குணா, தன் பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு, அவன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அது ஒடுகளால் மூடப்பட்ட வீடு, முன்பக்கம் சுற்றிலும் மரச்சட்டங்களால் அடைத்து காற்றுப் புக கூடிய வராண்டா, இரண்டு அறைகள், ஹால் பகுதி, சாமி அறை, கேஸ் வைத்திருக்கும் சமையல் அறை, இறுதியாக விறகு அடுப்பு கொட்டகை என விரிவாக காணப்பட்டது.
ஓட்டு வீடு அகன்று காட்சி அளித்தாலும், படுக்கை அறைகள் பெயருக்காக மட்டுமே இருந்தது, அதாவது கட்டில் போட்டு இரண்டு அடி கூடுதலாக இருக்கும்.
மற்றபடி சமையல் அறை, பின் பக்கம் பரந்து விரிந்து கிராமத்தின் அழகுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.
சித்திரர், அந்த ஊர் மக்களால் கணக்கர் என அழைக்கப்படுவார்.
கணக்கருக்கு மூத்த மகன் ரகுபதி, நடு மகன் குணசீலன், மூன்றாவது மகன் பாலகுமார், கடைசியாக கடைக்குட்டி தென்றல் என மொத்தம் நான்குப் பிள்ளைகள்.
இந்த நான்குப் பேரின் தாயும், சித்திரரின் மனைவியுமான மாயம்மா, குணா வீட்டிற்குள் நுழைய காத்திருந்தவர் போல், “நடுலவனே! எங்கப் போயிட்டு வர.?” என அதிகாரமாக கேட்டார்.
“வெளியில போயிட்டு வரேன்மா” எனச் சாதரணமாக கூறியவன், உள்ளே நடக்க…
“அதான் எங்கனு கேக்குறேன்”
“நான் என்ன கலெக்ட்ரா கையெழுத்துப் போட போறேனு சொல்ல, இல்ல வாத்தியாரா பாடம் சொல்லி தர போக, தோப்புக்கு தான்மா போனேன்” என்றான் கடுப்புடன்.
கணக்கரும் அங்கு தான் நாற்காலியில் அமர்ந்து மூக்கு கண்ணாடி உதவியுடன் செய்திதாள் படித்துக் கொண்டு இருந்தார்.
“நான் உன்னைய பெத்தவடா, எந்தத் தோப்புக்கு போன.?” என விழிகள் தெரித்திட கேட்டார்.
“அதான் தெரியுதுலமா, இப்ப என்னத்துக்கு தெரிஞ்சுட்டே கேக்குற.” என அலட்சியமாக கூறினான்.
“நாலு பெத்துட்டனு பெருமையா இருந்தன்டா, ஆனா அதுகல ஒன்னு இப்டி உருப்புடாம போவுமுனு கனவுல கூட நெனக்கலையே” எனக் கத்தினார் மாயம்மா.
“இப்ப உனக்கு என்னம்மா பிரச்சனை.?”
“நீதான்டா என் பிரச்சனையே, மாடு மாதிரி வளந்துட்டா போதுமா, மத்தத எல்லாம் பாக்க வேணாமா.” என மகனை எரிச்சலாக பார்த்தார்.
அவனோ முகத்தில் அடங்காத கோபத்துடன் நின்றான்.
மூத்த மருமகளும் ரகுபதியின் மனைவியுமான சரிதா அடுப்படியில் இருந்து வெளியில் வந்து, தென்றலிடம்”என்ன உங்கம்மா வந்தவுடனே ஆரம்பிச்சுட்டாங்க தென்றல்!” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்! குணா அண்ணே நினைவு இடத்துக்குப் போயிட்டு வந்துருக்கு”
“அது எப்படி போகாம இருப்பாரு லைலா, மஜ்னு காதல்ல, ஆனா என்ன இப்ப தேவதாஸ் மாதிரி ஆகிட்டாரு” எனக் கேலி செய்தாள் சரிகா.
“அண்ணி! அங்க ஏற்கனவே அதிகமா போயிட்டு இருக்கு, நீங்கக் கொஞ்சம் பேசாம இருங்க” எனக் கடுப்பானாள் தென்றல்.
பாலாவும் சத்தம் கேட்டு பின்பக்கத்தில் இருந்து வர, ரகு அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்தான்.
“மாயம்மா! நீ தேவையில்லாம அவன்ட பேசிட்டு இருக்க, குணா! நீ உள்ள போ” என்றார் கணக்கர்.
குணா நகர போக, “நில்லுடா! எனக்கு இன்னைக்கு ஒரு முடிவுத் தெரிஞ்சு ஆகனும்” எனக் கணவர் பக்கம் திரும்பியவர், “யாரு, நான் தேவையில்லாம பேசிட்டு இருக்கனா, சரி! அப்ப நீங்க தேவையானத பேசுங்கய்யா! பேசுங்க!
எப்டி பேசுவீங்க.? பொழுதனைக்கும் அந்தப் புஸ்தகத்துல என்ன தான் இருக்கோ, கண்ணாடிய மாட்டிட்டு சாப்பாட்டு நேரம் போக அசையாம உட்காந்திப் படிக்குறீங்க, ஒரு நாளாச்சும் வீட்டுல என்ன நடக்குதுனு பாத்துருப்பீங்களா.?” எனக் கணவரை தக்க தருணத்தில் பழித் தீர்த்தார்.
“அம்மா! நீ பேசுறது வாசல் வரைக்கும் கேக்குது, என்னாச்சு.?” எனக் கேட்டுக் கொண்டே வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் ரகு.
தற்பொழுது வீட்டுப் பொறுப்பு அவனிடம் தான் உள்ளது.
கணக்கர் வழக்கம் போல் மூத்த மகன் வர பார்வையாளராக மாறினார்.
“பெரியவனே! நீயே கேளு, இவன் எங்கப் போயிட்டு வந்தான், ஏன் போனானு கேளு” என நடுமகனை முறைத்தார்.
“எங்கப் போன குணா.?”
“அண்ணே! ஒன்னுமில்ல, அம்மா ஏதோ உளரிட்டு இருக்கு” என மழுப்பியவனிடம், சரிகா ஜாடைக் காட்டினாள்.
மனைவியின் ஜாடையில் புரிந்துக் கொண்ட ரகு”சரி! சரி! நீ போ” என்றான்.
“பெரியவனே! இவன் எதுக்கு அங்கப் போனான், இவன வாழவே விடக்கூடாதுனு கங்கனம் கட்டிட்டு திரியுற கூட்டம் அது, துக்கம் விசாரிக்கப் போனாரோ, எனக்கு மனசே ஆறலடா.
நீயும், இவரும் என்ன நெனச்சுட்டு இருக்கீங்க.? இவனுக்கு காலகாலத்துல கல்யாணத்தை முடிச்சா தானே, அடுத்து இருக்க ரெண்டுக்கும் நல்லது நடக்கும். இப்பவே வயசு முப்பத்தாறு ஆகுது.” எனப் பொங்கினார்.
குணா, ரகுவின் முன் அதிகம் பேச மாட்டான், அதனால் அமைதியாக ஆனால் தாயை முறைத்தவாறு நின்றான்.
“அம்மா! என்ன விளையாடுறீயா.? இவனுக்கு பொண்ணுக் குடுக்க வரிசையிலயா நிக்கிறாங்க.? அதான் சுத்துப்பட்ட ஊருக்கே இவன் கதைத் தெரிஞ்சுருக்கு, அப்படியே வந்தாலும் அவனுங்க எல்லாத்தையும் சொல்லி விரட்டி விடுறானுங்க, நான் என்ன தான் பண்ண முடியும்.?” எனத் தாயிடம் குரலை உயர்த்தினான் ரகு.
“என்னைய ஏன் நீ பெத்த கணக்குல வைக்கிற, அவனுக்கு கல்யாணம் பண்றதுனா பண்ணு” எனத் தம்பியை காட்டி, தாயை முறைத்தான் குணா.
“எப்டி கணக்குல வைக்காம போறதுடா, வரவங்க நீ யாருனு கேப்பாங்கள, பாலாவ விடு, தென்றல் வேற வீட்டுக்குப் போறவ, அவள பாக்க வரவன் நீ ஏன் கல்யாணம் பண்ணாம இருக்கனு கேட்டா என்ன சொல்றது.?” எனத் தம்பியை முறைத்தான் ரகு.
“இப்ப என்னைய என்ன பண்ண சொல்றீங்க.? நான் இருக்குறது கஷ்டமா இருந்துச்சுனா எங்கயாவது போயிடுறேன், இல்லையா…” என அவன் முடிப்பதற்குள் மாயம்மா, “டேய்! இதுக்காடா உன்னைய பெத்தேன்.” என குணாவின் பேச்சை நிறுத்தினார்.
“நீ தான் எல்லாத்தையும் ஆரம்பிச்ச மாயம்மா” என மனைவியை முறைத்த கணக்கர் மகனிடம்”ஊருக்குள்ள பலரும் பலவிதமா பேசுறாங்க குணா, ஆனா நீ என் மகன், அத புரிஞ்சு நடந்துக்கோ” என்றார்.
குணா அமைதியாக நின்றான்.
மாயம்மா”பெரியவனே! இவனுக்கு தான் யாரும் பொண்ணு தரலையே, நீயாச்சும் உன் கொழுந்தியாள பேசி முடிக்க புடாதா.?” என மருமகளை ஓரக்கண்ணால பார்த்துக் கேட்டார்.
‘கெழவி! அங்கச் சுத்தி, இங்கச் சுத்தி என் தங்கச்சி வாழ்க்கைக்கு வருதா, இத்தன நாளா வெளியில தேடிட்டு கெடைக்கலனு இப்ப என் குடும்பம் இனிக்குதா.? நான் விட மாட்டேன்’ என எண்ணிய சரிகா, கணவன் பதில் சொல்வதற்குள், “அத்தை! என் தங்கச்சிப் படிச்சு இருக்கா, நடுலவருக்கு எல்லாம் பொருத்தம் இருக்காது, வேணுனா இளையவருக்கு பேசுங்க, நானும் அப்பா கிட்ட கேக்குறேன்” எனப் பட்டென்று கூறினாள்.
கணக்கர், இந்த அவமானம் தேவையா! என மனைவியை நோக்கினார்.
“ஆமான்டி! நாய், நரி, பூனை, கழுதைனு எல்லாம் இப்ப படிச்சுட்டு, கட்டுனா சிங்கத்தை தான் கட்டுவேனு நின்னா, மத்த ஜீவராசி எல்லாம் யாரு கட்டுறது. இவனுக்கு வேணானு சொல்ற உன் தங்கச்சிய அவனுக்கு மட்டும் என்ன மண்ணாங்கட்டிக்கு கட்டனும்.” என மருமகளை சாடினார்.
“ம்ம்ம்! ஏதாச்சும் குரங்கு வரும் புடிச்சு கட்டி வைங்க” என மெல்ல சலிப்புடன் கூறினாள்.
“என்ன சொன்ன.?” எனக் காதில் விழாமல் கேட்டார் மாயம்மா.
“ம்ம்ம்! அண்ணியோட தங்கச்சி இந்த வீட்டுக்கு வந்தா, அவ்ளோ தான். அப்புறம் அக்கா, தங்கச்சி ஆட்டம் தான்.” எனச் சிரித்தாள்
“ம்ம்ம்! உண்மை தான் தென்றல்.” என்றான் பாலா.
“அம்மா! நானும் சொல்லி வச்சு இருக்கேன், சீக்கிரம் பாத்துடலாம்” என மூத்தவனாக தாயிற்கு ஆறுதல் கூறினான் ரகு.
குணா அதற்கு மேல் நிற்காமல் உள்ளுக்குள் சென்றுவிட்டான்.
“சிறுசு! நடு அண்ணனுக்கு சோறுப் போட்டு வை” என மகளை அதட்டினார் மாயம்மா.
“சரிம்மா!” என அவளும் அடுப்படியை நோக்கி நகர்ந்தாள்.
சரிதா கண் ஜாடைக் காட்ட, சிறிது நேரம் கழித்து ரகு எழுந்து அவர்கள் அறைக்குள் சென்றான்.
“என்ன.?”
“இங்கப் பாருங்க, உங்கம்மா நடுலவருக்கு என் தங்கச்சியை பேசப் பாக்குறாங்க, அது முடியவே முடியாது. சின்னவருக்கு தான் முடிக்கனும், இவருக்கு தேடியே முடியல, அடுத்து அவரு, அடுத்து உங்கத் தங்கச்சி… உங்களுக்கு மாப்புள்ள, பொண்ணுப் பாத்தே ஆயுசுப் போயிடும் போல, அதனால தான் சொல்றேன் கையல வச்சுட்டுத் தேடாதீங்க, சவிதா சின்னவருக்குப் பொருத்தமா இருப்பா.” எனக் கணவனிடம் தூபம் போட்டாள்.
“ம்ம்ம்! பாப்போம், நீ போய் சாப்பாடு எடுத்து வை” என்றான் அவன்.
பொம்மல்…
செல்வியின் மூத்த அக்கா கோதை வாசற்படியில் அமர்ந்திருந்தார்.
அவரை காண வந்த அதே ஊர் ரெங்கம்மா”என்ன கோதை அக்கடானு உட்காந்துட்ட போல” என அவர் எதிரே கீழ் படியில் அமர்ந்தார்.
“ம்ம்ம்! கொல்லைக்குப் போயிட்டு இப்ப தான் வந்துக் குளிச்சுட்டு உட்காருரேன்” என வெற்றிலையை மென்றார்.
“ம்ம்ம்! அந்த மனுசனும் தனியா வட நாட்டுல கஷ்டபடுறாரு”
“என்ன பண்றது, பொழப்பை பாத்தா தானே காசு.”
“ம்ம்ம்!”
“நான் சொன்னனே என்ன ஆச்சு, அந்த இடத்துல இருந்துப் பதிலு வந்துச்சா”
“ம்ம்ம்! வந்துச்சு, சொன்னா கோப படாத, அவங்க உன் மவளை தான் கேக்குறாங்க”
“இதுல கோப பட என்ன இருக்கு, வர இடத்துல பாதி செல்வியை பாத்துட்டு சுமதியை கேக்குறானுங்க, இல்லையா வரதட்சணை பெருசா யோசிக்குதுங்க, இதுக்கு எல்லாம் மேல ரெண்டாந்தாரமா வந்துக் கேக்குறாங்க ரெங்கா” என ஆதங்கப்பட்டார் கோதை.
“ம்ம்ம்! என்ன செய்றது கோத, வயசு ஆகுதுல. உன் பொண்ணே போட்டியா வந்துட்டா”
“என்ன புரியல, அதுசரி ரெண்டாந்தாரம் தானு விதி இருந்துச்சுனா அத யாரு மாத்துறது”
“அது என்னமோ உண்மைதான்”
“கோத! நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா நெனக்காத, நீ எவ்ளோ கஷ்டப்பட்டு அவள்க வளத்தனு தெரியும். ரெண்டாந்தாரமுனு விதினா நீ ஏன் வெளியில போற, பேசாம செல்விய உன் புருசனுக்கே கட்டி வச்சுடு, அவ போய் அவர் கூட இருந்து சோறு ஆக்கிப் போட்டுட்டு கெடக்கட்டும்.
உனக்கும் ஒரே பொண்ணு தான், உன் வீட்டுலயும் ஆம்பள புள்ள இல்ல, இது என்ன நம்ம வகையில நடக்காததா என்ன.?” என்றார்.
“என்ன சொல்ற ரெங்கா, இது எப்டி முடியும்.?”
“எப்டினா.? நீ தான் செய்யனும். உன் மாமா கிட்ட பேசு, செல்வி கிட்ட பேசு. கல்யாணத்தைப் பண்ணி அங்க தானே கூட்டிட்டுப் போகப் போறார். என்ன கொஞ்ச நாளு ஊரு சலசலக்கும். அப்புறம் ஆமா! கொழுந்தியா தானே அதுவும் வயசு ஏறினவ தானேனு ஏத்துப்பாங்க. ஏன்! நம்ம ஊர்ல அந்த பஞ்சா கெழவன் கட்டிக்கலயா… எல்லாம் ஒரே வீட்டுல தான் இருக்குதுங்க”
“ம்ம்ம்! எனக்குமே சரினு தான் படுது, நானும் பாத்து, போதும் போதுமுனு அலுத்துட்டேன், மாமா கிட்ட பேசுறேன்.”
“பேசிட்டு சொல்லு, சாமிமலையில போய் தாலிக் கட்டி கூட்டியாந்துடுவோம்” என வந்த வேலை முடிந்தது எனக் கிளம்பினார் ரெங்கம்மா.
வீட்டின் சந்தில் காய்ந்த துணிகளை எடுக்க வந்த செல்வி அவர்கள் பேசியதைக் கேட்டு மனம் உடைந்து அப்படியே போய் சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்தாள்.
“அக்கா! எங்க போன.?” எனக் கேட்டவாறு சுமதி செல்வியைத் தேடினாள், செல்வி அமர்ந்த இடத்திலே இருக்க, பொழுது போனது கூட தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
சுமதி, சிறிய வயதில் இருந்தே செல்வியை அக்கா என்றே அழைப்பாள்.