அலையலையாக மனதில் எழும் எண்ணங்களுக்கு, அழுகை ஒன்றையே ஆறுதலாக எண்ணி அழுது கரைத்தவள், விடிவிளக்கின் ஒளியில் கலைந்த ஓவியமாய் விழிமூடி படுத்திருந்தாள்.
கல்யாண வேலைகளை முடித்து அனைவருக்கும் பணத்தை கொடுத்து முடித்து வீட்டிற்கு வர நேரமானதால் நேராக குளியலறை நோக்கி சென்றான் விசாகன்.
அலுப்பு தீர குளித்து விட்டு வந்தவன் கட்டிலில் படுத்திருத்த மனைவியின் மறுபக்கம் படுத்தான்.
அவன் உள்ளே நுழையும் போதே விடிவிளக்கின் ஒளியில் வரிவடிவமாய் இருந்தவளின் கண்ணீர் கறைகளை கண்டு விட்டவன் மனைவி அழுதிருக்கிறாள் என்றும், அவள் இன்னும் தூங்கவில்லை என்பதனையும், அனுமானித்தே இருந்தான். அவள் புறம் திரும்பி படுத்தவன் “சனா” என்றான் மெல்லிய குரலில்,
“ம்”
“என்ன டா… இன்னும் தூங்கலையா???”
“தூங்கனும் மாமா” என்றாள் மெலிந்த குரலில்
“இந்த பக்கம் திரும்பி படு சனா”
“எனக்கு தூக்கமா வருது மாமா… நான் இப்படியே படுக்குறேன்…” என்றாள் தொண்டைக்குள் சிக்கிய வார்த்தைகளை முயன்று வரவழைத்த கரகரப்பான குரலில்,
அவளின் இடையில் கையிட்டு தன் புறம் திருப்பியதும், அடக்கி வைத்திருந்த அத்தனை அழுகையும் அவனைக்
கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள்.
அவள் அழட்டும் என விட்டவன், முதுகை வருடியவாறே ஆஸ்வாசப்படுத்த, அழுகை மெல்ல கேவல்களாக உறுமாறியது.
“என்ன நடத்ததுன்னு இப்படி அழுகுற டா?”
“ஒன்னுமில்ல மாமா”
“ஒன்னுமில்லாததுக்கு தான் இப்படி அழுவாங்களா! என்னடா…?” என்றான் அனுசரணையாய்
அவன் அன்பில் நெகிழ்ந்தவள், அவள் மனதை அழுத்திய கேள்வியை அவனிடமே கேட்க விழைந்து “மாமா நான் உங்களை லவ் பண்ணது பெரிய தப்பா?”
“இல்லடா செல்லம்மா என்னை மீட்டதே உன் லவ் தானேடா மாமாவுக்கு நீ வந்த பிறகு தான் வாழ்க்கையிலே சந்தோஷமே வந்தது” என்றிட அவனை இறுக அணைத்து, அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவள்,
“அப்புறம் ஏன் மாமா அப்பா, அண்ணா என்னை புருஞ்சிக்கவே இல்லை” என்றாள் உடைந்த குரலில்.
“மாமா நம்மள எங்க அப்பா ஏத்துக்குவாங்களா?!?! என் அண்ணன் என் கூட பேசுமா?” என்றாள் பாசத்திற்கு ஏங்கும் சிறு குழந்தையாய்.
அவள் கேள்வியில் அவர்களை எந்த அளவிற்கு தேடுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு அவள் முகமும் அகமும் வாடுவதைக் கண்டு இதயம் வலித்தது…
“கண்டிப்பா ஒரு நாள் உன்னையும் என்னையும் ஏத்துக்குவாங்கடா “…. என்றவன் அவளை திசை திருப்புவதாற்காகவே அவளை நெருங்கினான். வேறு எந்த சிந்தனையும் அவளை அண்டாதவாறு தன்னை மட்டுமே அவளுக்கு உணர்த்த துவங்கியவன் தன் வாழ்க்கை முழுவதும் அவளே என்பதை அவளின் காதல் கணவன் உணர்த்திக் கொண்டிருந்தான்.
—-
காற்றில் கரையும் கற்பூரமாய் நாட்களும் வேகமாக கரைந்து சென்றது…
இதோ அதோவென அமுதாவின் திருமணம் முடிந்து 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் அமுதா பிள்ளை உண்டாகி இருக்க அவள் மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்த தொழிற்சாலை மற்றும் அரிசி ஆலை வரவுசெலவு கணக்குகளை பார்க்க வேண்டாம் என விசாகனும் சுந்தரனும் கூறி இருக்க வீட்டிலேயே ஓய்வை எடுத்துக்கொண்டு இருந்தாள்.
இதற்கிடையில் தேவாவிற்கும் மேகலாவிற்கும் கடைசி வருட பருவத்தேர்வு தொடங்கி இருக்க நல்ல முறையிலையே தேர்வுகளை எழுதி இருந்த இருவரும் பேருந்திலேயே வீட்டிற்கு பயணமானார்கள்.
“எப்படியோ ஒருவழியா படிப்பை முடிச்சாச்சி யப்பா…..” என கல்லூரியை பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டாள் மேகலா.
“என்னடி அவ்வளவு தானா உன் படிப்பு? மேல படிக்கும் எண்ணம் இல்லையா கலா?” என்றாள் தேவா மேகலாவை பார்த்து கேள்வியாக
“சுத்தமா இல்ல புள்ள…. இதுவே பொண்ணு பாக்க வர்றவன் என்னை மட்டமா நினைக்க கூடாதேன்னு தான் புள்ள படிச்சேன்” என்றாள் மேகலா சலிப்புடன்,
தன் அண்ணனை பற்றி மேகலா என்ன அபிப்பிராயம் வைத்து இருக்கிறாள் என தெரிந்துக் கொள்ள நினைத்து, ஜெயசந்திரனை பற்றிய பேச்சினை எடுத்தாள்.
“சரி, அது எல்லாம் இருக்கட்டும் டி… நான் உன்னை ஒன்னு கேட்பேன் உன் மனசுல என்ன தோணுதோ மறைக்காம என்கிட்ட சொல்லனும்… எங்க அண்ணனை பத்தி என்ன நினைக்கிற கலா?” என்றாள் அவள் முகம் பார்த்து ஆர்வமாக,
“உங்க நொண்ணனை பத்தி நினைக்க என்ன இருக்கு… அந்த சைக்கோவை பத்தியெல்லாம் நினைக்க நேரமில்ல புள்ள” எனக் கடுப்பாக கூறியவள்,
“வேணும்னா உன் அத்தை பெத்த ரத்தினம்…. அதான் வாட்டசாட்டமா இருப்பானே… அருணு, அவனை பத்தி வேணா பேசலாம் டி… இந்த சண்டியரை பத்தி மட்டும் என்கிட்ட பேசாத… ஆமா புதுசா என்ன உன் நொண்ணக்காரனை பத்தி என்கிட்ட பேசுறா?” என்றாள் மேகலா யோசனையாக
“அது சும்மா டி… அவனுக்கு கல்யாணம் பண்ணனுமா, அம்மா சொல்லிட்டு இருந்தாங்க அதான் உன்னை மாதிரி பொண்ணுங்க எல்லாம் அவனை பத்தி என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சி வைச்சிக்கிட்டா, நாளபின்ன பொண்ணு பாக்கும்போது ஈசியா இருக்கும் ல அதான் கேட்டேன் டி” என்று பேச்சை மாற்றினாள்.
“இந்தா பாரு புள்ள நீ என்ன சொன்னாலும் சரி, முகத்தை தூக்கி வைச்சிக்கிட்டாலும் சரி, உங்க நொண்ணன் குணத்தை மாத்த முடியாது… மூக்குக்கு மேல கோவம்… அடுத்தவங்கள புரிஞ்சிக்காத பேச்சி, விட்டுக்கொடுக்காத மனசு… எல்லாம் வைச்சித்தான் நான் சொல்றேன்… என்ன இருந்தாலும் வர்ற பொண்ணு பாவம் தானே” என்றாள்.
“என்னடி என் அண்ணனை பார்த்தா கெட்டவன் மாதிரியா தெரியுது உன் கண்ணுக்கு??… என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,
“சே.. சே…. நான் நினைக்க என்னடி இருக்கு… அதானே உண்மையும்” என்றதும்,
“உனக்கு வாய் ரொம்ப அதிகமாகிடுச்சி கலா… இந்த வார்த்தையிலையே கபடி ஆடுறதை எங்கதான் கத்துக்கிட்டயோ… நீ அடங்மாட்ட டி ” என்றவள் அப்போது அந்த பேச்சை கைவிட்டவளாய் மற்றதை பேசினாள்.
……….