தேவா தாய்வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் சென்றிருந்தது. விசாகன் அங்கு ஏற்கனவே வாங்கியுள்ள நிலத்தில் வீடு கட்ட ஆரம்பித்து தன் கல்யாணத்தில் ஏற்பட்ட கசப்பால் பாதியில் நிறுத்தி இருந்தான்.
இப்போது அந்த வீட்டை மறுபடி கட்ட தொடங்கி இருந்தான், அதை காரணமாக வைத்து அவ்வப்போது அங்கு வரும் சமயங்களில், தேவாவை வெளி இடங்களுக்கும் கோவில்களுக்கும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்..
தில்லை வாரத்தில் இருண்டு மூன்று நாட்கள் அவளுக்கு பிடித்தமான உணவு வகைகளுடன் வந்து அளவளாவி செல்வார். அமுதா சுந்தரனுடன் வந்து சென்றாள். ஆக மொத்தம் அவள் வீட்டை விட்டு இங்கு வந்து விட்டாள், என்ற நினைவே இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
இவளும் அனைத்தையும் மகிழ்வுடன் அனுபவித்தபடி அண்ணனின் வரவை எதிர்பார்த்து பிறந்த வீட்டில் வளைய வந்தாள் .
தேவாவின் விசேஷம் முடிந்து இரண்டு வாரங்கள் சென்றிருந்த நிலையில் ஜெயசந்திரன் ஊரிலிருந்து வந்திறங்கினான்.
மாலை வேளை என்பதால் கூடத்தில் டிவியை பார்த்தபடி அமர்ந்திருந்த தேவா ஜெயசந்திரன் வருவதை பார்த்ததும் உள்ளே எழுந்து சென்று விட அவனுக்கு முகம் வாடி விட்டது.
சந்திரன் வாசலில் வந்து நிற்கும் போதே நிறை மாத வயிறுடன் தங்கை அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சி பேசவில்லை என்றாலும், ‘ஓரே வீட்டில் இனி கொஞ்ச நாட்கள் அவளுடன் சேர்ந்தே இருக்கலாம் என்று நினைத்திருக்க, தன்னை பார்த்தவுடன் அறைக்குள் சென்றதும் ஏதோ கை நழுவியதை போல உணர்ந்தான்.
சோர்ந்த முகத்துடனே வந்த மகனை கண்ட மரகதம் “வாய்யா சாமி” என அழைத்து காபியை கொடுத்தார்.
உடையை கூட மாற்றத் தோன்றாமல் அறைக்கும் செல்லாமல் தங்கை சென்ற அறையை பார்த்தபடி அவள் வெளியே வருவாளா என்று ஏக்கத்தோடு காபியை அருந்தினான்.
அரை மணி நேரம் ஆகியும் வெளியே வராமல் உள்ளயே அலுச்சாட்டியமாக அமர்ந்திருந்தாள் தேவா.
மகன் அமர்ந்து இருக்கும் தோரணையும் வாட்டத்தையும் பார்த்த மரகதத்திற்கு ஏதோ புரிந்தது போல் இருக்க, வேண்டுமென்றே
“அது..” என்று இழுத்து அவள் இருக்கும் அறையை பார்த்தவர் சின்னக் குரலில் “அவளுக்கும் யாருய்யா இருக்கா நம்மல விட்டா.. அதான் அப்பாரு இங்கயே கூட்டிட்டு வந்துடலாம்னு அழைச்சிட்டு வந்துட்டாரு… உனக்கு… இதுல…” என்னும் போதே அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது அம்மா எங்கு வருகிறார் என்று அவசரமாக அவரை கை நீட்டி தடுத்தவன் உள்ளே எட்டிப்பார்த்து,
“அம்மா நான் என்ன சொல்லிட்டேன்… வந்து ஒரு வார்த்தைக் கூட பேசலியே… அவ இருக்கறதுல எனக்கு என்ன கஷ்டம்… யார் வந்தா என்னா?… யார் போனா என்ன ?…” என்றவன் பதட்டத்துடன் தேவாவின் அறையின் வாசலை பார்த்தான்.
அவனது பதட்டம் கண்டு மரகதத்திற்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை அரும்பாடுபட்டு அதை முகத்தில் காட்டாதவாறு “சரிய்யா நீ குளிச்சிட்டு வா… உனக்கு சாப்பிட எடுத்து வைக்கிறேன்” என்று சமயலறைக்குள் சென்று விட்டார்.
வேகமாக காற்றை உள்ளே இழுத்து மூச்சை வெளியிட்டவன், அடுத்த நிமிடம் தனது அறைக்கு சென்று விட்டான்.
அவளுக்காக பெங்களூரில் அலைந்து தேடி சேலை வாங்கி வந்திருத்தான். இப்போது அதை எப்படி கொடுப்பது என்று யோசித்தவன், முதல் வேலையாக அதை எடுத்து கப்போர்டில் வைத்து பூட்டி விட்டான்..
அறையில் இருந்தவளுக்கோ மனம் அடித்துக் கொண்டது. முழுதாக இரண்டு வருங்களுக்கு பிறகு அண்ணனை கண்டவளுக்கு கண்களில் நீர் நிறைந்தது, என்றால் மனம் அவனிடம் பேச வேண்டும் என்று ஆசைக்கொண்டது. அதன் பொருட்டே அவனை கண்டதும் வேகமாக அறைக்குள் வந்து விட்டாள்.
இன்னும் சொல்லப் போனால் அவனை பற்றிய முழு விவரத்தையும் அறிந்துக் கொண்டவளுக்கு அவன் சட்டையை பிடித்து “ஏன் என் கிட்ட பேசமாட்டுற?” அவனிடம் சண்டை போட வேண்டுமென்ற வேகம் வர எங்கே தன்னையும் மீறி அது செயலில் வெளிப்பட்டு விடுமோ என தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தாள்.
வளைகாப்பு தினத்தன்று தில்லை கீழே செல்லவும் தேவாவும் மேகலாவும் தனித்து இருக்கையில் இன்றும் தன் அண்ணன் வரவில்லையே என்று வருத்தம் கொண்டு நின்றவளை பார்த்த மேகலாவிற்கு மனது கேளாமல் கல்யாணம் ஆனா பிறகு தனியே தன்னிடம் அவளை பற்றி விசாரித்ததில் இருந்து கடைசியாய் அவளுக்கு குங்குமப் பூ வாங்கி கொடுத்தது வரையும் கூறி அவ்வப்போது தன்னிடம் அவள் உடல் நிலை கேட்டறிவது பற்றியும் கூறிட கேட்டவளுக்கு நிலைக் கொள்ளவில்லை
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் மேல் தன் தளிர் கரங்களை பதித்தவள் ” அம்மா மேல கோவம் இருந்தாலும் உனக்காக குங்குமப்பூ வாங்கி கொடுத்து இருக்காங்க டா உன் மாமா… நம்மளை ஒதுக்கல டா.. குட்டி.” என சிரிப்பும் அழுகையுமாய் சொன்னவளை ஆதுரமாய் பார்த்த மேகலாவிற்கு சந்திரன் மேல் சற்றுக் கோவம் கூட வந்தது. இப்போதாவது சந்திரன் இந்த விசேஷத்திற்கு வந்து இருக்கலாமே என்று தான் தோன்றியது.
அண்ணனிடம் பேச வேண்டும் என்று இருந்தாலும் ‘நான் தான் உண்மை எல்லாத்தையும் சொல்லிட்டேனே… அப்புறம் எதுக்கு இந்த வரட்டு பிடிவாதம்… என் மேல இருக்க பாசத்தை விட உனக்கு உருப்படாத கோவம் தான் பெருசா போச்சா…’ அவனை வறுத்தவள் நீ பேசுவ ண்ணா உன்னையே பேச வைக்கிறேன் என்ற உறுதியுடன் தான் வீட்டிற்கே வந்தாள்.
அவனை பார்க்காத போது இருந்த உறுதி அவனை பார்த்த பிறகு தளர்வது போல் இருக்க அதை இழுத்து பிடித்திருந்தாள்.
இரவு உண்ணும் போதும் கூட சரி அவனை பார்க்கவே கூடாது என்று விரைப்பாக இருந்தாள். அவன் அறைக்குள் இருந்தால் இவள் வெளியே நடமாடுவாள் அவள் வெளியே இருப்பதை பார்த்து ஜெயசந்திரன் வெளியே வந்தால் இவள் அறைக்குள்ளோ இல்லை கொல்லை புறத்திலோ இருப்பாள்.
மூன்றாம் நாள் சலித்து போய் வெளியே சென்றவன் அவளுக்கு சாப்பிட ஏதேனும் வாங்க வேண்டும் என்று கடைக்கு சென்றான். பழவகைகளில் சிலது அவள் இப்போது விரும்பி சாப்பிடும் வகைகளில் சிலது என்று அவளுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் பார்த்து பார்த்து வாங்கியவன் மதியத்திற்கு மேல் தான் வீடு வந்தான்.
ஜெயசந்திரன் கையில் பழங்களையும் தான் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளையும் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பரம சந்தோஷம் ஆனால் வெளியே முகத்தை உணர்ச்சியற்றது போல் இறுக்கமாக வைத்திருந்தாள்.
இப்படி மாசமா இருக்க பொண்ணு ஏன் இறுக்கமா இருக்கா அவன் வந்து பார்த்தானா இல்லையா எப்போ பாரு வேலை வேலைன்னு இருந்தா என்ன அர்த்தம் அதுக்குதான் சண்டை போட்டு கட்டிக்கிட்டு போனானா என்ற எண்ணம் தோன்ற தாயை கேட்போம் என்று நினைத்தவன் தயங்கியபடியே “என்னம்மா அவன் வந்தானா இல்லையா? மேடம் ஏன் இவ்வளவு வாட்டமா இருக்காங்க?” என்று நக்கலாக கேட்பது போல கேட்டான்.
“எல்லாம் வந்து வந்து தான் போறாக… என்னமோ தெரியலையே இரண்டு நாளா இப்படி இருக்கா சித்த இரு கேட்டு சொல்றேன்…” என சென்றவரை கைபிடித்து நிறுத்தியவன் “நீயா கேக்குறாப்போல கேளு என்னை எதுலையும் சேக்காதம்மா நான் அவ விஷயத்தில எதுலயும் தலையிட விரும்பல” குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் கூறியிருந்தான்.
அவன் கூறியதை கேட்டவருக்கு அட இது வேறையா என்றிருந்து…
இப்போது ஒரு சில சமயங்களில் தேவாவினால் முழுவதுமாக அவனை தவிர்க்க முடியவில்லை… வேண்டும் என்றே தங்கையின் முன் உட்காருவது, பின்கட்டில் வேலை செய்கிறேன் பேர்வழி என்று அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பது, காய்கறி கீரை மீன் வகைகளை பார்த்து பார்த்து அவள் உடலுக்கு எது சேர்கிறது என்று தெரிந்து வாங்கிருவது என எல்லாம் அவன் பொருப்பாகி இருந்தது.
முழுதாய் ஒரு வாரம் சென்றிருந்தது. அவன் தான் இதையெல்லாம் வாங்கி வருகிறான் என்று தெரிந்து சாப்பிடாமல் சண்டித்தனம் செய்பவளை கடுப்புடன் பார்ப்பான். திட்டவும் முடியாமல், அன்பாய் கூறவும் முடியாமல், திருடனுக்கு தேள் கொட்டியது போல் நிற்பவனை பார்பவளுக்கு பாவமாய் இருந்தாலும் ஒரு வார்த்தையாவது கோவமாக கூட தன்னிடம் பேச மாட்டானா என்று தான் அவள் மனம் ஏங்கும்.
அவளும் அவனை கடுப்பேற்றும் வேலையை செல்வனே செய்துக் கொண்டிருக்க பிரசவ தேதிக்கு இன்னும் ஐந்தாறு நாட்களே உள்ள நிலையில் விசாகன் ஒரு நாள் அவளை கோவிலுக்கு அழைத்து சென்றிருந்தான். அதை அறிந்த சந்திரன் அவன் அம்மாவிடம் ஆடி தீர்த்தான்.
“உன் மாப்பிள்ளை மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கான் மா. அவன் பாட்டுக்கு வர்றான்… உடனே அவளை கூட்டிட்டு வெளியே போயிடுறான்… ஏன் அவன் பேசுறதை வீட்டுல இருந்து பேச முடியாதா மா” என தாயிடம் சத்தமிட்டான்.
“ஏன்யா இப்படி கத்துற… அவரு பொஞ்சாதி அவரு கூட்டிட்டு போறாரு இதுல உனக்கு என்ன சாமி”மரகதம் புரியாது கேட்க,
“என்னன்னு கேக்குறிங்க நிறை மாசமா இருக்கா மா நீங்களும் தானே அவ கூட போன வாரம் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு வந்திங்க… ஜாக்கிரதையா இருக்கும்னு சொன்னாங்கன்னு சொன்னிங்கல்ல இப்போ இவ்வளவு அசால்டா வெளியே கூட்டிட்டு போறான்…. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்குமா?” என்றான் எரிச்சலாய்,
“என்னை என்ன யா பண்ண சொல்றிங்க???… அவர் மனசுல என்ன இருக்கோ!… மாப்பிள்ளைன்னு நீயும் கூப்பிட்டது இல்ல… இந்த ஒரு மாசத்துல அவரும் வந்து தங்கினது இல்ல…” இதற்கு என்னால் எதவும் செய்ய முடியாது என்னும் வகையில் ஒரு காரணத்தை அடுக்கி விட்டு சென்றார் மரகதம்.
அவனுக்கு தான் மண்டை காய்ந்தது. இன்று வரட்டும் பார்த்துக்க வேண்டியது தான் என்று வீட்டில் சட்டமாக அமர்ந்திருந்தான்.