அண்ணாமலை தீவிரமான யோசனையுடன் அனைவரையும் பார்த்தவர் உடனே பதில் சொல்லவில்லை.
“சரி கொஞ்சம் யோசிப்போம். இது எடுத்தேன், கவுத்தேன் மாதிரி கிடையாது. டை-அப் பண்ணி புதுசா இன்னொன்னு ஆரம்பிக்கிறோம். முதல் முதல்ல தொழில் ஆரம்பிக்கிறது மாதிரி தான் இதுவும்….” என்று சொல்லிவிட்டு அன்று மாலை வீட்டிற்கு வந்ததும் அனைவரையும் வைத்துக்கொண்டு தான் விஷயத்தை சொல்லி அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
வித்யா அதனை எதிர்பார்க்கவே இல்லை. சென்பகத்திர் அத்தனை சந்தோஷம். வீட்டு பெண்கள் வீட்டிற்குள் மட்டுமே என்னும் எண்ணம் கடந்து மகன் மருமகளை முன்னேற்ற பாதைக்கு வழிவிட்டு நிற்க கண்டு பூரித்து போனார்.
அத்தனைபேரும் கொண்டாடி தீர்த்துவிட்டனர். இதோ அதன் பலனாக பணியாளர்களையும் சேர்த்து முழுதாய் ஒரு தொழிலதிபராய், ஆனால் இன்னும் அவனின் திவ்யாவாய் புன்னகை மின்னும் விழிகளுடன் தன் கணவனருகே தேவதை பெண் வந்து நின்றாள்.
மைக்கின் அருகே செல்லும்பொழுதே வித்யா அவனிடம் கண்களை உருட்டி, ‘நான் சொல்றதை மட்டும் தான் சொல்லனும்’ என்றும் எச்சரிக்கை செய்ய,
“சொல்லேன். சொல்றேன் நானும்…” என்றவன்,
“இப்பவும் இங்க வச்சும் கடத்திட்டா என்னன்னு இருக்க நீ. அழகுடாம்மா…” என்றான் கண் சிமிட்டி.
‘மேடை’ என்று அவனை விழிகளால் கெஞ்சிவிட்டு கை ஜாடை புரிய வித்யாவின் எண்ணங்களும், வார்த்தைகளும் முரளியின் மொழியாக பார்வையாளர்களின் செவியில் சென்றடைந்தது.
எல்லாம் பேசி முடித்து காதோரம் ஊஞ்சலாடும் பூச்சரதின் உராய்வுடன் ‘சரியா?’ என்றாள் முரளியிடம்.
“அது சந்தோஷம் இல்லை பெரிம்மா. இத்தனை வருஷம் அவங்க சுமந்த வலி. அதுவும் வித்யாவை குருமூர்த்தி பொண்டாட்டி நம்ம வீட்டுல வச்சு எப்படி பேசுச்சு. அந்த வார்த்தைகள் இப்பவும் சித்தி மனசுல குத்திக்கிட்டே இருக்கு. இப்ப வித்யாவோட வளர்ச்சில தான் சித்தி வாழ்றாங்க…” என்றாள் ரிதுபர்ணா நெகிழ்ந்து.
“ஆனாலும் பாருங்க, என்னை அப்பப்ப மறந்திடறாங்க…” என்றும் முருகேஸ்வரியை ரிதுபர்ணா கேலி பேச,
“கண்ணு நீ மட்டுமில்லன்னா இந்த குடும்பமும் எனக்கில்ல. உன்ன தாண்டி தான் எனக்கு யாருமே சாமி…” என்றார் ரிதுவின் கையை பிடித்துக்கொண்டு அவர்.
“ஆரம்பிச்சிட்டீங்களா? இதோ வந்தாச்சு வித்யா. முதல்ல போய் சுத்தி போடுங்க. நான் கூட கண்ணு வச்சுட்டேன்…” என்றாள் கண் சிமிட்டி புன்னகையுடன்.
“அவளுக்கு என்னை விட நீ தான கண்ணு தாய்க்கு தாயா இருந்திருக்க. நீயும் வா…” என்று முருகேஸ் அழைக்க,
“கண்ணு, நான் உன் கண்ணில்லையா?…” என்று சபர்மதி ராகம் போட,
“நீயும் தான் ராசாத்தி…” என்றவர் அவளையும் ஒரு கை பிடித்துக்கொண்டார்.
பெண்கள் அனைவருமாக சேர்ந்து வித்யாவிற்கு திருஷ்டி எடுக்க முரளியும் கன்னம் குழிய சிரித்துக்கொண்டு நின்றான் அவளருகில்.
“எனக்கும் வைங்க, இன்னைக்கு எம்டி மேடத்தோட புருஷன்னு என் மேல தான் அவ்வளோ கண்ணும்…” என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய,
“உன் மகன் தேவலாம். போடா உள்ள…” என்றார் செண்பகம் அவனின் தோளில் தட்டி.
இரவு அனைவரும் அவரவர் இல்லம் சென்று சேர வித்யாவும் தங்களின் அறைக்குள் வந்துவிட்டாள்.
அங்கே மகனை உறங்க வைக்க படாதபாடுபட்டான் முரளி. குட்டிக்கரணம் அடிக்காத குறை தான்.
அரை கண்ணில் உறங்குவதும், பின் விழிப்பதுமாய் ஜீவா அவனை விழி பிதுங்க செய்துகொண்டிருந்தான்.
“தூங்க வைடி. ப்ளீஸ்…” என்று கண்கள் சுருங்க முரளி கெஞ்ச அதன் அழகில் வித்யாவும் கண் சிமிட்டி உடை மாற்றிவிட்டு வந்தாள்.
“ரொம்ப முக்கியம். எத்தனை தடவை மாத்த போற நீ? அதே ட்ரெஸ்ல இவனை தூங்க வைய்யேன்…” என்றவன் சத்தத்தில் மகன் நன்றாகவே விழித்துக்கொள்ள,
“ஐயோ போச்சே…” என்று வாயை மூடியவன் வித்யாவின் கலகலத்த சிரிப்பில்,
“ஒன்னும் வேண்டாம். தூங்கறேன். என்னவோ பண்ணுங்க…” என்று படுத்துக்கொள்ள, சிரிப்புடன் மகனை மடியில் வாங்கிக்கொண்டவள் தட்டி கொடுக்க தாயின் கை பட்டதும் குழந்தை நன்றாகவே கண்கள் மயங்க உறங்க ஆரம்பித்தது.
அவனை முரளி வாங்கியிருக்கும் தொட்டிலில் கிடைத்த எழுந்துகொள்ளும் முன் முரளியே எழுந்துகொண்டு,
“நானே போடறேன். தா…” என்று வாங்கிக்கொண்டான்.
வாங்கியவன் மகனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு புன்னகையுடன் தொட்டிலில் கிடத்த அதில் விரிக்கப்பட்டிருந்த தாயின் புடவையை கைகளுக்குள் சுருட்டியபடி குழந்தையும் அசந்து உறங்க,
“இதுல என்னை மாதிரியே என் மகன்…” என்றான் குறும்பாய் புன்னகைத்து.
‘அப்போ என்னை மாதிரி?’ என்று தலைசாய்த்து வித்யா கேட்க அதன் அழகில் மனம் கிறங்கியவன் தன் மடியில் அவளை அமர்த்திக்கொள்ள,
“உன்னை மாதிரி ஒரு பொண்ணு. குட்டி பொண்ணு. இதே மாதிரி கண்ணெல்லாம் சிரிப்போட, முகமெல்லாம் ஒளிர்வோட, பார்க்கிறவங்க மானசுல பாசத்தை விதைக்கிற குணத்தோட, அதுல கொஞ்சம் என்னோட வாலுத்தனத்தோட சேர்ந்த மாதிரி பொண்ணு பெத்துக்கலாமா திவ்யா?…” என்றான் முரளி.
‘அப்போ ஜீவா உங்களை மாதிரியா?’ என்ற பெண்ணின் நுனிநாசியில் முத்தமிட்டவன் அவளிடையில் விரல்களை தழுவ விட்டுக்கொண்டே,
“எத்தனை பிள்ளை பிறந்தாலும் நம்ம ரெண்டுபேரோட குணத்தையும் சேர்த்து தான்டா வரமா வாங்கிட்டு வந்து பிறப்பாங்க. நம்மோட குழந்தைங்க நம்மளை மாதிரி தானே இருப்பாங்க. இதுல உன்னை, என்னைன்னு பிரிச்சு தனித்தனியா எல்லாம் வேண்டாம். நம்மை மாதிரி வேணும். பிரியாம பிரியமுடன்…” என்றான் முரளி.
அதிலும் அவனின் காதலே முன்னின்றது. அவளை முன்னிறுத்தியது. எப்போதும் அவன் அன்பின் மீதான பித்தம் இன்றளவும் அவளை அபரிமிதமாய் அள்ளிக்கொள்ள, அதன் நேசம் அளப்பறியது தான்.
இப்போதும் அதில் மயங்கி காதலில் கட்டுண்டவள் அவனின் கழுத்தை வளைத்து தன் நேசத்தை அவனிதழில் காண்பிக்க சிலநொடிகளில் மூச்சுக்கள் அவனின் சுவாசத்தில் நிறைந்துவிட மெல்ல விலகினாள்.
“தேறிட்ட. இப்பலாம் நீ தான் என்னை கடத்திட்டிருக்க திவ்யா. முரளி வித் திவ்யா. இட்ஸ் டிவைன், இல்லையா?…” என்றவன் அந்த தெய்வீகத்திற்குள் அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டான்.
முத்தமிட்டு முகிழ்க்கும் உணர்வுகள் இப்போதெல்லாம் அவனின் மென்மையை பதம் பார்த்து, வன்மைக்குள்ளும் கால் தடம் பதிக்க செய்திருந்தது.
அத்தனை காத்திருப்பையும் மொத்தமாய் கொட்டி அவளை திணற செய்துவிட கூடாதென்றிருந்தவனின், கை பிடித்து தானே முழுதாய் அவன் வேகங்களை பெற்றுக்கொண்டாள்.
நாளுக்கு நாள் அவனுக்கிணையான நேசத்தை காண்பித்துவிட வேண்டும் என்ற மனப்பான்மை இன்றி, எப்போதும் போல இதமான தென்றலாய், அமைதியான பௌர்ணமி நிலவாய், இரவின் குளிராய், பனியின் கூதலாய் அவளின் மென்மைகள் அவனிடத்தில் அமரிக்கையான காதலை தான் காண்பிக்க செய்தது.
“என்னை மட்டும் வயலன்ட்டா மாத்தற அப்பப்போ. நீ நல்ல பொண்ணு தான். போடி…” என்பான் முரளி சிருங்காரமாய் காதலில் கசிந்துருகி.
விழியிலே மணிவிழியில்
மௌனமொழி பேசும் அன்னம்
மெல்லிய குரலில் அவள் பாதத்திற்கு அச்சாரம் இட்டவன் மீசை கால் விரல்களை கூச செய்ய சோபையும், சோர்வுமாய் அவனிடமிருந்து கால்களை இழுத்துக்கொள்ள பார்த்தாள் வித்யா.
தன் சுட்டு விரலால் கால் கொலுசை நழுவாமல் பிடித்துக்கொண்ட முரளியின் முகமெல்லாம் சந்தோஷ ரகசியங்கள்.
இப்போதும் அவளின் உறக்கங்கள் அவனோடு களவாடப்பட மெல்லிய திணறல்களுடன் லேசாய் திண்டாடி போனவள் அவனின் நெஞ்சத்தில் முகம் பதித்து விலக முயல,
“திவ்யா…” என்று தன் கைகளுக்குள் வளைத்துக்கொண்டான் முரளி.