“போயிருவேன்னா வேற எங்கையோ எல்லாம் இல்லை. மனசொடிஞ்சு அப்படின்னும் இல்லை. நார்மலா தான் போறேன். இவ்வளோ நாள் என் மனசுக்குள்ள மட்டும் வச்சி தவிச்சதை எல்லாருக்கும் தெரியப்படுத்திட்டேன். எனக்கு இதுவே போதும். இனி என் வாழ்க்கை எனக்கு என்ன வச்சிருக்குன்னு எல்லாம் நான் யோசிக்க போறதில்லை….” என்று சொல்ல,
“என்ன பேசற முரளி?…” என்றான் ஆத்மா.
“தெளிவா தான் பேசறேன் ண்ணா. இங்கருந்து போறேன்னா எங்க போவேன்? உங்ககிட்ட தான் வருவேன். நான் சென்னைக்கு வரேன்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் முருகேஸ்வரியை அண்ணாமலையை பார்த்தான்.
“என்னால இந்த குடும்பம் உடைஞ்சிடக்கூடாதுன்ற காரணத்தால தான் என் மனசுக்குள்ள மட்டும் வச்சி சுமந்துட்டு இருந்தேன். இப்பவும் என் குடும்பத்துக்காக தான் நான் போறேன்னு சொல்றேன். என் குடும்பம்ன்னு நான் சொல்றது உங்களையும், வித்யாவையும் சேர்த்து தான் த்தை…” என்று முருகேஸ்வரியிடம் சொல்லி அவரின் கரத்தை அழுத்தியவன்,
“எப்பவும் என்னோட எண்ணம் அதுவா தான் இருந்திருக்கு. என் ஆசை நீங்க எல்லாரும் சேர்ந்து என் கையில வித்யாவை தரனும்ன்றது தான். நான் இப்படி செஞ்சிட்டேன்ற கட்டாயத்தை வச்சு நான் கேட்கலை. கேட்கவும் மாட்டேன். எல்லாரோட மன ஒப்புதலோட, முழு சந்தோஷத்தோட வித்யாவோட முகத்துல சிரிப்போட என் வாழ்க்கைக்குள்ள அவ வரனும்….”
“அவளோட மரியாதையை எந்தவிதத்துலையும் நான் குறைக்க நினைக்கமாட்டேன். என்னை நம்பலாம் நீங்க. அதேமாதிரி நீங்க உங்க பொண்ணு விஷயத்துல என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு குறுக்கவும் நான் நிக்கமாட்டேன்…” என்றும் உறுதி தந்தவன்,
“என் லைப்ல வித்யா மட்டும் தான். அந்த முடிவு என்னைக்கும் மாறாது. எதுக்காகவும், யாருக்காகவும் மாறாது…” என்பதில் இரும்பைவிட கடினமான உறுதியோடு செண்பகத்தையும், ரிதுபர்ணாவையும் பார்த்து கூறிவிட்டு வெளியேற முனைந்தான்.
மனம் வலிக்க வலிக்க மீண்டும் வித்யாவை பார்த்து, அவளின் பாதத்தை ஒருகணம் பிடித்து, கால் கொலுசை ஒருவிரலால் வருடியவன்,
“டேக் கேர்…” என பொதுவாய் சொல்லிவிட்டு விருட்டென வெளியே சென்றுவிட,
“வந்திடறேன்…” என்று ஆத்மாவும் அவனின் பின்னே சென்றான்.
“என்னண்ணே இவன் என்ன இப்படி பண்ணிட்டான்?…” விசாலாட்சி அண்ணாமலையிடம் கேட்க,
“அவன் மனசை அவன் சொல்லிட்டான். உடைச்சு பேசிட்டான். அதை இப்ப ஆராய்ச்சி பண்ணி முடிவெடுக்கனும்ன்ற அவசியமில்லை. எதுவானாலும் வித்யா வீட்டுக்கு வந்த பின்னாடி பேசிக்கலாம்…” என்றவர்,
“இங்க பாரும்மா…” என முருகேஸ்வரியை அழைத்தார் அண்ணாமலை.
அதுவரை அதிர்வில் நின்றிருந்த முருகேஸ்வரி கண்ணீர் சுமந்த விழிகளுடன் அவரை ஏறிட,
“இங்க நடந்த எதுவும் இப்போதைக்கு வித்யாவுக்கு தெரியவேண்டாம். நமக்குள்ள இருக்கட்டும். புரியுதா?…” என்றார் அதட்டலாய்.
“சரிங்க…” என்றார் உள்ளடங்கிவிட்ட குரலுடன்.
“உனக்கும் தான்…” என்று ரிதுபர்ணாவிடம் சொல்லியவர்,
“எல்லாருக்கும் தான். தனித்தனியா சொல்லமுடியாது. முதல்ல புள்ளைக்கு உடம்பு தேறட்டும். அவ சரியான பின்னாடி என்ன செய்யன்னு பார்ப்போம். அவசரப்பட்டு எதையாச்சும் செஞ்சுவைச்சா நான் மனுஷனா இருக்கமாட்டேன். விளங்குச்சா?…” என்றார் அழுத்தம் திருத்தமாய்.
“சரிங்க மாமா…” என்று சுந்தரியும் சொல்ல,
“டேய் சொல்லி வை. முதல் வீட்டுக்கு புறப்பட சொல்லு. முரளியை போய் பாரு. அவன் கிளம்பறேன்னு சொன்னா கேட்டுக்கிட்டு நிக்கிற நீயும்? வீட்டுக்கு தான் போயிருப்பான். போ…” என்றவர் செண்பகத்தையும் பார்த்துவிட்டு,
“விசாலம் நீயும் கூட போ. இங்க நாங்க இத்தனைபேர் இருக்கோம்ல….” என்றார் கட்டளையாய்.
“சரிங்கண்ணே…” என்ற விசாலாட்சி இளவரசு சேர்ந்து பேச்சின்றி நின்ற செண்பகத்தை அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
“சுந்தரி உன் மாமனாருக்கு போன போடு. அப்படியே முதல்ல உன் வீட்டுக்காரர்கிட்ட பேசி ரெண்டுமூணுநாளு இங்க இருக்க வேண்டியிருக்கும்ன்னு சொல்லு. பேசிட்டு என்கிட்ட குடு. நானும் ஒருவார்த்தை சொல்லிடறேன்…” என்றார் அடுத்தடுத்து.
எல்லாவற்றையும் பார்த்தபடி ரிதுபர்ணாவும், முருகேஸ்வரியும் வாயடைத்து நின்றனர்.
இப்போதைய கவலை எல்லாம் வித்யா எழுந்ததும் இதை சொல்லிவிடுவோமோ என்று ஒரு பதட்டம்.
“நீ என்னடா நெடுமரம் மாதிரி நிக்கிற? உன்னை தனியா பேசிக்கறேன். போயி அடிபட்டதுக்கு மருந்தை பூசு. காயம் ஆறட்டும். அப்பறம் இருக்கு உனக்கு…” என்று பல்லை கடித்துக்கொண்டு பரத்தையும் அனுப்பியவர் வித்யாவை பார்த்தார்.
எதுவும் அறியாமல் குழந்தையாய் கண்மூடி உறங்கும் அவளை நினைக்கையில் மனதை பிசைந்தது.
“எல்லாம் சரியா போயிடும். இதுக்கெல்லாம் சேர்த்து வித்யாவை தாங்குறவன் கையில அவளை ஒப்படைக்கனும். அவ சந்தோஷமா இருப்பா. எதையோ நினைச்சு எதையும் ஒதுக்காத. பார்த்துக்கோ….” என்று ரிதுபர்ணாவை பார்த்து சொல்லியவர்,
“என்னதான் நான் இருந்தாலும் இவங்களுக்கு நீ தான ஆலமரம். நீயே எடுத்தோம் கவுத்தோம்ன்னு நின்னா நல்லாவா இருக்கும்? புத்திசாலி பொண்ணு. பொறுமையா யோசி. தாய், மக ரெண்டும் வாயில்லா பிள்ளைங்க. நீ தான தாய்க்கு தாயா இப்ப நாலையும் கவனிச்சு நடத்தனும்…” என்று சொல்ல ரிதுபர்ணா உடைந்துபோய் அழ, முருகேஸ்வரி தளர்ந்து அமர்ந்துவிட்டார் அவரின் காலுக்கு கீழ்.
“இதைத்தானம்மா செய்யாதன்னு இம்புட்டுநேரம் உம்பொண்ணு சொல்லி அழுதா? மறுக்கா இத செய்யிற? யாரும் யாருக்கு கீழவும் இல்ல. எந்தி மொதல்ல. கண்ணை துடைச்சிட்டு தெம்பா இரு. ஒருத்தருக்கொருத்தர் தைரியமா இருக்க வேண்டாமா?…” என்று முருகேஸ்வரியை அதட்டிய அண்ணாமலை,
“எல்லாம் சரியா போகும். என்ன?…” என்று சொல்லி தொண்டையை செருமிக்கொண்டவர் ரிதுபர்ணாவின் தலையில் ஆறுதலாய் தட்டிக்கொடுத்து,
“நான் தான் இருக்கேன்ல. சொன்னா கேட்காம இன்னும் அழற நீ. ராஸ்கல்…” என்று தானும் கண் கலங்க,
“நாம இத்தன பேர் இருக்கையில என்ன வந்திருமாம்? ஒண்ணுமில்ல…” என்றவர் மகன் வரவும் அவனிடம் அவர்களை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு வெளியே வந்து அமர்ந்தார்.
அவர் செல்லவும் ஆத்மாவும் அவர்களை தேற்றி வெளியே அழைத்து வந்துவிட்டான்.
“இப்போதைக்கு இதை எதையும் யோசிக்காம இருங்க…” என அமைதிப்படுத்தியிருந்தான்.
நான்கு நாட்கள் வித்யாவிற்கு மருத்துவமனை வாசம் தான். அது முடிந்து அவளை வீட்டிற்கு அழைத்து வரும் அன்றைக்கு முரளி சென்னைக்கு கிளம்பிவிட்டான்.
“அன்னைக்கு ஏதோ வேகத்துல சொல்லிட்டன்னு விட்டா நிஜமாவே கிளம்பறியா நீ?…” என பெட்டிகளை எடுத்து வைத்தவனிடம் கேட்டார் விசாலாட்சி. அவருடன் சுந்தரியும்.
செண்பகம் தான் பேச சொல்லியது. தாய் மகன் இருவரிடமும் பேச்சுக்கள் நின்றுவிட்டது.
செண்பகம் வித்யாவை மருத்துவமனைக்கு சென்று பார்க்கவும் இல்லை. முரளியும் பார்க்க செல்லவில்லை.
ஆனால் ஆத்மாவிடம் வித்யாவின் உடல்நிலை அனைத்தும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.
அண்ணாமலையின் கட்டளையின் பெயரில் ஒருவரும் நடந்தவிஷயத்தை பற்றி வித்யாவிடம் வாய்திறக்கவில்லை.
இந்த பிரச்சனையினாலேயே ‘வித்யாவின் உடல்நிலையை பற்றி மறைத்துவிட்டதாய்’ முரளி ஆத்மாவிடம் கேட்டிருந்த விஷயமும் மறைந்துபோனது.
அனைவரின் மூளைக்குள்ளும் இது மட்டுமே வலம் வந்தது. வீட்டினர் தவிர்த்து வெளியாட்கள் யாருக்கும் விஷயம் தெரியவில்லை.
விசாலாட்சி மகனிடம் வீட்டிற்கு வந்து பேசியதில் சபர்மதி என்னவென்று நடந்த விஷயத்தை கேட்க அவன் மொத்தமாய் முரளி செய்தவை எல்லாம் சேர்த்தே சொல்லிவிட்டான்.
பேச்சுவாக்கில் அங்கலாய்ப்பில் ஒருவேகத்தில் ஆனந்தி, மனோ வரை விஷயம் வெளியே தெரிந்துவிட்டது.
செண்பகம் வீட்டை விட்டு வெளியேறவில்லை. நான்குநாட்கள் வீட்டிற்குள் தான் அடைந்துகிடக்க மகனின் புறப்பாட்டில் இன்னும் பயந்து போனார்.
அதனைகொண்டே விசாலாட்சியை அழைத்து மகனிடம் பேச சொல்ல அவன் உறுதியாய் இருந்தான்.
“நான் இன்னும் இங்க இருந்தா வித்யாகிட்ட அவளை நான் கிஸ் பண்ணேன்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டுடுவேன். விட்டா மிரட்டி கூட தாலி கட்டிடுவேன். பரவாயில்லையா?…” என்றவனை வாய் பிளந்து பார்த்தார் விசாலாட்சி.
“டேய் நல்லவனே, நீயாடா…” என்ற சுந்தரியை பார்த்து நக்கலாக சிரித்த முரளி,
“இதுக்கெல்லாம் மசியமாட்டேன். அதெல்லாம் எப்பவோ கெட்ட பிள்ளையாகிட்டேன். என்னை போகவிட்டா நிம்மதியா இருப்பீங்க. இல்லைன்னா இதைவிட பெரிய கலவரம் தான் வெடிக்கும். யாருக்கும் நல்லதில்லை…” என்றான் வெகு சாதாரணமாய்.
முகத்தை ஒன்றுமறியாத குழந்தை போல் வைத்துக்கொண்டு அவன் வைத்த வெடிகுண்டில் அரண்டுபோய் நின்றிருந்தார்கள் சுந்தரியும் விசாலாட்சியும்.
அவர்கள் மட்டுமல்லாது வெளியில் இருந்து இதனை கேட்ட செண்பகத்திற்கு தன் காதுகளையே நம்பமுடியாமல் போனது.
எல்லாவற்றையும் எடுத்து ஆத்மாவின் காரில் வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்தவன் தன் பாக்கெட்டில் இருந்த கோவில் பிரசாதத்தை விசாலாட்சியிடம் நீட்டினான்.
“இதை வித்யாக்கிட்ட குடுத்திருங்கத்தை…” என்று சொல்ல அவருக்கு மனமெல்லாம் பாரமாகியது.
“அதை அப்ப பார்த்துப்போம். நான் கூட தான் இதெல்லாம் சரிவராதுன்னு ஒருநேரம் நினைச்சேன். ஆனா இப்ப இது மட்டும் தான் சரின்னு நிக்கலையா? பார்க்கலாம்…” என்று சொல்லி புன்னகைத்தான்.
“சித்தப்பா…” என்று பூர்விதா ஓடி வர,
“என்னடா குட்டி, அப்பா வந்தாச்சா?…” என்றான் முரளி குழந்தையை குனிந்து பார்த்து.
“சித்தி வந்தாச்சு வாங்க, வாங்க….” என்று அவனின் கை பிடித்து அவள் இழுத்து செல்ல,
“பாப்பா, இரு வருவான்…” என விசாலாட்சி சொல்ல,
“மார்னிங் கேட்டீங்க இல்ல. வாங்க…” என்று விடாப்பிடியாய் பூர்விதா முரளியை இழுத்து செல்ல அங்கே வித்யாவிற்கு திருஷ்டி எடுக்க சபர்மதி தாம்பாளத்தை எடுத்துவைத்தாள்.
பூர்விதாவுடன் அங்கே முரளி வரவுமே அனைவரும் முகமும் பதட்டத்தை தாங்கி நிற்க வித்யாவின் முகம் மலர்ந்து புன்னகைத்தது.
அவன் அவளருகில் செல்ல செல்ல இதயத்தின் சப்தம் தாளமேற்றி ராகமீட்டியது அவனுள் சுகவதையாய்.
“எப்படி இருக்க வித்யா?…” என்றான் முரளி என்றைக்கும் போல்.
“இப்போ உடம்பெல்லாம் சரியாகிடுச்சா? வலி எதுவும் இருக்கா?…” என்றும் கேட்க சரியாகிவிட்டதாக தலையசைத்தவள் அவனை தலைசாய்த்து பார்த்தாள்.
“மறந்துட்டேன் பாரேன்…” என்று தன் கையிலிருந்த பிரசாதத்தை அவளிடம் நீட்டினான்.
“எடுத்துக்கோ. உனக்கு சரியாகனும்ன்னு கோவிலுக்கு போனேன்…” என்றதும் நன்றி சொல்லி அதனை எடுத்துக்கொண்டவள் தானும் நெற்றியில் பூசி, பூர்விதாவிற்கும் வைத்துவிட்டு முரளியிடம் திரும்ப,
“ஓகே, உடம்பை பார்த்துக்கோ. நல்லா ரெஸ்ட் எடுக்கனும். நிறைய யோசிக்க வேண்டாம். டயர்டாக கூடாது. பர்ஸ்ட் ஹெல்த் தான் முக்கியம். தலையில காயம் வேற ஆறனும். புரியுதா?…” என்று வரிசையாய் சொல்லியவனை புரியாமல் அவள் பார்க்க,