முரளியின் பார்வையும் உணர்வின்றி மயக்கத்தில் படுத்திருந்தவள் முகத்தில் தான் நினைபெற்றிருந்தது.
கைகள் அவளின் பாதத்தினை பற்றியிருக்க அவனின் தோற்றம் ‘இவள் ஒன்றே என் நிறைவு’ என்பதை போல் தான் மற்றவர்களுக்கு காட்சியளித்தது.
விசாலாட்சி செண்பகத்தை தான் பதட்டத்துடன் பார்த்தார். எதுவும் பட்டென்று பேசி அத்தனையையும் உடைத்துவிடுவாரோ என பயத்துடன்.
அண்ணாமலை, ஆத்மா, இளவரசு மூவரும் முரளியின் இந்த பரிமாணத்தில் அதிர்விலிருந்து மீளமுடியாமல் இருந்தால், ஆத்மாவிற்கு கூடுதலாக தன் மனைவியின் இந்த நிலை கலக்கத்தை உண்டு பண்ணியது.
ரிதுபர்ணாவின் இதயத்துடிப்பு இன்னும் நொடிக்குநொடி அதிகரித்துக்கொண்டே தான் இருந்தது முரளியின் செய்கையில்.
“ஏன் முரளி, ஏன் இப்படி பண்ணின?…” என்றாள் நலிந்துவிட்ட குரலோடு.
அவளால் அதற்குமேல் அவனிடம் சண்டையிடவோ, மன்றாடவோ முடியும் என்று தெரியவில்லை.
முருகேஸ்வரியின் நிலையை ஒருநொடி கவனித்துவிட்டு முரளியின் புறம் திரும்பினாள்.
“எங்க சூழ்நிலை என்ன, எல்லாம் தெரியும் ஏன்டா இப்படி பண்ணின? இப்ப எவ்வளோ பெரிய பழியை சுமக்க வைச்சிட்ட புரியுதா உனக்கு?…” என்று கேட்க,
“எந்த பழியும் தாங்கவேண்டியதில்லை. நான் செஞ்சதும் தப்பில்லை. வித்யா என் மனசளவுல எப்பவோ என் மனைவியாகிட்டா….” என்றவனை ஆவேசம் கொண்டு பார்த்தவள்,
“வாயை மூடுடா. மனைவியாம். இதுக்கு என்ன பேசுவாங்க தெரியுமா? உன்னோட காதல், விருப்பம் இது எதுவுமே இங்க பார்க்கப்படாது. வித்யாவும், அவ சூழ்நிலையும் தான் அவளை நோக்கி வீசற எந்த வார்த்தைகளையும் தீர்மானிக்கும்…”
“நீ சொல்லிடுவடா. ஆனா இந்த உலகம் அப்படியா பேசும்? உன்னை வளைச்சு பிடிச்சுட்டதா சொல்லும். நீ செஞ்சது எல்லாம் யார் கண்ணுக்கும் தப்பா படாது. அதுக்கு பதிலா இவ்வளோ தைரியமா முத்தம் குடுக்கறான்னா உங்களுக்குள்ள என்ன நடந்திருக்குமோன்னு தான் தப்பா பேசும்…”
“இதெல்லாம் உனக்கு புரியுமா? அப்படியான வார்த்தையை நீ எதிர்கொண்டிருக்கியா? நான் அனுபவிச்சிருக்கேன். அது தெரியுமா? ஊரறிய உன் அண்ணன் அந்த சூழ்நிலையில என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் சுத்தியிருந்தவங்க என்னவோ நான் மயக்கிட்டதா பேசினாங்க….”
“இப்ப இந்த விஷயத்துல அந்த பேச்சை என் தங்கச்சிக்கும் குடுத்துட்டல நீ? அவங்க எப்படியான மனநிலையில நம்மோட வாழ்ந்திட்டிருக்காங்க தெரியும் தானே? அப்பறமும் ஏன்டா இப்படி பண்ணின? இப்ப வரைக்கும் சில வார்த்தைகள் மறையாம சுத்தி வரத்தான் செய்யுது. எல்லாத்தையும் கண்டும் காணாம தான் வாழ்ந்திட்டிருக்கோம்…”
“ஊருக்காக, உறவுக்காக நாம வாழறதான்னு நீ கேட்கலாம். ஆனா அவங்க மத்தில தானே வாழறோம். அவங்களுக்குள்ள தானே நாமளும் நடமாடறோம். அதுவும் வித்யா, அவ பாவமில்லையா? ஏன் முரளி இப்படி பண்ணின?…” என்றவளின் இறைஞ்சுதலான கேள்வியில் முரளி இறுகிப்போய் நின்றான்.
“நீ செஞ்சதுக்கு நம்ம வீட்டுல கூட வித்யாவையும் அப்படி நினைக்கும்படில வச்சிட்ட நீ. போதும்டா. என் சித்தி சும்மாவே இங்க இருக்கலைன்னு சொல்லிட்டே இருப்பாங்க. இப்ப ஐயோ…” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுது கரைந்தாள்.
அதற்குள் முருகேஸ்வரியின் முகத்தில் நீர் தெளித்து அவரை எழுப்பியிருந்தாள் சுந்தரி.
அவரின் அசைவிலும், சப்தத்திலும் அனைவரும் திரும்பி பார்க்க விழித்து எழுந்த முருகேஸ்வரி பரிதாபமாய் மலங்க மலங்க விழித்தார்.
அவரின் பார்வை அனைவரையும் தொட்டு மகளை பார்த்து, முரளியிடம் சென்று கடைசியாய் செண்பகத்திடம் நிலைகொண்டது.
ஒத்துழைக்காத உடலை பலம்கொண்டமட்டும் தூக்கிக்கொண்டு தடுமாறி செண்பகத்தின் முன்னே வந்தவர் கையெடுத்து கும்பிட்டுவிட்டார்.
“எதாச்சும் சொல்லிப்போடாதீங்கம்மா. எம்புள்ளைக்கு அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் தெரியாது. சொல்லி சொல்லி வளர்த்திருக்கேன். எம்புள்ள மனசுல எதுவுமில்லைங்க. நம்புங்க…” என்று அப்போதும் அவர் பதறிக்கொண்டு கெஞ்சவே செய்தார்.
எங்கே தன் மகளை பழித்து எதுவும் பேசிவிடுவாரோ என்று முருகேஸ்வரி மன்றாட ரிதுபர்ணா கொதித்துவிட்டாள்.
“என்ன பன்றீங்க சித்தி? நீங்க ஏன் கெஞ்சிட்டிருக்கீங்க? வித்யா எதுவும் பண்ணலை. தயவு செஞ்சு இப்படி நீங்க குறுகிப்போய் நிக்காதீங்க சித்தி. இதனால என்னை தான் நீங்க கொன்னுட்டிருக்கீங்க தெரியுமா?…” என்ற ரிதுபர்ணா அவரை அணைத்து பிடிக்க,
“இதுக்குத்தான் சொல்றேன் கண்ணு. நீ நல்லாருப்ப தாயி. நல்லாருக்க. அது போதும். என் சாமில. நாங்க எங்கியாச்சும் போயிடுதோம். விட்டுடு கண்ணு…” என்று ஆரம்பித்துவிட்டார் முருகேஸ்வரி.
“போங்க, போங்க. யாரும் வேண்டாம். போயிருங்க. எல்லாருமே போயிருங்க…” என்று முருகேஸ்வரியை பிடித்து தள்ளிய ரிதுபர்ணாவை யாரும் நெருங்கமுடியவில்லை.
“எப்ப பாரு ஏதாவது பிரச்சனைன்னா போறேன், போறேன் தான். என்னை எதுக்கு வளர்த்தீங்க. அப்பவே என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கவேண்டியது தானே? கடமை முடிஞ்சதும் நீங்க பெத்த பொண்ணோட போயிடனும். அப்போ உங்களுக்கு நான் யாரு? எனக்கு அம்மா இல்லையா நீங்க?…” என்று இரைந்தவள்,
“பார்த்தியாடா, இதுதான் நடக்கும். இதுதான் நடக்க போகுது. இப்ப நிம்மதியா?…” என்று முரளியிடம் பாய்ந்தாள் ரிதுபர்ணா.
“ரிது. என்ன பண்ணிட்டிருக்க நீ?…” என்று ஆத்மா அவளின் கையை பிடித்து நிறுத்த பார்க்க,
“என்ன பண்ணட்டும்? எனக்கு தாயா இருந்தவங்களுக்கு இப்ப ஒரு பிரச்சனைன்னதும் அவங்க பெத்த பொண்ணு மட்டும் போதும்ன்னு ஓட பார்க்கறாங்க. நானும் அவங்க பொண்ணுன்னு ஏன் தோணலை? இந்த பிரச்சனையை என் பொண்ணு பார்த்துப்பான்னு ஏன் அவங்களால சொல்ல முடியலை…” என்றவள்,
“எப்பவும் இதுதான். என்னால பிரச்சனை வேண்டாம். நான் இருக்க வேண்டாம். நான் போயிடறேன்னு சொல்லிட்டே இருந்தா? எல்லாத்துக்கும் பயம், யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோன்னு பயந்து நடுங்கி, கெஞ்சி, இவங்களுக்கும் இப்படி இருந்து இவளையும் இப்படி வளர்த்து வச்சு…” என்றவளுக்கு தொண்டை எல்லாம் அடைத்தது.
“இதை இப்பவே எல்லாருக்கும் தெளிவுபடுத்த விரும்பறேன்…” என்று சொல்ல,
“அவன் பேசட்டும்…” என்றான் ஆத்மா முரளியிடம் கண்ணை காண்பித்து பேசு என்பதை போல.
முருகேஸ்வரியை ஒருகணம் அழுத்தமாய் பார்த்த முரளி செண்பகத்தின் இருப்பை உணர்ந்தும் அவர் புறம் திரும்பவில்லை.
“என்னை பொறுத்தவரை நான் செஞ்சதை நான் தவறாவே நான் நினைக்கலை. சரி, உங்க பார்வைக்கு தப்பு. வித்யாவோட கான்ஷியஸ் இல்லாம பண்ணினதும் தப்பு. ஓகே, நான் வந்தப்போ நான் இருந்த மனநிலை. என்னை என்னால நிதானப்படுத்திக்க முடியலை…” என்றவனிடம் ஒரு பெருமூச்சு.
“நீங்க சொன்னீங்களே மத்தவங்க இப்படி பேசறாங்க. இனியும் இதை வச்சும் பேசுவாங்கன்னு. என்னோட விருப்பம் இன்னைக்கு நேத்துன்னு இல்லை. எனக்கு வித்யான்னா இவ்வளோ தான் பிடிக்கும்ன்னு இல்லை. அதை சொன்னாலும் உங்களுக்கு புரியுமான்னு தெரியலை…”
“ஆனா அவக்கிட்ட ஒருநாள் சொல்லுவேன் கண்டிப்பா…” என்று அவளை பார்த்துக்கொண்டே அழுத்தமாய் பேசியவன்,
“இப்ப இப்படி ஒரு விஷயம் நடந்ததுக்காக எல்லாம் நீங்க எங்கயும் போகனும்ன்னு நினைக்கவேண்டாம் அத்தை. யார் பேச்சுக்கும் பயப்படவும் வேண்டாம். அதுக்கான அவசியம் இருக்காது….” என முருகேஸ்வரியின் கையை பிடித்தவன்,
“நான், நான் போயிடறேன்…” என்று சொல்ல அத்தனைபேரும் ‘என்ன பேசுகிறான் இவன்?’ என்றுதான் பதைபதைப்புடன் பார்த்தனர்.