“வா அப்பத்தா.. வாங்க வாங்க வா மா தங்கச்சி. வாடா மாப்ள… வேலை முடிஞ்சிதா” என நண்பனை விசாரித்து வந்தவர்களை வரவேற்று கோவிலுக்குள் அழைத்து வந்த சுந்தரன் அமுதா இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
அமுதாவிற்கு ஐந்தாம் மாதம் தொடக்கத்தில் இருக்க பூ முடிக்க வந்திருந்தனர் தில்லையின் குடும்பத்தினர்.
தாய் வீட்டு சொந்தங்களை பார்த்ததும் அமுதாவின் அகமும் முகமும் மலர்ந்துவிட தாய்மையின் பூரிப்பில் இன்னும் அழகில் மிளர்ந்த அமுதாவின் தலையில் பூக்களை வைத்து அலங்கரித்தனர் பெரியவர்கள்… இது 5 ம் மாதம் என்பதால் நெருங்கிய உறவுமுறைகளை மட்டுமே அழைத்து இருந்தனர் சுந்தரன் வீட்டினர். அதுவே நூறு பேரை தாண்டி இருந்தது.
நண்பர்கள் இருவரும் வேலை பற்றி சில விஷயங்களை பேசிக்கொள்ள தேவா அமுதாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.
அமுதாவின் மணிவயிற்றில்
தன் வெண்பஞ்சு விரல்களை வைத்து “உள்ள பாப்பா என்ன சொல்லுது அமுதா” என்றாள் தேவா ஆசையாக,
அதில் நாணம் கொண்டவளாய் வெட்கத்தில் சிரித்த அமுதா “அதை நீயே கேளேன் தேவா பாப்பா என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்” என்றாள் அவளிடம்,
“அதையும் கேட்டிடுவோம்” எனக் கூறிய தேவா அமுதாவின் மேடிட்ட வயிற்றில் காதை வைத்து கேட்டவள் “அவங்களுக்கு பசிக்குதாம் சீக்கிரம் அம்மாவை சாப்பிட சொல்லுங்கன்னு சொல்லுது’ என கிங்கினியாய் சிரித்தபடி கூறியவள்,
,நீங்க சாப்பிட்டா தானே குட்டி பாப்பா சாப்பிடும்” அவளை அழைத்து போக “நீ இருத்தா, நான் கூட்டிட்டு போறேன்…” என்று சுந்தரனின் உறவுமுறையில் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் அமுதாவை அழைத்து வந்து மனையில் அமர வைத்தார்.
தேவா அதை பற்றி பெரிதாக எதுவும் நினைக்கவில்லை என்றாலும் தீடீரென அவர் வந்து தன்னை நிறுத்திவிட்டு அமுதாவை அழைத்து சென்றது ஏதோ போல் ஆகி விட அமைதியாக விசாகன் அருகில் போய் நின்றுக் கொண்டாள்.
மனையில் அமரவைத்த அமுதாவிற்கு மூத்த பெண்மணிகள் நலங்கு வைத்து கைவளை பூட்டி சாதம் ஊட்டினர். கன்னகதுப்புகளில் பூசிய சந்தனம் மனைவியை அழகியாய் காட்ட அருகில் நின்றிருந்த சுந்தரன் தன்னவளை வெகுவாக ரசித்துக் கொண்டு இருந்தான்.
ஒவ்வெருவராக வந்து நலங்கு வைக்க தில்லை தேவாவை அழைத்து வளையல் அடுக்க கூறினார்.
ஏற்கனவே அந்த பெண்மணி கூறியதில் தள்ளி நின்றவள் இன்னும் ஏதேனும் பேச்சு வருமோ என அஞ்சி “வேண்டாம் பாட்டி பெரியவங்க செய்றாங்க நான் எதுக்கு” தயங்கி விலகி நின்றாள்.
“அட வா மா… கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேல, ஆக போகுது இன்னும் பிள்ளை உண்டாகம இருக்க, இதுலயாவது நலுக்கு வைச்சி வளையல் வாங்கிக்க கண்ணு…. சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்….” அமுதாவை அழைத்து வந்த அதே பெண்மணி போகிற போக்கில் கூறியதும் தேவாவிற்கு அவர் கூறிய வார்த்தைகளில் கண்களில் நீர்மணி கோர்த்துக் கொண்டது. இதற்கு தானே அவள் தயங்கி ஒதுங்கி நின்றது… அப்படியும் வார்த்தைகள் வந்துவிட அவளுக்கு தான் ஒருமாதிரி ஆகிபோனது.
இதை கேட்ட அமுதா அதிர்வாய் தேவாவின் முகம் பார்க்க சுந்தரன், விசாகன், தில்லை, சுந்தரன் குடும்பத்தினர் என்று யாரும் இதை எதிர்ப் பார்க்கவில்லை மனைவியின் கலங்கிய முகம் கண்ட விசாகனுக்கு கோவம் சுறுசுறுவென ஏறியது…
கணவன் ஏதாவது வெடுக்கென்று கேட்டு விடுவானோ என்று பயந்த தேவா விசாகனின் கைகளை இறுக பற்றிக் கொண்டவள் வேண்டாம் என அமைதியாக அவனை தடுத்தாலும், ஒரு அண்ணனாய் சுந்தரன் அதை செய்திருந்தான்.
“என்ன பெரியம்மா பேசுறிங்க? எப்போ எது பேசனும்னே தெரியாத உங்களுக்கு?…. இப்போ இதை பத்தி கேட்டே ஆகனுமா? எப்படி சிரிச்சிட்டு இருந்தா பாருங்க அவ முகமே வாடிபோச்சி… அவ படிக்கிற பொண்ணு அவங்களுக்கு தெரியும் எப்போ எது வேணும்னு நீங்க பாடம் எடுக்க வேண்டாம்” அவரை அனைவரின் முன்னிலையிலும் சுந்தரன் தூக்கி எரிந்து பேசிவிட்டான்.
“அது இல்ல சாமி, நான் நல்லதுக்கு தான் சொன்னேன்” அந்த பெண்மணி கூறினாலும்
விசாகனின் முகத்தில் தெரிந்த கோவத்தை கண்ட தில்லை நிலைமை மோசமாவதை உணர்ந்து பேத்தியின் முகத்தினை கைகளில் தாங்கியவர்,
“இவளே குழந்தை தான் மா இவளுக்கு என்ன வயசு ஆகிடுச்சி…. படிக்கிற புள்ளத்தா…. நாங்க அதை பத்தி நினைக்கவே இல்லை… எப்போ எங்களுக்கு அந்த வரம் கிடைக்குதோ அப்போ அது கிடைக்கட்டும்… என் பேத்தி வயித்துல என் மகனோ மருமகளோ வந்து பொறப்பாங்க அது நடக்க வேண்டிய காலத்துல கண்டிப்பா நடக்கும்… இதை பத்தி பேச இப்போ என்ன கிடக்கு… வந்தது அமுதா கண்ணு விசேஷத்துக்கு அதை மட்டும் பாப்போமே என்று அழுத்தமாய் கூறினார்.
வயதில் மூத்தவரும் ஊரில் பெரிய வீட்டு மனுஷியுமான தில்லையின் வார்த்தை பேசியவரின் வாயை அடைக்க “நான் ஒன்னும் தப்பா சொல்லலத்தா கல்யாணம் ஆகி நாளேச்சேன்னு நல்ல எண்ணத்துல தானே சொன்னேன்” அந்த பெண்மணி உடனே பின் வாங்கவும் சூழ்நிலையை மாற்ற விரும்பிய தேவா,
“விடுங்க பாட்டி, அவங்க எதுவும் தப்பா சொல்லலை… நீங்க எதுக்கு விளக்கம் எல்லாம் கொடுக்குறிங்க பாட்டி… இப்போ என்ன அமுதாவுக்கு வளையல் அடுக்கனும் அவ்வளவு… தானே நானே அடுக்குறேன்” என்றவள் அவளுக்கு சிரித்தமுகமாகவே வளையிட்டு பூ தூவி சாதம் ஊட்டி அவளிடமிருந்து வளையல்களை பெற்றுக்கொண்டாள்.
“சாரி தேவா, இவங்க எப்பவும் வெடுக்கு வெடுக்குன்னு பேசிடுவாங்க அதுக்கே இவங்க கூட நான் பேசவே மாட்டேன்… எங்க வந்து என்ன பேசனும்னு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல… வயசான மட்டும் போதுமா பக்குவமா நடக்க தெரியலையே” என்று வருந்தியவள் எனக்கு வர்ற கோவத்துக்கு என்று அமுதா பல்லை கடித்து தன் கோவத்தை வெளிபடுத்தியதும்,
“அமுதா என்ன நீங்க…. வயித்துல பாப்பாவை வைச்சிக்கிட்டு இவ்வளவு கோவப்படுறிங்க!!! விடுங்க விசேஷம்னு வந்த இப்படியெல்லாம் கேக்கத் தான் செய்வாங்க… அவங்க என்ன தப்பா சொல்லிட்டாங்க? எங்களுக்கும் கல்யாணம் நடந்து ஒன்னறை வருஷம் ஆச்சில்ல அதான் கேக்குறாங்க” என்றவள் சிரிச்ச முகமா இருங்க அமுதா அப்போதான் பாப்பா சந்தோஷமா இருக்கும்….” அவளை சமதானப்படுத்தியவள் கணவனுடன் சென்று நின்றுக்கெண்டாள்.
சுந்தரனின் குடும்பத்தினரும் அவளிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பை வேண்ட அவர்களையும் சமாதனப்படுத்தி நல்லபடியாக விசேஷத்தை முடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
——-
அந்த பெண்மணி கேட்கும் வரையிலுமே தேவசேனாவிற்கும் விசாகனுக்கும் குழந்தையை பற்றிய எண்ணம் வரவே இல்லை… தேவா இதுவரையிலும் கல்லூரி சென்று வந்திருந்ததால் அதை பற்றி நினைக்காமல் யோசிக்காமலும் இருந்தவளுக்கு அமுதாவின் விஷேசத்தில் நடத்தது குழந்தையை பற்றிய ஏக்கத்தையும் ஆசையையும் தூண்டி விட்டிருக்க கண்களும் மனதும் லேசாய் கலங்கி இருந்தது.
ஒரு சில மாதங்களில் நாட்கள் தள்ளிப் போகும் சமயத்தில் ஒரு வாரத்திலேயோ அல்லது பத்து நாட்களிலோ வீட்டுவிலக்கு ஆகி விடுபவளுக்கு இப்போது நாட்கள் தள்ளிப் போனாலும் சந்தோஷப்பட முடியவில்லை…
விசேஷம் நடந்து பத்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்த நிலையில் அதையே நினைத்துக் கொண்டு இருந்தவளுங்கு உடல் வேறு சோர்வாக இருந்தது…. இந்நிலையில் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த விசாகன் வீட்டிற்கு வருவதற்கு இரவு அதிக நேரமாக, தில்லையை சென்று படுக்க சொன்ன தேவா கணவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தவள் அசதியின் காரணமாக அமர்ந்த நிலையிலையே உறங்கி இருந்தாள்.
நல்லிரவில் வீட்டிற்கு வந்த விசாகன் அமர்ந்த நிலையில் உறங்கும் மனைவியை கண்டவன் “எத்தனை முறை சொன்னாலும் கேக்க மாட்டறாலே… என்கிட்ட இருக்க சாவியை வைச்சி வந்திடுவேன்னு சொன்னாலும் திருந்தவே மாட்ட…” சலிப்பாய் அலுத்துக் கொண்டாலும் மனைவியின் அக்கரையில் மனம் இனிக்கத்தான் செய்தது.
அவளை பூ குவியலை போல் இரு கைகளில் அள்ளிக் கொண்டவன் மாடியை நோக்கி நடையை போட்டான்..
கைகளில் ஏந்தியவளின் கள்ளமில்லாத முகம் தனக்கு அருகில் தெரிய கன்னங்களில் வழிந்த கண்ணீர் தடங்களும் அவனுக்கு தெரிந்தது. அவளை ஏந்தியபடியே அறைக்கு செல்ல அவன் ஸாபரிசத்தில் மெல்ல கண்களை திறக்க முயற்சி செய்தவளுக்கு முடியாமல் போக வந்துட்டிங்களா ஹீரோ என ஈனஸ்வரத்தில் கூறியவள் மீண்டும் அவன் மார்பிலேயே சுகமாய் உறங்கினாள்.
பல நாட்களுக்கு பின் அவளையும் மறந்த நிலையில் தன்னை ஹீரோ எனக் கூறியதில் மீசைக்குள் மறைந்த இதழ்கள் சிரிப்பில் வளைந்தது. இருந்தும் கடந்த சில நாட்களாகவே மனைவியின் வாட்டமான முகமும் எதிலும் நாட்டமில்லாத போக்கும் அவனை வெகுவாக இம்சை செய்தது..
இன்று அவள் கன்னங்களில் கண்ட கண்ணீர் கோடுகளும் அதை தெளிவாக உரைக்க அவள் அமுதாவின் விசேஷத்தில் நடந்ததை எண்ணி வருந்துகிறாள் என்று சரியாக அனுமானித்து இருந்தவன். காலையில் அவளிடம் பேச வேண்டும் என்ற முடிவுடனே தங்கள் அறை மெத்தையில் அவளை கிடைத்தி மனைவியை அணைத்தவாறே தானும் உறங்கினான்.
மறுநாள் காலை விசாகன் எழுந்து பார்க்கும் போதே அறையில் தேவா இல்லாமல் இருக்க அவளை அழைத்தவாறே அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
“சனா…. சனா… எங்க டி இருக்க?”
….
“சனா…”
…
“தம்பி பாப்பா பின் கட்டுல இருக்குங்க… அப்பத்தா பண்ணையில இருக்காங்க… என வேலை செய்யும் பெண்மணி கூறிட மனைவியை தேடி பின்கட்டிற்கு சென்றான்.
தான் பதியம் செய்த ரோஜா செடிகளில் மலர்ந்த பூக்களின் இணையாக தானும் ஒரு மலராய் நின்றவளின் வாடிய முகம் அவனை இம்சித்தது. சனா என்றான் மென்மையாய்…
கணவனின் குரல் கேட்டு திரும்பியவள் தன் முகத்தினை இயல்பாக்கிக் கொண்டு “எப்போ எழுந்திக்க மாமா… இருங்க காபி கொண்டு வரேன்” அவன் அருகில் வர அவள் கைபிடித்து நிறுத்தியவன் என்னடா ஒருமாதிரி இருக்க ? என்றான் காதலும் கனிவும் நிறைந்த குரலில்.
“என்ன மாமா எப்போ பார்த்தாலும் ஏதோ ஒன்னு சொல்றிங்க… நான் எப்பவும் போல எல்லாரையும் வம்பிழுத்துகிட்டு ஜாலியாத் தான் இருக்கேன்…” கண் இமைகளை படபடவென மூடித்திறந்தவள் “உங்களுக்கு தான் ஏதோ மாதிரி தெரியுது” என்றாள் முயன்று முகத்தில் வரவழைத்த புன்னகையுடன்,
அவளை நம்பாத பார்வையுடனே “சனா” என்றான் அழுத்தமாய்
கணவன் கண்டுக்கொண்டானே என்று அஞ்சியவள் “ஒன்னுமில்ல மாமா… ஏதோ நான் தான் தேவை இல்லாததை எல்லாம் நினைச்சிட்டு இருக்கேன்”. என்றாள் அவனை சமாதனமாக்கும் வகையில்,
“அதான் என்ன நினைக்கிறன்னு கேட்டேன்”. இன்னும் வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி இருந்தான்.
அவள் அமைதியாக இருக்கவும்
“நானே சொல்லட்டுமா? அந்த பொம்பளை குழந்தைய பத்தி பேசினதை தானே நினைச்சிட்டு இருக்க” என்றதும் அவளுக்கு கண்கள் கலங்கியது.
“உன் மனசை என்ன அறிக்குதுன்னு எனக்கு தெரியாத டா…. குழந்தைய பத்தி நாம ஏன் நினைக்கலன்னு உனக்கு தெரியாதா? …. யாரோ ஏதோ சொல்லிட்டாங்கன்னு உடனே வருதத்தப்படுவியா”
“அடியேய் ஏன்டி இப்படி இருக்க… உனக்கு என்னடி வயசாச்சி இப்படி கவலைபடுற அளவுக்கு” என்று அவன் கூறினாலும்
சிறுபிள்ளையாய் கலங்கும் மனைவியின் செயலில் கோபமானவன் “குழந்தைய வான்னு சொன்னா உடனே வந்துடுமா? அது அதுக்கு நேரம் வர வேண்டாமா?” என்று அவளிடம் காய்ந்தவன்
“சரி ஒன்னு செய் நீ போய் ரெடியாகு நாமா இன்னைக்கு ஒரு டாக்கடரை பாக்க போலாம்…. போதுமா அவங்க சொன்னா நம்புவியா” எரிச்சலாய் கூறியவன் வேகமாய் உள்ளே சென்று விட்டான்.
“மாமா… மாமா… இங்க பாருங்க” அவன் பின்னே சென்றவள் நிலைப்படியில் கால் தடுக்கி “மாமா” என சத்தத்தோடு கீழே விழந்து மயக்க நிலைக்கு சென்றாள்.
வீட்டிற்குள் முன்னேறி சென்றிருந்தவனோ மனைவியின் அலறலில் திரும்பிட கீழே விழுத்து இருந்தவளைத்தான் கண்டான்.
“அய்யோ சானா… இங்க பாரு டி”
“சனா… சானா…”
பேத்தி, பேரனின் குரலை கேட்டு வந்த தில்லை “என்ன ராசா? என்ன ஆச்சு?” என்றார் பதற்றத்துடன்.
“தெரியல அப்பத்தா கீழே விழ்ந்துட்டா போல” என்றவனுக்கு நாக்கு மேல்லணத்தில் சிக்கிக்கொண்டது.
அய்யோ ரத்தம் என பதற்றத்துடன் கூடிய நடுக்கமான குரலில் கூறிய தில்லை “அம்மாடி… தேவாமா…. தேவா….” எனக் குரல் கொடுக்க நெற்றியில் பட்ட அடியில் இருந்து ரத்தம் வருவது தெரியுவும் பயந்து போனான் விசாகன்.
தேவாவை பரிசோதித்த மருத்துவர் வெளியில் வரவும் “டாக்டர் என் வொஃப் எப்படி இருக்காங்க” என்றான் தவிப்பாய்.
வெளியே வந்த மருத்துவர் இருவரின் தவிப்பையும் பார்த்து நகைத்தவாறே “நத்திங் டூ சீரியஸ் விசாகன் சார்… சின்ன அடித்தான் நௌவ் ஷீ இஸ் ஆல்ரைட்” என்றார் அந்த மருத்துவ பெண்மணி புன்னகையாக,
இன்னும் அவன் முகத்தில் பயம் தெளியாததைக் கண்டு “ஏன் பயப்புடுறிங்க விசாகன் சார்… இந்த மாதிரி சமயத்துல இது எல்லாம் நார்மல் தானே… கொஞ்சம் பாத்து கவனமா இருங்க” என்றார் அறிவுறையாக.
விசாகனுக்கும் மருத்துவர் எதை குறிப்பிடுகிறார் என்று தெரியாமல் “எந்த மாதிரி சமயத்துல டாக்டர்” என்றான் குழப்பமாக.
“சாரி இன்னும் உங்களுக்கு விஷயம் தெரியாத விசாகன் சார்….. ஷீ இஸ் பிரெக்ணெட்… நீங்க இன்னும் கன்பார்ம் பண்ணலையா? என்றார்.
“எனக்கு ஒரு டவுட் இருந்தது அதை கண்பார்ம் பண்ணிக்க இப்போதான் யூரின் டெஸ்ட் பிளட் டெஸ்ட் ரிப்பேர்ட் பாத்தேன் பாஸிட்டிவ் வந்துருக்கு….. என்றவர் அவங்க மயக்கமா இருக்க அதிர்ச்சி ஒரு காரணம் என்றாலும் ரொம்ப அழுத்தமும் ஒரு காரணம் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாம பாத்துக்குங்க” என்றார் மருத்துவர்.
இதை கேட்ட இருவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம் கடவுள்களை எல்லாம் வேண்டிய படியே பேத்தியை காண தில்லை உள்ளே சென்று விட உலகையே வென்ற சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஆனந்த அதிர்வில் நின்றிருந்தவனும் தேவாவை காணும் ஆவலில் அறைக்குள் விரைந்தான்..
அசதியிலும் மயக்கத்திலும் படுத்திருத்தவளின் தலையை வருடிய தில்லை “என் கண்ணு… என் வம்சத்தையே தழைக்க வைச்சிட்டியே…. என் ராசாத்தி நீ நல்லா இருக்கோனும் தாயீ…” இரு கன்னம் வழித்து நெட்டி முறித்து, நெற்றியில் முத்தம் வைத்தவர் “அந்தால இருக்க முத்துவை வரச் சொல்லுயா” விசாகனிடம் கூறியவர் “வேணா வேண சாமி நானே போறேன்… என் ஆத்தா அந்த சாமுண்டிக்கு ஒரு சூடத்தை ஏத்திட்டு நன்றிய சொல்லிட்டு வாறேன்” வாயிலை நோக்கி விரைந்தவர் “அய்யா சாமி, பாத்துக்கய்யா இப்போ வந்துடுறேன்” சந்தோஷத்தில் சிறு பெண்ணாய் மாறி விசாகனிடம் கூறி அறையை விட்டு வெளியேறினார்.
தில்லையின் பரபரப்பிலும் பேச்சு சத்ததிலும் விழி திறந்த தேவசேனா தன்னையே காணும் விசாகனை பார்த்து “மாமா…. என அடிக்குரலில் அழைத்தவள் மாமா என்ன ஆச்சு ஏன் நாம இங்க இருக்கோம் … ” என்றாள் சோர்வாக,
சுயநினைவு திரும்பிய அவளின் தலையை ஆதுரமாக வருடியபடி “சனா… என்றவன் கண்கள் கலங்கியது…
என்ன மாமா ஏன் கண் கலங்குறிங்க … என்ன சொன்னாங்க டாக்டர்… என்றவளுக்கு வார்த்தைங உள்ளே இறங்கி விட்டது…
நீ… கேட்ட ஒரு விஷயம் நடந்துடுச்சி நாம அப்பா அம்மா ஆகப்போறோம்… நீ கேட்ட மாதிரி… நான் ஆசைப்பட்ட மாதிரி… நம்ம குழந்தை இதோ என் வாலு பொண்டாட்டி வயித்துல வளந்துட்டுருக்கு…” அவள் கைகளை முத்தமிட்டு கண்களில் நீர் துளிர்க்க கூறினான் விசாகன் .
அவன் கூறிய வார்த்தைகளின் வீரியம் அவள் அடி நெஞ்சில் சில்லென்ற தென்றலாய் வீச தன்னிச்சையாய் அவளது கரம் தன் மணிவயிற்றினை வருடியது.
இதற்குத் தானே இத்தனை நாள் ஏங்கி அழுதது…. தானும் வருத்தப்பட்டு அவனையும் வருத்தப்பட வைத்தது…. அகம் மகிழ்ச்சியையும், கண்கள் ஆனந்தக் கண்ணீரையும் சொறிந்திட. மாமா என்றபடி சுற்றத்தையும் சூழலையும் மறந்து விசாகனை ஆரத்தழுவியிருந்தாள் தேவா.