி என் சப்ரைஸ்? பிடிச்சிருக்கா?…” என்று கேட்க, கண்கள் மின்ன அவளின் பிடித்தத்தை அவனுக்கு கடத்தினாள்.
“திரும்பவும் நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்ச மறுநாளே தொட்டில் செய்ய சொல்லி குடுத்துட்டேன். என்னோட எண்ணம் வலிமையானது தானே திவ்யா?…” என்றவன் காதலில் நெக்குருகி நின்றாள் அவனின் திவ்யா.
இருவரின் மோனநிலையை கலைப்பதை போல அனைவருமே தொட்டிலை பற்றி பேச,
“அதுசரி, இத்தனை முத்து வச்சிருந்தா தொட்டில் ஆட ஆட எங்க குழந்தை தூங்க?…” என்று ரிதுபர்ணா கேலியாய் கேட்க,
“என் குழந்தை என்னை மாதிரி. அவன் அம்மா கால் கொலுசுதான் அவனோட தாலாட்டு. இந்த தொட்டில்ல நிம்மதியா தூங்குவான் பாருங்க…” என்றான் முரளி.
அவனின் தாலாட்டு அவன் குழந்தைக்கும் தானே? மௌனங்கள் பாடும் தாலாட்டி சுகமே அலாதியானது.
அதன் அலாதியை ஆழ்ந்து அனுபவிப்பனுக்கு மட்டுமே அதனின் தாத்பரியம் புரியும்.
காதல் காதலிக்கப்படுவது மட்டுமல்ல, பூஜிக்கப்படுவது. ஆராதிக்கப்படுவது. ஆலாபனை செய்யப்படுவது.
இங்கே ஆண்டாண்டு கடந்து வந்த நேசம் மனம் எனும் கருவறைக்குள் கற்பூர ஆராதிப்பில் தீபத்தின் வாசம் பெற்றது.