அவர்களின் கம்பெனி ஆடிட்டோரியம் அது. குடும்பத்தில் பெரும்பான்மையோர் அங்கே தான் வந்திருந்தனர்.
மாலைநேரம் அலங்கார விளக்குகளின் ஒளி அவ்விடத்தை வண்ணங்களால் வெளிச்சமூட்டியிருக்க,
“ஜீவ், நில்லு. நில்லுடா…” என்று மகனின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான் முரளிவினோகரன்.
“நேனா நேனா…” என்று இங்குமங்கும் ஓடி அவனுக்கு போக்கு காண்பித்தான் முரளியின் இரண்டரை வயது மகன் ஜீவதரண்.
“ஜீவ்…” என்ற அதட்டலுடன் அவனுக்கு எதிரே ஓடி வந்து நின்ற பூர்விதாவை கண்டவன் அவளின் கைகளுக்குள் சென்று நின்று முரளிக்கு அரிசி பற்கள் தெரிய சிரிப்பு காண்பித்தான்.
“சித்தப்பா, கேட்ச்…” என பூர்விதா ஜீவாவை பிடித்துக்கொள்ளவும்,
“ஆட்டமா ஆடறான். சேட்டை…” என்று ஓடி வந்து மகனை தூக்கிக்கொண்டான் முரளி.
கையில் ஒரு வாழைப்பழம் இருக்க அதனை ஊட்ட முயலும் முன் அத்தனை ஓட்டம் மகன்.
“உங்கம்மாக்கிட்ட மட்டும் சமத்தா உக்கார்ந்து சாப்பிடற. என்னை பார்த்தா மட்டும் என்னடா? இப்படி தெரியுதா? இல்ல அப்படி தெரியுதா?…” என்று அவனிடம் சண்டைக்கு நிற்க குழந்தை அதற்கும் சிரித்தது.
“அதை நீ சொல்றியா? இரு மதிக்கிட்ட சொல்றேன்…” முரளி அவனை போலியாய் மிரட்ட,
“இப்ப அவசியம்டா. அங்க உன் அண்ணன் தேடிட்டிருக்கார். போய் வாங்கி கட்டாம நில்லு…”
“அண்ணன் மட்டுமா?…” என்ற முரளியின் முகத்தில் மந்தகாச புன்னகை.
மகனை ஒரு கையில் ஏந்தியபடி அந்த வளாகத்திற்குள் நுழைய, அவனை கண்டதும் மேடையில் அமர்ந்திருந்தவள் முகத்தில் வெளிச்ச பூக்கள் மின்னல்களாய் ஒளிர்ந்தது.
“இதோ முரளி ஸார் வந்தாச்சு…” என்று அங்கே வித்யாவின் வலதுகையாய் இருக்கும் பெண் உதவியாளர் கூற அனைவரையும் பார்த்தபடி முகம்கொள்ளா பெருமிதத்துடன் மேடையேறினான் முரளி.
மேடையில் அனைவரின் பின்னே அந்த பேனர். எப்போதும் அதில் ஒரு நொடியேனும் விழிகள் லயிக்காமல் செல்லாது.
M&D டிஸைன்ஸ் என்று இரு எழுத்துக்களும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டிருக்க அவற்றை தன்னகத்துக்குள் அடைகாத்திருந்தது ஒரு இதயம்.
அதை பார்த்துவிட்டு தன் மனைவியின் புறம் திரும்பியவன் கண்கள் இப்போதும் அவளுக்கான காதலை குறைவில்லாது காண்பித்தது.
‘பேசனும்’ கண் ஜாடையில் அவனை இன்றளவும் கட்டிவைத்திருக்கும் பெண்ணின் விழிகள் விரிந்து, கைகள் அசைந்து இதழ்கள் பிரிய,
“வா, பேசலாம்…” என்றான் கண்கள் சிரிக்க மேடையில்.
“முரளி…” என ஆத்மா அனைவருமிருப்பதை ஒற்றை அழைப்பில் தம்பிக்கு உணர்த்த,
“எஸ் பாஸ்…” என்ற சிரிப்புடன் தலையசைத்து சொல்ல,
“எஜ் பாச்…” என்றான் அவன் கையிலிருந்த குழந்தையும் மழலையாய்.
“குட்டி பாஸ், வாடா இங்க…” என்று ஆத்மா அவனை அள்ளிக்கொள்ள முரளி திரும்பி வித்யாவை அழைத்தான்.
இருவரும் சேர்ந்தே மைக்கின் அருகே செல்ல அங்கிருந்த ஊழியர்களின் மத்தியில் கரகோஷம்.
ஆம், வித்யா தொழில் துறையில் கால் பதித்து முதலாம் ஆண்டு நிறைவு நாள் அது.
அவளுக்கே அவளுக்கென்று அவன் உருவாக்கி தந்து அவளுக்கு உறுதுணையாக, ஆசானாக, வழிகாட்டியாக, சேவகனாக நாளும் அவளுடன் பிரியாதிருக்கும் நிழலாக முரளிவினோகரன்.
திருமணம் முடிந்து குழந்தை பிறந்து ஒருவருடம் வரை செண்பகம் கூட வித்யாவை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை.
எத்தனை நாட்கள் அவளையும் வீட்டினுள் அடைத்து வைத்திருக்க என்ற எண்ணம் முரளியின் மனதோரம் உறுத்திக்கொண்டே இருந்தது.
என்னதான் தங்கள் வாழ்க்கை சுபயோகமாக, சுமூகமாக சென்றுகொண்டிருந்தாலும் வித்யாவின் தவிப்பை, அவளின் வார்த்தைகளை இன்றளவும் அவனால் மறக்க இயலாது.
பேச முடியாமல் ரிதுபர்ணா, ஆத்மாவிடம் அவள் எழுதி காட்டி தன் நிலையை எடுத்துக்காட்டி தன்னிடம் அவள் கதறிய அந்த அழுகை சத்தம் இன்றளவும் அவ்வப்போது மனதினுள் எழுந்து நிற்க தான் செய்தது.
அதனை களைந்துவிட என்னென்னவோ யோசித்தவன் மூளைக்குள் பளிச்சென்ற யோசனை.
அதனை வீட்டு பெரியவர்களிடமும் முதலில் தனியே கலந்தாலோசிக்க அண்ணாமலை வியந்தார் என்றால்,
“அடப்பாவி, இவன் என்ன இப்படி டாப் கியர்ல போறான்…” என்று ஆச்சர்யத்தோடு பெருமையுமாய் பார்த்தான் தன் தம்பியை.
“முரளி, நம்ம எழில் குழுமத்தோட இரண்டாவது வாரிசு நீ. உன்னோட இந்த கம்பெனில வித்யாவுக்கும் உரிமை இருக்குப்பா…” என்றார் அண்ணாமலை.
“இருக்கலாம் பெரிப்பா, ஆனா அது என்னோட என் பின்னாடி நிக்கிற மாதிரியா தான் இருக்கும். அது வேண்டாம். என் மனைவிக்கு பின்னால நான் நிக்கிறதுல எனக்கு எந்த குறைவும் இல்லை. அவளுக்கான ஒரு பாதை தொழில்ல தனியா வேணும்…” என்று சொல்லிவிட்டிருந்தான்.
அண்ணாமலைக்கு அதில் சிறிது வருத்தமே. எத்தனை இருந்தும் முரளி தன் முடிவில் பின்வாங்கவே இல்லை.
“என்ன கண்ணா? இவன் இப்படி சொல்றான்?…” என்று மகனிடம் அண்ணாமலை கேட்க,
“தப்பில்லை ப்பா. நல்ல விஷயம் தானே?…” என்றான் ஆத்மாவும் முழுமனதாய்.
இளவரசு அதில் இடையில் வரவே இல்லை. இது தன் மகனுக்கும், அண்ணனுக்குமான பாடு என்று நின்றுகொண்டார்.
“என்னடா வேடிக்கை பார்க்கிற? சொல்லமாட்டியா?…”
“நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம்ண்ணே…” என்று நழுவிக்கொண்டார் இளவரசு.
“சரியான ஆளுடா நீ…” என்ற அண்ணாமலை,
“இப்ப என்னடா, வித்யாவுக்கு சுயமா சொந்தக்கால்ல நிக்கிற மாதிரி தொழில் தொடங்கனும். சரி என்ன செய்யனும்ன்னும் யோசிச்சிருப்பீங்களே பெரியமனுஷன் நீங்க…” என்றார் சற்றே கிண்டலுடன்.
“ஆமா பெரிப்பா, திவ்யாவுக்கு எம்ப்ராய்டரில நல்ல டேலன்ட். அவளோட டேலண்டை எக்ஸ்போஸ் பன்ற மாதிரி இருக்கனும் நாம அமைச்சு குடுக்கறது…” முரளி கூற,
“நாமலாமே? ஏன்டா முடிவை நீ எடுத்துட்டு நாமன்னு எங்களையும் கூட்டு சேர்க்கிற நீ?…” அண்ணாமலை அதற்கும் கேலி பேச,
“முடிஞ்சி…” ஆத்மா அடக்கப்பட்ட சிரிப்புடன் அனைவரும் பார்க்க,
“சரி, சரி. உன் பக்கமே சாய்ஞ்சிட்டேன். என்ன செய்யனும்ன்னு சொல்லு…” என புன்னகையுடன் அண்ணாமலை கேட்க,
“கம்பெனி திவ்யா பேர்ல ஆரம்பிப்போம். எக்ஸ்போர்ட் பன்றது வேணும்னா நம்ம கம்பெனி டை-அப்ல பன்றதா அட்வர்டைஸ்மென்ட் குடுப்போம். ஆனா முக்கியமான விஷயம் திவ்யாவுக்கும், இந்த கம்பெனிக்கும் பாட்னர்ஷிப் அக்ரிமென்ட் பக்காவா போட்டுடனும்…” என்ற முரளி,
“பெரிப்பா அதுக்கான டீல் பர்பெக்டா பண்ணிடுவோம். என்ன இருந்தாலும் நம்ம கம்பெனியும் நமக்கு முக்கியம் தானே?…” என்றான் முரளி.
“அட, நல்ல ஐடியாவா இருக்கே. சூப்பர்டா. நல்லா யோசிச்சிருக்க…” என்று ஆத்மா தம்பிக்கு எழுந்து கை கொடுத்து கட்டியணைக்க,
“படவா ராஸ்கல்களா. யாரை ஏமாத்த பார்க்கறீங்க. கூட்டு சேர்ந்துட்டு இங்க வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி பேச்சை பாரு…” என்று கையிலிருந்த பேனாவை தூக்கி இருவரின் மீதும் அண்ணாமலை போட,
“டிசிஷன் முரளியோடது தான் சித்தப்பா. நான் தான் அப்பாக்கிட்ட பேச சொன்னேன். எழில் குழுமத்துக்கு கீழ வெறும் பெட்ஷீட், பில்லோ கவர்ஸ், கர்ட்டர்ன்ஸ் மட்டும் பண்ணினா போதுமா? புதுசா இன்னொரு பிஸ்னஸ். குடும்பமும் பெருசாகுது. தொழிலும் பெருசாகட்டுமே…” என்றான் ஆத்மா.
“எனக்கு பசங்க சொல்றது தான் சரின்னு படுது. தாராளமா செய்யலாம்…” என்றார் ஏழுமலையும்.
“குழந்தைங்களோட ஸ்வெட்டர், உல்லன் ட்ரெஸ், அதுல அவங்க நேம் போட்டு கஸ்டமைஸ் க்ளாத்ஸ் கூட நாம பண்ணலாம்…” என்றான் முரளி.