“இதுதான் நிஜம் அஷ். இன்னொரு கல்யாணம் முடிச்சும் ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் இப்ப அவங்களோட வாழ்க்கையில சந்தோஷமா இருக்கறதா நிரூபிக்க போராடுறதுலையே அதோட முழு சந்தோஷத்தை அனுபவிக்காம இருக்காங்க. இதுல மட்டும் அவ்வளோ ஒற்றுமை…”
இலகுவாக சொல்லிவிட்டு ஸ்ருதி தனது போனை சார்ஜில் போட்டுவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள்.
அஷ்வினிக்கு தான் உறக்கம் என்பது கண்களை எட்டவில்லை. ஒருமணி நேரம் கழித்து ஸ்ருதியை தொட்டு பார்த்தாள்.
காய்ச்சல் இன்னும் இருக்க பிளாஸ்க்கில் இருந்த வெந்நீரில் பால் பவுடரை கலக்கி ஒரு மாத்திரையுடன் அவளை எழுப்பி தந்துவிட்டு தான் படுக்க சென்றாள்.
அதிகாலையே நரேஷ் அஷ்வினிக்கு அழைத்துவிட்டான். பார்த்ததுமே எரிச்சல் ஒருபுறம் இருந்தாலும் பாவமாகவும் இருந்தது.
அவனால் ஸ்ருதிக்கு முழுமையான சந்தோஷமான வாழ்க்கையை தந்துவிட முடியுமா என்று சந்தேகமாகவும் இருந்தது.
மிகப்பெரிய குடும்பத்தின் மகன் அவன். அவனின் முடிவுகள் எல்லாம் தனிப்பட்டு எடுப்பவையாக இருக்காது.
காரைக்குடியில் அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்களே ஏராளம். இங்கே பேஷன் என்று அவன் வேலையுடன் ட்ரூப்பையும் சேர்த்தே நடத்தி வருகிறான்.
ஸ்ருதியின் பின்புலம் அறிந்தால் அவர்கள் வீட்டின் ஏற்பனரா என்பதும் சந்தேகம் தான்.
மீண்டும் மீண்டும் அடித்து ஓய சுபஷ்வினி எடுப்பதற்குள் ஸ்ருதியின் எண்ணிற்கு அழைத்துவிட்டான் நரேஷ்.
எங்கே விழித்துவிடுவாளோ என தான் தான் அந்த போனையும் எடுத்து வைத்திருக்க சட்டென ஒரு எரிச்சல். அட்டன் செய்தவள் பேசும் முன்,
“எவ்வளோ நேரமா கால் பன்றேன். எடுக்காம அப்படி என்ன உனக்கு தூக்கம்? இர்ரெஸ்பான்ஸிபில் இடியட்….” என்று பேசியிருந்தான் நரேஷ்.
“ஸ்டாப்பிட் நரேஷ். கால் அட்டன் பண்ணலைன்னா வேற வேலையா இருப்பாங்கன்னு ஒரு சென்ஸ் வேண்டாமா? என்ன பேசற நீ? இதை மட்டும் ஸ்ருதி கேட்டிருந்திருக்கனும்…” என சுபஷ்வினியும் கோபத்தில் சொல்லிவிட,
“அஷ் நீ ஏன் ஸ்ருதி போனை அட்டன் பன்ற?…” என்றான் நரேஷ்.
“அவளுக்கு பீவர். நான் தானே பார்த்துக்கனும். இப்படி கால் வந்து எதுவும் டிஸ்டர்ப் ஆகும்ன்னு தான் நான் எடுத்து சைலன்ட்ல வச்சிருந்தேன். இதை கூட யோசிக்கமாட்டியா நீ?….” என்று கேட்டுவிட்டாள்.
“ஹ்ம்ம், இப்போ ஸ்ருதி ஓகே தானே? பீவர் இன்னும் இருக்கா?….” என சத்தமாக இரைந்தான் அப்போதும்.
“மெதுவா பேசு, எனக்கு காது கேட்கும்…” என்றவள்,
“இன்னைக்கு எனக்கு ஆபீஸ்ல லீவ் சொல்லிடு. நானும் மெயில் பண்ணிடறேன்…”
“ஏன் ஏன்? அவ்வளோ பீவரா? நீ முதல்ல அவளை என்னோட ப்ளாட்க்கு கூட்டிட்டு வா. நான் லீவ் போட்டு ஸ்ருதியை பார்த்துக்கறேன்…” என சொல்ல,
“தேவையில்லை நரேஷ். நான் இல்லைன்னா பரவாயில்லை. அதான் இருக்கேனே?…” என்ற அஷ்வினியின் பேச்சில் பல்லை கடித்தான் நரேஷ்.
“முதல்ல உங்க ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணிவிடனும்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க அஷ்வினிக்கு சிரிப்பு தான் வந்தது.
சுபஷ்வினியும் நரேஷ் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்தில் தான் பணியில் இருக்கிறாள்.
பார்ட் டைம் வேலையாக ட்ரூப்பில் பாடுவதையும் வழக்கமாக்கி இருக்க அங்கே தொடர்ந்த நட்பு தான் ஸ்ருதியுடயது.
ஸ்ருதிக்கு நன்றாக உறங்கி எழுந்ததும் காய்ச்சல் விட்டிருக்க நிம்மதியாக இருந்தது அஷ்வினிக்கு.
அவள் எழுந்ததும் இருவருமாக காபியை பருகியபடி நரேஷ் அழைத்ததை பேசிக்கொண்டிருக்க,
“லாஸ்ட்டா நரேஷ் உன்னை ப்ளாட்ல விட சொல்லி என்னை அதட்டுறான்…” என்றதில் ஸ்ருதியின் புருவம் சுருங்கியது.
“இதுவே அவங்க ஃபேமிலி முன்னால சொல்லுவானா?…” என்று கேட்டாள்.
“வாய்ப்பில்லையோ ஸ்ருதி…” அஷ்வினி கவலையுடன் கேட்க,
“அதை பத்தி நாம ஏன் யோசிக்கனும்? கமிட் பண்ணிக்கனுமான்னு ஒரு கொஷின் எனக்கு தோணவே இல்லை. சரிப்படாதுன்றதுல தெளிவா இருக்கேன். இவன்னு இல்லை யாரா இருந்தாலும் வாய்ப்பில்லை ராஜா தான்…” என்ற ஸ்ருதி,
“ஓகே வா வா. லஞ்ச்க்கு போவோம். இன்னைக்கு சால மீன் ப்ரை ஒரு புடி. கெட் ரெடி. எங்க என் ஸ்கூட்டி கீ?…” என்று அஷ்வினியை பிடித்து இழுக்க,
“நானே பாவம். என்னால உன் மொக்கை அரிசியை முழுங்க முடியாது மோளே…” என்று கெஞ்ச கெஞ்ச இழுத்து வந்திருந்தாள் கேரளா உணவகத்திற்கு.
அன்று முழுவதும் வெளியில் சுற்றி திரிந்துவிட்டு இரவு விடுதிக்கு வந்து சேர வாசலில் காருடன் நின்றிருந்தான் நரேஷ்.
“ஹாய் நரேஷ்…” என்ற அஷ்வினியிடம் பதில் கூறாமல்,
“எங்க போன ஸ்ருதி? அதுவும் பீவரோட….” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“பீவருக்கு ஊர் சுத்தி காமிக்கலாமேன்னு தான் பீவரோட போனேன்….” என்றவள் கிண்டலான பதிலில் கடுப்பாகி போனான்.
“நான் உனக்காக எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணிட்டிருந்தேன் தெரியுமா? நீ என்னடான்னா?…”
“நான் வர சொல்லவே இல்லையே? ப்ரோக்ராம் இருந்தா கூட நீ கால் பண்ணி வர சொல்லுவ தானே?…” என ஸ்ருதியும் கூற அஷ்வினி எங்கே சண்டையாகிவிடுமோ என பயந்து போனாள்.
“பீவரோட ஏன் போகனும்னு எனக்கு கோபம். அதான் வரட்டும்ன்னு வெய்ட் பண்ணிட்டிருந்தேன்…” என்றவனை அஷ்வினிக்கே அடித்துவிட்டால் என்ன என்று தோன்றியது.
“வெய்ட் பண்ணி சண்டை போடற அளவுக்கு இதுல என்ன இருக்கு? ஓகே, நான் டயர்ட். குட்நைட் நரேஷ். நீங்க கிளம்புங்க…” என்ற பன்மை பேச்சில் துணுக்குற்றான் நரேஷ்.
“ஸாரி ஸ்ருதி. ஒரு வேகத்துல உன் மேல உள்ள உரிமைல….” என்றவனை கை காண்பித்து நிறுத்தியவள்,
“உங்க ட்ரூப்ல நான் பாடறேன். எனக்கு அதுக்கான சான்ஸ் தரீங்க நீங்க. இதுக்கு மேல என்ன உரிமை. ஒரே இடத்துல வேலை பார்க்கும் போது ப்ரெண்ட்லி மூவ் ஓகே. அதென்ன உரிமை? புரியும்ன்னு நினைக்கறேன்…”
நிதானமாக பேசிவிட்டு ஸ்ருதி இடத்தைவிட்டு நகர நரேஷ் அப்படியே திகைத்து நின்றான்.
அஷ்வினிக்கு பாவமாக இருந்தது அவனின் நிலை கண்டு. இப்படி பேசி பேச்சு வாங்கவேண்டுமா என்றிருந்தது.
“அவசரப்படற நரேஷ். என்ன இது?…” என்றாள் அஷ்வினி.
“பாரு அஷ், நான் எவ்வளோ பதறி போய் வந்தா?…”
“தப்பு உன் பேர்ல தான். நீ விரும்பினா உடனே எல்லாம் உன் இஷ்டப்படி நடக்கனுமா? அதுவும் ஸ்ருதி சைட் எந்த ஹோப்பும் குடுக்காமலே…”
“இப்ப என்ன பன்றது அஷ்?….” என நரேஷ்.
“பொறுமையா இரு. ஸ்ருதி கேட்டதுல எதுவும் தப்பே இல்லை. நீ தான் கொஞ்சம் ஓவரா போய்ட்ட. இப்ப கிளம்பு. நாளைக்கு ஆபீஸ் வந்து பேசறேன்…” என்று அவனை அனுப்பிவிட்டு வந்தாள் அஷ்வினி.
அதற்குள் ஸ்ருதி உறங்க ஆயத்தமாகிவிட எதுவும் பேசவில்லை. மறுநாள் காலை எழுந்து அலுவலகம் கிளம்பிய அஷ்வினி இரவு அரக்கபரக்க ஓடிவந்தாள்.
“வெளில எங்கயும் போனியா ஸ்ருதி?…” என கேட்டுக்கொண்டே அறையில் இருக்கும் டிவியை போட்டவள் ரிமோட்டை தேடினாள்.
“ஹ்ம்ம் போனேன் போனேன். இன்னைக்கு சங்கம் ஸ்டுடியோல ஆடிஷன் இருந்துச்சு. போய்ட்டு வந்தேன்….”
“அதை நீ சொல்றியா? நான் உன்னை கேட்டுட்டு இருக்கேன். உன்னோடது எவ்வளோ ஷைனி ஸ்கின், அடி போடி. முதல்ல இதை பார்ப்போம்…” என்று சொல்லவும் அழைப்பு வந்தது ஸ்ருதிக்கு.
“நீ பாரு நான் பேசிட்டு வரேன்…” என்று போனை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள் ஸ்ருதி.
மாடியில் போன் பேசி முடித்தவள் அங்கேயே மெல்ல நடையிட ஆரம்பித்திருந்தாள்.
பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் எதிர்காலம் என்னேவென்றே தெரியாமல் அதை பற்றிய கவலையும் இன்றி நிர்மலமான முகத்துடன் குளிர்ந்த காற்றில் சுற்றிக்கொண்டிருக்க எவ்வளவு நேரம் சென்றதோ?
“நீ கீழ வருவன்னு பார்த்தா இங்கயே உலாத்திட்டிருக்க? என்னை விட்டுட்டு வாக்கிங்கா?….”
“நீ உன் க்ரஷோட எங்கேஜ்மென்ட் பார்த்திட்டிருந்த. எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட் இல்லை. வந்துட்டேன்….” என சொல்ல,
“நாளைக்கு உனக்கு சான்ஸ் கிடைச்சா மீடியால நீயும் பெரிய சிங்கராகிருவ. நீ பேசற பேச்சா இது?…” என்ற அஷ்வினி,
“என் க்ரஷ் இனிமே கமிட்டட், பேமிலி மேன் ஆகிருவார். ஆனாலும் என் க்ரஷ் தான…” என்று சொல்ல அதனை சொல்லி கிண்டல் பேசியபடியே இருவரும் வெகுநேரம் அங்கேயே இருந்தனர்.