கோவிலில் சாமி முன் நின்றிருந்தவளுக்கு முகம் வழக்கத்திற்கு மாறாக வாடி இருந்தது.
இரண்டு நாட்களாக மனதே சரியில்லை… கண்களை முடி கை கூப்பி நின்றிருந்தவளின் மூடிய விழிகளுக்கு இடையே ஊடுருவிய நீர்திவளைகள் கன்னத்தில் வழிய மனமுருகி வேண்டிக்கொண்டு இருந்தாள்.
அருகில் நின்றிருந்தவனுக்கு எதற்காக இப்படி இருக்கின்றாள் என்று தெரியவில்லை… வரும் வழியெல்லாம் எவ்வளவோ கேட்டு பார்த்து விட்டான். மூடிய வாயை திறக்காமல் ஏதோ யோசனையாய் வந்தவள், இப்படி அழும் போது இன்னும் துணுக்குற்றது அவனுக்கு
அமைதியாய் பிரகாரத்தை சுற்றியவளின் கையை பிடித்து மெதுவாய் அழைத்து வந்தவன் ஒர் இடத்தில் அமரவைத்தான்.
“என்ன சனா ஏதாவது சண்டையா உனக்கும் சந்திரனுக்கும்… ஏன் உம்முன்னு இருக்க…? கேட்டா எதுவும் சொல்ல மாட்டுற?.. பேச மாட்டுற.. என்ன உறுத்துது டி உன் மனசுல?” என்றான் சரியாய் அவளை கணித்தவனாய்.
“மாமா இது உங்களுக்கு சிறு பிள்ளை தனமாத்தான் தெரியும்… ஆனா எனக்கு அமுதா டெலிவரி போது அவங்கப்பட்டது தான் கண்ணு முன்னாடி வருது… இப்போ எல்லாம் தூங்க கூட முடியல… கனவுல கூட அதுதான் வருது எனக்கு டேட் நெருங்க நெருங்க பயமா இருக்கு மாமா” என்றாள் கலங்கிய முகமாக,
அவள் கண்ணீரைக் கண்டு பதறியவனாக அவள் கன்னங்களை துடைத்து விட்டவனுக்கும் அந்த காட்சிகள் மனகண்ணில் ஓட அவன் முகத்திலும் பயத்தின் சாயல்
இருந்தும் அவளிடம் காட்டாது “ஹேய்….. இங்க பாருடா” என்றான் அவள் முகவாயை தன் புறம் திருப்பி “நீ வாய் திறந்து சொல்லிட்ட என்னால சொல்ல முடியல… நாள் நெருங்க நெருங்க எனக்கும் கலக்கமா தான் இருக்கு”.
“ஆனா தைரியம் தானே நமக்கு பலத்தை தரும்… பயப்படாம இருக்கனும்… இப்போ பாரு அமுதா குழந்தையோட சந்தேஷமா தானே இருக்கு… நாங்க எல்லாம் உன் கூட இருக்கோம் டா… அப்புறம் என்ன… நீ தைரியமா இருந்தா தானே, இந்த குட்டி வயித்துல இருக்க நம்ம குழந்தையும் தைரியமா இருக்கும்… இன்னும் கொஞ்ச நாள்ல அந்த குட்டி பாப்பா நம்ம கூட இருக்க போதுன்னு நினைச்சி பாறேன், இந்த பயம் எல்லாம் இருக்கும் இடமே தெரியாம ஓடி போயிடும்” என்று அவளுக்கு தைரியத்தை கூறுவது போல் தனக்கும் சேர்த்தே தைரியத்தை கூறிக் கொண்டான்.
இப்படியே இருந்தால் மனைவி மனது இதை சுற்றியே வட்டமிடும் என்பதை அறிந்தவன் “ஆமா உங்க அண்ணன் என்ன இன்னைக்கு ரொம்ப கடுப்பா தெரியறான்” என்றான் அவளை இளகுவாக்க
அண்ணனின் பேச்சு எடுக்கவும் சற்று சூழலை மறந்து இயல்பானவள் கண்களை துடைத்தபடியே “அப்படியாவது பேசுவான்னு பார்த்தேன் மாமா..
“பேச மாட்டுறானே சரியான அழுத்தக்காரன்”
“பாவம் டி அவன்…. கொஞ்ச நாள் விடு அவனே பேசுவான்… உன்னை பார்க்கவே ஆபீஸ் போகாம இங்க உட்கார்ந்து இருக்கான்டி”.
“என்ன? மச்சானுக்கு மாப்பிள்ள சப்போர்ட்டா? செல்லது மாமா செல்லாது… இது எனக்கும் அவனுக்கும் இருக்க டீல்… பாக்குறேன் நானா? அவனான்னு?” என்று கூறியவளுக்கு கை கொடுத்து எழுந்துக் கொள்ள உதவியவன் அவளை கொண்டு போய் வீட்டில் பத்திரமாய் விட்டு வீட்டிற்கு பயணமானான்.
அவள் வீட்டிற்குள் நுழையும் போதே முகத்தை உர்ரென்று வைத்திருந்தான் சந்திரன். அவனை கண்டும் காணாதது போல் சமயலறைக்கு சென்றவள் அன்னைக்கு பிரசாதத்தை வழங்கி விட்டு பூஜையறையில் வைத்தாள்.
“அம்மா சூடா சுக்குமல்லி காபி தறியா தொண்டையெல்லாம் ஒரு மாதிரி இருக்கு” என்றபடி, முற்றத்தில் இருந்த உஞ்சலில் அமர்ந்தாள்.
வந்ததிலிருந்து அவள் செய்யும் செயல்களை பார்த்த வண்ணம் இருந்தவன் “ஏம்மா, இப்படி நேரங்கெட்ட நேரத்தில் வரலாமா? மாசம் ஏறிட்டே போகுது நியாபகம் இருக்கா… இல்லையாம்மா உனக்கு?” தாயை வறுத்தெடுக்க ஓரக்கண்ணால் அண்ணன் வசவுகளை காது குளிர கேட்டவள் அன்னை கொடுத்த சுக்குமல்லி காபியை கையில் வாங்கி இருந்தாள்.
“அம்மா, எப்பவும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். இனி வெளியே போகட்டும் அப்புறம் பேசிக்குறேன்”. அவன் கோபமாக பேசிட,
அண்ணன் திட்டிய திட்டுக்களை எல்லாம் ரசித்துக் கொண்டே காபியை ஒரு மிடறு விழுங்கியவளுக்கு அடிவயிற்றில் சுரீர் என்ற வலி எழுந்து பின்பக்க இடுப்பு வரை சென்றது.
உட்கார்ந்து இருப்பதால் இப்படியோ என்று நினைத்து சரி கொஞ்சம் நடப்போம் உடனே பயப்படுத்த வேண்டாம் என நினைத்தவள், ஊஞ்சலில் இருந்து எழுந்துக் கொள்ள மீண்டும் சுரீர் என்ற வலி அடிவயிற்றை தாக்க வலியில் நிற்க முடியாமல் கால் இடறி நிறைமாத வயிற்றை ஒரு கையில், தன்னிச்சையாய் பற்றியபடி அம்மா….. என்று விழ இருந்தவளை நொடி பொழுதில் “தேவா மா” என தன் இரு கைகளால் தாங்கி இருந்தான் சந்திரன்.
அண்ணன் தன்னை தாங்கவும் வலியில் இருப்பவள் சந்திரனின் கையைபிடித்துக் கொண்டு “வலிக்குது ணா… அம்மா… வலிக்குது…” என்று வலியில் கத்தினாள்.
சந்திரனின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த மரகதம் அவள் நிலையை பார்த்து “அய்யோ என் பொண்ணு” என பதறியவர் “என்னய்யா ஏன் இப்படி இருக்கா?” என்றார்
“தெரியலம்மா விழக்கூட இல்ல வலிக்குதுன்னு கத்துற” என்றான் அவள் படும் வேதனையை காண சகியாதவனாய்.
அவளின் நிலை புரிந்த மரகதம் “சந்திரா அவளுக்கு பிரசவ வலி வந்துட்டது போல சீக்கிரம் ஆஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம்” அவருக்கும் உள்ளே பதறியது.
அவர் கூறியதும் தன் இருகைகளால் அவளை தாங்கியவன் “கொஞ்சம் பொருத்துக்க டா… ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” அவளுக்கு ஆறுதலை கூறியபடி “அம்மா அந்த கார் சாவிய எடு… வெளியே முருகன் இருப்பான் வண்டிய எடுக்கச் சொல்லு…” அடுத்தடுத்து அவருக்கு கூறியவன் அவளை காருக்கு அழைத்து சென்றான்.
நொடிப் பொழுதில் மரகதம் பெண்ணிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மேகலாவின் அம்மாவிற்கு அழைத்து வீட்டை பார்த்துக் கொள்ள கூறியவர் போனில் கணவருடன் பேசியபடியே காருக்கு அருகில் சென்றிருந்தார்.
விசாகனுக்கும் அழைத்து விஷயத்தை கூறிட கிளம்பிய அரைமணி நேரத்தில் அவனும் மருத்துவமனைக்கு விரைந்து இருந்தவன், தில்லைக்கும் செய்தி சொல்லி அவரையும் மருத்துவமனைக்கு வரச்சொல்லி இருந்தான்.
இருக்கும் பதட்டத்தில் வண்டியை ஓட்ட முடியாது என்று முருகனை வண்டியை எடுக்க சொல்லி முன்பக்க இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் சந்திரன்.
அவள் துடித்த போதெல்லாம் அவனும் சேர்த்தே துடித்தான். அரைமணி நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து பிரசவ அறையில் அவளை அனுமதித்து இருக்க அவர்களுக்கு பின்னாலையே விசாகனும் சௌந்தலிங்கமும் வந்தனர்.
விசாகனுக்கு பயத்தில் முகமெல்லாம் வியர்த்தது. மனைவியை காண வேண்டும் என பதட்டமாய் இருந்தவனுக்கு, வெளியே தவிப்புடன் நின்றிருந்த சந்திரனை பார்க்கவே பாவமாய் இருந்தது. அவள் சென்ற திக்கையே பார்த்து இருந்தான்.
பிரசவ அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவரிடம் முந்தி சென்று “டாக்டர் தேவா எப்படி இருக்கா” என்று பயத்துடன் கேட்டான் சந்திரன்.
“டோன்ட் வொரி மிஸ்டர் அவங்களுக்கு பெய்ன் வந்துடுச்சி 90 பர்ஸன்ட் நார்மல் டெலிவரி தான் நடக்கும்… இன்னும் ஒன் ஆர் 2 ஹவர்ஸ்ல குழந்தை பிறந்துடும்…” தைரியம் கூறி சென்றார் மருத்துவர்.
அதன் பிறகுதான் விசாகனுக்கும் சந்திரனுக்கும் ஆஸ்வசமாக மூச்சு விட முடிந்தது.
அவரசமாகவும் பதட்டமாகவும் வந்த தில்லை “அம்மா, சாமுண்டி, என் பேத்தியையும் அவ வயித்துல இருக்க சிசுவையும் நல்லபடியா பெத்து எடுத்து வரனும் தாயே… உனக்கு பொங்க வைச்சி பாலாபிஷேகம் பண்ற தாயே…” என வேண்டிக் கொண்டவர் அனைவருக்கும் தைரியம் சொல்லியவராய் அங்கயே நின்றார்.
சந்திரனின் நிலையை அறிந்து ஆறுதலாய் தோளின் மேல் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான் விசாகன். படற முடியாமல் கிடந்த கொடிக்கு பற்றுதலாய் ஒரு இடம் கிடைத்ததைப் போல விசாகனின் கரங்களை இறுக பற்றிக் கொண்டான் சந்திரன்.
“அவளுக்கு இவ்வளவு வலியை எல்லாம் தாங்க முடியாது விசாகன்.. ஒரு முல்லு குத்தினாக் கூட வலி பொருக்காதவ, அவ கத்தினது கேக்கவே ஒருமாதிரியா இருக்குது…” கண்ணீரை விடவும் ஒரு ஆண்மகனாய் இருந்தாலும் தங்கைக்காக அழும் சந்திரனை பார்க்க அவனுக்கு என்னவோப் போலிருந்தது.
“ஒன்னும் ஆகாது மச்சான் நல்லபடியா அவ குழந்தையோட வருவா” உள்ளுக்குள் தளர்ந்து போகும் தனக்கும் சேர்த்து ஆறுதலைக் கூறினான் விசாகன்.
மரகதத்திற்கு மகளின் வேதனை ஒரு புறம் இருந்தாலும் எதிரும் புதிருமாய் இருந்தவர்கள் இன்று ஒன்றாய் இருப்பதை கண்டு மனம் நெகிழ்ந்து போனது. சௌந்தரலிங்கம் கூட சந்திரனை ஆச்சர்யமாய் பார்த்தார்.
இரண்டு மணி நேரமாய் வெளியே இருந்தவர்களை எல்லாம் தவிக்கவிட்டு தேவாவை ஒருபாடு படுத்தி அவளுடைய செல்வ மகள் இப்பூ உலகில் ஜனனம் எடுத்தாள். செவிலிப் பெண் வந்து குழந்தையை காட்டவும் இவ்வளவு நேரம் தவிப்புடனும் பயத்துடனும் அமர்ந்திருந்த சந்திரன் சட்டென சென்று “சிஸ்டர் தேவா” சந்திரன் வார்த்தை வாரமல் திணறினான்.
“நல்லா இருக்காங்க சார்… மயக்குத்துல இருக்காங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல வார்டுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க போய் பாருங்க… அவனுக்கு பதிலை கூறியவர் ரோஜா செண்டை போல இருந்த குழந்தையை அவனிடம் நீட்டினார்.
ஒரு நிமிடம் தயங்கி நின்றிருந்தவனை ஊக்கிய “விசாகன் இன்னும் என்ன தயக்கம்…வாங்குங்க மாச்சான் உங்க மருமகள” உரிமையுடன் கூறவும்,
கண்கள் மின்ன குழந்தையை வாங்கியவன் மகிழ்ச்சியுடன் அதனை பார்த்துப் பூரித்துப் போனான். “என் செல்லம், என் அம்மு என் தங்கம்” என குழந்தையை கொஞ்சியவன் விசாகனிடம் கொடுத்து அதன் பிஞ்சி பாதங்களை வருடி முத்தம் வைத்து, தங்கையை காண ஆவலாய் நின்றிருந்தான். அவன் குழந்தையே பார்த்த பிறகு தான் தில்லை மரகதம் சௌந்தலிங்கம் என்று அனைவரும் குழந்தையை பார்த்தனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு தேவாவை தனி அறைக்கு மாற்றிட வாடிய வெற்றிலை கொடியாய் துவண்டு போய் கிடந்த
மனைவியின் அருகில் சென்றவன் அவள் முன் நெற்றியில் முத்தம் வைத்து,
“ரொம்ப படுத்திட்டா இல்ல டா பாப்பா” என்றவன் அவள் கரங்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான்.
சந்திரன் தன் தவிப்பையெல்லாம் வெளியில் காட்டி விட்டான். இவன் காட்டவில்லை அவ்வளவே வித்தியாசம். அவன் வெளியே நின்ற ஒவ்வொரு நிமிடமும் நகரகத்தை விட கொடிய இடமாக உணர்ந்தான்.
ம் என்னும் விதமாய் தலை அசைத்தவள் கணவனின் மனம் புரிய “இந்த பிஞ்சு முகத்தை பார்த்ததும், எனக்கு இப்போ அந்த வலி வலியாவே தெரியல மாமா… அவ்வளவு சந்தோஷமா இருக்கு… நமக்கு நமக்கேன்னு ஒரு குட்டி பாப்பா ” கண்கள் மகிழ்ச்சியில் மின்ன சந்தோஷமாய் கூறியவள் அவன் கரங்களுக்கு அழத்தமாய் ஒரு இதழொற்றலை கொடுத்து அவனை தேற்றினாள்.
அதன் பின் விசாகனுக்கு சந்திரனின் நினைப்பு வர “எங்க எல்லாரையும் விட உங்க அண்ணன் ரொம்ப தவிச்சிட்டான்டா… அவன் முகத்தை பாக்கனுமே!! நீ நல்லபடியா இருக்கன்னு நர்ஸ் வந்து சொல்ற வரை அவனுக்கு உயிரே இல்ல… சரியான பாசமலரா இருக்கான் டா… ” என்று சந்திரனை மனைவியிடம் கிண்டலாக கூறினாலும் அதில் பெருமையும் சேர்ந்திருந்தது..
“ரொம்ப பேசுறிங்க எங்க அண்ணனை… பாவம் அவன்… போங்க…” அவனிடம் கூறினாலும் “எனக்கு அவனை பாக்கனும் போல இருக்கு வர சொல்றிங்களா?” என்றாள் முகம் சுருக்கி
“வெளிய தான் இருக்கான்… இரு கூப்பிடுறேன்… நீ பேசினா தான் அவன் தெளிவான்… அவ்வளவு பைத்தியமா இருக்கான் உன் மேல எனக்கே டப் கொடுக்குறான் ” சிரித்தபடி கூறிவிட்டு அவனை அழைக்க சென்ற, கணவனின் கூற்று அவளுக்கும் புன்னகையே தோன்றியது.
சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த சந்திரன் தங்கையின் அருகில் அமர்ந்தான். தன்னையே உறுத்து நோக்கும் தேவாவின் கண்களை காண முடியாது , “தயக்கமாக என்னை மன்னிச்சிடு செல்லம்மா” என்றான் கரகரப்பான குரலில்.
அவன் பேசியதை கேட்டதும் உற்சாக குரலில் “பேசிட்ட அண்ணா… என்கிட்ட பேசிட்ட… நீயா என்கிட்ட பேசிட்ட..”. என்றவளுக்கு சிரிப்புடன் கண்களில் இருந்து கண்ணீர் துளிர்த்தது.
அவள் கண்ணீரை கண்டு துணுக்குற்றவன் “அழதடா செல்லம்மா இப்போ இவ்வளவு சத்தமா பேசக்குடாது டா” அன்புடன் கூறவும்,
“எத்தனை நாள் ஆச்சி தெரியுமா நீ இந்த மாதிரி என்னை கூப்பிட்டு இவ்வளவு பாசமா, அன்பா பேசி, ஒவ்வொரு நாளும், நீ இப்போ கூப்பிடுவ, அப்போ கூப்பிடுவன்னு ஆசைய இருந்தேன். ஆனா ஒரு முறை கூட என்னை பாக்க வரல… எங்கிட்ட பேசவே உனக்கு இத்தனை நாள் ஆச்சில்ல” கேட்வளின் கண்கள் கலங்கிட இதழ்கள் அழுகையில் துடித்தது.
தேவாமா…. என அழுகையில் கரைந்தவளின் கைகளை சந்திரன் பற்றிக் கொள்ள,
“தேவை இல்ல போ…. தொடாத…பேசாத… வேணா நீ போ… உன் மன்னிப்பும் வேணா… நீ பாசமா பேச வேண்டாம் போ நான் உன் மேல கோவமா இருக்கேன் போ… போ.. போ…” அழுதுக் கொண்டே கூறும் தங்கையின் சொற்கள் அவளை இன்னும் சிறுபிள்ளையாகவே காட்டியது…
“ப்ளீஸ் டா…. அண்ணனை மன்னிச்சிடு டா…” அவள் கைபிடித்து உறுக்கமாய் பேசியவன் “எனக்கும் உன்கிட்ட பேசனும்னு தாண்ட ஆசை… உன்னை பாக்கும் போது எல்லாம் மனசு அடிச்சுக்கும்… ஆனா உன்னை நான் தானே இந்த இக்கட்டில் தள்ளி விட்டேன்னு ஒரு குற்றவுணர்ச்சி…. உன் பேச்சை கேக்கலையேன்னு என் மேலேயே எனக்கு கோவம்… என்னை பேச விடாது… உண்மை தெரிஞ்சும் பேச முடியாம தவிச்சேன் டா… என்னாலையே நான் செய்ததை ஏத்துக்க முடியலையே உனக்கு எப்படி இருந்து இருக்கும்… ” என்ற போது சந்திரனின் குரல் உடைய, அதில் தானும் கலங்கியவளாக அவன் கரம் பற்றி அவனை இளகுவாக்கியவள்,
“விடுண்ணே இந்த ரெண்டு வருஷத்துக்கும் சேர்த்து உன்னை படுத்தி எடுக்கப் போறேன் பாரு…. கூடவே என் பொண்ணும் சேர்த்து படுத்த போறா…” சிறுபிள்ளையாய் மாறி அவனை மிரட்டினாள்.
தங்கையின் இந்த இலகுவான பேச்சில் “அதுக்கு தானேடா காத்திருக்கேன்” என சந்திரனும் சிரித்தான்…