இரவு பதினோரு மணி போல குறுஞ்செய்தி ஒன்று வந்த சுவடு தெரிய விழித்திருந்த பார்த்திவ் அதனை எடுத்து பார்த்தான்.
சாரங்கபாணி தான் செய்தி அனுப்பியிருந்தார் பார்த்திவ்விற்கு. எதிர்பார்த்தது தான் என்றாலும் இந்த நேரமா என்னும் ஆயாசம் அவனை சூழ்ந்தது.
எப்படியும் தானும் அழைக்கத்தான் வேண்டும். காலை அழைக்கலாம் என நினைத்திருக்க அவரே அனுப்பியிருந்தார் அழைக்கவா என கேட்டு.
ஒரு நொடி தான் யோசனை எல்லாம். உடனே அவன் அழைக்கவும் காத்திருந்ததை போல எடுத்துவிட்டார் சாரங்கபாணி.
“சொல்லுங்க ஸார்…” என்றதும்,
“தூங்கிடலையே பார்த்திவ்? அதான் முதல்ல மெசேஜ் பண்ணினேன்….” என்றார்.
“நோ ஸார். சொல்லுங்க. நானே நாளைக்கு உங்களை கூப்பிடலாமேன்னு தான் இருந்தேன். என்ன விஷயம் ஸார்?…” என கேட்டான்.
“இல்லை சும்மா தான்…” என்றவர்,
“அந்த ஸாங் வொர்க் எல்லாம் முடிஞ்சதா?…” என பேச்சை மாற்ற,
“அதுக்கு தான் நாளைக்கு பேசலாமேன்னு இருந்தேன். உங்க ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் பண்ணியாச்சு. நீங்க வந்து நாளைக்கு ஸாங்ஸ் எல்லாம் கேளுங்க. திருப்தின்னா பைனல் பண்ணிடலாம்….”
“ஹ்ம்ம், ஓகே பார்த்திவ். ஒரு பத்து மணிக்கு நான் ஸ்டூடியோ வரேன்….” என்றவர் யோசிக்க,
“வேற எதுவும் சொல்லனுமா ஸார்?…” என கேட்டான் பார்த்திவ்.
“இல்லை இந்த வீக்கெண்ட் நைட் பங்க்ஷன்க்கு வர ஐடியா இருக்கா பார்த்திவ்?…” என்று கேட்க,
“சூர் ஸார். குட்நைட்…” என சொல்லி வைத்துவிட்டான் பார்த்திவ்.
சாரங்கபாணிக்கு தன் நிலை குறித்து அத்தனை மன உளைச்சல். பேசி முடித்தவர் அங்கேயே அமர்ந்துவிட்டார்.
எத்தனையோ சொல்லியாகிற்று இப்போது இது வேண்டாம் என்று. ஆனால் சிவசங்கரி கேட்பதாக இல்லை.
பார்த்திவ், சாரங்கபாணி இருவருக்குள்ளும் உறவு ரீதியாக எதுவுமில்லை என்றாலும் இன்னும் தொழில் ரீதியான நட்பு தொடரத்தான் செய்கிறது என்பதை இந்த சமூகத்திற்கு, அவர்களின் துறைக்கு காட்ட முனைந்தார் சிவசங்கரி.
அதிலும் அங்கே இருவரையும் ஒன்றாக பார்த்தால் மீண்டும் மகள் கூட மனது மாறலாமே என்றொரு நட்பாசை தான் தாயாக அவருக்கு.
“பார்த்திவ் மாறமாட்டான். நீ பேராசை படற…” என்று மனைவியை எச்சரிக்க,
“இது பார்த்திவ்க்காக இல்லை. என் பொண்ணுக்காக. அவ தப்பு பண்ணினா அப்படியே விடமுடியாது. அவ இந்த பாதையில இருந்து மாற வேண்டாமா?…”
“அதுக்கு பார்த்திவ் என்ன செய்வான் சிவா? எனக்கு புரியலை….”
“பார்த்திவ் அவாய்ட் பன்றதே ஆராவுக்கு ஒரு இன்செல்ட் ஃபீல் குடுக்கும். அவன் முன்னாடி நல்லா வாழனும்னு தோண வைக்குமே? அதோட எதாச்சும் ஒரு சின்ன ஸ்பார்க் இருக்காதா நம்ம பொண்ணுக்கு? ரொம்ப சந்தோஷமா தானே நிச்சயம் பண்ணிக்கிட்டா….” என்று ஆற்றாமையுடன் கூறினார் சிவசங்கரி.
மகள் ஏதேனும் ஒருவழியில் பார்த்திவ்வை தேடினாலும் அதன் போக்கின் காரணங்கள் அறிந்து தன்னை திருத்திக்கொள்ள மாட்டாளா என யோசித்தார் அவர்.
அவர் யோசனைக்கு தகுந்த மனப்பான்மையில் மகள் இல்லை என்பதை தாய் மனது உணர மறுத்தது.
ஒருவேளை பார்த்திவ் அலட்சியம் செய்து, நிச்சயம் அலட்சியம் செய்வான் தான். அதிலாவது ரோஷப்பட்டு, கோபப்பட்டு ஏதாவது ஒரு வகையில் மாற்றம் வராதா என்றும் ஆசை கொண்டார்.
“நீ தப்பர்த்தம் பன்ற சிவா. பார்த்திவ் மேரேஜ் வேண்டாம்ன்னு நிருத்திணப்ப மாறாத உன் பொண்ணா, இப்ப ரோஷப்படுவா? உன் பொண்ணு உணர்ந்து மாற கூடிய நிலையில இல்லை. அப்படின்னா அவ என்னைக்கு என் முன்னாடி அப்படி ஒரு சூழ்நிலையில நின்னாளோ அன்னைக்கே அசிங்கப்பட்டு, குறுகி போயிருக்கமாட்டாளா?….”
இன்னுமே குறையாத வேதனையில் அவர் பேச சிவசங்கரிக்கு இவர் பழையதிலேயே இருக்கிறாரே என்று தான் கடுப்பாகியது.
“பெத்தவங்களோட கண்ணீர் கூட அவளை சுடலைன்னா வேற என்ன மாத்திரும்? அதுவும் இந்த லட்சணத்துல நாம இப்ப அனிவர்சரி கொண்டாடறது ரொம்ப முக்கியமா?…” என்று சொல்லிவிட சிவசங்கரி முகம் சிறுத்துவிட்டது.
“நீ அவ்வளோ நேரம் பார்த்திவ் வீட்டுல இருந்து அவன் வர வரைக்கும் வெய்ட் பண்ண வச்சு இன்விடேஷன் குடுத்துட்டு வந்ததே எனக்கு பிடிக்கலை. முகத்துக்கு நேர எதுவும் சொல்லலைன்னாலும் எவ்வளோ கேவலமா நினைப்பாங்க? உன் பங்குக்கு நீயும் என்னை அசிங்கப்படுத்தற….”
சாரங்கபாணி மனது தாளாமல் சொல்ல அவை எல்லாம் சிவசங்கரியின் காதில் ஏறினால் தானே?
“ஏன் அப்படி நினைக்கறீங்க? இது நம்ம பொண்ணுக்காக…”
“என்ன பொண்ணுக்காக, பொண்ணுக்காக. அதுக்கு அவளை நாம ஒழுங்கா வளர்த்திருக்கனும். கண்டிச்சிருந்திருக்கனும். எல்லாம் கை மீறி போன பின்னாடி இன்னொருத்தனால அவ மாறுவான்னு எப்படி நினைக்கிற நீ?…” என ஏகத்திற்கும் கத்திவிட்டார்.
பிரச்சனை பேசி பெரிதாகி சிவசங்கரியின் அழுகையில் முடிய அதையும் வந்து ஆராதனா எட்டி பார்த்துவிட்டு,
“உங்க சண்டையோட சத்தத்தை குறைங்க. நிம்மதியே இல்லை இந்த வீட்டுல…” என எரிந்து விழுந்துவிட்டு செல்ல,
“பார்த்தியா?…” என சொல்லிய சாரங்கபாணியால் சிவசங்கரியை தேற்ற முடியவில்லை.
அப்படியே மனைவி படுத்துறங்கியதும் மனது கேட்காமல் பார்த்திவ்விற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டார்.
அதற்குள் அத்தனை யோசனைகள் அவருக்கு. தனக்கு தங்கள் வாழ்விற்கு என்ன குறை?
அத்தனைபேரும் அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு பணத்துடனான பேரும் புகழும் உச்சத்தில் இருந்தது.
இன்றுவரை இந்த துறையில் இயக்குநர் என்றால் முதலில் ஞாபகத்தில் வருவது அவரது பெயராக தான் இருக்கும்.
எல்லாவகையான படங்களும் இயக்கியவர். எழுத்தும் இயக்கமும் அவரின் புகழ்பாடும்.
ஆனால் சொந்த வாழ்வில் மிக மோசமாக சறுக்கிவிட்டார் மகள் என்னும் உறவினால்.
அதனை நினைக்கையில் மீண்டும் நெஞ்செல்லாம் பிசைந்தது. எங்கே தனக்கொன்று என்றால் சிவசங்கரியால் தாங்க முடியாது.
மகளின் செயல் பிடிக்கவில்லை என்றாலும் அவளை நல்வழி படுத்தவாவது தான் இருக்க வேண்டுமே?
என்னென்னவோ யோசித்தார். தன்னைவிட சிறு பையனின் முன்னால் இப்படி நிலை இறங்கி போகிறோமே என நினைத்தவருக்குள் அத்தனை ஆற்றாமை.
மறுநாள் பார்த்துகொள்ளலாம் என்று எழுந்து சென்று படுத்தவருக்கு எல்லாம் இருந்தும் உறக்கமில்லை.
அவர் வாழ்நாளில் இத்தனை இறங்கி போனதும் பார்த்திவ்விடம் தான். இத்தனை தூரம் நாடி செல்வதும் அவன் ஒருவனிடம் தான்.
எல்லாம் மகளால் விளைந்தது. தன்னால் விளைந்தது. தங்களால் விளைந்தது என எண்ணி மறுகிக்கொண்டே இருக்க இதோ விடிந்துவிட்டது.
மனைவி, மகள் யாரையும் பாராமல் தனது அலுவலகத்தில் சென்று அமர்ந்துவிட்டார்.
சரியாக பத்து மணிக்கு முன்பாகவே ஸ்டூடியோவிற்கு செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டார்.
———————————
“நைட்டும் சாப்பிடலை. நல்லா சாப்பிடு பார்த்திவ்…” என மஞ்சுளா மகனுக்கு பரிமாற்ற,
“ஹையர் ஸ்டடிஸ் பன்றதை பத்தி உன்கிட்ட பேசனும்னு சொல்லிட்டிருந்தான்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம் ம்மா…” என சொல்லிக்கொண்டிருக்க அறிவழகன் வந்து அமர்ந்துகொண்டார்.
“இன்னுமா உங்க கோவம் தீரலை?….” என்று மஞ்சுளா முறைக்க,
“எவ்வளவு தைரியம் இருக்கும் இங்க வந்து எவ்வளவு ஈஸியா வாங்கன்னு கூப்பிட? அதுவும் அந்தம்மா எந்த முகத்தை வச்சுட்டு இப்படி வராங்க? நீ வந்தா தான் இன்விடேஷனை குடுத்துட்டு சொல்லிட்டு போவாங்களாம்…” என பொருமி தள்ளினார்.
“ப்ச், விடுங்கப்பா…” என பார்த்திவ் அலட்சியமாக சொல்ல,
“இந்த பார்ட்டிக்கு நீ போறியா பார்த்திவ்?…” என்றார் அறிவழகன்.
“இப்பவே எதுக்கு இந்த கேள்வி. அன்னைக்கு சூழ்நிலை என்னவோ அப்போ பார்ப்போம்…” என மஞ்சுளா அதட்டி அந்த பேச்சை நிறுத்த பார்த்தார்.
“பார்க்கலாம்…” என சொல்லி சிரிப்புடன் கிளம்பிவிட்டான்.
“நீயும் வருஷமெல்லாம் இதை தான் சொல்ற. மதிச்சானா? பார்க்கலாம். அதே பதில். பாரபட்சமில்லாம கேட்கும் போதெல்லாம் சொல்றான்…” அறிவழகன் மனைவியை கிண்டல் பேச,
“போதும் போதும். சான்ஸ் கிடைச்சா உடனே ஓட்டுவீங்க. முதல்ல சாப்பிடுங்க….” என்றவர் வெளியே தலையை நீட்டி எட்டி பார்க்க சுபாஷிடம் என்னவோ பேசிக்கொண்டிருந்தான் பார்த்திவ்.
“இங்க வேலைக்கு சேரும் போது சுபாஷ்க்கு கல்யாணமாகாலை. இப்ப ரெண்டு பிள்ளைங்க…” என அறிவழகன் பெருமூச்சுடன் மஞ்சுளாவின் பார்வையை பார்த்து.
“நீங்க அடங்கவே மாட்டீங்க…” என்று சொல்லி மகனை பார்க்க செல்ல,
“பை ம்மா….” என காரில் ஏறிக்கொண்ட பார்த்திவ்,
“அங்கிள் ஏன் இன்னும் வரலை? கால் கூட ரீச்சாகலையே?…” என்றான் பார்த்திவ் சுபாஷிடம்.
“குளிர் ஜுரமா இருக்கும்?…” என்றான் சுபாஷ் மெல்லிய குரலில் சிரிப்பை அடக்கியபடி.
“என்ன?…”
“இல்ல நேத்து நைட்ல நல்ல க்ளைமேட்ல வெளில நின்னோம்ல. அவர் வேற எதையோ பார்த்து பயந்துட்டார். பாவம் வயசுல மூத்தவர். எவ்வளவை தான் மனுஷன் தாங்குவார்? அதான் முடியலையோ என்னவோ?…” என்றவன் சொல்லியதில் பார்த்திவ் அவனை கண்ணாடி வழியே நிமிர்ந்து பார்க்க,
“நான் இப்ப ட்ரை பன்றேன்…” என உடனே பேச்சை குறைத்தான் சுபாஷ்.
தன்னை காப்பாற்ற சுதந்திரம் கூட இப்போது இல்லையே. தனியாக மாட்டிக்கொண்டால் சேதாரமோ சேதாரம்.
“என்ன சுபாஷ் சத்தத்தையே காணும்?…” என பார்த்திவ் கேட்க,
“புரிஞ்சுக்கிட்ட பிள்ளை பிழைச்சுக்கும் ண்ணா. அதான்…” என்றதும் முறைத்தான் பார்த்திவ்.
‘சிக்கினா சிக்கன் கொத்து தான் நீ’ என வாயை பசை போட்டு ஒட்டிக்கொண்டதை போல சுபாஷ் மௌனமாகிவிட இப்போது சுதந்திரத்திமிருந்து அழைப்பு.