மூன்று மாதமாக பாண்டியும் மினாட்சியிடம் அலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தான்..
இதுவரை காலமும் அந்த வீட்டில் அவளுக்கு நடந்த அநீதிகள் பற்றி அவள் பண்டியிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை..
தினமும் மூன்று வேலையும் அவளுக்கு அவள் வீட்டில் இருந்து தான் சத்தான ஆரோக்கியம் நிறைந்த உணவு வரும்..
முதல் முறையே பாண்டி ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் தான் அனுப்பி இருந்தான்..
பண்ணையாரின் திட்டப்படி அவன் பெயரில் தனியாக யாருக்கும் தெரியாமல் ஒரு வங்கி கணக்கை ஆரம்பித்து தங்கையின் திருமணத்திற்கான ஒரு பகுதி பணத்தை அந்த வங்கி கணக்கில் சேமித்து வந்தான்..
அந்த வங்கி கணக்குக்கு உறிய ஏடிஎம் கார்ட்டும் பண்ணையாரிடம் தான் இருந்தது..
அவன் நல் வாழ்விற்கு வழிகாட்டியவர் என்ற நன்றியில் அவரை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்து இருந்தான்..
தங்கைக்கு மாப்பிள்ளை அமைந்ததும் திருமணத்திற்காக பண்ணையார் அந்த பணத்தை அவன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்..
அம்மா மற்றும் மூன்று தங்கைகள் மீனாட்சி என ஐந்து பேருக்கும் சேர்த்து பத்தாயிரம் படி ஐம்பதாயிரம் அனுப்பி இருந்தான்..
வீட்டில் தாயிடமும் கூறிவிட்டான் ஐம்பதாயிரம் தான் பணம் அனுப்பி இருக்கிறேன்.. அதற்கு மேல் பணம் கேட்க வேணாம்.. அதை பத்தாயிரம் படி செலவழிக்கும் படி கூறிவிட்டான்…
பாண்டியின் அன்னை போட்ட கட்டளை படி மீனாட்சியின் பத்தாயிரமும் அவர்களுக்குத்தான் போய் சேர்ந்தது..
இதுதான் அடுத்து வந்த மாதங்களிலும் தொடர்ந்தது..
மீனாட்சியின் கல்விக்கான செலவு மூன்று வேளை உணவு.. அவளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கான செலவு இனி மாதம் தவறாமல் கிளினிக் குழந்தைக்கான பரிசோதனை அனைத்திற்குமே அன்புதான் அந்த மீனாட்சி மெஸ் மூலம் வரும் வருமானத்தை மீனாட்சிக்காக செலவு செய்தான்..
பாண்டியிடம் அவள் இங்கே அவன் வீட்டில் இருக்க விரும்புவதாக கூறிய காரணத்தால் மட்டும்தான் மீனாட்சி இவ்வளவையும் தாங்கிக் கொண்டு இங்கு இருக்கிறாள்..
அவனிடம் அவள் கூறியது போன்று அவளாக இந்த வீட்டை விட்டு செல்ல மாட்டாள்..
மூன்றாவது மாதம் ஆரம்பத்தில் ஒரு நாள் பாண்டி வழமை போல் அழைப்பு விடுத்தான்..
அவனுக்கு கேட்கவும் தயக்கம். ஆனால் கேட்டு தான் பார்ப்போமே..! என்று இந்த முறை தயக்கத்தை தவிர்த்து மனைவியிடம் கேட்டுவிட்டான்..
வழமை போல் அன்றும் அனைத்து வேலையும் முடித்துவிட்டு அவள் அறைக்கு படிப்பதற்காக வந்தாள்..
தினமும் பாண்டி எடுக்கும் நேரத்திற்கு அன்றும் அழைப்பு வந்தது..
அழைப்பை ஏற்று காதில் வைத்ததும் அங்கிருந்து மீனம்மா என்று செல்லமாக பேசினான்..
“ மீனம்மா சாப்பிட்டியா?.. என்ன பண்ணுற?..இன்னைக்கு காலேஜ் டைம் எப்படி போச்சு.. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?.. இனி உனக்கு மாசத்துக்கு பத்தாயிரம் பணம் பத்தாதே மீனம்மா.. அடுத்த மாதத்தில் இருந்து நான் உனக்கு பணம் அதிகம் அனுப்ப வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.. ஏன்னு காரணம் கேட்க மாட்டியா டி.. ” என்றான் பாண்டி..
“ நாங்க எல்லாரும் சாப்பிட்டோம்.. நீங்க சாப்பிட்டீங்களா?.. இன்னைக்கு வேலை எப்படி போச்சு.. ஏன் எனக்கு மட்டும் பணம் அதிகம் அனுப்பனும்?..”
“ அடி மக்கு பொண்டாட்டி.. நீ இன்னும் வளரனும்.. நான் உன்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் கேட்கும் போது என்ன சொன்னேன்.. கல்யாணம் முடிச்சு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து விட்டோம்.. இப்ப நீ தனி மனுஷியா இருக்க.. கொஞ்ச நாளில் உனக்கே வித்தியாசம் தெரிஞ்சிரும்.. அப்புறம் நீ டபுள் ஆயிடுவ.. என் விருப்பப்படி நான் இப்பவே அப்பா ஆகிடுவேன்.. அதனால் இனி சாப்பாடு மருத்துவ செலவு எல்லாம் அதிகரிக்கும் தானே.. அப்ப உனக்கு டபுளா தானே பணம் அனுப்பனும்.. இப்பவாது புரிஞ்சிடுச்சா டி பொண்டாட்டி.. இல்லை இன்னும் விளக்கமா சொல்லனுமா?.. உன் வாயால நான் அப்பாவாக போறேன்.. நீ அம்மாவாக போற என்ற நல்ல செய்தியை கேட்க தினமும் ஆவலோடு எதிர்பார்த்துகிட்டு இருப்பேன்.. ஆனா நீ சொல்லவே மாட்ட. சரி இன்னும் நாள் இருக்கு போலன்னு நானும் பொறுமையா காத்திருப்பேன்.. எப்ப டி பொண்டாட்டி இந்த நல்ல செய்தியை சொல்ல போற?..” என்றான்..
தந்தையாகும் கனவு அவனது பேச்சிலேயே தெரிந்தது..
நீ தந்தையாகி விட்டாய்.. என்று சொல்வதற்கு வாய் வரை வார்த்தை வந்தும் சொல்ல முடியாமல் தவித்து துடித்து போனாள் மீனாட்சி..
அவனிடம் இந்த பேச்சை இனி எடுக்காமல் பண்ணுவதற்கு ஒரே வழி தான் உள்ளது அதை அவள் செய்ய வேண்டும்..
மனதை கல்லாக்கி கொண்டு பேசினாள் மீனாட்சி..
“ சாரிங்க.. எனக்கு மாதவிலக்கு போன மாதமே வந்துடுச்சு.. அதனால நான் இதை பெருசா உங்க கிட்ட சொல்லிக்கொள்ளவில்லை.. நீங்க இவ்ளோ ஆசையா எதிர்பார்ப்பிங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே சொல்லி இருப்பேன்.. என் தப்புதான். ரியலி வெரி சாரி..” என்று கணவனிடம் உண்மையை சொல்ல முடியவில்லை என்ற ஆதங்கத்தில் அவளுக்கு கண்ணீர் வந்தது..ஆனால் அவள் தனக்கு குழந்தை பெற்று தர முடியவில்லை.. என்று நினைத்து கண்ணீர் வடிக்கிறாள் என நினைத்து அவளை சமாதானப்படுத்தினான் பாண்டி..
“ ஏய் மீனுக்குட்டி. இப்ப எதுக்கு நீ அழுற?.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா. விடு என்னோட பாப்பா வருகையை நான் கூட இருந்து பார்க்கணும்னு இருக்கு..
நல்லது தானே உன் கூடவே இருந்து என் குழந்தையை நீ சுமந்து அதை பெற்று எடுக்கிற வரைக்கும் கூடவே இருந்து பார்த்து குழந்தையை என் மார்லயும் என் தோள்ளயும் போட்டு நானே வளர்க்கணும்னு கடவுள் எழுதியிருக்கான் போல.. அதுவும் நல்லது தான்.. நான் இல்லாம நீ ஒத்தையில பாப்பாவை சுமந்து பெத்து எடுக்க ரொம்ப கஷ்டப்படுவ.. அத பத்தி இனி எப்பவுமே கவலைப்படாம இரு..
நீ நல்லபடியா படிக்கணும்.. ஆரோக்கியமா சந்தோஷமா இருக்கணும்.. என் கடமையை முடிச்சிட்டு வந்து நான் ஆறுதலா என் பாப்பாவ பெத்து எடுக்க வைக்கிறேன்.. சரிடா மீனு குட்டி நேரம் ஆயிடுச்சு.. நீ வச்சுடு.. அழக்கூடாது சமத்தா நல்லபடியா இருக்கணும்.. நீ சந்தோஷமா இருக்கிற அந்த என்னும் நினைப்புதான் இங்க என்னை சந்தோஷமா உயிர்ப்போட இயங்க வைக்கிது.. உனக்கு வீட்ல ஏதும் பிரச்சனை என்றால் உடனே சொல்லுடா மீனு குட்டி.. நீ அதை தாங்கிக் கொள்ளணும்னு நினைக்காத.. நான் தெரிஞ்சுகிட்டா கஷ்டப்படுவேன் கவலைப்படுவேன்னு எதையும் யோசிக்காதே.. சரியா நல்லபடியா இரு இன்றைக்கு நான் வச்சிடுறேன் நாளைக்கு பேசுறேன்.. ” என்று அவளுக்கும் அவனுக்கும் சேர்த்து அவன் ஆறுதல் கூறினான்..
இந்த அளவுக்கு அவளை நம்பும் கணவனை ஏமாற்றுகிற குற்ற உணர்வே அவளை ரொம்ப வாட்டி வதைத்தது..
அவள் பேசியதை கேட்டு லதாவும் அவளை கட்டி அணைத்து ஓவென்று ஒப்பாரி வைத்து அழுது கரைந்தார்கள் இருவரும்..
“ என்னடி மீனா இந்த காலக்கொடுமை.. அண்ணனும் கஷ்டப்பட்டு இங்க நீயும் கஷ்டப்பட்டு ஏன் இந்த பிரச்சனை பேசாம சத்தியமாவது மண்ணாவது என்று நானே எல்லாத்தையும் சொல்லிடலாமான்னு பார்க்கிறேன்.. நேர்ல வந்து இந்த அம்மாவை ரெண்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கட்டும்.. என்னால நீயும் அண்ணாவும் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியல மீனாட்சி.. ” என்று அவர்கள் கஷ்டத்தை பார்த்து அவளும் வருத்தப்பட்டாள் லதா..
மிகவும் எடுத்துச் சொல்லி தோழியை அமைதிப்படுத்தி வைத்திருந்தாள் மீனாட்சி..
கிழமைக்கு ஒரு முறை தாயை பார்த்து விட்டு வருவாள் மீனாட்சி..
அன்றுதான் அவள் அனைத்தையும் மறந்து ஒரு அளவிற்கு அவள் முகத்தில் புன்னகையை பார்க்கலாம்..
மீண்டும் மாமியார் வீட்டிற்கு வந்தால் அவள் முகத்தில் எந்த ஒரு உணர்வும் இருக்காது..
காலேஜில் வயிறு பெரிதாக பெரிதாக மாணவர்களின் கேலி பேச்சையும் தாங்கிக் கொண்டாள்..
அப்படி இருந்தும் அவள் படிப்பை எதுவும் பாதிக்கவிடவில்லை..
எத்தனை சோதனைகள் வந்தாலும் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாள்..
மாதம் தோறும் அன்பும் கோமதியும் வந்து செக்கப்பிற்கு அழைத்து செல்வார்கள்..
இப்படியே நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் தினசரி வேலைகளோடு தினமும் கணவனிடம் குழந்தையை மறைத்து பேசி அவள் நாட்களையும் மாதங்களையும் கழித்தாள்…
மனைவியின் நம்பிக்கையை பொய்யாக்காமல் அவனும் முகத்தை மட்டும் பார்த்து அவளுடன் பேசினான்..
ஏழாவது மாதம் வளைகாப்பு செய்வதற்கு ஏற்பாடு பண்ணினார் கோமதி..
இந்த குழந்தையே பிடிக்கவில்லை.. அதற்கு வளைகாப்பு தான் ஒரு கேடு என அதையும் பாண்டியின் தாய் தடுத்துவிட்டார்..
அன்று ஒரு நாள் பாண்டி இரவு அழைத்ததும் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை கொஞ்ச நாட்களுக்கு அம்மா வீட்டில் தங்கி இருக்க போவதாக அவனிடம் கேட்டாள்..
அவனும் சந்தோஷமாக சம்மதித்தான்.. மனைவி அங்கே போய் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கட்டும் என்று..
அவள் அங்கே நடப்பதை பற்றி அவனுக்கு சொல்லாமல் விட்டாலும் அவன் குடும்பத்தை பற்றி நன்கு தெரியும்.. அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் தெரியும்..
அந்த மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து மீனாட்சியை கோமதி வந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் முறையாக..
மேலும் அங்கே சென்று அவளது தினசரி வேலைகளோடு ஓய்வோடும் காலேஜ் சென்று வந்தாள்..
இடையில் மீனாட்சியை பார்க்கப் போகும் போது அன்புக்கும் லதா பாண்டிக்கும் இடையே காதல் மலர்ந்தது..
மீனாட்சியும் இல்லாமல் லதாவிற்கு அந்த வீட்டில் இருக்க கொஞ்சமும் பிடிக்கவில்லை..
ஒரு நாள் லதா யாரிடமும் சொல்லாமல் அன்புவை பதிவு திருமணம் செய்து கோவிலில் வைத்து தாலியை கட்டும் படி வற்புறுத்தி கூறி தாலி கட்டி வீட்டிற்கு அழைத்து வந்தாள்..
அவள் வீட்டில் பாண்டியிடம் இங்கு அன்புவின் வீட்டில் என யாரிடமும் இருவரும் காதல் மற்றும் திருமணம் எதையும் கூறவில்லை..
தற்பொழுது அவளும் திருமணம் செய்து விட்டால்.. அடுத்து லலிதா பாண்டி தான் திருமணத்திற்கு காத்திருக்கிறாள்..
லீலா பாண்டி சின்னப் பெண்.. அவளுக்கு அண்ணா நாட்டிற்கு வந்தும் உழைத்து திருமணம் செய்து வைக்கலாம்..
அதனால் முதலில் ஐந்து வருட காண்ட்ராக்ட் கேன்சல் பண்ணிவிட்டு இரண்டு வருடத்திலாவது அண்ணன் வந்து அவனுக்கு குழந்தை இருப்பதை அறிந்து கொண்டு அண்ணியை அந்த நரகத்தில் இருந்து விடுவித்து இருவரும் சந்தோஷமாக தனியே சென்று வாழட்டும் என நினைத்தாள் லதா..
குழந்தை உண்டாகி இருப்பதை பற்றி தானே சொல்லக்கூடாது.. அண்ணாவை நினைத்து மீனாட்சி ரொம்ப வருந்துவதாக கூறி சீக்கிரமாகவே நாட்டிற்கு வரும்படி இனி அண்ணனை வற்புறுத்த வேண்டும்.. அதுவே தன்னுடைய ஒரே வேலை.. வற்புறுத்தி வேகமாக அண்ணனை வர வைக்க வேண்டும்.. என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டாள் லதா..
லதா அவள் வீட்டிற்கு சென்று அவளது புத்தகங்கள், உடைகள் என எடுக்கும் பொழுது பாண்டியின் அன்னை ஓர் ஆட்டம் ஆடி இனி அவள் தனக்கு பிள்ளையே இல்லை.. இனி இந்த வீட்டிற்கு வரக்கூடாது.. இந்த சொத்திலோ காசு பணத்திலோ எந்தவித சம்பந்தமும் அவளுக்கு இல்லை.. என திட்டி தீர்த்து அவளை வீட்டை விட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்..
பயந்தபடியே பாண்டியிடம் நடந்ததை கூறினாள் லதா..
“ அண்ணா ப்ளீஸ் அண்ணா என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு மீனா இல்லாம அந்த வீட்ல இருக்கவே பிடிக்கல.. எனக்கு அன்பை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவருக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்காம்.. அன்பு பற்றி உங்களுக்கே தெரியும்.. நான் அவரை விரும்புறதா வீட்டுல சொன்னாலும் அம்மா அவரை ஏற்றுக் கொள்ள மாட்டாங்க..
உங்கள் திருமணத்திற்கு எவ்வளவு எதிர்ப்பு தெரிவிச்சாங்க.. இப்ப அவரை நான் காதலிக்கிறதா சொன்னா உடனே அம்மா ஏற்றுக்கொள்வார்களா என்ன?.. இல்லைதானே..! என்னோட காதலை காப்பாத்திக்க யார் கிட்டயும் சொல்லாமல் ஏன் மீனாட்சி அண்ணிக்கு கூட தெரியாது.. நான் அவரை திருமணம் பண்ணிக்க போறது.. இங்க கோமதி அத்தையும் கோவமா தான் இருக்காங்க.. ஆனாலும் எங்களை வெறுக்காமல் ஏற்றுக் கொண்டாங்க..
அண்ணி கொஞ்ச நாளைக்கு இங்கதான் இருப்பாங்க.. அப்ப நானும் அண்ணி கூடவே இந்த வீட்ல ரொம்ப சந்தோஷமா இருப்பேன் அண்ணா.. ப்ளீஸ் நீ மட்டும் என்ன மன்னிச்சு உன் தங்கச்சியா ஏற்றுக் கொண்டால் அதுவே எனக்கு போதும்..” என நடந்தவற்றை கூறி அண்ணனிடம் மன்னிப்பு கேட்டாள் லதா..
“ எனக்கு என்ன பாப்பா.. நீ சொல்லாம கல்யாணம் பண்ணிட்ட அதை நான் பார்க்க முடியாமல் போயிடுச்சு அதுதான் கவலை.. மத்தபடி அன்பை பற்றி எனக்கு தான் நல்லா தெரியுமே.. உனக்கு அன்பு ரொம்ப நல்ல சாய்ஸ்தான்..
பொறுத்திருந்து வீட்டில அம்மா கிட்ட கூட சொல்லாட்டிலும் என் கிட்டயாவது சொல்லி இருந்தா லலிதா கல்யாணத்தை முடிச்சிட்டு அடுத்தது நானே உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்.. இந்த வருத்தம் மட்டும்தான் எனக்கு… மற்ற படி நீங்க நல்ல ஜோடி தான்.. எனக்கு ரொம்ப பிடிச்ச ஜோடியும் கூட.. காலத்துக்கும் சந்தோசமா ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்டு எங்கயும் யார்கிட்டயும் விட்டுக் கொடுக்காமல் வாழணும்.. நல்லா இருங்க.. அத்தைக்கு உடம்பு முடியாட்டி நீ அவங்களை நல்ல படியா பார்த்துக் கொள்ளணும்.. உன் அண்ணி மாதிரி பொறுப்பா இருக்கணும்.. நீ அந்த குடும்பத்துக்கு ஒரு கெட்ட பேர் எடுத்து கொடுக்க கூடாது.. உனக்கும் எந்த ஒரு கெட்ட பேரும் வந்துடக்கூடாது.. நீ சந்தோஷமா நல்லபடியா இருக்கணும்..” என்று அண்ணனாக சந்தோசமாக வாழ்த்தினான் பாண்டி..
அன்றைய அவர்களது முதல் இரவு நாளில் லதா பாண்டி உறுதியாக சொல்லிவிட்டாள்…
எப்படியும் இன்னும் ஒரு வருடத்திற்குள் அண்ணனை நாட்டுக்கு வரவழைக்க வேண்டும்.. அவர்கள் வாழ்கை சந்தோசமாக அமையனும்.. அவள் படிப்பும் முடியவேண்டும்.. அதன் பின்பு தான் அவர்களுக்கு இடையே முதலிரவு ஆரம்பிக்கும்.. அதற்கு இடையில் நமக்கு கிடைக்கும் காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தோழர்களாக நன்றாக புரிந்து கொண்டு சந்தோசமாக இருப்போம்.. அனைத்து விதத்திலும் இருவரும் மீனாட்சிக்கு உறுதுணையாக இருப்போம்.. என பேசிக் கொண்டார்கள்..
காலமும் கடந்து மீனாட்சிக்கு பிரசவ வலி வந்தது.. கோமதி மற்றும் அன்பு லதா என அனைவரும் மருத்துவமனைக்கு அவளை அழைத்து சென்றார்கள்.. இவ்வளவு சின்ன வயதில் கணவன் அருகே இல்லாத வலியோடு கூடிய அனுபவத்தோடு அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் மீனாட்சி..
இரண்டு நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்ததும் லதா சந்தோஷமாக ஆரத்தி எடுத்து தாயையும் சேயையும் உள்ளே அழைத்தாள்..
இந்த கண்கொள்ளா காட்சியை பாண்டி பார்க்கவில்லை.. என்ற கவலை மட்டும் தான் அங்கே அனைவருக்கும்..
அவர்களின் அந்த கவலையையும் குழந்தை சிரிப்பில் மறந்து போனார்கள்..
தாய் வீட்டில் இருந்து சீராடி விட்டு மூன்று மாதத்தில் மாமியார் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மீனாட்சி..
அவள் அந்த வீட்டில் இல்லாத இந்த ஆறு மாதமும் மீண்டும் பாண்டியின் அம்மா தான் சமையல் அறையில் அனைத்தையும் செய்து கஷ்டப்பட்டார்.. கூட இருந்த இரண்டு பெண்களும் எந்த ஒரு சின்ன உதவியும் செய்யவில்லை..
எப்பொழுது மீனாட்சி வருவாள் என்று காத்திருந்தார்..
அந்த வருட படிப்பை நிறுத்திவிட்டு அடுத்த வருடம் படிப்பதாக தீர்மானித்துக் கொண்டாள்..
ஆனால் அவள் காலேஜ் விட்டு நின்றது எதையும் பாண்டிக்கு சொல்லவில்லை..
கணவனுக்கு தெரியாமல் பலவற்றை மறைத்தாள்..
அவன் தினம்தோறும் அதே நேரத்துக்கு அலைபேசியில் அழைத்து பேசுவான்.. அந்த நேரத்திற்கு குழந்தையை உறங்க வைத்துவிடுவாள்..
எப்போது குழந்தை கணவன் அழைக்கும் நேரத்திற்கு முழித்து அழுது காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயந்து அவனுடன் பேசும் நேரத்தையும் குறைத்துக் கொண்டாள்..