“ஆபீஸ்ல வச்சும் சத்தத்தை பாரு. ஓகே உனக்கு என்ன வேலை இருந்தாலும் அதை அப்படியே விட்டுட்டு நீ உன் ஆபீஸ் வாசலுக்கு வா. நான் பிக்கப் பண்ணிக்கறேன். உனக்கு சூடா புட்டும், கடலைக்கறியும், மசாலா சாயும் வாங்கி தருவேனாம்…”
“அதெல்லாம் வாங்கி தரவேண்டாம். மரியாதையா கிளம்பி நீ ரூம்க்கு வா. உனக்கு சாப்பிடனும்னா என்னை கூட்டு சேர்த்துப்ப நீ…”
“ஏன்? ஏன்? ஏன்? நான் வருவேன்…” என்ற ஸ்ருதி,
“ரூம்க்கா? நீ எப்போ போன? உன் ஸ்கூட்டி என்கிட்ட இருக்கே?…” என கேட்க,
“குட், நீ இப்படியே அங்கயே நின்னு கேளு. நான் இன்னொரு குட்டி தூக்கம் தூங்கறேன்…” என்று சொல்லி போனை வைத்துவிட,
“டேய் அஷ், மோளே…” என்றவள் சத்தம் அங்கே சுபஷ்வினிக்கு கேட்டால் தானே?
ஆனால் அவளை தாண்டி தனது வாகனம் நோக்கி சென்ற பார்த்திவ்விற்கு நன்றாகவே கேட்டது.
பார்த்தும் பார்க்காததை போலவே அவன் செல்ல ஸ்ருதிக்கு உள்ளுக்குள் ஒரே குறுகுறுப்பு.
‘எப்படி எதுவுமே தெரியாததை போல இவனால் செல்ல முடிகிறது? அதுவும் அன்று இரவு நடந்ததை பற்றி எதுவுமே கேட்கவில்லை’ என்ற யோசனையுடன் ஸ்கூட்டியை நகர்த்தியவள் காதுக்கு ஹியர் போனை மாட்டிக்கொண்டு அந்த வளாகத்தை விட்டு வெளியேறினாள்.
பார்த்திவ்வும் தன் காரில் இருந்தவாறு செல்லும் அவளை யோசனையுடன் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன பார்த்திவ்? என்ன செய்யலாம்?…” என கேட்டார் சுதந்திரம்.
“அதான் சொன்னேனே? அக்ரிமென்ட் ரெடி பண்ண சொல்லி…” என இப்போதும் தெளிவாய் அவன் கூற,
“ஹோட்டல் சோழால இப்ப மீட்டிங் போய்ட்டு நைட் பத்து மணிக்கெல்லாம் திரும்ப ஸ்டுடியோ வரனும் அங்கிள். தான்யா ஸாங் இருக்கு…” என்றும் கூற,
“ஹ்ம்ம், ஓகே…” என்றுவிட்டார் சுதந்திரம்.
பார்த்திவ்வே சொல்லிவிட்ட பின்பு இனி மறுக்கமுடியாது. சற்று முன்னர் தான் ஸ்ருதியை பற்றிய தகவல்கள் துரிதகதியில் அவர்களுக்கு வந்து சேர்ந்தது.
இதற்கு பெரிதாய் மெனக்கெட்டிருக்கவில்லை அவர்கள். இரண்டு மணி நேரத்தில் விஷயங்களை தருவித்திருந்தார்கள்.
சுபஷ்வினி, நரேஷ், அவர்களின் ட்ரூப், அதனை விசாரிப்பதை போல அதிலிருக்கும் ஒருவர், ஸ்ருதி தங்கியிருக்கும் ஹாஸ்டல் என இன்னும் ஓரிரு இடங்களில் பேசி பார்த்திவ்விற்கு தகவல்களை அனுப்பியிருந்தனர்.
ஸ்ருதகீர்த்தியின் பின்னணி, பெற்றோர்கள் என எதுவும் அவனை பாதிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் ஒரு நண்பனாகப்பட்டவன் எப்படி நடந்துகொண்டிருக்கிறான் என நரேஷின் மேல் தான் அத்தனை கோபம் பொங்கியது.
அன்றைக்கே தன் கையில் சிக்காமல் போய்விட்டானே என எண்ணிக்கொண்டவன் மனதில் ஸ்ருதியின் தோழியாய் சுபஷ்வினியும் பெரிதாய் உயர்ந்தாள்.
அன்றைய இரவில் யாருமற்ற சாலையில் பரிதவிப்புடனான கண்ணீரில் மிதந்த அந்த விழிகள், யாருமற்ற நிராதரவின் அன்னிச்சை வெளிப்பாடு என புரிந்தது.
“என்ன ஸ்ருதி, ரொம்ப சந்தோஷமா இருக்கியே? என்ன விஷயம்?…” என்று அருகிருக்கும் அறை பெண் கேட்க,
“வேற நல்ல பிஜி மாற போறோம். அதான்…” என்று முகம்கொள்ளா புன்னகையுடன் சொல்லி சென்றவளை பார்த்து அந்த விடுதியின் மேற்பார்வையாளர் முறைக்க,
“சும்மா…” என்று கண் சிமிட்டிவிட்டு கதவை திறந்துகொண்டு சென்றாள் ஸ்ருதி.
“சேட்டையை பாரு…” என அவள் செல்லவும் ஒரு சிரிப்புடன் மேற்பார்வையாளர் கடந்து சென்றார்.
உற்சாகம் இழந்து என்றும் ஸ்ருதியை அவர் பார்த்ததே இல்லை. எத்தனை வருத்தங்கள் இருந்தாலும் பெரிதாய் தூக்கி சுமந்துகொண்டிருப்பவள் இல்லை.
அதனால் எப்போதும் அவள் மேல் தனி கரிசனம் என்றும் இருக்கும். ஆனால் அவளிடம் அதை காட்டிக்கொள்ளமாட்டார்.
இப்போதும் ஸ்ருதி துள்ளிக்குதித்தோட அவள் இதே சந்தோஷத்துடன் இருந்தால் போதும் என்பதை போல சென்றுவிட்டார்.
அறைக்குள் சுபஷ்வினி என்னவோ யாருடனோ எரிச்சலுடன் பேசிக்கொண்டிருக்க சென்றதுமே ஸ்ருதி அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டு, ‘சீக்கிரம் பேசி முடி’ என வாயசைத்து முகம் கழுவ சென்றுவிட்டாள்.
போனி போட்டிருந்த நீண்ட கூந்தலை சுற்றி கொண்டையாய் உச்சியில் முடிந்துகொண்டவள் உடை மாற்றி, முகம் அலம்பி வெளியே வந்து பார்க்க,
“அப்படித்தான் பண்ணுவேன். என்ன செய்வானாம்? எங்க செய்ய சொல்லு…” என பேசிக்கொண்டிருந்தாள் சுபஷ்வினி.
இரு நிமிடம் என்னவோ பேச்சின் சாராம்சம் புரியவில்லை என்றாலும் தொடர்ந்த சுபஷ்வினியின் பதில்களில் பேசிக்கொண்டிருந்தது சுகந்தன் என்றும், நரேஷை பற்றிய விஷயம் என்றும் தெரிந்துகொண்டாள்.
“அஷ்…” என்ற சத்தத்தில் சுபஷ்வினி கண்ணை மூடி திறக்க,
“அவக்கிட்ட என்ன பேச போற சுகந்?…” என்று கேட்கவுமே ஸ்ருதி போனை தரும்படி கேட்டாள்.
“இன்னும் அந்த பிரச்சனை முடியலையா? அதான் உன் ப்ரெண்ட் வெளில வந்தாச்சே? இன்னும் என்னடா உங்களுக்கு?…” என்றாள் ஸ்ருதி சூடாக.
“ஸ்ருதி இரு ப்ளீஸ். நான் சொல்றதை அமைதியா கேளு…” என்ற சுகந்தன் அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் சொல்லி,
“இதனால இப்ப ஆபீஸ்ல அஷ்வினியையும் எப்படி பார்ப்பாங்க? என்ன கண்ணோட்டத்துல பார்ப்பாங்க? ஏன் இந்த பொண்ணு அவ லைஃபை ரிஸ்க்காக்கிக்கறா? அதான் கேட்டுட்டு இருந்தேன்…” என சுகந்தன்.