“இன்னும் கொஞ்சம் டைட்டா கண்ணாப்பா கட்டிவிடறேன். வலிச்சா அப்பாட்ட சொல்லனும். சரியா?…” என்ற ஆத்மா முரளியின் மகன் ஜீவாவிற்கு பட்டு வேஷ்டியை அணிவித்துவிட்டான்.
“கண்ணாப்பா, ஸ்ஸ்ஸ்…” என்ற பிள்ளை, ‘போதும்’ என்பதை போல கண்களால் சமிஞ்சை செய்ய,
“குறும்பு கண்ணன்டா நீ. உனக்கு கண்ணன்னே பேர் வச்சிருக்கலாம். அப்படியே அப்பாவை மாதிரி. யாரையும் மயக்கிடற…” என தம்பி மகனை கொஞ்சிய ஆத்மா,
“எங்கடா உன் அப்பா?…” என்றான் அவனிடம்.
“திவிம்மா டயர்ட். ரெஸ்ட் எடுக்காங்க….” என்றதும் ஆத்மாவின் முகத்தில் மென்மையான புன்னகை.
அதிலும் வெறுமனே கூட தலையை பிடித்துவிட கூடாது. செண்பகத்தில் இருந்து ஆனந்தியின் வீட்டு ராணி வரை மொத்த கவனமும் வித்யா மீது தான்.
இப்போதும் இரவெல்லாம் விழித்திருந்ததன் பலனாக லேசாய் தலை வலிப்பதை போலிருக்க தானே குடுகுடுவென்று ஓடி சென்று தன்னை பார்த்துக்கொள்ள வேண்டி படுத்துக்கொண்டாள் ஓய்விற்கு.
அவள் அவளுக்காக என்றில்லாமல் தன் கணவனுக்காக, தன் குடும்பத்திற்காக தனது உடல்நிலை மீது அத்தனை கவனம் வைத்திருந்தாள்.
இப்போதும் செண்பகத்திடம் சொல்லிவிட்டு வந்து படுக்க மருமகளுக்கு டீயும், மாத்திரையுமாய் வந்துவிட்டார்.
“லேசா தலைவலி தான். நைட்டெல்லாம் தாம்பூல பை போடன்னு போய் பனில உக்கார்ந்திருந்தா தானே? சொன்னா எங்க கேட்கிறாளுங்க. அம்புட்டு பேரும் விசேசத்துல தான் ஒண்ணா சேருறோம்ன்னு சொல்லி வாயடைச்சிட்டாளுங்க…” என்று அலுத்துக்கொண்டே சொல்லி சென்றார் செண்பகம்.
ஆம். அது அண்ணாமலை, ஆனந்தியின் சஷ்டியப்தபூர்த்தி விழா. பிள்ளைகள் எல்லாம் ஒன்றிணைந்து நடத்தவிருக்க அதற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர்.
“ஹ்ம்ம்…” என்ற சிணுங்கலுடன் அவனின் மடியில் இடம்பெயர்ந்து தலை சாய்ந்தவள் முரளியின் இடையை கட்டிக்கொள்ள முரளியின் முகமெல்லாம் புன்னகை.
“என்னடா, ரொம்ப வலிக்குதா?…” என்றான் மென்மையாக.
அந்த மென்மைக்கு பின்னிருக்கும் பதட்டம் அவளறியாததா? மெல்ல விழி மலர்ந்து அவன் முகம் கண்டவள், தன் கைகளை உயர்த்தி முரளியின் முகத்தை தன்னோடு இழுத்து தனக்குள் புதைத்துக்கொண்டாள்.
உயிர் கொடுக்கும் இதழ் தழுவல்கள் சிலநிமிடங்களை கடக்க கண் சிமிட்டியபடி உறக்கத்தை விரட்டியவள் தலைசாய்த்து, ‘இப்போ சரியாகிடுச்சு’ என்றாள் விழிகள் சிரிக்க இதழசைத்து கை ஜாடையில்.
முரளியின் இதழ்களில் உயிர்க்கும் குறுஞ்சிரிப்பு தவழ, அவளின் கை பிடித்து வெளியே கூடத்திற்கு நடந்து செல்ல ஜல் ஜல் என்னும் கொலுசு சப்தம்.
இருவரின் முகமும், அகம் போல தாமரையாய் பூரித்து மலர, அவர்கள் எதிரே தத்தி தத்தி ஒருவயது குழந்தை பூவிழி முழு சதங்கை வைத்த கொலுசோடு தடுமாறி, விழுந்து எழுந்து வந்துகொண்டிருந்தாள் அவர்களை நோக்கி.
“பூக்குட்டி…” என்றவன் குழந்தையை தூக்கும் முன் ரிதுபர்ணா வந்து தூக்கிக்கொள்ள,
“அப்படியே உன்னை மாதிரி முரளி. எப்படித்தான் உன் சிரிப்பு சத்தமும், வித்யா கொலுசு சத்தமும் கேட்டுச்சோ? என் கையில இருந்து இறக்கி விடு, விடுன்னு ஓடி வர்றா…” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.
பிள்ளைகளும் முரளியை போலவே வித்யாவின் மீதான நேசத்தில் ஒருவரை ஒருவர் விஞ்சி நின்றனர்.
அதில் எப்போதுமே அவனுக்கு தனி கர்வம். தாயின் பேச்சுக்களை, அவளின் விழிமொழிகளை பிள்ளைகள், தாயே சொல்லவேண்டும் என்றில்லாமல் தாங்களே உணர்ந்து வளர்ந்தனர்.
இப்போது தாயை பார்த்ததும் அவள் தலையசைத்து சிரிக்கவும் ரிதுவின் தோளில் அமர்ந்தவாக்கில் கெக்கைபோட்டு குதூகலித்து புன்னகைத்த குழந்தை மாறி மாறி பார்த்தது தாயையும் தகப்பனையும்.
“ஹ்ம்ம், சமத்து. எப்படி இருக்கா பாரு. என் தங்கச்சி மாதிரி. ஆனா உன் சேட்டையும் இருக்கு முரளி…” என்றாள் ரிதுபர்ணா.
முரளி சிரித்துக்கொண்டே பதில் சொல்லும்முன் வெளியே ஆத்மாவின் குரல் சத்தமாய்.
“ரிது ரெடியா?…” என்றவனின் அழைப்பில் அனைவருமே வெளியே வந்தனர்.
“எல்லாரும் புறப்பட்டாச்சா?…” என்றான் முரளி.
“நான் தான் கிளம்ப சொன்னேன் முரளி. இன்னும் நேரமிருக்கு தான். அதுக்காக எல்லாருமே இங்க இருக்கறதா? சரி நாம புறப்படுவோம். எதுவும் எடுக்கனுமா?…” என்று கேட்க,
“எல்லா குட்டீஸும் ஒரே ஓட்டம் அவங்களோட. இல்லைன்னா மொத்தமா நம்மோட வர்றேன்னு நிப்பாங்க…” என்று சிரித்தபடி காரை கிளப்பினான் ஆத்மா.
மண்டபத்தின் வாயிலில் காரை நிறுத்திவிட்டு இருவரும் குடும்பமாக உள்ளே வரும்முன் அவர்களின் பிள்ளைகள் தாய் தகப்பனை தேடி ஓடி வர, முழுமையான குடும்பமாய் அனைவரின் கண்ணை கவரும்படி உள்ளே நுழைந்தனர்.
“ராணி வீட்டுக்கு போனதும் மொத்த குடும்பத்துக்கும் சுத்தி போடனும், பார்த்துக்க…” என்று ஆனந்தி அப்போதே சொல்லிவிட்டார் ராணியிடம்.
ஆனந்தியின் அண்ணன் குடும்பமும் வந்திருந்தது அந்த விசேஷத்திற்கு. வீட்டிற்கு போக்குவரத்து இல்லை என்றாலும், குடும்பத்தின் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவில்லை.
ஊரே வியக்கும் வண்ணம் அண்ணாமலை, ஆனந்தியின் சஷ்டியப்தபூர்த்தி இனிதே நடந்தேறியது.
குடும்பத்தின் ஒற்றுமைகள் பெரியவர்கள் கையில் மட்டுமல்லாது, அவர்களின் பிள்ளை வளர்ப்பிலும் இருக்க இதோ அடுத்தடுத்த தலைமுறைகளும் ஒற்றுமைக்கு இலக்கணமாக கை கோர்த்து நின்றனர்.
உண்மையான நேசம் மட்டுமல்லாது, அப்பழுக்கில்லாத பாசமும், அன்பும் விதைக்கப்படும் இடத்தில் தான் தெய்வங்களின் குடியிருப்பு.
புரிந்துணர்வுகள் அங்கே விருட்சம் பெற்றிருக்க மொத்த கிளி கூட்டமும் அண்ணாமலை என்னும் மரக்கிளையில் பூச்சரமாய் ஒன்றை ஒன்று கைபிடித்து உறவு சங்கிலியால் நின்றது.
ஒற்றுமைக்கு உதாரணமாய் அக்குடும்பம் விளங்கப்பட, நேசத்திற்கும் பிரதானமாய் அவர்கள் குடும்பம் தான் சொல்லப்பட்டது.
ஒருவனுக்கு ஒருவன் மட்டுமே என்ற அண்ணாமலை, மணந்தவள் மனம் புரிந்த ஆத்மகண்ணன், நேசமிட்ட நெஞ்சத்திலிருப்பவளை தன் உயிராய் சேர்த்துக்கொண்ட முரளி வினோகரன்.
அவ்வீட்டின் ஒவ்வொரு பெண்களும் அவர்களின் பின்னிருக்கும் பெண் சக்திகள் என்று சொன்னாலும் மிகையில்லை.
மொத்த குடும்பமும் புகைப்படத்திற்கு சேர்ந்து நிற்க, போதவில்லை என்பதை போலிருந்தது பார்த்தவர்களுக்கு. கண் நிறைந்து போனது காண காண.
“ஸ்மைல் ப்ளீஸ்…” என்ற புகைப்பட கலைஞரின் சொல்லுக்கிணங்க, அனைவருமே குறையாத புன்னகையை காண்பிக்க, முரளி ஒரு கையால் திவ்யாவின் தோளோடு தன் கைகளை மாலையாய் சேர்த்து அரவணைத்து நின்றான்.
அவனின் ஜனமும் அவள், அவன் ஜீவனும் அவள். அவன் சுவாசமும் அவள். தவிப்புகளின் இருவேறு எல்லைகளை காண்பித்தவள் அவன் வாழ்வின் எல்லையாகி நின்றாள்.
இதோ இப்போதும் அவனுக்கான வெளிச்சம் அவள் பூவிழிகளில் தீபமாய், இறைவன் சந்நிதியின் விளக்காய் அவனுக்கான நேசத்தை தந்து இமைகளால் தழுவிக்கொண்டது.
விழிகளில் தொடங்கி, விழிகளிலே கலந்து, விழிகளால் களவாடப்பட்டு சொற்கள் கோர்க்கப்படாமல், மௌனமொழி ஜீவன் ஒன்று பாத ஸ்வரம் கொண்டு அவனின் பாஷையாகி போனது.