தெருவையே அடைத்து பந்தலிட்டு திருமண விழா, கோலாகமாக நடந்து கொண்டிருந்தது. வாசலில் கட்டி இருந்த வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள், வண்ண மலர்களின் அலங்காரங்கள், அனைத்தும் கண்களை கவர்ந்திட, மங்கள வாத்தியங்கள், வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த அந்த மண்டபத்தில், சொந்தபந்தங்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
“டேய் கல்யாணம் எனக்கா உனக்கா?” இடுப்பில் கை வைத்து நண்பனை சீண்டினான் சுந்தரன்.
“என்ன கேள்வி டா இது….? கல்யாணம் உனக்கு தானே அதுக்கு தான் உன்னை ரெடியான்னு பார்க்க வந்தேன்” விசாகன் எரிச்சலான குரலில் கூற வந்தாலும் அதில் இளநகையும் கலந்திருந்தது.
“போலாம் போலாம்… ஒன்னும் அவசரமில்ல…. நானும் பார்த்துட்டு இருக்கேன்… பட்டு வேட்டி சட்டைல சும்மா கலக்குறியே மாப்ள…. வர்றவங்க எல்லாம் என்னை பார்க்குறதை விட உன்னை தான் சைட் அடிப்பாங்க போல… எதுக்கும் தேவாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கனும் போல உன் புருசன பத்திரமா பாத்துக்கம்மான்னு …” அவனை ஓட்டினான் சுந்தரன்.
“ஏண்டா உனக்கு இவ்வளவு பொறாமை… ஒன்னுமில்லாத விஷயத்தை அவ கிட்ட சொல்ல வேற போறியா… வேற வினையே வேண்டாம் மாப்ள… பாக்குறவங்க ஏண்டா பார்த்தோம்னு நினைக்குற அளவுக்கு பேசிடுவா” கூறியவன் குரலில் கொஞ்சம் கடினத் தன்மையை முயன்று வரவழைத்து இருந்தான்.
“முதல்ல கிளம்புடா… இது எல்லாம் வக்கனையா பேசு… கல்யாணம் ஆனா உனக்கே புரியும் குடும்பஸ்தன் பாடு என்னன்னு… ” வேறு அர்த்தத்தில் கூறியவன் அவன் அடுத்த கேள்வி கேட்பதற்குள், அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான். இவனிடம் மாட்டினால் தன் வாயில் இருந்தே எல்லாத்தையும் வாங்கி விடுவான் என அஞ்சியே வெளியேறினான்.
விடிந்தது முதலே தேவாவின் மனது படப்படப்புடன் இருந்தது. முகத்தில் சந்தோஷம் இருந்தாலும், மனதில் ஒரு வித சஞ்சலமும் எதிர்பார்ப்பும் போட்டி போட்டுக் கொண்டு இருக்க தாய் தந்தையரின் வருகையை ஆவலாய் எதிர்பார்த்து காத்திருந்தாள்.
விசாகன் அவளுக்காக தேர்ந்தெடுத்த பன்னீர் ரோஜ நிறத்தில் இருந்த புடவை பாந்தமாய் அவள் உடலை தழுவியிருந்தது.. தளர பின்னிய கூந்தலில் மல்லிகை உறவாடிட மிதமான அலங்காரத்தில் தில்லையின் பரம்பரை நகைகளை அணிந்து, பெரிய வீட்டு மருமகளாய் வளைய வந்துக் கொண்டு இருந்தாள் தேவசேனா. பெரிய வீட்டின் மருமகள் என்ற ஆர்பாட்டம் எதுவும் இன்றி எளிமையாய் பழகும் அவளின் குணம் அனைவரையும் ஈர்த்தது. குறிப்பாய் விசாகனை இன்று பாடாய் படுத்தியது..
“தேவா.. அம்மாடி தேவா… இந்தா தாயீ இதை கொண்டு போய் மேடையில வைச்சிடு” வயதான பெண்மனி கொடுத்து விட்ட பழதட்டையும் மஞ்சள் கும்கும தட்டையும் எடுத்துக் கொண்டு சென்றவள், வாசல் புறம் பார்த்துக் கொண்டே சென்றதால் யார் மீதோ மோதி நின்றாள்.
பட்டு வேட்டி சட்டையில் மனையாளுக்கு நிகராய் தனி அழகுடன் நின்றிருந்த விசாகன் அவளை தாங்கி பிடித்தவாறு,
“ஏய் பாத்துடி…. எதுக்கு இந்த அவசரம்..? பாத்து மேல ஏறு… அடி ஏதாவது பட்டுச்சா..?” அவளை ஒழுங்காக நிற்க வைத்தான்.
விசாகன் சுந்தரன் அறையிலிருந்து வரும்போதே தேவாவின் முக மாற்றமும் அவளின் கவன சிதறலையும் பார்த்துக் கொண்டே வந்தவன் அவள் விழும் முன்னே தாங்கி பிடித்திருந்தான்.
கணவனின் கேள்விக்கு கால் வழுக்கிடுச்சி என்றவளின் முகமே வாடி போய் இருந்தது.
கூட்டத்தில் எதுவும் பேசமுடியாது என நினைத்தவன், அவளிடம் வாங்கியவற்றை மனையில் வைத்துவிட்டு யார் கருத்தையும் கவரா வண்ணம் தேவசேனாவை சற்று ஓரமாய் அழைத்து வந்தான்.
“என்ன சனா? ஏன் டல்லா இருக்க? ஏதாவது பிரச்சினை யா? என்றான் வந்திருந்த சொந்த பந்தங்கள் அவளிடம் ஏதாவது மனம் நோகும்படி பேசி விட்டார்களோ என நினைத்தே கேட்டான்.
“பிரச்சைனையா? பச் அப்படி ஒன்னுமில்ல மாமா…. இவ்வளவு நேரம் ஆகிடுச்சி, இன்னும் வீட்டுல இருந்து யாருமே வரலியே” என்றாள் ஏக்கமாக
“இன்னும் டைம் இருக்கு சனா, கண்டிப்பா வருவாங்க… முதல்ல கண்ணை துடை மண்டு… கண்ணுக்கு போட்டு இருந்தது எல்லாம் கலைச்சி பயங்கரமா தெரிய போற…” என்றான் கொஞ்சம் கேலியாக அவள் மனம் மாற்றும் பொருட்டு,
அவன் கேலி சரியாக வேலை செய்ய முயன்று கண்ணீரை அடக்கியவள் புறங்கையால் முகத்தை துடைத்துக் கொண்டே “பரவாயில்லை” என கூறி வாசலில் பார்க்க சௌந்தரலிங்கமும் அவரது மனைவி மரகதமும் சீர் தட்டுடன் மண்டபதற்குள் நுழைந்தனர்.
பார்த்தவள் விழிகள் கலங்கி விட “சனா” என அழைத்தவனுக்கு அவள் வாசல் புறம் கை காட்டிட அவனுக்குமே சந்தோஷம் பெறுகியது…
தேவாவின் தாய் தந்தையரை பார்த்ததும், “வா” என அவளையும் தன்னுடன் இழுத்துச் சென்றவன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தான்.
“வா… வா.. வாங்க பா வாங்க மா..” பேச திணறியவள் அவர்களை அழைக்க சௌந்தரலிங்கமோ அவளின் அழைப்பை சிறிது கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை. தூரத்திலிருந்து வரும் போதே மகள் அழுகிறாள், என தெரிந்து விட்டது… அவளை பார்த்தாள் இப்போது தாம் கரைந்து விடுவோமோ என நினைத்தவர் வலுக்கட்டயமாக மௌனத்தை கேடயமாக உபயோகித்துக் கொண்டு இருந்தார்
தந்தையின் பாரா முகம் அவளை வாட்ட அழுகையை அடக்க முடியவில்லை அவளுக்கு, மனைவி கலங்குவதை பார்க்க பொறுக்காதவன் “நீ அம்மாவை அழைச்சிட்டு அமுதாவோட ருமூக்கு போ சனா… அப்பத்தா அங்க தான் இருக்காங்க..” எனக் கூறி அவர்களை அனுப்பியவன் “வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்ங்கய்யா” என்றிட, அதற்கு தலையசைத்து அவன் உபசரிப்பை ஏற்கொண்டார் சௌந்தரலிங்கம்.
இருவீட்டு சார்பிலும் அழைப்பை விடுத்திருக்க, சுந்தரனின் தந்தையும் அவர்களை அழைக்க வந்து விட்டதால் அவரை சௌந்தரலிங்கத்துடன் இருக்க வைத்துவிட்டு “இதோ வந்து விடுகிறேன்” என அவரிடம் மரியாதை நிமித்தமாக கூறியவன் மற்ற வேலைகளை கவனிக்க சென்றான் விசாகன்.
அதன் பிறகு அவனை வேலைகள் முழ்கடித்துக் கொள்ள கல்யாண வீட்டிற்கே உண்டான பரபரப்பு அங்கே களைகட்டி இருந்தது.
தாயின் பின்னயே கண்கள் கலங்க சென்றவளிடம்
“அடியே… எல்லாரும் பாக்குறாங்க கண்ணை துடை, எதுக்குடி இப்படி அழுதுக்கிட்டே வர்ற…? அதான் அப்பா வந்துட்டாரு ல எல்லாம் நல்லாபடியா நடக்கும்” மரகதம் பெண்ணை சமாதனப்படுத்திக் கொண்டு சென்றார்….
“பம்…..” தேவாவின் காதில் பெரும் சத்தத்துடன் கூவியபடி வந்து நின்றாள் மேகலா… பாவாடை தாவணியில் அட்டகாசமாய் தெரிந்தவளை பார்த்ததும் சிரிப்புடனே “எப்போ கலா வந்த?” என்றாள் தேவா.
“இப்போ தான் அப்பா அம்மா கூட வந்தேன். அம்மா தெரிஞ்சவங்க கூட பேசிட்டு இருக்காங்க எங்க அப்பா உங்க அப்பா கூட பேசிட்டு இருக்காரு…” என்றவள் மரகதத்திடம்
“பரவாயில்லையே அத்த பொண்ணு வீட்டு கல்யாணத்துக்கு முதல் ஆளா வந்து இருக்கிங்க இன்னைக்கு மழை தான்” அவரை கிண்டலடித்தாள் மேகலா.
ஏதோ பேச வாயெடுத்த மேகலாவை பார்த்து சிரித்த தேவசேனா ,
“சரி போதும் டி, வாய் ஆடினது… நீயும் என் கூட வா அமுதா ரூம் போயிட்டு வரலாம்” என தேவா மேகலாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.
அடர் கரும் பச்சையில், முழம் அளவு தங்க ஜரிகை ஒரு பக்கம் முழுவதும் படந்து இருக்க உடல் முழுவதும் ஆயிலை வேய்ந்திருந்த புடவை உடுத்தி மணமகள் அலங்காரத்தில், தங்க விக்கிரகமாய் , உறவுப் பெண்களுடன் அறைக்குள் இருந்த அமுதாவின் கண்கள் கலங்கி இருந்தது… அருகில் தில்லையும் ஆறுதலை சொல்லியபடி இருந்தார்..
தன் அன்னை இல்லையே என்ற ஏக்கம் பெருமளவு வாட்ட கலங்கிய விழிகளோடு அமர்ந்து இருந்தவளை கண்டதும் தில்லைக்குமே மகளது நினைவில் தொண்டை அடைக்கத்தான் செய்தது… நேற்றிலிருந்தே அம்மாவின் நினைவு அவளை வாட்டுகிறது என்பதை அறிந்த தேவா சிலவற்றை கூறி அவளை தேற்றி இருந்தாள் …
“அம்மாடி” என ஆதுரமாக அவள் தலையை வருடிய மரகதம்
“எங்க இருந்தாலும் அவங்களேட நினைப்பு உன்னை சுத்தி தானே இருக்கும்… நீ சந்தோஷமா வாழ்ந்தாலே அவங்க ஆத்மா நிம்மதியா இருக்கும்.., அந்த நிம்மதியை கொடுக்கனும்னா இப்போ நீ சந்தோஷமா இந்த நிமிஷத்தை அனுபவிக்கனும் புள்ள…” அவளுக்கு புரிய வைத்தவர், தான் கொண்டு வந்த சீர் தட்டில் இருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டு “என்னைக்கும் நிறைஞ்ச சந்தோஷத்தோட இருக்கனும்” என்று வாழ்த்தினார்.
…..
அய்யர் மந்திரம் ஓதிட அக்னி குண்டத்தின் முன்னே அமர்ந்து இருந்தவனது கரங்களில் மங்கள நாணை கொடுக்க அழகு பதுமை என அவன் அருகில் அமர்ந்திருந்த அமுதாவின் செம்பவள கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து தனது உயிரில் சரி பாதியாக இணைத்துக் கொண்டான் சுந்தரன். அவன் அணிவித்த மாங்கல்யத்தை ஏற்றுக் கொண்டவளோ தாயின் நினைவில், விழிகள் கலங்கி இரு சொட்டு நீர் அவன் கரங்களில் பட்டு தெரிக்க, வகிட்டிலும் நெற்றியிலும் குங்குமம் இடும் சாக்கில் அவளை அப்படியே இறுக அணைத்து விடுவித்தவன், கண்களை மூடி திறந்து அவளை ஆறுதல் படுத்தினான்.
இந்த அணைப்பும் ஆறுதலும் அவளுக்கு நிறைவாய் இருக்க மலர்ந்த முகத்துடனே அடுத்த அடுத்த சடங்குகளை நிறைவேற்றினார்கள் இருவரும்.
திருமணம் முடிந்ததும் சௌந்தரலிங்கமும் மரகதமும் கொண்டு வந்த சீர் தட்டை அவர்களுக்கு வழங்கிட கால்களில் விழுந்து வணங்கிய தம்பதிகளை இருவரும் ஆசிர்வதித்தனர். அதை பார்த்து இருந்த தேவசேனாவிற்கோ தன் திருமணத்தில் நடந்தது எல்லாம் நினைவுக்கு வந்து வாட்டியது… தந்தையிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என நினைத்தவள் அவர் பின்னேயே வந்தாள்.
திருமணம் முடிந்து விருந்தினர்கள் அனைவரும் சாப்பிடும் இடம் நோக்கி சென்று இருக்க வெகு சிலரே இருந்தனர். அந்த இடத்தில் “அப்பா அப்பா” என அழைக்க காதில் வாங்காதவர் மண்டபத்தின் பின் புறம் வந்து நின்று விட, அவர் முன்னே போய் நின்றவள் “அப்பா” என்றாள் கண்ணீருடன்.
தேவாவை காண விருப்பமில்லாமல் அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். என்னை பாக்கக் கூட உங்களுக்கு பிடிக்கலையாப்பா?” என்றாள் தழுதழுத்த குரலில்
மாமனாரும் மாமியாரையும் சாப்பிட அழைத்துச் செல்ல அவர்களை தேடி வந்த விசாகன் மண்டபத்தின் பின்புறம் தேவா அவரிடம் பேசுவதை பார்த்துவிட சிறிது தூரத்திலேயே நின்று விட்டான்.
சற்றும் இளக்கம் காட்டாமல் விரைப்புடனே இருந்தவர் “ஏய் மரகதம், எங்கடி இருக்க? நாம கிளம்பலாம்” என தன் பின்னே நின்ற மனைவியை அழைத்தார்.
மகள் அழுகிறாளே என்ற கவலையுடன் அவர் முன்னே வந்து நின்ற மரகதம் “அவ என்ன சொல்றான்னு தான் சித்த கேளுங்களேன்….” என்று கூறியது தான் தாமதம்
“நிறுத்திடி என்ன கேக்க சொல்ற? என் மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் வாங்கிட்டு போனாளே, அந்த கதையை கேக்க சொல்றியா?” என்றார் கோவமாய்.
அவர் உணர்ச்சிவசப்பட்டு கத்தவும் அழுதபடி இருந்தவள் அவரின் கைகளை பற்றிக் கொண்டு, “அப்பா, நான் அவர் கூட ஓடிப்போய் கல்யாணம் பண்ண நினைச்சி இருப்பேன்னு நீங்களும் நம்புறிங்களா பா” என்றாள் அழுகையுடன்.
மகள் கேட்டதற்கு கொதிப்புடன் இருந்தவரிடம் “இதை உங்ககிட்டயே சொல்றதுக்கு என்னை மன்னிச்சிடுங்க பா” தந்தையிடம் மன்னிப்பை வேண்டியவள்.
“உண்மைய சொல்லனும்னா எனக்கு அவரை பிடிச்சி இருந்தது பா… எப்போ, எப்படி, எந்த நிமிஷம், அவரை நான் விரும்ப ஆரம்பிச்சேன்னு எனக்கு தெரியல பா…. கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே நடந்துடுச்சி… ஆனா யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணணனும்னு நான் என்னைக்குமே நினைச்சது இல்லப்பா” என்றாள் தலையில் அடித்தபடி
“ஏய் என்னடி பண்ற? யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க” மரகதம் அருகில் வந்து மகளை தடுக்கவும், தான் இருக்கும் சூழ்நிலையும், இருக்கும் இடத்தையும் ,உணர்ந்து தன்னை நிலைபடுத்தியவள்,
“எனக்கு நீங்க திடீர்னு அருண் கூட கல்யாணம்னு சொன்னதும் அதை நிறுத்த தான் வழிய பார்த்தேனே தவிர, அவர் கூட ஓடி போகனும்னு நினைக்கவே இல்லப்பா… சத்தியமா நான் நினைக்கலப்பா… எங்க அப்பாவோட கௌரவத்தை எந்த இடத்திலும் நான் விட்டுட மாட்டேன் பா…” அவர் மகள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவரை இருக்கையில் பொத்தென்று அமரவைத்தது.
இதற்கு அவரிடம் பதில் இல்லையே… தனக்கு பிடிப்பது எல்லாம் மகளுக்கும் பிடித்து விடும் என்றவரின் கணக்கு தவறாய் போன இடம் அல்லவா அது…. அவருக்கு ஒரு நிமிடம் தொண்டை அடைத்தது.
“ஏன் பா அன்னைக்கு ஒரு வார்த்தை கூட நீங்க என்னை கேட்கல? யரோ ஒருத்தர் கூட வந்தேனா, என்ன ஆச்சு, ஏன் போனன்னு… ஏன் பா ஒரு வார்த்தை கூட ஒன்னுமே கேக்கல என்றாள் கரகரப்பான குரலில்…
“நீங்க என்னை அப்படி தான் ஓடிபோய் இருப்பேன்னு நினைச்சிட்டிங்களா? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியமாப்பா இதுவரை நான் மட்டும் தான் ஒருதலையா அவரை காதலிச்சி இருக்கேன்.. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையும் என் காதலை அவர் ஒத்துக்கவே இல்லப்பா…” என்றவளது குரல் உடைந்து போயிருந்தது… மனைவி படும் வேதனையை கண்டு வருத்தம் கொண்ட விசாகன் அருகில் செல்ல அவனை சைகையாலையே தடுத்தார் மரகதம்.
இருகைகளாலும் முகத்தை அழுந்த துடைத்தவள் “அன்னைக்கு நான் சாகதான் அப்பா போனேன்… செத்து இருந்தா, ஒரே அடியா போய் சேர்ந்து இருப்பேன்… ஆனா என் போறாத காலம் அங்க தான் அவரு என்னை பார்த்து கூட்டிட்டு வந்தாரு…. உண்மை என்னன்னு சொல்றதுக்குள்ள அண்ணன் என்னென்னமோ பண்ணிடுச்சி…”
“உங்க வாயாலையே அவரை நல்லவருன்னு சொல்லி இருக்கிங்க… ஆனா, ஏன் உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்காம போயிடுச்சி…? அவரு வேற ஆளுன்னு உங்களுக்கு எங்களை ஏத்துக்க முடியலையா அப்பா…?” மகள் கேட்கவும் சௌந்தரலிஙகம் மனம் முற்றிலும் ஆட்டம் கண்டு போனது.
தான் விசாகனை ஏற்றுக் கொள்ள முடியாமல் போவதற்கு மகள் கூறும் காரணமும் ஒரு விதத்தில் உண்மை எனும் பட்சத்தில் தேவாவை பற்றி ஒரு முடிவை எடுக்க முடியாமல் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து வெளியேறிட, மகளை கண்களாலயே தேற்றி விட்டு மருமகனிடமும் கையை கூப்பிய மரகதமும் கணவரின் பின்னே சென்றார்.
இவையனைத்தும் பார்த்துக் கொண்டு இருந்த விசாகன் தேவாவின் அருகில் வந்து அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன்,
“அவருக்கும் கொஞ்சம் அவகாசத்தை கொடு சனா…. அவருக்கு நீ சொன்னது எல்லாம் புரிஞ்சிடுச்சி, ஆனா சட்டுனு நம்மை ஏத்துக்கனும்னு மனசு வருமா டா…. காலம் கொஞ்சம் கொஞ்சமா தான் மாத்தும்… அதுவ
ரை பொறுத்து இருடா… அவரை காயப்படுத்தாதே” அவளுக்கு ஆறுதலை சொல்லி தேற்றியவன் அவளை தன்னுடனயே இருத்திக் கொண்டான்.