தங்க நிறமாய் பிரகாசிக்கும் ஆதவனின் பொன்னிற கதிர்கள் பூமியில் தன் ஒளிக்கீற்றை சத்தமில்லாமல் பரப்பிக் கொண்டு இருந்தது…. நேரமோ மதியம் இரண்டை காட்ட மனைவியை தண்ணீர் கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தார் சௌந்தரலிங்கம்.
மகள் உண்டாகி இருக்கும் செய்தி தில்லையின் மூலம் இரண்டு வாரங்களுக்கு முன்பே மரகதத்திற்கு தெரிய வர, மறுநாளே தேவசேனாவை சென்று பார்த்து வந்திருந்தார் மரகதம்…
கணவரிடமும் மகனிடமும் விஷயத்தை பகிர்ந்த போது, எந்த வித முக மாற்றமும் இன்றி செய்தியை உள்வாங்கி இருந்த இருவருக்குள்ளும் சந்தோஷம் கரை புரண்டு இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாகவே இருந்தவர்கள், தம் தமது வேலைகளை கவனிக்க சென்று விட்டனர்.
அதுவே அவருக்கு கோவத்தை அதிகப் படுத்தி இருந்தது. முகத்தை தூக்கி வைத்தபடியே வளைய வந்து கொண்டிருந்தவர், கடுகடுத்த முகத்துடனே கணவருக்கும் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் மரகதம்.
இரண்டு வாரங்களாக முகம் கொடுத்து பேசாத மனைவியின் செயலில் கோபம் கொண்டாலும், அதற்கு அவர் கேட்பதை தன்னால் செய்ய முடியாது என்ற வைராக்கியத்துடன் இருந்தவர், இன்றும் அதே கதை தொடரவே
வீட்டை விட்டு வெளியே வந்தவர், தோளில் கிடந்த துண்டை எடுத்து சேரில் தூசியை தட்டியபடி வெய்யிலுக்கு மறைப்பாக போடப்பட்ட திரைமறைவில் இருந்த வெளி வராண்டாவில் போய் அமர்ந்துக் கொண்டார். பாவம் அவருக்கு அவர் கஷ்டம்.
💐💐💐
பகலும் இரவும் ஒருச்சேரும் ஒரு மாலை பொழுதில் மேகலா தன் வயல்காட்டிலிருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டு இருந்தாள்.
தூரத்தில் வரும் பைக்கின் சத்தத்தை வைத்தே அது யாருடையது என்று அனுமானித்து இருத்தவள், தன் நடையை துரிதப்படுத்தி இருந்தாள்.
அவளின் வேக நடையை கண்டு விட்டவன் பைக்கை அவளுக்கு முன்னே நிறுத்தி வழியை மறைத்திருந்தான்.
அதில் விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தவள் “என்ன வேனும் ஏன் வழிய மறைக்கிறிங்க?” என்றாள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு,
தேவா ஜெயசந்திரனை பற்றி அவளிடம் பேசியதில் இருந்து மனதில் எழுந்த நெருடல் இப்போது அவனை பார்க்கவும் அவளை யோசிக்க வைத்தது…’ ஊர் உலகத்துல ஆளே இல்லையா… இவனுக்கு வேலை செய்ய, நான் தான் கிடைச்சேனா… இப்போ எதுக்கு வந்து இருக்கானோ தெரியலையே… ‘ என மனதில் நினைத்தாள்.
அவள் முகத்தில் தெரிந்த கடுகடுப்பு அவனுக்கு எரிச்சலை கொடுக்க “இப்போ எதுக்கு முஞ்சில முள்ளை கட்டி வைச்சி இருக்காப் போல இத்தனை கடுப்பு?” என்றான் கோபத்துடனே,
“ஆஹ்… என் மூஞ்சே அப்படித்தான்… நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க” என்றாள் சற்றும் மாறாத அதே நிலையில்.
‘நீ எப்படி வேணா இருந்துட்டு போ எனக்கென்ன… என நினைத்தவன் “இந்தா இதை எடுத்துட்டு போய் தேவாகிட்ட கொடுத்துடு” என்றான் கையில் இருந்த கவரைகாட்டி
அதை வாங்காமலேயே நின்றிருந்தவள் ‘கூட பொறந்தவ மேல இவ்வளவு பாசம் இருக்கு நேர்ல போய் கொடுத்தா தான் என்னவாம்…. துரைக்கு கௌரவம் தடுக்கு தாக்கும்…’ அவனை வைதவள்,
“கொள்ள பாசம் இருக்குல்லா…. நீங்களே போய் கொடுக்குறது… அவ எவ்வளவு சந்தோஷப்படுவா” என்றாள் முனுமுனுப்பாக,
“அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும்… சொன்னதை மட்டும் செய் மத்ததை எல்லாம் நீ ஏன் கேக்குற?” என்றான் அதிகாரமாக,
‘அட வளந்து கெட்டவனே…. இப்படி ஆர்டர் போடுறியே… கொடுக்கறது என் கிட்ட…. நான் கேட்காம தெருவுல போற வர்றவன் கேட்பானா?…நான் என்ன இவனுக்கு பொண்டாட்டியா இவ்வளவு அதிகாரமா சொல்றான்’. அவன் கூறியதில் கடுப்பானவள் முகத்தில் அதை காட்டியபடியே அதை வெடுக்கென்று வாங்கிக் கொண்டாள்.
“ம்கூம் மனசுல பெரிய பாசமலர்ன்னு நெனப்பு’ அவனை சலித்துக் கொண்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுவோமா என நினைத்தவள், ‘வேணா வேணா முறைச்சே சாகடிகப்பான்…. கொடுத்துடுவோம் என வாங்கிக் கொண்டாள்.
“நாளைக்கு தேவாவையும் பாக்கனும் அவ குரலை கேக்கனும்… முடியுமா?” என்றான் ஆவல் நிறைந்த குரலில் முடியாது என்று தான் சொல்ல நினைத்தாள் ஆனால் ஏனோ அவன் குரலும் முகமும் அவளை தலையை ஆட்டி சம்மதிக்க வைத்து இருந்தது.
🌹🌹🌹🌹
தேவாவிற்கு மூன்றாம் மாதம் தொடக்கத்தில் இருந்தது. இப்போது எல்லாம் அவள் குளியலறையே தஞ்சம் என்று ஆகியிருந்தாள். காலை முதல் இரவு உறங்கும் வரை எதை சாப்பிட்டாலும் வெளியே வந்துவிடுகிறது…
தேவாவின் நிலையை கருதி எப்போதுமே அவளுடன் இருப்பதை போல் பார்த்துக் கொண்டான் விசாகன். ஒவ்வொரு முறையும் அவள்படும் அவஸ்தையை பார்க்கும் போது அவனுக்கு அய்யோ என்று இருந்தது .
துருதுருவென சுற்றி திரிந்த பெண் இப்படி சோர்ந்து போய் இருக்க மனம் கேளாதவன் அவளுக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதை அருகில் இருந்தபடி அன்பாய் பார்த்துக் கொண்டான்
இப்போதும் கூட அவள் காதல் கணவன் அவளுக்கு பிடித்த சுக்குமல்லி காப்பியுடன் அறைக்குள் நுழைந்தவன் அவளது அருகில் அமர்ந்து சோர்ந்து இருந்தவளின் தலையை அன்பாய் வருடினான்.
அவன் ஸ்பரிசம் பட்டவுடனே கணவன் என்று அறிந்து வைத்திருந்தவள் “மாமா” என அழைத்து அவன் கைகளை எடுத்து தன் தலைக்கு கீழே வைத்துக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள்…
“பிளீஸ் மாமா…. எனக்கு எதுவும் வேண்டாம் நைட் கூட வாமிட் பண்ணிட்டேன்…. எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு முடியல…. இன்னும் கொஞ்ச நேரம் படுக்குறனே…” என்றவள் சுகமாய் அவனையும் தன்னருகே இழுத்துக் கொண்டாள்.
அவள் இழுத்த இழுப்பிற்கு அவளுடன் சேர்ந்துக் கொண்டாலும் “அதுக்குத் தானே ஹஸ்ப்பிட்டல் போறோம் சனா மா இந்த மாசம் செக்கப் இருக்குல்லடா” என்றான் அவள் காதுகளில் தன் இதழால் உரசியபடியே அவன் கெஞ்சல் கொஞ்சல்களில் கண் மலர்த்தியவள் “இப்போ எழுந்துக்கனுமா” சுணங்கியபடியே எழ கொஞ்சம் தள்ளட்டமாய் தான் இருந்தது.. அவளுக்கு அது இன்னும் எரிச்சலை கிளப்பி இருந்தது.
இருந்தும் மனைவியை தாங்கி பிடித்துக் கொண்டு குளியலறை வரை அழைத்துச் சென்றவன். அவளுடன் உள்ளே செல்ல முற்பட அவனை தடுத்தாள் தேவா.
“நான் வரேன் சனா…எப்படி தள்ளாடுற எங்கயாவது விழுந்து வைக்க போறடி” என்றான் அக்கரையாக
“ஒன்னும் வேண்டாம்… போங்க நானே பாத்துக்குறேன்…” தன்னை எழுப்பி விட்டானே என்ற எரிச்சலில் கூறியவள் அவனை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள்.
உள்ளே சென்ற 5 நிமிடத்தில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்கவும் வேகமாக கதவை தட்டியவன் “சனா சனா கதவை திற” என்று அவசரமாக குரல் கொடுத்தான்.
கதவை திறந்தவள் வாந்தி எடுத்ததின் அறிகுறியாக முகம் சோர்ந்து இருக்க “என்ன சனா?” என்றான் அவள் முதுகை நீவியபடி
“பிரஷ் பண்ணா கூட, குமட்டிட்டு வருது… என்னால முடியல…” கண்கள் கலங்கிட கூறியவள் அவன் மீதே சாய்ந்துக் கொள்ள “தேய்ச்ச வரை போதும், வாயை கழுவி விடுறேன் வா” அவளுக்கு உதவியை செய்தவன் முகத்தையும் கழுவிட்டு அவளை மெத்தையில் அமர செய்து விட்டு தில்லையை அழைக்க சென்றான்.
பேரன் அவசரப்படுத்தியதில் அறைக்கு வந்தவர் “என்ன தாயீ” என்ன செய்யது என்றார் கரிசனாமாய்.
“பாட்டி” என்று அவர் இடையை கட்டிக் கொண்டவள் “எனக்கு முடியல பாட்டி” என்றவளின் குரல் அழுகையில் உள்ளே சென்றிருந்தது.
“என்ன புள்ள இது…. இரட்டை உசிறா இருக்க இப்படி கண்ணு கலங்கலாமா… இது எல்லாம் சகஜம்த்தா… மாசம் போக போக கெஞ்சம் கொஞ்சமா நின்னுடும் தங்கம்…” என்று குழந்தையை சமாதனப்படுத்துவது போல் அவளின் தலையை வருடி விட்டவர்
“அய்யா, இனி காபி தண்ணியெல்லாம் கொஞ்ச நாளைக்கு கொடுக்க வேண்டாம்… உமட்டிக்கிட்டு தான் வரும்… சொன்னா எங்க கேக்குற? சொல்ல சொல்ல அவளுக்கு புடிக்குன்னு போட்டு கொண்டாந்துட்டா” அவனை சிரிப்புடன் பார்த்தவர் பொன்னிக்கிட்ட சாத்துக்கொடி ஜுசு போட சொ
ல்லி இருக்கேன்… கொண்டாரச் சொல்லு, அதை குடிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்றார்..