மகள்கள் தூங்கியதும் தான் ரகு வீட்டிற்கு வந்தது, இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.
அடுப்படி வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்த சரிகா, சந்தர்ப்பத்தை எல்லாம் எதிர்பார்க்கவில்லை, நுழைந்ததுமே அவனிடம்”இங்க பாருங்க! உங்கம்மா நம்ம புள்ளைங்க கிட்ட ஓரவஞ்சனையா பழகுறாங்க” என்றாள்.
“என்னாச்சு?” எனக் கேட்டுக் கொண்டே அவன் படுப்பதற்கு தயார் ஆகி, கட்டிலில் அமர்ந்தான்.
மகள்கள் தரையில் பாய் விரித்து அதில் படுத்திருந்தனர். அந்த அறையில் பெரிய கட்டில் எல்லாம் போடுவது சிரமம், ஆதலால் ஒற்றைக் கட்டில் போட்டு ரகு மட்டும் உறங்கிட, தாயும், மகள்களும் தரையில் படுத்துக் கொள்வர்.
தேவைப்படும் போது மட்டுமே கணவன், மனைவி உறவை அமைத்துக் கொள்வர்.
“என்னாச்சா…” என நடந்ததைக் கூறினாள்.
“இதுல என்ன இருக்கு” என தலையைப் பின்னால் சாய்த்துக் கொண்டான்.
“ம்ம்ம்! பாக்க தானே போறேன், உங்க தம்பிகளுக்கு, தங்கச்சிக்கு ஆம்பள புள்ள பொறந்தா உங்கம்மா எப்டி தாங்குறானு” என இதழ்களைச் சுளுக்கி இழுத்தாள்.
“என் அம்மா அப்ப இருந்தே இப்டி தான் சரிகா, ஏன்! எங்களையே பெருசா கொஞ்சிப் பேசாது, அதோட பாசம் இப்டி தான் இருக்கும்.”
“ஏங்க! உங்கள எல்லாம் கொஞ்ச வேணாம், ஆனா பேரப்புள்ளைங்கள ஊருக்குள்ள எப்டி கொஞ்சி தடவி வளர்க்குறானுங்கனு தெரியுமா.? ஆனா உங்கம்மா…” என நிறுத்தினாள்.
“உஷ்ஷ்ஷ்! சரி தூங்கு” எனக் கண்களை மூடினான்.
“பாக்க தானே போறேன், இன்னும் வர பேரப்புள்ளைங்கள மட்டும் கொஞ்சட்டும், அப்ப இருக்கு, இந்த சரிகா யாருனு காட்டிடுவேன் அந்தக் கெழவிக்கு” என்றாள் வாய்விட்டே…
அப்பொழுது தான் அது நினைவு வர, “சரிகா! குணாக்கு டாக்டர் ஒரு பொண்ணு வீட்டுச் சம்பந்தம் சொன்னாரு, ஆனா அது சரிவராதுனு சொல்லிட்டேன்” எனக் கண்களைத் திறந்துக் கூறினான்.
“ஏன்! சரிவராத அளவுக்கு என்ன சம்பந்தம் அது.?”
ரகு, டாக்டர் கூறியதைக் கூறிட, “ஓ! அது சரி, ஏங்க! என்னமோ உங்கத் தம்பிக்கும் சம்பந்தம் வரிசையா வந்து நிக்கிற மாறி நீங்க அத ஒதுக்கிட்டு வந்து இருக்கீங்க.” என நக்கலாக கேட்டாள்.
“அதுக்காக, அந்தப் பொண்ணு எப்டி சரிவரும்.? வயசும் ஏறி இருக்கு”
“என்ன வயசு ஏறி இருக்கு, படிக்குற காலத்துல விரும்பி கல்யாணம் பண்றவங்க எல்லாம் ஒரே வயசு தானே, ஏன் அந்த பூமலரை உங்கத் தம்பி கட்டி இருந்தா இப்ப வந்த சம்பந்தம் பொண்ணோட அவ அதிகம் தான்.”
“நம்ம பாத்து பண்ணி வைக்கும் போது, இதை எல்லாம் பாக்கனும் தான், அதும் அம்மா கிட்ட போய் இந்த சம்பந்தத்தைப் பத்தி பேசவே முடியாது, அதான் வேணானு சொல்லிட்டேன்”
“ம்ம்ம்! சரியான புத்திக் கெட்ட மனுசன், உங்கத் தம்பிக்கு சுத்துபட்ட கிராமத்துல எவனுமே பொண்ணு தர யோசிக்கிறான், அப்டி இருக்கும் போது இவரு வேணானு ஒதுக்கிட்டு வந்தாராம். ஏங்க! நீங்க சரினு சொன்னாலும் பொண்ணு வீட்டுல சரினு சொல்லனும்”
“ஏன்டி! முப்பது வயசுக்கு மேல பொண்ணு வீட்டுல இருக்குனா என்ன அர்த்தம், ஏதோ ஒரு காரணமுனு யோசிக்க வேணாமா.?”
“அத தான் சொல்ல வரேன், அது என்னனு விசாரிங்க, நமக்கு சரிப்பட்டா முடிச்சுடலாம், இல்லனா உங்கத் தம்பிக்கு கல்யாணம் எல்லாம் கனவா போயிடும், சொல்லிட்டேன்.”
ரகு, பொதுவாக மனைவிச் சொல்வதை அப்படியே கேட்க மாட்டான், ஆனால் இன்று அவள் கூறியதில் ஏதோ இருப்பது போல் தோன்றிட, நாளை டாக்டரிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தான்.
சரிகா மனதில்’இந்தக் குணாக்கு முடிச்சா தான், நம்ம தங்கச்சியை கொண்டார முடியும், அவளுக்கும் வயசு ஏறுது’ எனச் சலித்துக் கொண்டாள்.
அடுத்த நாள் காலையில் மெடிக்கலில் இருந்த ரகு, முதல் வேலையாக டாக்டர் எண்ணிற்கு அலைபேசியில் அழைத்தான்.
“சொல்லுங்க ரகு!”
“டாக்டர் சார்! நேத்து ஒரு சம்பந்தத்தைப் பத்தி சொன்னீங்களே, அத பத்தி விசாரிக்க தான் கூப்புட்டேன்”
“அப்டியா ரகு, என்ன விசாரிக்கனும்.?”
“இல்ல! அந்தப் பொண்ணுக்கு முப்பது வயசாகியும் இன்னும் கல்யாண ஆகலைனா என்ன காரணம்.? அதான் விசாரிக்கலாம்னு… ஒத்து வந்தா தம்பி குணாக்கு பாக்கலாம்ல” என இழுத்தார்.
“பெருசா ஒரு காரணமும் இல்லப்பா, வசதி கம்மி, அந்தப் பொண்ணுக்கு ஒரு கண்ணு கருமுழி லேசா மாறி இருக்கும், அது குறை கிடையாது, மொத தடவை பாத்தா வித்தியாசமா இருக்கும், அவ்ளோ தான், அக்கா மூணுப்பேரு கல்யாணம் ஆக, இது வெயிட்டிங்ல கெடந்துட்டு” என விளக்கினார்.
“வயசு கூட பரவாயில்லனு பாத்தா இது என்ன புதுக்கதையா கண்ணுப் பத்தி சொல்றீங்க சார், அம்மா கிட்ட வயச சொல்றதே பெரிய விசயமாச்சே”
“ரகு! நான் மாட்டுக்கு வைத்தியம் பாக்கிறவன், எனக்கு பொண்ணு, மாப்புள்ள பாக்குற வேலை கிடையாது, ஏதோ நீ தம்பிக்கு வரன் பாக்குறதா சொன்ன, எனக்குத் தெரிஞ்ச இடத்துல இருக்க பொண்ணை சொன்னேன். அது மட்டுமில்ல செல்வி தங்கமான பொண்ணு, உங்கக் குடும்பமும் நல்ல வசதியோட திருப்தியா இருக்கீங்க, பெரிய குடும்பமா இருக்குற உங்க வீட்டுக்கு ஏத்த பொண்ணு, வசதி, வயசை பாக்காதீங்க, கண்ணு ஒரு குறையும் இல்ல, ஒரு தடவை நேருல பாருங்க, சரி வந்தா தொடர்ந்துப் பேசுவோம்.” என விரிவாக கூறினார்.
ரகுவிற்கு டாக்டர் மேல் நல்ல அபிப்ராயம் இருப்பதால், அவரின் சொல்லை தட்ட தோன்றவில்லை.
“சரிங்க சார்! நான் அம்மா கிட்ட பேசுறேன், நீங்களும் அவங்க வீட்டில் பேசிட்டு சொல்லுங்க”
சிறிது யோசித்த ரகு”அப்படியில்ல சார்! நீங்கப் பொண்ணு வீட்டுல பேசுங்க, நான் அம்மாவ சமாளிச்சு, பொண்ணு பாக்குற நாள சொல்றேன்”
“அப்ப சரி!” என டாக்டர் ஃபோனை வைத்துவிட்டு, மாலை செல்வி வீடு போக முடிவெடுத்தார்.
டாக்டர் மாதிரி ஆள்கள் இந்த கல்யாண பிணைப்புச் செய்தியை ஆதாயத்துக்காக பார்ப்பதில்லை. ஏனோ மனதிற்கு பிடித்தவர்கள் வாழ்வில் நல்ல துணையை அமைத்துக் கொண்டு சிறப்பாக வாழட்டும் எனக் கடவுளால் நியமிக்க பட்டு அவர் நடத்திட செயல்படுவர்கள். அது விதிப்படி நிகழும், நடத்தி வைக்கும் திருமணங்கள் அனைத்துமே சிறப்பதில்லை, சிலவை விதியின் பிடியில் சிக்கி சின்னாபின்னம் ஆகும்.
மாலை…
“அக்கா! நீ சாப்புடாம கெடந்தா எல்லா சரியாகிடுமா, வாக்கா” என செல்வியை அழைத்தாள் சுமதி.
“என்னடி ரொம்ப தான் கொஞ்சுட்டு இருக்க, எத்தன நாளைக்கு சாப்புடாம கெடப்பா, கெடக்கட்டும்” எனக் கோதை சீறினார்.
“இங்க பாருக்கா, என்னைய பத்தி தெரியுமுல நான் முடிவெடுத்தா அதுல அழுத்தமா இருப்பேனு, எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டேன், அதையும் மீறி ஏற்பாடு பண்ண, அப்புறம் நான்…” என அவள் முடிப்பதற்குள்,
“என்ன சாகப்போறீயா.? செத்துப்போடி, இப்ப நான் மட்டும் ரொம்ப நாளா இருக்கப் போறேன், நீ முன்னாடி போ நான் பின்னாடியே வாரேன். ஏதோ நான் இருக்கதால இந்த ஊருக்குள்ள ஓட்டிட்டு இருக்க, நாளைக்கே நான் இல்லைனா எவன் வந்து கைப்புடிப்பானு தெரியாது, இவ்ளோ ஏன் என் புருசனே வானு கூப்புட்டா என்ன பண்ணுவ.? அதுக்கு தாலியக் கட்டிகிட்டு இருந்துட்டுப் போயடி.” எனச் சலித்தவாறுப் பேசினார் கோதை.
“அம்மா! அப்பாவ பத்தி தப்பா பேசாத” என சுமதி தாயை முறைத்தாள்.
“ஆமா! இவ ஒருத்தி, உனக்கு தான் அப்பன்டி, அவளுக்கு இல்ல. இந்த ஆம்பள புத்தி எப்ப மாறும்னு தெரியாது செல்வி, நான் சொல்றத கேளு.” எனத் தங்கையிடம் புரிய வைக்க முயன்றார்.
“அக்கா! நான் ஒன்னும் தூக்குப் போட்டோ மருந்துக் குடிச்சோ சாக மாட்டேன், அந்தளவு தைரியம் சாக வரல, ஆனா அழுத்தமா இப்டியே பட்டினியா கெடந்துட முடியும். என்னைய விடு” எனக் கண்களில் நீர் வழியக் கூறினாள்.
செல்வியைப் பொறுத்தவரை, சிறு வயதில் இருந்தே ஏதாவது கோபம் என்றால் உடனே சாப்பாடு மீது தான் காட்டுவாள். அவள் அந்தளவு பசியை அடக்குவதில் அழுத்தமானவள்.
“கெடந்து சாவு!” என கோதை வாசற்படிக்கு செல்ல, டாக்டர் நுழைந்தார்.
“வாங்க டாக்டர்! என்ன இந்தப் பக்கம்.? மாட்டுக்கு எதும் ஊசிப்போட வந்தீங்களா.?” என வரவேற்றார்.
“ஏன்மா! நான் வந்தா மாடு பாக்க மட்டும் தான் வரனுமா.” என போர்டிகோவில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“அப்டியில்ல! என்ன சேதி” எனக் கேட்டுக் கொண்டே, “சுமதி! குடிக்க தண்ணீ கொண்டா” என மகளை ஏவினார்.
“எல்லாம் நல்ல விசயம் தான்மா…” எனத் தாமதபடுத்தாமல் அனைத்தையும் விளக்கினார்.
“என்ன சொல்றீங்க.? எனக்கு ஒன்னும் புரியல…”
“நல்ல விசயம் இப்டி சட்டுனு தான் நடக்கும், யோசிக்காம அடுத்து என்னனு பாருங்கமா, செல்விக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுது.”
இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த சுமதி ஓடிப்போய் செல்வியிடம் விசயத்தை ஒப்புவித்தாள்.
இரவு…
குணா வீட்டில் பிரளயமே வந்தது போல் மாயம்மா கத்திக் கொண்டு இருந்தார்.
“அது எப்டிடா இப்டி ஒரு பொண்ணை உன் கூடப் பொறந்தவனுக்கு பாப்ப.?” எனக் கேள்விகளால் ரகுவைத் தாக்கினார்.
குணாவும் அப்பொழுது தான் வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தான்.
“அம்மா! நீ கேக்குறது சரி தான், மொதல நானும் வேணானு சொல்லிட்டு வந்துட்டேன், அப்புறம் ராத்திரி யோசிச்சதில் போய் தான் பாத்தா என்னனு தோணுச்சு, அதான் இன்னைக்கு டாக்டர் கிட்ட பேசிட்டேன்.”
“ஓ! ராத்திரி வந்துப் பொண்டாட்டி கிட்ட சொல்லி இருப்ப, அவளும் உடனே கட்டி வைங்கனு மந்திரம் போட்டு இருப்பா நீ நேத்து விட்டத இன்னைக்கு மேல பேசி இருக்க.” என மருமகளை முறைத்துக் கொண்டே கூறினார்.
‘கெழவி எப்டி கண்டுப்புடிச்சது, அப்டி நேரா பாத்த மாதிரி சொல்லுது, நம்ம கம்முனு இருப்போம், வாய தொறந்தா மாட்டிப்போம்’ என சரிகா கணவனை கண் காட்டிவிட்டு அமைதியானாள்.
“அம்மா! அவளை ஏன் இழுக்குற.? இவனுக்கு பொண்ணு கெடைக்குறதே பெரிய விசயமா இருக்கு, இதுல நீ என்னனா அத சொத்த, இத மட்டமுனு பேசிட்டு இருக்க”
குணா புரியாமல் தமயனை நோக்கிட, ரகு”குணா! உனக்காக டாக்டர் ஒரு பொண்ணு சொன்னார், பொண்ணுக்கு முப்பத்து மூணு வயசு, கண்ணு கருப்பு முழி…” என விவரத்தைக் கூறி,
“நானும் இன்னும் நேருல பாக்கல, பாத்துட்டு என்னனு முடிவுப் பண்ணலாம்னு சொன்னா அம்மா என்னனா தாம் தூமுனு குதிக்குது” எனத் தம்பியிடம் விளக்கினான்.
பாலாவும், தென்றலும் வெறும் பார்வையாளர்களாக இருந்தனர்.
மாயம்மா மறுபடியும் அந்த உச்சாணி சத்தத்தை தொடர,
கணக்கர்”சரி! சரி! நீங்க ரெண்டுப் பேரும் செத்த அமைதியா இருங்க, குணா! நீ சொல்லு, நீ தான தாலி கட்டப் போறவன் உனக்கு சரினா போய் பாத்துட்டு வருவோம்” எனக் கேட்டார்.
சரிகா உடனே”ஏங்க நடுவுலவரே! நல்லா யோசிச்சு சொல்லுங்க, உங்களுக்கு அப்புறம் இன்னும் ரெண்டுப் பேர் இருக்காங்க, நீங்க இந்தப் பொண்ணு, அந்தப் பொண்ணுனு பாத்து முடிவுப் பண்ண ஒன்னும் வரிசையில பொண்ணுங்க இல்ல, நம்ம ஜாதகம் அப்டிபட்டது, அதனால எது நிதர்சனமோ அத சொல்லுங்க, இன்னும் பொண்ணு வீட்டுலயும் பொண்ணு பாக்க வர சொல்லி சேதி வரல” என நீட்டி இழுத்துக் கூறினாள்.
“அடியேய்! என் புள்ளைய நையாண்டி பண்ணி பேசுறீயா, உனக்கென்னடி அவ்ளோ அக்கறை, இவனை எவளாச்சும் கட்டிக்கிட்டா என் கடைசி புள்ளய உன் தங்கச்சிக்கு வளைச்சுப் போடலாம்னு கனவு காணாத, அது நான் உசுரோடு இருக்க வர நடக்காது.” என்ற மாயம்மா,
“டேய்! பெரியவனே இந்தப் பேச்சை இத்தோட விடு” என சாமியாடினார்.
கணக்கர் இன்னும் குணாவின் பதிலிற்காக காத்திருந்தார்.
“அம்மா! அதான் அண்ண சொல்றாருல, அவரு விருப்ப படி போய் பாக்கலாம், அண்ணி சொல்றதும் சரி தானே, எனக்கு என்ன நீ, நானு போட்டியிலா பொண்ணு இருக்கு, யாராச்சும் பாருங்க தாலி கட்டுறேன். நான் கல்யாணமே வேணானு நின்னா எல்லாருக்குமே சங்கடமா இருக்கும், அப்புறம் நீ நெதமும் ஒப்பாரி வச்சே சாவடிப்ப, அதுக்கு கல்யாணத்தைப் பண்ணி தொலையுறேனு ஏற்கனவே சொல்லிட்டேன். நீ இதுக்கு மேலயும் ஏதாச்சும் நொட்டம் சொல்லிட்டு இருந்தீனா, என்னைய விட்டு பாலாக்கு பொண்ணு பாரு” எனக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான்.
“அப்புறம் என்ன ரகு, அந்த டாக்டர் கிட்ட பேசி, எப்ப பொண்ணு பாக்க வரலாம்னு கேளு” என்றார் கணக்கர்.
“என் பேச்சுக்கு மரியாதை இல்ல, எல்லாரும் என்னைய ஒதுக்கிட்டுப் பேசுறீங்களா.?” என மாயம்மா ஆரம்பிக்க, கணக்கர்”போதும்! அவன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நெனச்சா வாயை மூடு, இல்லைனா உன் விருப்பம்” என புஸ்கத்தில் மூழ்கினார்.
மாயம்மா அமைதியாக போய் மூலையில் அமர்ந்து புலம்பிட தொடங்கினார்.
சரிகா”தென்றல்! உன் அப்பா எப்பயாச்சும் தான் பேசுறாரு, ஆனா மொத்தமா பேசிடுறாரு” என நக்கல் அடித்தாள்.
“ம்ம்ம்! ஆமா அண்ணி, அவரு எப்பவுமே பேசினா, நீங்க, அம்மா எல்லாம் பேசவே அவசியம் இருக்காது.” எனக் கிண்டல் செய்தவள், தாயிடம் சென்று ஆறுதல் செய்ய தொடங்கினாள்.
சரிகா’மொதல உன்னைய அனுப்பனும்டி’ என மனதில் எண்ணி கடுப்பானாள்.