சந்திரன் கொடுத்தனுப்பிய பொருட்களை தேவாவிடம் கொடுக்க காலையே விசாகன் வீட்டிற்கு வந்துவிட்டாள் மேகலா.
சமயலறை வாசலில் நின்றிருந்த விசாகன் கொடுங்க “அக்கா நானே அவளுக்கு கொடுக்குறேன்” என பொன்னியிடம் வலுக்கட்டாயமாக ஜுஸை வாங்கியதை பார்த்த மேகலாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது…
எப்போதும் ஆளுமையுடன் அதிகார தோரணையுடனும் ஊரே மதிக்கும்படியாய் இருக்கும் விசாகன் மனைவிக்காக இப்படி ஜூசும் கையுமாய் செல்வது விசாகனின் வாழ்வில் தோழி எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்க, அதே மகிழ்ச்சியான குரலில் “அண்ணா” என அழைத்தாள் மேகலா.
“வா… வா… மா” அவளை வரவேற்றவன் “தேவா மேலா தான் இருக்கா வா மா” அவளையும் அழைத்துவிட்டு மேலே சென்றான்..
அறைக்குள் நுழைந்தவளுக்கோ விசாகனும் தில்லையும் மாற்றி மாற்றி அவளை தாங்கவும் பேசவும் இந்த வாழ்க்கைக்காக தேவா இவ்வளவு கஷ்டப்பட்டதில் தப்பே இல்லை என்றிருந்தது.
ஜூஸை குடித்த சற்று தேரத்திற்கு எல்லாம் கொஞ்சம் தெளிந்து அமர்ந்தாள் தேவா. அப்போதுதான் மேகலாவை கண்டவள், “எப்போ டி வந்த” என கேட்டு முகம் மலர்ந்திட விசாகனும் தில்லையும் அவர்கள் பேசட்டும் என்று அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.
“இப்போதன் வந்தேன் புள்ள உடம்பு எப்படி இருக்கு?”அவளை பற்றி விசாரித்தாள் மேகலா.
“ப்பா முடியல டி எதை சாப்பிட்டாலுமே உமட்டிட்டு வருது… உட்கரவும் முடியல, நிக்கவும் முடியல, அதுவும் சமையலறை பக்கமே போனாலே அங்க வர்ற வாசனையே உமட்டுது” என்று கூறியவள் தளர்ந்து போய் படுக்கையில் சாய்ந்தாள்..
தோழியின் நிலை வருத்தமாக இருத்தாலும் அவளை தேற்றும் விதமாக “போக போக சரியா போயிடும் புள்ள…” அவளுக்கு அனுசரனையாய் கூறியவள்,
“நேத்து டவுனுக்கு அப்பா கூட போயிருந்தேன்… உனக்கு இது எல்லாம் புடிக்கும்மேன்னு வாக்கினேன் புள்ள…” அவள் கைகளில் கவரை கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தவள் கூடவே அவள் கொண்டு வந்த போனில் சந்திரனுக்கு வீடியோ கால் செய்திருந்தாள்.
ஏற்கனவே அவள் வீட்டிலிருந்து கிளம்பும் போது அங்கிருந்து போன் செய்வதாக கூறியிருந்தாள். அதே போல் செய்யவும் ஒரே ரிங்கில் போனை ஆன் செய்து பின் புற கேமிரா வழியாக சத்தம் வராமல் தங்கையை பார்த்திருந்தான் சந்திரன்.
மசக்கையின் பிடியில் கொஞ்சம் சோர்த்து இருந்தாலும் தேவாவின் முகம் பொலிவுடனும் தனி சோபையுடனும் இருக்க, தங்கையின் குரலை கேட்க ஆவலாய் இருந்தான் சந்திரன்.
அவள் கொடுத்த பேக்கை திறந்து பார்த்தவளுக்கு மனதை என்னமோ செய்தது… அது முகத்திலும் தெரிய “என்ன புள்ள உனக்கு இதுலாம் புடிக்கலையா?” என்றாள் மேகலா சந்திரனை மனதில் கருவியபடியே ‘அவளுக்கு புடிக்கும்ன்னு சொன்னியே டா!!! இப்போ இவ பாக்குற பார்வை பார்த்தா இத எதுக்கு வாங்கிட்டு வந்தன்னு கேட்பாளோ?” என்று நினைத்தாள்.
தங்கை என்ன சொல்ல போகிறாளோ என்று எதிர்ப்பார்ப்புடன் இருந்த சந்திரனுக்கு, அவள் கூறிய வார்த்தைகள் மனதையும் கண்ணையும் கலங்க செய்தது.
“உன்னை புடிக்கும் கலா, ஆனா உன்னை இப்போ இன்னும் அதிகமா புடிக்குது….” என அவளை அணைத்துக் கொண்டாள்.
“எங்க அண்ணன் ஊருக்கு வரும்போது எல்லாம் எனக்கு பிடிக்கும்னு எப்பவும் குலோப் ஜாமுனும், பால்கோவாவும் தான் வாங்கிட்டு வரும்…. இது பார்க்கும் போது எங்க அண்ணன் ஞாபகம் வந்துடுச்சி” என்று கண்கள் கலங்க கூறினாள்.
‘அடேய் படுபாவி அவளுக்கு புடிக்கும்னு வாங்கி தந்தேன்னு பார்த்தா… உன்னை ஞாபகப்படுத்தி அவ அழறா மாதிரி வாங்கி கொடுத்து இருக்கியே!!’ என்று அதற்கும் அவனை மனதில் திட்டியவள்
“இப்போ உன் நொண்ணங்காரனை பத்தி எதுக்கு புள்ள நினைக்கிற? சந்தோஷமா இருப்பியா அதை வுட்டுட்டு தேவை இல்லாத ஆணிய எல்லாம் புடிங்கிட்டு இருக்க… வாங்கிட்டு வந்தவ நான் இருக்க, அந்த கடங்காரனை ஏன் நினைக்கிற?” அவளை திட்டி சமாதப்படுத்தியவள் அவர்கள் மருத்துவமனை கிளம்ப குளியலறைக்குள் அனுப்பி வைத்தாள்.
அப்போதுதான் கையில் இருக்கும் போனில் சந்திரன் வெகுநேரம் காத்திருப்பதை கவனித்தவள் நாக்கை கடித்தபடி ‘அச்சோ அவன் இதுல இருக்கறதை மறந்துட்டு, அவனை திட்டி பேசிட்டேனே” என பயந்தவள் முன் கேமராவை ஆன் செய்ய அவளை முறைத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து அசடு வழிந்தவள் “நான் கட் பண்றேன்” என்று அவன் அடுத்த வார்த்தை பேசும் முன் போனை அனைத்திருந்தாள்.
🌹🌹🌹
நாங்கைந்து மாதம் இப்படியே தான் சென்றது தேவாவிற்கு இதில் மயக்கமும் தலை சுற்றலும் ஒரளவு நின்றிருக்க வாந்தி மட்டும் அவளை வைத்து செய்து கொண்டு இருந்தது…
அவ்வபோது மரகதம் செய்து எடுத்து வரும் புளிப்புகீரை தொக்கும் மாங்காய் பச்சடிக்கும் மனது ஏங்கி நிற்கும்…
என்னதான் தில்லையும் விசாகனும் தங்க தட்டில் தாங்கினாலும் தாயின் மடி தேடியது அவளுக்கு, தந்தையின் முகம் காண ஏங்கியது, அண்ணனின் பாசமும் அவனின் பரிவையும் எதிர்ப்பார்த்தது, இன்னும் சொல்லப் போனால் அவள் வீட்டிற்கு ஒரு முறையேனும் தன்னை அழைக்க மாட்டார்களா!! என்று ஏங்கி நின்றவளுக்கு ஐந்தாம் மாதம் ஆரம்பித்ததும் மனதை அரிக்க தொடங்கி இருந்தது.
அதே நேரம் வீட்டில் பெரிய ரணகலத்தையே ஏற்படுத்திக் கொண்டு இருந்தார் மரகதம்.
“இப்போ சாப்பிட போறியா இல்லையா?” என்று கோவமாக கேட்டார் சௌந்தரலிங்கம்.
“எதுக்கு சாப்பிடனும், சல்லி பைசாவுக்கு மதிப்பு இல்லாத வீட்டில் சாப்பாடு ஒன்னு தான் குறைச்சலா என்ன..?.” மூக்கை முந்தானையால் துடைத்து உள்ளே தரையில் அமர்ந்து
அழுதுக் கொண்டு இருந்தார் மரகதம்.
“இப்போ என்ன பண்ணனும்னு… இந்த மூனு நாளா சாப்பிடாம உட்கார்ந்து இருக்க” அதட்டலும் கர்ஜனையாகவும் வந்தது அவரது குரல்
கொஞ்சம் பயம் இருந்தாலும் “நான் அப்படி என்ன கேட்டேன்…. யாரும் செய்யக் கூடாததையா கேட்டேன்… ஐஞ்சா மாசம் வருது புள்ளை சோறு ஊட்டனும் ஜடைக்கு பூ முடிக்கனும் தானே கேட்டேன்… அவ என்ன யாரும் இல்லாத ஆனாதையா எதுவும் பண்ணாம இருக்கறதுக்கு” என்றார் அழும் குரலிலேயே
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் எதிலும் தலையிடாமல் நின்றுக் கொண்டு இருந்தான் சந்திரன். ஏற்கனவே தன்னால் தான் இது எல்லாம் என்ற குற்றவுணர்வில் இருந்தவன் இப்போது பேசவே தயக்கம் கொண்டு அமர்ந்திருந்தான்.
“உனக்கு இது எல்லாம் சாதாரணமா இருக்கலாம்… என்னால ஊர்ல தலை காட்ட முடியலடி… முடியல…. என் முகத்துக்கு நேர பேச பயந்தவன், எல்லாம் முதுக்கு பின்னால பேசுறான் டி…. எந்த முகத்தை வச்சிக்கிட்டு வர சொல்ற…” என்றார் அத்திரத்துடன்
“பேசறவன் பேசத்தாங்க செய்வாங்க… அதுக்குன்னு புள்ளைய அப்படியேவா விட முடியும்… சொல்லுங்க தவமா தவம் இருந்து பொறந்த புள்ளைங்க, அப்படியே ஒட்டும் இல்ல உறவும் இல்லன்னு விட முடியுமா? சொல்லுங்க” என்றார் கொஞ்சம் சாந்தமாகவே
“ஒத்தை புள்ளைங்க முதல் முதலா வாயும் வயுறுமா இருக்கா… அவ மனசை கொன்னுடாதிங்க… நீங்க எப்போ பேசுவிங்கன்னு எதிர்ப்பார்த்துட்டே இருக்குங்க அந்த புள்ள” எனக் கூறிட, அவரது மனமும் கொஞ்சம் யோசிக்க தொடங்கி இருந்தது.
…..
தேவாவின் முகம் பார்த்தே அவளின் தேவைகளை அறிந்தவனுக்கு அவளின் மனது புரியாதா என்ன? அவள் மனைவி எதை தேடுகிறாள் யாரை தேடுகிறாள். என்பதை தெரிந்து வைத்திருந்தவன் ஐந்தாம் மாதம் ஒரு நல்ல நாள் பார்த்து விசாகனே அனைத்து ஏற்பாட்டையும் முன்னின்று செய்து விசேஷத்திற்கு ஊரையே அழைத்திருந்தான்.
தங்களது அறையில் புடவையை கட்டிக்கொண்டு இருந்தாள் தேவா.
தளீர் வண்ண பச்சை பட்டில் அடர் வண்ண பச்சை ஜாரிகையில் சிறிது மேடிட்ட வயிற்றுடன் புடவையின் மடிப்பை எடுத்து விட சற்று சிரமப்பட “சனா” என அழைத்தபடி அறைக்குள் பிரவேசித்தான் விசாகன்.
மனைவி புடவை மடிப்பை எடுப்பதற்கு கஷ்டப்பட அவளை நேராக நிறுத்தியவன் தானே அமர்ந்து மடிப்புக்களை எடுத்து நீவி விட்டு “இப்போ சரியா இருக்கா சனா” என்றான்
“ம்” என்று சுரத்தே இல்லாமல் கூறியவள் புடவையை சொறுகிக் கொண்டாள்.
“என்னடி ம் கூட ஒரு மாதிரி இருக்கு?” வேண்டுமேன்றே அவளிடம் கேட்டான்.
என்ன கூறுவாள் எல்லாவற்றையும் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் கணவனிடம் மனம் பெற்றவர்களை தேடுகிறது என்றா…. இது நாள் வரையிலும் தன் வீட்டிலிருந்து ஒரு தகவலும் இல்லாமல் இருக்க மனம் வலித்தது அவளுக்கு… என்னை மன்னிக்கவே மாட்டாரா என் அப்பா என்று நினைத்து நினைத்து வருந்தினாள்.
அந்த வாட்டம் முகத்திலும் தெரிய அதை மறைக்க சிரிப்பை வரவழைத்தபடியே “முடியல மாமா” என்றாள் உள்ளிருக்கும் குழந்தையை சுட்டி காட்டி
அவள் பொய் உரைக்கிறாள் என்று அறிந்தும் மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் மேடிட்ட வயிற்றுக்கு ஒரு முத்தம் வைத்து “அம்மாவை படுத்த கூடாது செல்லம்… அம்மா பாவமில்ல” குழந்தையிடம் அவளுக்காக பேசியவன் எழுந்து நின்றான்.
அவளின் முகத்தை மென்மையாக நிமிர்த்தியவன் அவள் கண்களில் தன் இதழை பதித்தவாறு
“இதுல எப்பவும் இருக்க சோகம் இன்னைக்கு இருக்க கூடாது செல்லம்மா… இப்போ இந்த நிமிஷம் எதையும் நினைக்காம சந்தோஷமா இருக்கனும்…. குட்டி பாப்பாவும் இன்னைக்கு உன்னை படுத்தாது… உனக்காக தானே இது எல்லாம்… நீ சந்தோஷமா இருந்தா தான் என்னால நிம்மதியா வேலை பாக்க முடியும்… என்ன சந்தோஷமா இருப்ப தானே ” மனைவியை கேட்டபடி அவளை இறுக அணைத்து உச்சியில் முத்தமிட்டான்…
இதற்கு மேலும் அவனை படுத்த மனமில்லாது முயன்று தன்னை இயல்பாக்கிக் கொண்டவள், ம் என தலையசைத்து கூறி, கணவனின் கையோடு தன் கையை கோர்த்து அவனோடு சென்றாள்.
மனையில் அமர்ந்திருந்த தேவாவின் கண்கள் வாயில் புறத்தையே பார்த்து இருந்தது. என்ன முயன்றும் எதிர்ப்பார்ப்பை கட்டுப்படுத்த முடியவில்லையே… விசாகன் சென்று தங்கள் வீட்டில் கூறியிருந்தான் என்று தெரியும். ஆனால் வருவார்களா என்றுதான் தெரியாது…
இருந்தும் தங்கள் ஊரில் இருந்து யாராவது வந்து விடமாட்டார்களா என்று எதிர்ப்பார்திருந்த நேரத்தில் அவள் கவனம் தில்லை அழைத்ததில் சிதறியது…
சற்று நேரத்திற்கு எல்லாம் சலசலவென சத்தம் கேட்டு திரும்பிய தேவாவின் கண்கள் ஆனந்த அதிர்ச்சியில் சூரியனை கண்ட தாமரையை போல் மலர்ந்தது.
பிறந்த வீட்டு பலகாரங்கள் பூ, ஜடை, தட்டு வரிசைகளுடன் சொந்த பந்தங்கள் புடை சூழ மரகதமும் துரைலிங்கத்தின் மனைவி இளையா, அன்னம், மேகலா, மேகலாவின் அன்னை என்று அனைவரையும் விசாகனின் வீட்டிற்கு அழைத்து வந்தார் மரகதம்.
தேவாவின் முகம் உணர்ச்சிமிக்கதாய் இருந்தது.. நடக்கவே நடக்காது என்று அழுகையில் கரைந்தவள் இப்போது மகிழ்ச்சி கடலில் மிதந்தாள். இருந்தும் ஒரே குறை தாய் மட்டும் சொந்தபந்தங்களுடன் வந்திருக்க தகப்பனையும் தமையனையும் கண்களால் தேடத் தொடங்கி இருந்தவளுக்கு சிறிது நேரத்தில் சிறிய தகப்பனாருடன் சௌந்தரலிங்கம் வருவதை பார்க்கவும் அப்பா என்று கூவலுடன் மனையில் இருந்து எழந்து விட முயன்றவளை “தேவா மா எழக்கூடாது டா” என அருகில் வந்து சமாதனப்படுத்தி அமர வைத்திருந்தார் சௌந்தரலிங்கம். அவர்களின் பாசத்தை பார்த்தவர்களுக்கு கண்கள் கலங்கத்தான் செய்தது.
தன்னவளின் சந்தோஷம் விசாகனையும் தொற்றிக் கொள்ள மெல்லிய புன்னகையுடன் வளைய வந்தான். எங்கு சென்றாலும் மனைவியின் மீதே கண்களை நிலைக்க விட்டிருந்தவனுக்கு அவளின் உணர்வுகள் புரியத் தான் செய்தது… கண்களால் கணவனுக்கு மகிழ்ச்சியை தெரிவிக்க அவனும் அதை ஏற்றுக் கொள்பவன் போல விழிகளை மூடி திறந்து அவளை நிதானிக்க வைத்தான்.
வயதில் மூத்த பெண்மணிகள் வந்து நலங்கு வைத்து பூ தூவி ஆசிர்வதித்து, சாதம் ஊட்டி, வளையிட்டு அவளை வாழ்த்தியதும் பெற்ற தாயும் தந்தையும் மகளை வாழ்த்தி அட்சதையை தூவி விட, தந்தையின் கைகளை பற்றிக் கொண்டு கண்களில் ஒத்திக் கொண்டவள், சிரிப்பும் அழுகையுமாய் அந்த வார்த்தைகளற்ற நிகழ்வை அனுபவித்தாள்.