விழிகள் விரிய, இமைகள் மேலெழும்ப அவள் குரலில் ரசனையை விதைக்கும் விதமாய் அந்த பாடல்.
வேறு யாரோ பாடி அதனை கேட்பதை போன்றொரு பரவசம். அடுத்த நொடி தான் பாடியது என்னும் பெருமிதம் என ஸ்ருதிக்கு ஏக சந்தோஷம்.
அவன் கேட்ட உயிர்ப்பு அங்கே இருந்தது. நிஜத்தில் தன் குரல் தானா என ஒரு நொடி குறுஞ்சிரிப்பு பொங்க தன்னை கிள்ளி பார்த்துக்கொண்டாள் ஸ்ருதி.
அதனையும் பார்த்திவ் கவனிக்கவே செய்தவன் தலையசைப்புடன் பாராட்டுதலாய் ஒரு புன்னகை.
“சாங்ஸ் பிட்ஸ் எல்லாம் சேர்த்து இன்னும் ஃபினிஷிங் ஆகலை. ஃபுல் பாட்டா வந்ததும் ஷூட்டிங்க்கு அனுப்பிடலாம்…” என்று சொல்லவும் தலையசைத்தாள்.
ஆனாலும் இன்னும் பார்த்திவ் வார்த்தையாக வாழ்த்தியோ, பாராட்டுதலையோ சொல்லாமல் இருக்க அந்த எதிர்பார்ப்பை அவன் கவனிக்க முகத்தை முயன்று மாற்றிக்கொண்டாள் ஸ்ருதி.
எத்தனை இருந்தாலும் மிகப்பெரியாய் இசை ஜாம்பாவான் என பெயர் பெற்ற சிலரில் அவனும் ஒருவனாக இருக்க அவன் வாயினால் பாராட்டை பெற அவள் மனம் விழைந்ததென்னவோ உண்மை.
“ஸ்ருதி…” என்றவனின் அழைப்பில் மன எண்ணங்களை ஒதுக்கிவிட்டு பார்க்க,
“ஜஸ்ட் பர்ஃபெக்ட்….” என்று சொல்லவும் ஸ்ருதியின் மனது விசிலடித்தது.
எதிரே அவன் இல்லை என்றால் சுபஷ்வினியுடன் குத்தாட்டம் ஆடியிருக்கலாமே என சந்தோஷ ஆர்ப்பரிப்புடன் எண்ணிக்கொண்டவள்,
“தேங்க்ஸ் ஸார்…” என்றாள் ஸ்ருதி.
“வேற எதுவும் சொல்லனுமா?…” என இளமுறுவல் மின்ன கேட்டவன் அவள் இல்லை என தலையசைக்கவும்,
“ஓகே, நான் இப்ப வந்திடறேன். உங்களுக்கு சாப்பாடு வரும். சாப்பிடுங்க…” என்று சொல்லி எழுந்துகொண்டான்.
“இங்கையா?…” என்று சட்டென வந்துவிட,
“ஆமா, இங்க வெய்ட் பண்ணுங்க. சின்ன சின்ன கரெக்ஷன் இருந்தாலும் என்ன பன்றோம்ன்னு தெரியனுமே உங்களுக்கும்? அதான்…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
பிரமாண்டமான அறை அது. அத்தனை இசைக்கருவிகளுக்கு மத்தியில் தான் மட்டும் இருக்க அருகே செல்ல கூட யோசித்து அவன் காட்டிய இடத்தில் அமர்ந்துகொண்டாள் ஸ்ருதி.
அதனை போட்டோ எடுத்து சுபஷ்வினிக்கு அனுப்பலாம் என ஒருமனது ஆசைகொள்ள, இன்னொரு மனதோ அவர்கள் அனுமதியின்றி அதனை செய்ய கூடாதென அதட்டியது.
“ஆனாலும் ஸ்ருதி நீ இவ்வளோ நியாஸ்தியா இருக்க கூடாது…” என்று தன்னை தானே சொல்லிக்கொண்டாள்.
உணவும் வந்துவிட்டது. முதல்நாள் போலவே பெரிய வெஜ் தாளி. ஆனால் சில பதார்த்தங்கள் மட்டுமே மாறி இருந்தது.
“அச்சோ அஷ்…” என்றவள் அன்றும் அதனை புகைப்படம் எடுத்து சுபஷ்வினிக்கு அனுப்பி வைத்துவிட்டு உண்ண ஆரம்பித்தாள்.
இதில் சுபஷ்வினிக்கும் அழைத்து பாடி முடித்துவிட்டதை சொல்ல அங்கே அவள் குதிக்காத குறை தான்.
“மோளே இதை யார்கிட்டையும் இப்ப சொல்லவேண்டாம். ரிலீஸ் அப்போ நாமலே நமக்கு பேனர் பன்றோம். காட் இட்…” என சுபஷ்வினி சொல்ல,
“நீ கலக்கு சித்தப்பு…” என்றாள் ஸ்ருதியும்.
அவளுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு போனை வைக்கும் முன் சுபஷ்வினி அங்கே அழைக்க வரவா என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம் அஷ். எப்போ கிளம்புவேன்னு தெரியலை. கிளம்பும் போது நானே வந்திடறேன்…” என்று சொல்லிவிட்டாள் ஸ்ருதி.
“ஓகே, பார்த்து கிளம்பி வா. கால் டாக்ஸில வந்தா மறக்காம ஷேர் பண்ணிடு எனக்கு. இப்ப ஒரு டீம் மீட்டிங். நான் போறேன். பை…” என்று சொல்லி வைத்துவிட்டாள் சுபஷ்வினி.
அதன் பின் தனியே எவ்வளவு நேரம் இருக்கமுடியும்? அமைதியாக தான் பாடியவற்றை முணுமுணுத்தபடி இருந்தவளுக்கு அயர்வில் உறக்கம் வேறு வந்தது.
“நல்லவேளை பாடி முடிச்ச பின்னால சாப்பாடு வந்துச்சு. இல்லைன்னா தம் கட்டி பாட முடியாம தூக்கம் தான் வந்திருக்கும்…” என்று சொல்லிக்கொண்டவள் சாய்ந்து அமர்ந்துகொள்ள அடுத்த பத்து நிமிடத்தில் வந்துவிட்டான் பார்த்திவ்.
குளித்து உடை மாற்றியிருப்பான் போலும். இதற்கு கூட இவனுக்கு நேரமில்லை என நினைத்துக்கொண்டாள்.
கொஞ்சம் கிண்டலாகவும், கொஞ்சம் பிரமிப்புடனும், கொஞ்சம் செய்திருக்கலாமே என்ற எண்ணத்துடனும்.
‘ஷட்அப் ஸ்ருதி. உன் வாய் தான் உனக்கு சத்ரு’ என எங்கே அவனிடமே சொல்லிவிடுவோமோ என கம்மென்று அமர்ந்துகொண்டாள்.
மாலை தாண்டியிருந்தது. அங்கேயே தான் இருந்தாள் ஸ்ருதி. இடையிடையே அவளுக்கும் பாடலை முழுதாய் சேர்ப்பதை எல்லாம் கேட்க வாய்ப்பு கிடைத்தது.
நேரம் செல்வதே தெரியவில்லை. ஏழு மணி போல சுதந்திரம் அங்கே வந்து சேர்ந்தார் ஸ்ருதியை பார்க்க என்று.
“உங்க அக்கவுண்ட் டீட்டெய்ல்ஸ் குடுங்கம்மா…” என்றவர் அவளிடம் ஒரு கார்டை நீட்டினார்.
“இது இங்க நீங்க காண்ட்ராக்ட்ல இருக்கற வரைக்கான ஒரு ஐடெண்டி கார்ட்…” என்று நீட்ட,
“நான் என்ன ஸ்கூல் பிள்ளையா?…” என்று சத்தமின்றி இதழசைத்தபடி வாங்கிக்கொண்டாள் ஸ்ருதி.
“இந்த பாட்டுக்கான பேமெண்ட் நாளைக்கு உங்களுக்கு கிரெடிட் ஆகும்…” என்றவர்,
“அப்பறம் வாழ்த்துக்கள் ம்மா. நல்ல குரல்வளம் உங்களுக்கு. நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கு. பார்த்திவ் ஸார் கணிப்பு தப்பா போகாது…” என சுதந்திரம் பெருமிதமும் சந்தோஷமுமாக கூறினார்.
கேட்டுக்கொண்டிருந்த ஸ்ருதிக்கு தான் ஒருநொடி முந்தைய நிகழ்வு மூளைக்குள் பளிச்சிட அவள் முகம் மங்கி பின் ஒளிர்ந்தது.
கூடவே அவனின் கணிப்பு என்று சொல்லியதை கேட்கவும் ஆராதனாவுக்கும், அவனுக்குமான நிச்சயதார்த்தமும், அதன் முறிவும் கூடுதலாய் ஞாபகத்தில் வந்தது.
‘இந்த ஞாபகத்துல தீயை வைக்க. முழுசா சந்தோஷப்பட முடியுதா? எதை எதையோ கொண்டுவந்து காமிச்சு என் மூடை ஸ்பாயில் பண்ணுதே’ என நொந்துகொண்டாள்.
‘ஸ்ருதி பழையவை எப்படியும் இருந்துவிட்டு போகட்டும். இது தான் ப்ராப்தம் என்றிருக்க அதை பிடித்து தொங்கிக்கொண்டு என்ன பயன்?’ என அவள் மனது இடித்துரைத்தது.
“ஒரு பத்து நிமிஷம். பார்த்திவ் பேசனும்னு சொன்னார். பேசி முடிக்கவும் நீங்க கிளம்பலாம் ஸ்ருதி…” என்று சொல்லிவிட்டு அவர் வெளியேறிவிட மீண்டும் அந்த அறையில் நான்கைந்து பேர் தான் ஸ்ருதியை சேர்த்து.
பத்து நிமிடம் அரைமணி நேரமாகிவிட்டது. அதன் பின்னரே பெரும் மூச்செடுப்புடன் வந்து ஸ்ருதியின் எதிரில் அமர்ந்தான் பார்த்திவ்.
“வெல், குட் ஸாங் ஸ்ருதி…” என்றவன்,
“அடுத்த பாடல் எப்போன்னு நானே சொல்றேன். பாட தயாரா இருங்க. மேபி நெக்ஸ்ட் வீக்கா கூட இருக்கும். அதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே ரிகர்ஸல் இருக்கும்…” என்றான்.
“சூர் ஸார். வித் ப்ளஷர்…” என ஸ்ருதி சொல்லவும்,
“பிராப்பரா ம்யூஸிக் கத்துக்கறதை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?…” என கேட்டான் அவன்.
“என்ன முடிவுன்னா?…” அதனை ஸ்ருதி மறந்தேவிட்டிருந்தாள்.
“நேத்து கேட்டேனே? யார்கிட்ட ம்யூஸிக் கத்துக்கிட்டீங்கன்னு…” என்றதும் தான்,
“தெரியலை ஸார். இதுவரைக்கும் கத்துக்கனும்னு எதுவும் அவசியம் ஏற்படலை…”
“ஓகே, நாட் ஆன் இஷ்யூ. நல்லா பாடறீங்க. ஆனா பிராப்பரா இசை தெரிஞ்சிருந்தா இன்னும் உங்கள மோல்ட் பண்ணிக்க உதவியா இருக்கும். இன்னும் பெஸ்ட் குடுக்கலாமே?…” என்று சொல்லவும்,
“நீங்க சொல்லித்தருவீங்களா ஸார்…” என கேட்டுவிட்டாள் ஸ்ருதி.
உண்மைக்கும் பார்த்திவ் இதனை எதிர்பார்க்கவில்லை. அவள் விருப்பப்பட்டால் தனக்கு தெரிந்த யாரையேனும் தான் பரிந்துரை செய்வதாக தான் இருந்தான்.
ஆனால் இப்படி தன்னையே பாட்டு கற்றுத்தர சொல்லி கேட்பாள் என்று நினைக்கவில்லை.
என்ன பதில் சொல்வது என ஒருநொடி திணறித்தான் போனான். சட்டென மறுக்கவும் ஏனோ தோன்றவில்லை.
“வொய் நாட்?…” என அவனிதழ்கள் கட்டுப்பாடின்றி அவளிடம் மொழிந்துவிட்டது.
“ரியலி…” என்றவள்,
“தேங்க் யூ ஸார்…” என சொல்லி,
“அதுக்கு பேமென்ட் எனக்கு நீங்க தர அமௌண்ட்ல கட் பண்ணிக்க சொல்லிருங்க ஸார்…” என்று ஸ்ருதி சொல்லவும் உதடு மடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டவன் பார்வை வேறு பக்கம் திரும்பிக்கொண்டது.
“குருதட்சணை ஒன்னு இருக்கு இல்லையா ஸார்?…” என்றாள் அவள் சீரியஸாகவே.
நிச்சயம் விளையாட்டோ, கிண்டலோ எதுவுமில்லை. கற்றுக்கொண்டால் என்னவெனும் ஆர்வமும், ஆசையும் மட்டுமே.
“ஹ்ம்ம், ஓகே…” என்று சொல்லியவன் அவளை பார்த்து ஆமோதிப்பாய் கண்ணமர்த்தினான்.
“டைமிங் நீங்க சொல்றது தான். எனக்கு பிரச்சனை இல்லை…” என்றாள் ஸ்ருதி.
“ஓகே, கிளம்புங்க…” என்று சொல்லியவன் இதழ்கள் புன்னகையை அதக்கிக்கொண்டது.
இத்தனை இலகுவாய் அவனிடம் யார் பேசிவிட கூடும்? அவள் பேசினாள். எந்தவித கல்மிஷமும் இல்லாத கண்டிப்புடன் கூடிய பேச்சு தான் ஸ்ருதியின் பேச்சு.
ஆனாலும் அவனை கவர்ந்தது. அவள் மீதான அபிமானம் பார்த்திவ்வின் மனதில் இன்னும் உயர்ந்தது.
தனிப்பட்ட பேச்சுக்கள் என எதுவும் இல்லை. அவளை அவள் பார்த்துக்கொள்ளும் தன்மை, அதிகப்படியாக வார்த்தையை வளர்க்காத பாங்கு என ஸ்ருதகீர்த்தி அவனுக்கு தனித்து தெரிந்தாள்.
“ஓகே ஸார்…” என்று எழுந்துகொண்டவள் தனது பேக்கை எடுத்துக்கொள்ள,
“இங்க இருந்து எப்படி போவீங்க?…” என்றான் பார்த்திவ்.
அந்த அறையில் உடன் இருந்தவர்கள் அவனின் இந்த கேள்வியில் உடனே திரும்பி பார்த்ததும்,
“வாட்?…” என்றான் சட்டென கடினத்தை அவர்களிடம் காண்பித்து.
நொடியில் பார்வையை திருப்பிக்கொண்டனர் அவர்கள் மூவரும். பின் மீண்டும் ஸ்ருதியை பார்த்தவன் கேள்வியாய் புருவம் உயர்த்த,
“நான் போயிடுவேன் ஸார்…” என்று மட்டும் சொல்லிவிட்டு தலையசைப்புடன் கிளம்பிவிட்டாள் ஸ்ருதி.
அவள் சென்றதும் மீண்டும் அவனின் இருக்கைக்கு வந்து காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்ட பார்த்திவ் கண்மூடி அந்த குரலில் ஆழ்ந்து போனான்.