“இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கு வீட்டுக்கு வர?…” என்ற அதே கேள்வி தான் பார்த்திவ்விற்கு.
“ம்மா, என்னாச்சு?…” என்று சலிப்புடன் கேட்டான் பார்த்திவ் அவன் தாயிடம்.
“சும்மா தான். நீ வா…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட ஏற்கனவே இரவில் உறங்காததும், இப்போது வரை தொடர் வேலைகளாலும் வெகுவாகவே களைத்திருந்தான் பார்த்திவ்.
“இவங்க வேற…” என போனை பக்கத்தில் வைத்தவன் தலையை பின்னால் சாய்த்து கைகளை கட்டிக்கொண்டு உறங்க முற்பட்டான்.
“நீங்களே சொல்லி தாங்க. காசு கட் பண்ணிக்கோங்க…” என்ற மின்னல் விழிகள் பளிச்சென்று அவன் மீது விழுந்து வெட்டி வெளிச்சத்தை தெறிக்க பட்டென்று கண்களை திறந்து நிமிர்ந்தமர்ந்தான்.
“ஊஃப்…” என முகத்தை தேய்த்துக்கொண்டவனை முன்னிருக்கையில் இருந்து திரும்பி பார்த்தார் சுதந்திரம்.
“என்ன பார்த்திவ்?…” என கேட்க,
“நத்திங் அங்கிள்…” என சொல்லிவிட்டு பார்வையை வெளியே திருப்ப கண்கள் எல்லாம் எரிந்தது.
அவனால் சரியாக பார்க்க முடியாமல் கண்ணை கசக்கியவன் தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.
“சுபாஷ், ஆளில்லாத இடமா காரை ஸ்டாப் பண்ணு…” என சொல்லிவிட்டு அந்த நீரை பருக தாகம் தணியவில்லை.
என்ன இது? என மனது போட்டு பிசைந்தது. காரணமில்லாத ஒரு எரிச்சல் மனதில் மண்ட அது முகத்திலும் வெளிப்பட்டது.
இத்தனைக்கும் இன்றைய பாடல் அத்தனை அம்சமாய் அரங்கேறி இருக்க அத்தனை திருப்தியும் கூட.
ஆனாலும் இது என்ன இப்படி ஒரு எரிச்சல் நெருப்பாய் சுற்றி வளைக்கிறது என எண்ணியவன்,
“சுபாஷ், நல்லா ஜில்லுன்னு ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா…” என்றான் பார்த்திவ்.
சுதந்திரம் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தார். ஆனால் என்னவோ டென்ஷன் என எதையும் கேட்கவில்லை.
அவனாக சொல்லட்டும், இல்லையென்றால் அது இன்னுமே அதிகமாகும் என வாயை மூடிக்கொண்டார்.
சுபாஷ் காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி சென்று இரண்டு பாட்டில்களை வாங்கிவந்து உள்ளே அமர்ந்ததும்,
“உன்கிட்ட ஒன்னு தானே கேட்டேன்?…” என எரிந்து விழுந்தான் பார்த்திவ்.
“அது இல்லைங்கண்ணா…” என சுபாஷ் முடிக்கும் முன்,
“நான் எனக்கும் சேர்த்து சொன்னேன் பார்த்திவ்…” என்றார் சுதந்திரம்.
அவரை ஒரு பார்வை பார்த்தவன் அந்த பாட்டிலை வாங்கி பிடித்துக்கொண்டான் பார்த்திவ். அவன் உள்ளங்கைக்குள் குளிர்ந்த நீர் சில்லிட்டது.
உருவமில்லா ஒரு வெம்மை அவனை உண்டுகொண்டிருக்க இன்னதென்று பிடிபடாத அந்த கண்ணாம்பூச்சி விளையாட்டு என்னவென கண்டுகொள்ளமுடியாமல் தடுமாறியவன்,
“இன்னுமா காரை நிறுத்த ஒரு இடமும் இல்லை?…” என்று கத்தினான் பார்த்திவ். அந்த இருளில் எங்கே நிறுத்த என பார்த்துக்கொண்டிருந்தான் சுபாஷ்.
அதோ ஆள் அரவமற்ற ஒரு வீதி. சுக்குமல்லி காபியும், பஜ்ஜியும் போடப்படும் தள்ளுவண்டி கடை ஒன்று இருக்க அங்கே பெரிதாய் ஆட்கள் இல்லை.
இருட்டில் சற்று தள்ளி நிறுத்தவும் பார்த்திவ் இறங்கி நின்று பாட்டிலை திறந்து குளிர்ந்த நீரை முகத்தில் அடித்தான்.
கண்கள் நனைய அந்த குளிர்ச்சியில் முகத்தின் தசைகள் உறையும் அளவிற்கு தண்ணீரை அடித்துக்கொண்டே இருந்தான்.
“பார்த்திவ் போகலாமா?…” என சுதந்திரம் கேட்கவும்,
“ஒரு டீ வாங்கிட்டு வா சுபாஷ்…” என்றான் அந்த கடையை காண்பித்து.
“இப்பவா? வீட்டுல இருந்து அத்தனை போன் வருதே? கிளம்புவோம் பார்த்திவ்…” என சுதந்திரம் சொல்ல அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்த்திவ்வே அந்த திசையில் நடக்க ஆரம்பிக்க,
“இன்னைக்கு என் நேரமே சரியில்லை. என்னடா ரோதனை இது சுபாசு?…” என நொந்துகொண்ட சுதந்திரம்,
“பார்த்துட்டே நிக்கிற? போடா முதல்ல…” என அவனுடன் தானும் ஓட்டமும் நடையுமாக வர கடையை நெருங்கும் முன் பார்த்திவ்வை உரசிக்கொண்டு சடன் ப்ரேக் போட்டு தடுமாறி நின்றது அந்த ஸ்கூட்டி.
“ஏய்…” என பார்த்திவ் திட்ட ஆரம்பிக்கும் முன்னரே,
“ஸாரி, ஸாரி, ஸாரி ஸார். ப்ளீஸ். தப்பு என் மேல தான். வேணும்னு பண்ணலை. ப்ளீஸ்…” என்ற பெண்ணின் சத்தத்தில் கையை கீழே இறக்கியவனருகே வந்து நின்றுகொண்டனர் சுதந்திரமும், சுபாஷும்.
பார்த்திவ் தான் என மங்கிய ஒளியில் சரியாக கணிக்க முடியவில்லை சுபஷ்வினியால்.
அவளின் மன்னிப்பில் பார்த்திவ் தணிந்து பார்க்க அந்த வாகனத்தில் இருப்பெண்கள்.
அதில் பின்னிருந்த பெண் முன்னிருந்தவள் முதுகில் சாய்ந்து முகத்தை மறைத்திருந்தாள்.
“ஏம்மா பார்த்து வரதில்லை?…” என்ற சுதந்திரம்,
“தம்பி நீங்க போங்க. நான் வாங்கிட்டு வரேன்…” என பார்த்திவ்வை அனுப்ப அவனும் எரிச்சலுடன் திரும்பி காரை நோக்கி நடக்க,
“ஹாய் ஸார் நீங்களா?…” என்ற ஸ்ருதியின் குரலில் பார்த்திவ்வின் நடை தடைபட வேகமாய் திரும்பினான்.
சுதந்திரத்தின் குரலிலேயே அவள் இவர்கள் தான் என கண்டுகொண்டாள் உடனேயே.
“அஷ் இறங்கு…” என்ற ஸ்ருதி தானும் இறங்கிவிட்டாள்.
“ஸ்ருதி…” என்ற சுபஷ்வினியும் இன்னும் கூர்ந்து கவனிக்க பார்த்திவ்வின் முகம் அவளுக்கு தெளிவானது.
ஒருநொடி ஸ்தம்பித்து பின் சுதாரித்தவளுக்குள் அத்தனை சந்தோஷம். இருக்குமிடம் உணர்ந்து சுபஷ்வினி,
“ஹாய் ஸார்…” என்றாள் பார்த்திவ்விடம்.
“ஹாய்…” என்றுமட்டும் சொல்லியவன் ஸ்கூட்டியை நகர்த்தி ஓரம்கட்டும் ஸ்ருதியை தான் பார்த்தான்.
“ஸார் இவ என் ப்ரென்ட் அஷ். ப்ச், சுபஷ்வினி ஃபுல் நேம். ஆனா எனக்கு அஷ்…” என சைட் ஸ்டாண்ட் போட்டுக்கொண்டே ஸ்ருதி அவனிடம் சொல்ல,
“அங்க பார்த்து ஸ்டாண்ட் கரெக்ட்டா போடுங்க ஸ்ருதி. நான் இங்க தானே இருக்கேன்…” என்றான் பார்த்திவ்.
சுபஷ்வினியும் அவனிடம் புன்னகைக்க அவள் யாரென தெரிந்து இன்முகம் காட்டினான் பார்த்திவ்.
சுதந்திரம் சுபாஷை பார்த்துவிட்டு தேமே என்று நின்றுகொண்டார். இதனை எதிர்பார்க்கவில்லையே அவர்.
அதுவும் இந்த இருட்டில் அவள் தான் எனவும் தெரியவில்லை. யாரோ இருவர் என பேசியிருக்க ஸ்ருதியின் உற்சாக குரலில் திகைத்தவர், பார்த்திவ்வின் நடை நின்று திரும்பியதில் அதிர்ந்தி போனார்.
இதில் அவரின் எண்ணிற்கு வேறு வீட்டிலிருந்து அழைப்பு வேறு வந்துகொண்டிருந்தது.
எடுக்கவா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்க சுபஷ்வினியை பார்த்துவிட்டு ஸ்ருதியிடம் பேசினான் பார்த்திவ்.
“இந்த நேரம் எங்க இங்க?…” என்றதும்,
“உங்களுக்கு இது கொஞ்சம் சின்ன விஷயம் தான். ஆனாலும் எனக்கும், என் அஷ்க்கும் இது பெரிய விஷயம்….” என்ற ஸ்ருதி சிறு புன்னகையுடன்,
“இன்னைக்கு பாட்டு பாடினதுக்கு அஷ்க்கு சின்ன ட்ரீட்….” என்று சொல்ல,
“குட்…” என்றான் பார்த்திவ்.
இப்போது அவர்கள் முகமெல்லாம் இருளில் நன்றாகவே பழகி இருந்தது. கண்ணுக்கு தெளிவாகவும் இருக்க தூரத்து வெளிச்சமும் உபயோகமானது.
ஸ்ருதியை இன்னும் கவனித்தது பார்த்திவ்வின் கண்கள். முக்கால் பேண்டுடன் தலையை மூடிய ஹூடியில் இருந்தாள்.
“இது நாங்க அடிக்கடி வர இடம் தான். கருப்பட்டி காபியும், மிளகாய் பஜ்ஜியும் இங்க அல்ட்டிமேட். அதான் சின்ன பார்ட்டி. இந்த க்ளைமேட்க்கு சூப்பரா இருக்கும்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், நல்ல க்ளைமேட்…” பார்த்திவ்வும் ஆமோதிக்க சுபாஷ் விழி பிதுங்கி பார்த்தான் அவனை.
“இம்புட்டு நேரமும் எரியுதுடி மாலான்னு தண்ணிய வாங்கி மூஞ்சில அடிச்சுட்டு இப்ப க்ளைமேட் நல்லாருக்காமா?…” என சுதந்திரத்தின் காதில் முனுமுணுத்தவன்,
“ஏங்க மூத்த ஸாரு, பெரியமனுசன்னு கூடவே சுத்துறீங்களே? இதெல்லாம் என்ன ஏதுன்னு விசாரிக்கறதில்லையா?…” என்று வேறு கேட்க,
“நீ வேற ஏன்டா?…” என்றார் சுதந்திரம்.
“ஆப்பு ஆன் தி வே. போன்ல அறிவழகன் ஸார். எடுத்து பேசுங்க…” என்ற சுபாஷ் சுதந்திரம் கையில் எடுத்து போனை பார்க்கவும்,
“பார்த்துட்டே இருக்கீங்களே. அங்க என்ன அவசரமோ?…” என அட்டன் செய்துவிட்டான் நொடியில்.
“டேய்ய்ய்ய்…” என்று சத்தமின்றி பல்லை கடித்தவர் காதில் வைத்துவிட்டார் போனை.
“என்ன அங்க சத்தம்? எங்க இருக்கீங்க?…” என்ற அறிவழகனின் கேள்வியில் சுதந்திரத்திற்கு வெறும் காற்று தான் வந்தது.
“ஒரு பெரியமனுசன் செய்யிற வேலையா இது? அவர் எவ்வளோ நேரமா எங்க இருக்கீங்கன்னு கேட்டுட்டு இருக்காரே?….” என சுபாஷ் மீண்டும் சுதந்திரத்தின் மறுகாதில் முணுமுணுக்க இன்னும் பதறி போனார்.
சுபாஷின் முதுகில் இரண்டு மொத்து மொத்தியவர் பார்த்திவ்வை நெருங்கி போனை நீட்டினார்.
“பார்த்திவ் வீட்டுல இருந்து கால்…” என்றார் சுதந்திரம்.
தொடர்ந்து அவர் போனுக்கு அடித்துக்கொண்டிருக்க அவரால் தவிர்க்க முடியவில்லை.
பார்த்திவ்வின் போன் காரில் இருக்க அவன் எடுக்கவில்லை என்றதும் தனக்கு அழைக்கிறார்கள் என புரிந்தது.
“அங்கிள்…” என கண்டனமாய் பார்த்தவன் வாங்கி காதில் வைக்க,
“பார்த்திவ்…” என்ற அறிவழகனின் அழைப்பில்,
“நான் வர இன்னும் அரைமணி நேரமாகும் ப்பா…” என அவன் அழுத்தமாய் சொல்லியவிதத்திலேயே இனி அழைக்க கூடாதென்னும் மறைமுக செய்தி.
“என்னவோ முக்கியமான வேலையா இருக்கான் போல? விடு வரட்டும்…” என்று மஞ்சுளாவிடம் சொல்லிக்கொண்டே அவர் போனை துண்டித்திருந்தார்.
“சுபாஷ் போய் டீ வாங்கிட்டு வா…” என்று அவனிடம் சொல்ல,
“அஷ் நீ பேசிட்டு இரு. நானும் நமக்கு இங்கயே வாங்கிட்டு வரேன்…” என்று ஸ்ருதி சொல்ல,
“அப்போ ட்ரீட் நமக்கு இல்ல போல அங்கிள்? ஸ்ருதி ஒரு பேச்சுக்கு கூட நம்மளை இன்வைட் பண்ணலையே?…” என்று சுதந்திரத்திடம் பார்த்திவ் இலகுவாக சொல்ல,
“நிஜமாவா? உங்களுக்கு ஓகேன்னா மிளகாய் பஜ்ஜியோட மசால் வடையும் சேர்த்து சொல்லிடலாமே?…” என ஸ்ருதி அத்தனை உற்சாகமாக கேட்டாள்.
எங்கே தான் கேட்டு அவன் மறுத்துவிட்டால் இது தேவையா என தன்னை குடைந்துகொண்டே இருக்கும்.
நிச்சயம் வாய்கொள்ளாமல் என்றாவது பொடுபொடுவென பேசிவிடுவோம் என்று தான் அமைதியாக இருக்க இப்போது அவனே கேட்கவும் அத்தனை சந்தோஷம்.
பார்த்திவ் புன்சிரிப்புடன் தலையசைக்க சுதந்திரம் இதற்குள் நான் எங்கே வந்தேன் என யோசனையுடன் இன்னும் தெளியாமல் நின்றிருந்தார்.
“ஆமா அதானே?…” என எதையாவது சொல்லவேண்டுமே என வரவழைத்துக்கொண்ட சிரிப்போடு சுதந்திரமும் சொல்ல,
“பின்ன இல்லையா அங்கிள்? அதுவும் ம்யூஸிக் கத்துக்குடுக்கனும்னு வேற சொல்லியாச்சு…” என பார்த்திவ் அடுத்ததை சொல்ல,