கண்களை மூடி சாய்ந்திருந்தவனின் காதுக்குள் மெலிதாய், மௌனமாய் அதிரும் அந்த கொலுசின் இசை யாசித்தது ‘என்னை தேடேன்’ என்பதை போல்.
விழி மலர்ந்தால் கண்களுக்குள் கட்டுண்டிருப்பவள் கலைந்துவிடுவாளே என்னும் தளைகள் அவனை இறுக்கியது.
அதிக சத்தமில்லாத அந்த மெல்லிய சலங்கை, ஓரிடம் மட்டும் குவிந்திருக்கும் நான்கைந்து முத்துக்கள் கோர்த்த வெள்ளி கொலுசின் சங்கீத சிணுங்கலை முரளியின் மனது வெகுவாய் தேடியது.
அந்த காம்பவுண்டிற்குள் அத்தனைபேரின் பாதச்சுவட்டிலும் அவளின் அலைவரிசையை சரியாய் கண்டுகொள்ளும் அவனின் மனதின் ஓட்டம் இப்போது அவனை மிதக்க செய்தது.
என்னை விட வேறு யாரால் அவளின் கால் தடங்களின் மூலம் கொலுசின் சப்தம் வெளிப்படுத்தும் மனஉணர்வுகளை கண்டுகொள்ள முடியும் என்பதில் இப்போது கர்வியானான்.
வித்யாவை காணாமல் கூட அவளின் நுண்ணுணர்வுகள் மொத்தமும் நடந்து செல்லும் விதத்தை கொண்டே அந்த சப்தங்கள் எழுப்பும் சங்கீதம் வைத்தே மொழிபெயர்ப்பவனை விட்டு வேறு யாரையோ தேடினால் எப்படியாம்?
முரளியின் உள்ளம் அத்தனை கோபம் கொண்டது இப்போது. கண்ணுக்கெட்டாத ஒரு உணர்ச்சி பிரவாகம் அவனை சுருட்டிக்கொள்ள அங்கே அமர முடியாத ஒரு அவஸ்தை.
எழுந்து நின்றவன் சத்தமின்றி கீழே வந்து கடற்கரை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.
அவனின் மனதை அவனாலேயே பிடித்து வைக்க முடியவில்லை. முடிவுகள் எடுக்கப்பட்ட பின்பு இனி ஏன் தாமதம் என்றொரு மனம் இடித்துரைக்க, இனிதான் மிக நிதானமாக காத்திருக்கவேண்டும் என்றொரு மனம் அவனை அமைதிப்படுத்த முயன்றது.
வித்திவ்யாவை நினைக்க நினைக்க ஒருபுறம் அச்சம் மேலோங்கிக்கொண்டே இருந்தது.
தன் மனம் அறிந்தால் அவள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பது அத்தனை நிதர்சனம்.
அந்த எண்ணமே அவனின் ஆன்மாவை அறுத்து குவிக்க காலால் கடற்கரை மணலை எட்டி உதைத்து விசிறிவிட்டான்.
மனதில் முழங்கும் மத்தளத்தின் சத்தம் அவனின் காதில் பேரிரைச்சலாய் இரைய ஆரம்பித்தது.
ஒருநாளைக்குள் எத்தனை எத்தனை போராட்டம் அவனுக்குள்ளேயே. இனி இது எத்தனை நாட்கள் தொடருமோ என்றொரு மலைப்பு.
“திவ்யா…” என்று அவனின் வாய்மொழி மொட்டவிழ கூடவே மெல்லிய புன்னகை அரும்பியது.
“வித்யா இல்லையாமா? என்னடா முரளி இது?…” என்று சிரித்துக்கொண்டவனை அரவணைத்த கடல் காற்று அவனின் சிகைக்குள் விளையாடி செல்ல முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு திரும்பி வீடு நோக்கி நடந்தான்.
வந்து படுத்தும் உறக்கம் கண்களை அண்டவில்லை. புரண்டு புரண்டு உடல்வலி தான் மிச்சம் என்றானது.
காலை வழக்கமான நேரம் விழித்தெழுந்தவன் வெளியே வர இங்குமங்குமாய் மகளை விரட்டியபடி ஓடிக்கொண்டிருந்தாள் ரிதுபர்ணா.
“நோ ம்மா, நோ…” என்று இரட்டை குடுமி போட்ட கால் முளைத்த ரோஜா குவியலாய் குழந்தை பூர்விதா.
“ஹை சித்தப்பா…” என்று ஓடிவந்து அவனிடம் பாய்ந்ததும் தூக்கி தோளில் போட்டுக்கொண்டவன்,
“குட்மார்னிங் குட்டிம்மா…” என்று அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க,
“நானும்…” என்று குழந்தையும் பதில் முத்தம் தந்து அவனின் கழுத்தை கட்டிக்கொண்டது.
“என்னடா குட்டி, இந்தநேரம் அம்மாவுக்கு எக்ஸர்சைஸ் சொல்லி குடுத்திட்டிருக்கியா?…” என்று கிண்டலாய் கேட்டவனின் தலையில் நங்கென்று குட்டு வைத்தாள் ரிதுபர்ணா.
“நல்லா கேளு. இதுக்கு தான் என் ட்ரெஸ், கிப்ட் எங்கன்னு அவளை பாடாப்படுத்தி முதல்லையே குடுத்தனுப்ப சொல்லிருக்கா. வித்யாவும் குடுத்துவிட்டுட்டா…” என்று ரிதுபர்ணா கையில் தம்ளருடன் வர,
“நான் குடுக்கறேன்…” என்று வாங்கிக்கொண்டான் முரளி.
“ப்ளே ஸ்கூல் போறதுக்கே என்ன பாடு படுத்தறா. ஹப்பா…” என்று தனக்கொரு சேரை இழுத்து போட்டவள் அமர போக,
“ரிது, பார்த்து உட்காரமாட்டியா? இரு…” என வந்த ஆத்மா இன்னும் பின்னால் நன்றாக இருக்கையை நகர்த்தி போட்டு அவளை அமர கூறினான்.
“இவ்வளோ நேரம் என்னை உங்க பொண்ணு ரன்னிங் ரேஸ் பண்ண வச்சா. அப்ப எல்லாம் தெரியலை பாஸ்க்கு…” என்று சலித்துக்கொள்ள,
“டெய்லி வாக்கிங் போகனும்ன்னு டாக்டர் சொல்லிருக்காங்க. நீ கேட்கவே இல்லை. அதான் என் பொண்ணு உனக்கு ஹெல்ப் பன்றா…” என்று சிரித்த ஆத்மா,
“என்னடா குட்டி?…” என மகளிடம் கேட்க,
“அப்பாக்குட்டி ஆமா ஆமா…” தந்தையின் கழுத்தை கட்டிக்கொள்ள,
“ஆரம்பிச்சிட்டாங்கப்பா…” தலையில் கைவைத்துவிட்டாள் ரிதுபர்ணா.
முரளி சிரிப்புடன் இதனை வேடிக்கை பார்க்க அதன்பின்னர் பூர்விதாவின் மொத்த பொறுப்பும் ஆத்மாவினுடையதாகியது.
அவ்வளவு சமத்தாய் அவனிடம் சாப்பிட்டு முடித்து உடையில் சிந்திவிடாமல் நீரை குடித்து, கைகளை துடைத்துவிட்டு தலையாட்டினாள் முடிந்தது என்று.
“சரியான அப்பா கோண்டு…” என்று ரிதுபர்ணா மகளின் கன்னத்தை கிள்ள,
“டோன்ட் டச்…” என்ற மகள்,
“அப்பாக்குட்டி…” என்று அழைக்க,
“வரேன்டாம்மா…” என்றான் ஆத்மா தானும் கை கழுவியபடி.
“உங்கப்பா இன்னும் சாப்பிடலடி. அதையும் நீயே வச்சிடேன்…” என்று பொடுபொடுவென்று பார்த்தபடி ரிதுபர்ணா சொல்ல,
“அவக்கிட்ட வம்பிழுத்துட்டே இருக்கறது. அப்பறம் இப்படி சொல்லிட்டா, அப்படி பேசிட்டான்னு புலம்பறது. சும்மாவே இருக்கமாட்ட என்ன?…” என்ற ஆத்மா சொல்லியபடி ரிதுபர்ணாவின் அருகில் அமர்ந்து,