கண்களில் தெரிந்த பாதை கருத்தில் பதியவில்லை அவன் இழுப்புக்கு சென்றுக்கொண்டு இருந்தாளே தவிர, மனது எதையும் உணரும் நிலையில் இல்லை… தேவாவின் மனம் முழுவதும் அந்த பெண்ணை பற்றிய எண்ணங்கள் தான் விரவிக் கிடந்தது.
ஏன் அழுகிறாள்? எதற்கு அழுகிறாள்? இவர் ஏன் அதை கண்டு கொள்ளாமல் போகிறார்!! என்ற எண்ணங்களே அவளைச் சுழற்றி அடிக்க, அவனுடன் நடந்தாலும் அந்த பெண்ணை பார்க்க மனம் உந்தியதால், திரும்பி பார்த்தபடி நடந்தாள்.
அழுதபடி நின்றிருந்த பெண், ஒரு கட்டத்தில் கண்களில் இருந்து மறைந்து போயிருக்க, மனது தெளிவில்லாமல் இருந்தவள் “நான் சாதரணமா அவங்க யாருன்னு தானே கேட்டேன்… அதுக்கு பூ, பூ நாகம்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றிங்க என்னன்னு தெளிவா சொன்னா தான் என்னவாம்” என்றாள் அவன் சரியான பதிலை கூறவில்லையே என இயலாமையுடன்.
அவள் குரலே அவளுடைய மனதினை எடுத்துரைக்க ஒரு முறைப்புடனே ” இப்போ எதுக்குடி இந்த பேச்சு…. அவங்க என்னோட படிச்சவங்க…. படிச்சவங்க மட்டும் தான் சனா…. எனக்கும் அவங்களுக்குள் இடையே உள்ள அறிமுகம்… ” என்பதில் அழுத்தம் கொடுத்து கூறியவன் ” விளக்கம் போதும்னு நினைக்கிறேன்…. மத்ததை எல்லாம் அப்புறமா சொல்றேன்…” அழுத்தமான குரலில் அவள் வாய் அடைத்தவன் தேவாவின் கையை மட்டும் விடவே இல்லை… அதில் இருந்த இறுக்கம் அவளின் மூளையை வெகுவாய் யோசிக்க வைத்தாலும் அவனுடைய அதட்டல் வேலை செய்தது.
இருவரும் மருத்துவமனை வாயிலை கடந்து நடந்து கொண்டிருக்க, கவலையாக பின்புறம் திரும்பிப் பார்த்தாள் தேவா, அவசர அவசரமாக ஓடிவரும் அந்த பெண்ணை பார்த்ததும் தடுமாறிய குரலில் “ஹீரோ ப்ளீஸ் ஒரு… ஒரு நிமிஷம்… கொஞ்சம் இருக்க… அவங்க ஓடி வராங்க பாருங்க” அவன் கைகளை இழுத்து பிடித்து நிறுத்தினாள்.
அவள் புறம் திரும்பாமலேயே “அவங்களுக்கு நம்ம கூட பேச எல்லாம் நேரம் இருக்காது சனா… வேற எங்கேயாவது அவசரமா போற வேலை இருந்திருக்கும் நீ அமைதியா வா” என்றபடி கொஞ்சம் கூட இளக்கம் காட்டாமல் முன்னேற அவனுக்கு முன்னால் மூச்சு வாங்க வந்து நின்றாள் அந்த பெண்.
அழுது அழுது சிவப்பேறிய கண்களுடன், ஒடிசலான தேகத்தோடு இருந்த பெண், கையில் குழந்தையை பிடித்தபடி கலங்கிய கண்களுடன் “விகாஸ்” என தழுதழுத்த குரலில் அழைத்தாள்.
இறுக்கமாக நின்றிருந்தவன் அவளுடைய அழைப்பில் கண்களை அவள் புறம் திருப்பி “யார் விகாஸ்…. என் பெயர் விசாகன்… நீங்க யாரோன்னு நினைச்சி பேசுறிங்கன்னு நினைக்கிறேன்” என்றான் ஒருவித அன்னியத் தன்மையுடன்.
“எ.. என்னை மறந்துட்டிங்களா விகாஸ்…. நான் நான் அக்ஷ்ரா… எ.. என்னை உங்களுக்கு நிஜமாவே தெரியலையா” என்றாள் திக்கி திணறி தன்னை அவனுக்கு தெரியவில்லையே என்ற தவிப்பில்.
“சே.. சே…. உங்களை மறக்க முடியுமா அக்ஷ்ரா… என் பெயர் விசாகன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தினேன்” என்றவனது குரல் எரிச்சலாய் வெளிப்பட்டது. இதில் பார்வையாளராய் இருந்த தேவாவிற்குத்தான் இதயம் எக்குத்தப்பாய் துடித்தது.
அவன் குரலில் வெளிப்பட்ட வித்தியாசத்தை வைத்தே தன்னிடம் பேச பிரியப்படவில்லை என்பதை அறிந்துக்கொண்ட அக்ஷ்ரா “சாரி விகா…” என அழைக்க வந்தவள் அவன் முறைப்பை பார்த்ததும் “உங்க பெயரை சொல்ற தகுதி கூட எனக்கு இல்லைன்னு எனக்கு புரியது விசாகன்… என்னை பார்க்க கூட உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும்…. ஆனா உங்க முன்னாடி வந்து நிக்குறதுக்கு காரணம் என்னை மன்னிச்சிடுங்கன்னு கேக்கத்தான்… சா… சாரி விசாகன்” என்றாள் அழுகையுடன்.
துளி கூட முக மாற்றமின்றி சாதரணமாக நின்றிருந்த விசாகன் “எதுக்கு சாரின்ற பெரிய வார்த்தை எல்லாம் கேக்குறிங்க அக்ஷ்ரா…. நீங்க எனக்கு நல்லதுதான் செய்து இருக்கிங்க… அதுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்ஷ்ரா” அவன் கைகளை குவித்து நன்றியை தெரிவிக்க அப்பெண் துக்கத்தை அடக்க முடியாமல் அழுதாள்.
“அக்ஷ்ரா…. எதுக்கு தேவையில்லாம அழறிங்க? உங்கள அழ வைச்ச பாவம் எனக்கு வேண்டாம்… நீங்க செய்த நல்லது என்னை இப்ப ரொம்ப நல்லா வாழ வைச்சிட்டு இருக்கு… அதுக்கு நீங்க தான் காரணம்… சோ இந்த, மன்னிப்பு படலம் எல்லாம் வேண்டாமே…. இனி நீங்க என்னை பார்க்கவோ, பேசவோ, முயற்சி பண்ணாதிங்க… ப்ளீஸ்… பார்த்தாலும் யாரோன்னு நினைச்சி கடந்து போக பாருங்க ப்ளீஸ்….” எனக் கூறியவன்
“அப்புறம் இது என் மனைவி தேவசேனா… எனக்கு எல்லாமே இவங்க தான்… உங்களுக்கு எப்படின்னு தெரியாது, ஆனா எனக்கு இங்க எல்லார் முன்னாடியும் காட்சி பொருளா நிக்குறது பிடிக்கல! சோ ” என அங்கிருந்து நகரப் போனவன் அவளுடைய பெண்ணை பார்த்ததும் நின்றான்.
“உங்க பொண்ணா, உடம்பு சரியில்லை போல இருக்கு… போங்க போய் டாக்கடரை பாருங்க… என் கூட பேசி உங்க பொன்னான நேரத்தை வீணடிக்காதிங்க” என்றவன் தேவாவை அழைத்துக்கொண்டு அவளை தாண்டி செல்ல, போகும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷ்ரா.
அவன் கோபப்படுவான், திட்டுவான், கேள்வி கேட்பான் என்று நினைத்தவளுக்கு விசாகன் பேசிய பேச்சுக்கள் அதிர்ச்சியாய் இருந்தது… கட்டிய மனைவியை அவன் பார்த்துக்கொள்ளும் அழகை கண்டவளுக்கு, கையில் கிடைத்த அரிய பொக்கிஷத்தை இழந்து விட்டோமே!! என்று நினைக்கையிலேயே நெஞ்சம் விம்மியது… ‘எல்லாம் என் தலையெழுத்து, நான் செய்த பாவம் என் வாழ் நாள் முழுசும் அனுபவிக்கனும்… உனக்கு பண்ணின துரோகம் என்னை மொத்தமா முழிங்கிடுச்சி விகாஸ்’ என அழுதவள் நெஞ்சம் கணக்க மகளை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றாள்.
🌹🌹🌹🌹
வீட்டை நோக்கி பயணப்பட்ட இருவருக்குள்ளும் கணத்த மௌனம் ஆட்சி செய்ய காரின் சாளரத்தின் வழியே பார்வையை பதிந்து இருந்தவளுக்கு அவனிடம் எப்படி கேட்பது என்று பயமாயிருந்தது.
ஒருமுறை அமுதாவை தவறாக நினைத்து உள்ளுக்குள் வேதனைப்படட்டது அவளுக்கு தானே தெரியும்… அதன் பொருட்டே , அவனிடமே கேட்க முடிவு செய்து அவனையும் சாலையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டறிய முடியவில்லை, “க்கூம்” என்று தொண்டையே செருமி தன் இருப்பை அவனுக்கு தெரியபடுத்த அவளை ஒரு பார்வை பார்த்தவன் சாலையில் கவனத்தை பதித்தான்.
“உங்ககிட்ட பேசனும்”.
“பேசு”
“அவங்க… அவங்க யாரு?”
“கூட படிச்சவங்க”
“அதுதான் செல்லிட்டிங்களே… அதை கேட்கல”
“வேற எதைக்கேக்குற?”
“ஏன் அழுதாங்க? ஏன் சாரி கேக்குறாங்க?” என்றாள் சற்று கோபம் கலந்த குரலில் கேட்கவும் காரை சடன் பிரேகிட்டு நிறுத்தியவன்
“யாரு?… யாரு…யாரு? அவங்க யாருன்னு சொன்னாதான் கூட வருவியாடி” காரில் இருந்து இறங்கி கார் கதவை அறைந்து சாத்தியிருந்தான்.
‘எதை நினைக்கவே கூடாது… என இருக்கிறானோ அதையே மறுபடி மறுபடி ஞாயபகப்படுத்த அவனுள் எழுந்த கோவம் தேவாவிடம் வார்த்தைகளாக வெளிப்பட்டது.
“நான் இப்போ என்ன கேட்டேன் அவங்க யாருன்னு தானே அதுக்கு ஏன் இவ்வளவு கோவம்” அவள் கோபமாக முனுமுனுத்தாள்.
கோவம் கொண்டு வெளியே நின்றிருந்த விசாகனுக்கு அவள் முனுமுனுப்பு தெளிவாக கேட்கவும் “எதை தேவை இல்லன்னு சொல்லிட்டு இருக்கேனோ, அதையே தான் கிளறிகிட்டு இருக்க, இதுக்கு கோவப்படாம இருக்கனுமா… தேவை இல்லாத குப்பைன்னு தானே, நானே ஒதுங்கி போறேன்… குப்பைய கிளறி கிளறி நீதான் அசிங்கபடுத்துற” எச்சரிக்கை போல் கூறிட ஒரு நொடி அவனின் முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்டவளுக்கு மறுபடியும் கேட்கும் துணிவு இல்லை…
அவன் கோபத்தில் கடிந்து பேசவும் முகத்தினை தூக்கி வைத்துக் கொண்டவள் நகத்தினை கடிக்க அவள் விரல்களில் பட்டென ஒரு அடியை வைத்தவன் “என்னடி இது, சின்ன புள்ள மாதிரி எதை எதை கடிச்சி திங்னும்னு அறிவு இல்லையா” அவளை அதட்டியபடி காரில் ஏறியிருந்தான்.
அவனுக்குமே யோசனை தான் தேவாவிடம் எப்படி கூறுவது என்று, ஏற்கனவே அவ்வப்போது எழும் முதல் காதல் பற்றிய பேச்சை அடியோடு வெறுத்தவளிடம் விஷயத்தை கூற தயங்கினான்.
அவன் எண்ணவோட்டத்தை அறியாதவளோ “ஷப்பா முடியல” எரிச்சலாக சீட்டின் பின் புறம் சாய்ந்து, “இனி எது பண்ணனும், பண்ணக் கூடாதுன்னு, சொல்லிடுங்க… கேட்ட கேள்விக்கு தான் பதிலை சொல்ல மாட்டிங்கன்னு பார்த்தா! என் இஷ்டமா ஒரு நகத்தை கூட கடிக்க முடியல…” ஆதங்கப்பட்டு சாளரத்தின் வெளிபுறத்தில் பார்வையை திருப்பினாள்.
அவளுடைய பேச்சு அவன் தயக்கத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளியிருந்தது.. இவ்வளவு கூறியும் அடம் பிடிக்கின்றாளே என்ற கடுப்பில் “நகத்தை மட்டும் ஏன் கடிக்கிற? அதோ தெரியுதே அந்த மரம், செடி, கொடி எல்லாம் இருக்கு… அதையும் முயற்சி பண்ணு உன்னை எதுவும் கேட்க மாட்டேன்.. இப்போ என்ன உனக்கு அவ யாருன்னு சொல்லனும், அதானே உன் பிரச்சனை!?!?… அவளை பத்தி சொன்னா அமைதியா இருந்துடுவியா?!?!” என்றவன், கோவமாக “அவ தான் என் முதல் காதல்” கசப்பு நிறைந்த குரலில் கூறி, காரை உயிர்ப்பித்து அதிவேகமெடுத்து கிளப்பி இருந்தான்.
இந்த வார்த்தைகள் தேவா அனுமானித்தது தான்…. “அவள் என் காதலியாக இருந்தாள்”, என்று விசாகனின் வாய் மொழியால் கேட்டே போதே உள்ளுக்குள் ஏதோ உடைந்து உயிர் வரை தாக்கியது போல் பெரும் வலி எழுந்ததை அவளால் தடுக்க முடியவில்லை… பற்களை கடித்து மூச்சை உள் இழுத்துக் கொண்டவளால் எவ்வளவு முயன்றும் கண்ணீர் உற்பத்தியாவதை தடுக்க முடியவில்லை அதிக வலியை அனுபவிக்கிறாள் என்பதை அவளது முகமே காட்டியது.
காரை செலுத்தியபடியே தேவாவின் முக மாறுதல்களை வைத்தே அவள் எந்த அளவுக்கு வேதனைபடுகிறாள் என அறிந்தவன் காரை நிறுத்தி விட்டு அவளையே பார்த்தான். கண்கள் நீரில் பளப்பளத்தது, முக்கு விடைத்து அழுகையை அடக்க அரும்பாடுபடுவது நன்றாகவே தெரிந்தது.. இதற்கு மேல் அவளை காண சகியாதவன் “இதுக்கு தான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்… சொல் பேச்சை கேட்டா தானே, இப்ப நீயும் கவலைப்பட்டு என்னையும் கவலைப்பட வைக்குறடி…” சத்தமிட்டு அவனை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் காற்றும் புக முடியாத படி இறுக்கமாக அணைத்து அவள் தலை கோதி, “அது இறந்தகாலம் சனா… முடிஞ்சி போன ஒன்னு…. அதையே நினைச்சி உன்னை வருத்திக்காதடா பீளீஸ்…” அவள் காது மடல் உரச பேசி அவளை ஆறுதல் படுத்தியவன் அழுத்தமாக இதழொற்றலை கொடுத்து அவள் வலியை தான் வாங்கிக் கொள்ளவே முனைந்தான்.
இந்த தீடீர் அணைப்பும், எதிர்பாரத இதழொற்றலும் அவளுக்கு அதிர்வையும், நடுக்கத்தையும் கொடுக்க, அவளுக்கு உடல் சில்லிட்டு போனது , தேவாவின் நிலையை கண்டு மனமே இல்லாமல் கைகளை தளர்த்தி அவளை விடுவித்தானே தவிர தன்னை விட்டு விலக்க வில்லை
அவனின் ஆறுதலான வார்த்தைகளும் இதமான அணைப்பும், உயிர் வரை ஊடுருவி சிலிர்க்க வைத்த மென்மையான இதழொற்றலும் ரணமான இதயத்திற்கு மயிலிறகாய் வருடிட, ஒரு கட்டுப்பாட்டிற்குள் மனதை செலுத்திய தேவா, ” ந… நான் நார்மலாதான் இருக்கேன்… எனக்கென்ன…. உங்களுக்கு லவ் இருக்குன்னு தெரியும்…. தெ…தெரிஞ்சி தானே கல்யாணம் பண்ணேன்… அதுல… அதுல எனக்கு வருத்தம் இல்ல…” திக்கி திணறி கூறவும்,
அவள் தலையை தன் தலையால் முட்டியவன் “லவ் இருக்குன்னு, இல்ல… இருந்தது…” அவன் திருத்திட, “ஆமா ஆமா இருந்தது” எனக் கூறி சிரிக்க முயன்றாள். உதட்டில் நிறைந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை
“இனி எப்பவும் இதை பேசக்கூடாது சனா… முடிஞ்சி போச்சி, அப்படி ஒரு அத்தியாயம் இருந்தது, என்பதையே மறந்துடு… எனக்கு ஞாபகமும் படுத்தாத… “என்றான் கரகரப்பான குரலில்,
மூக்கை உறிஞ்சியபடியே “இந்த விஷயத்துல நான் கோவமா தான் இருக்கேன்.. ஆனா அது உங்க மேல இல்ல… யார் மேலன்னும் சொல்ல தெரியலை…. காலப் போக்குல கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும்… இது மறைந்திடும் போயிடும்… அவன் நெஞ்சில் சாய்ந்து கூறியவள்… “இந்த விஷயம் உங்களை நோகடிக்கிதுன்னா நிச்சயமா பேச மாட்டேன்ங்க… உங்கள கேட்டது கூட அவங்க அழறாங்களேன்னு குழப்பத்துல தான் கேட்டேன்… இனிமே இந்த விஷயத்தை கேட்டு உங்களை கஷ்டப்படுத்த மாட்டேங்க” என்றாள் ஒரு முடிவுடன்.
அவள் முதுகை வருடி விட்டவன் “நீ இப்போதான் நார்மல் ஆகிட்டு வர்ற சனா…ரொம்ப யோச்சிக்காத. இப்பவும் சொல்றேன், அது என்னோட கடந்த காலம்… இப்போ, இந்த நிமிஷம் நீ…நீ மட்டும் தான்… நிஜம்… அதை நல்லா ஞாபகம் வைச்சிக்கோ” அழுத்தம் நிறைந்த குரலில் கூறி இறுக்கமாக அணைத்து விடுவித்தவன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.