அக்ஷ்ராவிடம் பொங்கிவிட்டு வந்து இருந்தாலும் தேவாவின் மனம் மட்டும் ஆறவே இல்லை “அது எப்படி? கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம சாதரணமா வந்து பேசுவாங்க?!? மத்தவங்க மனசு எப்படி தவிக்கும்னு யோசிக்கவே மாட்டாங்களா?!?” பொறுமியது அவளின் இதயம்….
அவளுக்கு தான் செய்தது அதிகப்படியாக இருந்தாலும் தான் உயிராய் நேசித்தவன் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருப்பான் என நினைக்கையில் இது அவளுக்கு மிக மிக குறைவுதான் என்று தான் தோன்றியது…
தன் எண்ணப் போக்கில் இருந்தவளுக்கு விசாகன் அறைக்குள் நுழைந்ததோ, இல்லை கதவை தாளிட்டு அருகில் வந்ததோ, எதுவும் தெரியவில்லை.. திரும்பி நின்றிருந்தவளை தன் வலிய கரங்களால் பின்னிருந்து இறுக்கமாக அணைத்திட, முதலில் திடுக்கிட்டவள், விசாகன் தான் என தெரிந்ததும், திரும்பி அவனை பார்த்தாள்.
திடீரென்று அவன் அணைத்ததும், கண்களின் சிவப்பும், நீர் நிறைந்ததனால் ஏற்பட்ட பளபளப்பும், அவளுக்கு வேறு செய்தியை சொல்ல நெஞ்சம் துணுக்குற்று பதறியவள், “என்னங்க என்ன ஆச்சி? ஏன் இப்படி இருக்கிங்க? என்றாள் பயமுகமாய்.
தேவாவையே பார்த்து இருந்தவனுக்கு பேச நா எழவில்லை அவளை இறுக்கமாக அணைத்து முகம் முழுவதும் முத்திரை பதித்தவனின் உதடுகள் அவளின் இதழ்களில் இளைப்பாறி தன் இதயத்தினை அவளுக்கு உணர்த்த முயன்றது
மனைவியின் மேல் கடலளவு காதல் இருந்தாலும் அவளின் படிப்பை காரணம் காட்டி தள்ளி இருந்தவனால் இன்று அவ்வாறு இருக்க முடியவில்லை…
அவள் மேல் தான் வைத்துள்ள மொத்த அன்பையும் வெளிபடுத்திடும் வேகம், அவனிடத்தில்…. அவள் மூச்சி விட சிரமப்படுவாளே என்ற ஒரே காரணத்தால், அவளை விடுவித்தவன், அவளை தனியே செல்ல அனுமதிக்காமல் தன் கை வளைவிலேயே நிறுத்திக் கொண்டு அவன் நெஞ்சிலேயே சாய்த்துக் கொள்ள அவனின் இதயத்தின் படபடப்பை அவளால் உணர முடிந்தது.
கணவனின் திடீர் செய்கைகள் இவளுக்குத் தான் ஆச்சர்யமாகவும்,
அவஸ்தையாகவும், இருந்தது… இது என்ன மாதிரியான உணர்வு என அவளால் யூகிக்க முடியவில்லை, விழிகள் தன்னால் உயர்ந்து அவன் முகம் நோக்கியது.
“ஹீரோ உங்களுக்கு என்ன ஆச்சி? ஏன் ஏதோ மாதிரி இருக்கிங்க?” குரலில் கலக்கம் எட்டி பார்த்தது.
“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா” என்றான் கரகரப்பான குரலில்,
அவன் வாய் திறந்து பேசியதும் சற்று ஆஸ்வாசமாகியது அவளுக்கு…
“என்ன விஷயமா சந்தோஷம்? .. ஏதாவது பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கா??? இல்ல வேற ஏதாவது சந்தோஷமான விஷயமா… எதுவா இருந்தாலும் உடனே சொல்லிடுங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல???” என அவனின் மார்பில் வாகாய் சாய்ந்தபடி அவனின் சந்தோஷம் அவளையும் தொற்றிக் கொண்டது.
“என் சந்தோஷத்துக்கு காரணமே நீதானே டா” என்றான் ஆழ்ந்த அனுபவிக்கும் குரலில்…
அவன் குரலின் பேதமே மிகவும் உணர்ச்சிவசப்படுகிறான் என்பதை அறிவிக்க, தன்னை தான் குறிப்பிடுகிறான், என்பதை உணர்ந்துக் கொள்ளாமல் “ஹீரோ” என்றாள் அவனை சகஜமாக்கும் பொருட்டு
“பேசனும் டா…. இன்னைக்கு உன்கிட்ட நிறைய பேசனும்… என் மனசு விட்டு பேசனும்….” என்றவன் இருவருக்கும் தனிமை தேவை என்று கருதி அப்பத்தாவிடம் கூறிக்கொண்டு தேவாவை தோப்பு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். .
தில்லை கையோடு கொடுத்து விட்ட உணவை சமயலறையில் எடுத்து வைத்தாள் தேவா.
விசாகன் பனியில் நின்றிருப்பதை பார்த்து வெளியே வந்து அவனுடன் நின்றாள். அவன் முகம் பார்ப்பதும் பின் தன் கையை பார்ப்பதுமாய் இருந்தவள்,
“ஏதோ பேசனும்னு சொன்னிங்க, இங்க வந்து தனியா நிக்கறிங்க…? பனி வேற அதிகமா இருக்கு, உடம்புக்கு சேராம போயிட போகுது” என்றாள் மென்மையாக
அவளின் பேச்சினில் இதழ்கள் இளம் புன்னகையை உதிர்க்க உள்ளே வந்தவன் தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டான். தன் அருகே நின்றிருந்தவளை கைபிடித்து பக்கத்தில் அமர்த்திக் கொண்டவன் “உனக்கு இவ்வளவு கோவம் வருமா சனா?” என்றவன் அவள் கண்களையே ஆழ்ந்து பார்த்தான்.
தன்னை பற்றி சம்மந்தம் இல்லாமல் கேட்கவும், சற்றே முழித்தவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்
“மனசு சந்தோஷமா அப்படியே பறக்கற மாதிரி இருக்கு சனா, இதுக்கு முன்னாடி இவ்வளவு பீல் பண்ணதே இல்லடி…. என்னால அதை வார்த்தையால் சொல்ல முடியல… எனக்கு எல்லாமே அழகா தெரியுது… உன்னை போலவே ” அவள் விரல்களை தன் விரல்களுடன் கோர்த்துக் கொண்டவன் அதில் மென்மையாக முத்தமிட்டான்.
அந்த முத்தத்தில் அவள் உடலில் சிலிர்ப்பு உண்டாக கணவனையே ஆசையாக பார்த்தாள்.
” இப்போ இந்த நிமிஷம் இந்த உலகத்துலேயே சந்தோஷமான ஆள் யார்னா??? அது நானாதான் இருப்பேன்…” என்றபடி அவளை பின்னிருந்து இறுக அணைத்திட அவன் ஸ்பரிசத்தில் உருகி போனாள்.
இருந்தும் விசாகன் எதை பற்றி குறிப்பிடுகிறான் என்று இன்னும் முழுதாய் விளங்கவில்லை
“இன்னைக்கு கோவில்ல நடந்ததை சுந்தரன் வந்து சொல்லிட்டான்… விஷயத்தை சொல்லும் போது அவன் முகத்துல அவ்வளவு பெருமை….. உன்னை நினைச்சி” என்றதும் தான் இன்றைக்கு அக்ஷ்ராவிடம் பேசியதன் தாக்கம் என புரிந்தது.
“சனா உனக்கு அக்ஷ்ரா” அவன் கூறவும், விசாகனின் வாயில் விரல் வைத்து வேண்டாம் என தடுத்தவள், “உங்களை கஷ்டபடுத்துற எந்த விஷயத்தையும் பேச வேண்டாம்…. அது என்னையும் கஷ்டபடுத்தும்….. அதும் அந்த விஷயம் உங்க வாயிலிருந்து வந்தா என்னால தாங்கவே முடியாது” குரலை முயன்று வரவழைத்தாள்.
“இல்லடா உனக்கும் தெரியனும் இல்லையா… அவ எதுக்கு என்னை வேண்டாம்னு சொன்னான்னு” என்றான் கண்களில் வலியை தேக்கியபடி
“தெரியும்” என்றாள் எங்கோ பார்வையை பதித்து… அவளுக்கு இந்த பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை என்பது அவள் பார்வையிலையும் பேச்சிலுமே அட்சர சுத்தமாக தெரிந்தது..
“சனா” என்றான் குரலில் தவிப்பை தேக்கி,
அவன் குரலில் இருந்த தவிப்பை கண்டவள் “பரவாயில்லை ஹீரோ, எனக்கு… நான்… என்னை சமாளிச்சிக்குவேன்” தன்னை சமன்படுத்திக் கொண்டவள் “அவங்கள சந்திச்ச மறுநாள் சுந்தரன் அண்ணா, எனக்கு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாரு” என்றாள் கலங்கும் மனதுடன்.
அவள் கலக்கம் அவனையும் தாக்கியதோ… சனா என அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் விசாகன்….
அக்ஷ்ராவை கண்ட மறுநாள் சுந்தரனை தேடி ரைஸ்மில்லுக்கே சென்றாள் தேவா அங்கே வைத்து அக்ஷ்ராவை பற்றி கேட்கவும், முதலில் தயக்கம் கொண்டவன் பின் கூறிய கதை இதுதான்.
சுந்தரன் மற்றும் விசாகனின் ஜூனியர் தான் அக்ஷ்ரா… யாரிடமும் அவ்வளவாக பேசாத விசாகனின் அமைதி அக்ஷ்ராவை கவர அவன் பின்னயே சுற்றி வந்தாள்.
ஒரு கட்டத்தில் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதை போல் ஒரு நாள் அவளின் காதலை ஏற்றுக் கொள்ள சந்தோஷமாகவே அவளுடன் தன் அனைத்து சோகங்களையும் மறந்து வலம் வந்தான்.
படிப்பு முடியும் தருவாயில் அவர்களின் காதல் அக்ஷ்ராவின் பெற்றோருக்கு தெரிய வர, அங்கே தொடங்கியது பிரச்சனை…
” முதலில் நீ இல்லை என்றால் நான் இல்லை” என்றவள், “எனக்கு கல்யாணம் பிரச்சனை பண்ணாதிங்க… எங்க அம்மா அப்பா சொல்ற பையனை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என அவன் காலில் விழவும், வேறு வழி இல்லாமல் அவளை விட்டு ஒதுங்கி தனக்கென்று ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு யாரும் நெருங்க முடியாத அளவுக்கு இறுகி போய் இருந்தான். இதை கேட்கவும் அவளுக்கு அக்ஷ்ராவின் மேல் அவ்வளவு ஆத்திரம் வர நேரில் பார்க்கவும் அனைத்தையும் கொட்டி விட்டாள்.
உங்க வாயால இன்னொரு பொண்ணை காதலிச்சிங்கன்னு கேட்கக் கூட என்னால முடியாம தான், நான் அவ்வளவு கோபப்பட்டேன்…. ஆனா நீங்க காதலிச்ச பொண்ணே இன்னொருத்தரை கல்யாணம் செய்து, உங்க கண்ணு முன்னாடி வரும் போது எவ்வளவு உடைஞ்சி போய் இருப்பிங்கன்னு, என்னால உணர முடியுது ஹீரோ…. ஏன்னா நானும் ஒன்சைடா உங்களை காதலிச்சவதானே” என்றாள் உணர்வுகளை துடைத்த குரலில். அவளின் வருத்தம் அவனையும் தாக்கியது.
“அதும் உங்களை வேண்டாம்னு சொன்ன காரணம், என்னால ஏத்துக்கவே முடியல ஹீரோ… அம்மா அப்பா முக்கியம் தான், அதுக்காக நீங்க முக்கியம் இல்லாம போயிடுவிங்களா? போராடாம எதுவும் கிடைக்காதுன்னு தெரியும் போது, காதல் மட்டும் எப்படி கஷ்டபடாம கிடைச்சிடும்” என்றாள் ஆதங்கத்துடன்,.
தன் மேல் அவள் வைத்திருக்கும் காதலை எண்ணி நெகிழ்ந்தவன் சூழ்நிலையை இலகுவாக்க நினைத்து “ஏய் அப்போ அவ என்னை கல்யாணம் பண்ணிருந்தா பரவாயில்லை யா டி உனக்கு” என்றான் கேலியாக,
“ஆஹா அந்த நெனப்பு வேற இருக்கா உங்களுக்கு???” அவன் இரண்டு பக்க மீசையை பிடித்து இழுத்து “கொன்னுடுவேன்… ஜாக்கிரதை…..” என மிரட்டியவள்,
“இந்த விசாகனுக்கு இந்த தேவசேனா தான் ஜோடி… நான் என்னோட பாயிண்டை சொன்னேன்” என்றாள் கோபமாக.
அவளின் சொல்லும் செயலும் உயிர் வரை இனித்தது அவனுக்கு, “ஏய் வலிக்குதுடி” மீசையை நீவி விட்டவன் “உனக்கு ஒன்னு தெரியுமா சனா?” என்றான் அவள் கன்னத்தில் கோலம் வரைந்து.
அவன் ஸ்பரிசம் அவளை நெளிய வைக்க மேலும் அவன் கைகளை முன்னேற விடாமல் பற்றிக் கொண்டு எதை பத்தி என்றவளுக்கு இயல்பாக இருக்க முடிய வில்லை…
“இந்த சனாவை, எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே பிடிக்கும்”. அவன் கூற்றில் விழிவிரித்து பார்த்தவளின் இதழ்களை தீண்டியபடியே “நீ என்னை பாக்கும் போது எல்லாம், சின்னப்பொண்ணு ஏதோ தெரியாதனம்மா பாக்குது…. இது ஈர்ப்பு கொஞ்ச நாள்ல சரியா போயிடும்னு தான் இருந்தேன்… கோவமும் பட்டேன்…. ஆனா உன்னோட ஒவ்வொரு முயற்சியிலும் நான் தொலைஞ்சிப் போயிட்டேன் டி” அவள் காது மடலில் உரசி சிறு முத்திரை பதித்தான்.
அவன் வாய் பேசிய மொழியும் அது செய்த ஜாலத்தையும் நம்ப முடியாமல் அவனையே இமைக்க மறந்து பார்த்தாள்.
அவளின் பார்வையில் “இன்னும் நம்பிக்கை வரலையா?” அவள் இடையில் கையிட்டு அருகே இழுத்துக் கொண்டவன் “நீ என்கிட்ட உன் காதலை சொல்லிட்டு வந்தியே, அன்னைக்கு உன்னை அனுப்பிட்டு நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா? நீ சரியா பஸ் ஏறிட்டியான்னு உன் பின்னாடியே வந்தேன்” என்றான்.
அவன் அணைப்பில் இருந்துக் கொண்டே அன்றைய நாளின் நினைவில் இருந்தவளுக்கு இன்று தான் அவன் தன் பின்னே வந்ததற்கான விளக்கம் கிடைத்தது.
“அப்போ எல்லாம் உன் மேல வெறும் அக்கறைன்னு தான் நினைச்சேன் சனா…, ஆனா, அந்த அக்கறை காதலால வந்ததுன்னு நீ தெப்பகுளத்துல விழுந்த போதுதான் உணர்ந்தேன்”.
“என் உயிரே என்னை விட்டு போன மாதிரி ஒரு பதட்டம்…. நீ நல்லா இருக்கன்னு தெரியற வரை ஒரு நடுக்கம், எனக்குள்ள இருந்தததை அப்போ தான் கண்டுபிடிச்சேன்…. அதுக்கப்புறம் என்னால அங்க இருக்க முடியாம கிளம்பிட்டேன்”.
“என்னோட எண்ணம் தவறுன்னு நானே சொல்லி உன்கிட்ட இருந்து விலகி ஓடினேன்… யாருக்குமே பயப்படாத நான், உன்னை பார்த்து பயந்தேன்… ஆனா உன் கையில அடிப்பட்டு ரத்தம் வந்தபோது எல்லாமே ஆட்டம் கண்டுடுச்சி… நீ எனக்கு எனக்கு மட்டுமேன்ற எண்ணம் என்னை ஆட்டி படைக்க ஆரம்பிச்சி இருந்தது சனா” என்றான் அவளின் கண்களில் தன் இதழ்களை பதித்தான்.
அந்த முத்தத்தில் லயித்தவள் கண்கள் பளிச்சிட “அப்போ வேணும்னு தான் என்னை சுத்த வைச்சிங்களா?” என சிணுங்கியவளின் அழகில் மொத்தமாய் கரைந்தவன் “கொல்றடி” என்றான் ஆழ்ந்த கிறக்கமான குரலில்
“நீங்க… . தள்ளிப்போங்க .. ஏமாத்துறிங்க… ம்கூம் இன்னும் எதையும் மறைக்காதிங்க வேற என்ன என்ன பண்ணிங்க சொல்லுங்க” என்றாள் விடாப்பிடியாக
இதழ் வளைத்து புன்னகையுடனே இருந்தவன் தான் செய்து வைத்த அத்தனை வேலைகளையும் ஒன்றான் பின் ஒன்றாக சொல்ல ஆரம்பித்தான்..
“என்னால தான் உனக்கு ஆபத்து வருதோன்னு கூட எனக்கு டவுட் வந்துடுச்சி.. என் கூட நீ இல்லானாலும் பரவாயில்லை நீ நல்லா இருந்தா போதும்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்… அதனால உன்கிட்ட இருந்து ஒரேடியா விலகிடலாம்னு இன்னும் என்னை கடினமாகிக்கிட்டேன். ஆனாலும் என்னால ஓரளவுக்கு மேல உன்னை விட்டு போக முடியல, உனக்கு கல்யாணம் னு கேள்விபட்டதும் முடியல தேவா, மொத்தமா இடிஞ்சிட்டேன்… எப்படி உன்னை விட்டு இருக்க போறேன்னு பயம் வந்துடுச்சி… வெளியவும் காட்ட முடியல உள்ளுக்குள்ள புழுங்கி போயிட்டேன்…”
அவனுடைய ஒவ்வொரு விளக்கத்திற்கும் அவள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றாள். தன்னை இந்த அளவிற்கு விரும்பி இருந்திருக்கிறாரே என்று நினைக்கையில் மங்கையவளுக்கு நெஞ்சம் நிறைந்து போனது …
“அந்த நேரம் திருவிழா பார்க்க சுந்தரனை கூட்டிட்டு உங்க ஊருக்கு வந்து இருந்தேன்… நீ அருண் மேல தவறுதலா தான் மோதி நின்ன ஆனாலும், எனக்கு சுர்ருன்னு கோவம் வந்து பக்கத்துல இருக்கறவனை வேணும்னுனே அறைஞ்சு உன் கவனத்தை என் பக்கம் திசை திருப்பினேன்” என்றதும்.
“ப்ராடு ப்ராடு இப்படி எல்லாம் பண்ணிங்களா?… உங்களை…” அவன் நெஞ்சில் குத்தியவள் “அன்னைக்கு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?… உங்க கையில வேற அடிப்படுடுச்சி,” அவன் கைகளை பார்த்தாள். “ஹேய் அந்த காயம் இன்னும் அப்படியேவா இருக்கும்…” கேலி பேசி மீண்டும் அவளை தன் அணைப்பில் கொண்டு வந்தவன்,
“அதுக்கு அப்புறம் நீ வெளியேவே வரல, உன்னை பாக்க முடியல… உன்னை பாக்கனும்னே உன் வீட்டுக்கு வந்தேன்…” என்றான் கல்மிஷ பார்வையுடன்.
அதனால தான் என்னை வெறுப்பேத்திக் கிட்டே இருந்திங்களா அவனை முறைத்தாள்.
அதில் உல்லாசமாக சிரித்தவன், அவளை அணைத்தபடியே
“உன் கல்யாண நாள் நெருங்க நெருங்க பயமா இருந்தது, எனக்கு உன்னை கொடுப்பாங்களான்னு… அதுவும், ஜெயசந்திரன் என் மேல ரொம்ப கோவமா இருந்தான், இதுக்குமேல எதுக்காகவும் யாருக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்ச போதுதான், அன்னைக்கு நைட் உங்க வீட்டுக்கு கிளம்பி வந்தேன். எப்படியாவது உங்க அப்பாவோட சம்மதத்தை வாங்கி உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு. ஆனா நானே எதிர்பாராதது நீ தனியா வந்தது”
“எனக்கு அவ்வளவு சந்தோஷம்…. எனக்காக ஒரு ஜீவன் இருக்கு… நான் வேண்டாம்னு நினைச்சாலும், என்னை வேணும்னு நினைக்க, எனக்காக ஒரு உறவு இருக்குன்னு தெரிஞ்ச போது வந்த சந்தோஷம்…. அந்த சந்தோஷத்தோட தான், உன்னை கூட்டிட்டு உங்க வீட்டுக்கு போனேன்… என்ன ஆனாலும் நீதான் என் பொண்டாட்டின்னு, மனசுக்குள்ள முடிவெடுத்துட்டு தான், கூட்டிட்டு போனேன்” என்றான் மனம் நிறைந்தவனாக….
அவனின் பேச்சுக்கள் அவளை முற்றிலும் உருகுலைத்து விட சூழ்நிலையின் கணம் தாங்க முடியாமல் அடுக்கலைக்குள் எழுந்து ஓடியவளின் உடல் அழுகையில் குலுங்கியது…
அவள் எழுந்து ஓடவும் என்னவோ ஏதோ என்று பின்னோடு வந்தவன் தேவாவின் அழுகையை பார்த்ததும் தானும் கலங்கியவனாக அவளை தன் புறம் திருப்பியவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“சனா இங்க பாருடா…. என்மேல உனக்கு கோவமா? என்னை நாலு அடி கூட அடி டா… இப்படி அழாதடா ப்ளீஸ்… என்னால பாக்க முடியலடா…. உன்னை நான் அழவைச்சது எல்லாம் போதும், நீ எதுக்காவும் அழக்கூடாது டா” அவளுக்காக உருகியவன்,
அவள் முகம் நிமிர்த்தி தன்னை பார்க்க வைக்க அவனை பார்க்க மறுத்தவள் அவனுள் மேலும் மேலும் புதைந்து போனாள்.
தேவாவின் அழுகை சிறிது மட்டுபட்டிருக்க கணவனின் முகம் காண நாணம் கொண்டவள் அப்படியே நின்றிட தன் நெஞ்சில் புதைந்தவளின் வாசம் மேலும் அவள் மேல் பித்தம் கொள்ள வைத்தது.
அவளின் பளிங்கு முதுகை வருடியது கரங்கள் மெல்ல மெல்ல முன்னேறி எல்லைகள் மீற பெண்ணவள் மொத்தமாய் கரைந்து அவனுள் மூழ்கினாள்.
இருவருக்கும் எல்லைகளை கடக்கும் வேகம்… ஒருவரை விட்டு ஒருவர் விலகி கொள்ள முடியாத தாகம்… ஆணவனின் வலிய கரங்கள் பெண் அவளின் மென்மைகளை அறிய ஆவல் கொண்டிட, “சனா எனக்கு நீ வேணும்” என்றான் அவள் காது மடலில் கிசுகிசுப்பாய்.
அவனின் ஒவ்வெரு தொடுகையும் பெண்ணுக்கு என்னவோ செய்தது, அவனின் மார்பினில் பதுமையாய் குழைந்தவளை கைகளில் ஏந்தியவன் பள்ளியறை பாடத்தை படித்து ஒருவருக்குள் ஒருவரை தேடி இன்பமாய் தொலைந்தனர். அவனின் ஒவ்வொரு மூச்சும் சனா சனா என ஸ்வரங்களாய் மாறி அவளை மெல்லிசையாய் இசையமைத்தது….
💐💐💐💐💐
“அம்மா, அம்மா….” என்று வாசலில் குரலை கேட்கவும் வெளியே வந்த தில்லை யார் என பார்த்தார்
“அம்மா கல்யாண பத்திரிக்கை ரெடியாகிடுச்சி… நேத்தே கொண்டு வரவேண்டியதுங்க கொஞ்சம் தாமதமாகிடுச்சி.. அதான் இப்போ கொண்டு வந்தேனுங்க” எனக் கூறவும்,
“சித்த இருய்யா…” என்றவர், அமுதா அழைத்து பத்திரிகையை பூஜை அறையில் வைக்க கொடுத்து அனுப்பியவர் விசாகனுக்கு அழைக்க போனை எடுத்தார்.
“அம்மத்தா போன் யாருக்கு?” என்றாள் அமுதா
“ஏன் புள்ள? உன் மாமனுக்கு தான்… பேரனுக்குதான் பத்திரிகை வந்துடுச்சி சொல்ல வேண்டாமா?”
“அய்யோ… அம்மத்தா, யாரு சொல்ல வேண்டாம்னு சொன்னா??? வீட்டுக்கு வரட்டும் அப்புறம் சொல்லுங்க… நேத்து ரெண்டு பேரோட முகமுமே சரியில்லை… அதுவும் இல்லாம மாமவும் தேவாவும் முதல் முறை தனியா இருக்காங்க…. இருக்கட்டும் அவங்களா வருவாங்க ல அப்போ சொல்லுங்க” என்றவளுக்கும் நேற்று கோவிலில் என்ன நடந்தது என்று தெரியும் தானே அதனால் தான் மாமனுக்கு ஆதரவாக பேசி அவர்களின் தனிமையை நீட்டித்தாள்…