“ஹாய் க்ரஷ்…” என உறக்கத்திலேயே அவள் பேச பார்த்திவ்விற்கு சந்தேகமே வந்துவிட்டது.
தனது போனை எடுத்து அவள் எண் தானா என சரிபார்த்தவன் அவள் பெயரையும் பார்த்துவிட்டு,
“ஸ்ருதகீர்த்தி…” என்றான் மீண்டும்.
“வாவ் அஷ் க்ரஷ். மிஸ்டர் பயர் இஞ்சின், என் கனவுல எல்லாம் வரீங்க. ஆனா குட்நைட். ஸ்ருதி தூங்கறா…” என போன் நழுவ உருண்டுகொண்டே அவள் பேச சட்டென அழைப்பை துண்டித்துவிட்டான் பார்த்திவ்.
மீண்டும் அழைக்காமல் உறங்கி எழவும் கிளம்பி வர சொல்லி அவளுக்கு செய்தியை அனுப்பிவிட்டு வேலையில் ஆழ்ந்து போனான்.
‘தைரியம் தான். பேரா வச்சிருக்க?’ என சிரித்துக்கொண்டவன் வரட்டும் இன்னைக்கு என்றபடி இருந்தவனை அவன் வேலைகள் இழுத்துக்கொண்டது.
ஸ்ருதிக்கு போனில் பேசியதுவே கனவாக இருக்க மீண்டும் ஒரு நல்ல உறக்கம் முடித்து மதிய உணவு நேரம் எழுந்தவள் குளித்து சாப்பிட எதுவும் உள்ளதா என கீழே சென்று பார்க்க தயிர் சாதம் மட்டுமே கொஞ்சமாக மிஞ்சி இருந்தது.
“சுபா பாப்பா உன்னை எழுப்ப வேண்டாம்ன்னு சொல்லிருச்சா? அதான் கூப்பிடல கண்ணு. வெறும் தயிர் சாதம், ஊறுகாய் தான் இருக்கு…” என சொல்லியவரிடம்,
“ஏற்கனவே கொஞ்ச நாளா மண்டை சூட்டோட தான் சுத்தறேன். திவ்யமா இருக்குமே தயிர் சாதம். குடுங்கக்கா…” என கேட்டு வாங்கி அங்கேயே நின்று சாப்பிட்டாள்.
“போய் டைனிங் டேபிள்ல உட்காரு பாப்பா…” என சமையலம்மா சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம். இதுவே வசதியா இருக்கு…” என்று சாய்ந்து நின்று உண்டு முடித்தவள்,
“புருஷன் எப்ப வராரு வெளிநாட்டுல இருந்து?…” என கதை பேசி முடித்து வெளியே வர மேலும் அரைமணி நேரமானது.
அறைக்கு வந்தவள் போர்வையுடன் சுருண்டு கிடந்த அலைபேசியையே அப்போது தான் கவனித்தாள்.
“இதுக்கு தான் உனக்கு பொறுப்பே இல்லைன்னு நேத்து அத்தனை பேச்சு. என்ன பண்ணிருக்க ஸ்ருதி?…” என தன்னை தானே கடிந்துகொண்டு போனை எடுத்தவள்,
“ம்ஹூம் இப்ப இதுக்குள்ள போனா அவ்வளோ தான். ஒரு வேலையும் ஆகாது…” என சார்ஜில் போட்டுவிட்டு படுக்கையை சரி செய்து அறையை ஒழுங்குபடுத்தி முடித்து வந்து போனை கையில் எடுக்க அதில் சுபஷ்வினி அத்தனை அனுப்பி இருந்தாள்.
சுகந்தன் அனுப்பிய குறுஞ்செய்திகள் எல்லாவறையும் அவளுக்கு அனுப்பி இருந்தாள்.
அதனை எல்லாம் ஒவ்வொன்றாய் படித்து முடித்து அவனின் மன்னிப்பு மடலிலும், சமாதானத்திலும் சலித்து வேறு செய்தி உள்ளதா என பார்க்க தூக்கிவாரி போட்டது.
“பார்த்திவ் ஸார்…” என தலையில் கைவைத்துவிட்டாள் அவன் அனுப்பியதை பார்த்ததும்.
“சுத்தம் நான் அந்நேரம் எட்டாம் வானம் தாண்டியிருப்பேன் போல? அப்பவே எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்காரே?…” என்றவள் கால் ஹிஸ்டரியை பார்க்க அதில் அழைப்பு வந்து அவளும் பேசியிருந்தாள்.
“போச்சு, எப்ப எடுத்தேன்? என்ன பேசினேனோ? அதுக்கு தான் இந்த மெசேஜா?…”
‘கனவெல்லாம் கண்டு முடிச்சிட்டு தூங்கி எழுந்ததும் கிளம்பி வரவும்’ என அனுப்பியிருந்தான் பார்த்திவ்.
ஸ்ருதி உடனே சுபஷ்வினிக்கு அழைத்து சொல்லிவிட்டு புலம்பியபடியே கிளம்பி செல்ல அதை பற்றி எதையுமே பார்த்திவ் பேசிக்கொள்ளவில்லை.
நிம்மதியாக இருந்தது. இன்னொருபக்கம் தன்னை குறித்தே அத்தனை கோபம். இப்படி கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்று.
பார்த்திவ்விடம் தான் என்ன பேசினோம் என கேட்போமா வேண்டாமா என யோசித்தவள் பின் அலட்சியமாக தவிர்த்துவிட்டாள்.
“எதுக்கு எண்ணெய் சட்டிக்குள்ள வான்ட்டாடா டைவடிச்சு தத்தக்காப்பித்தக்கான்னு குதிப்பானேன்? ஜெண்டிலா டீல் பண்ணிட்டு இப்படியே போய்டுவோம்…” என தன்னிடமே சொல்லிக்கொண்டாள் ஸ்ருதி.
“லஞ்ச் முடிஞ்சதா ஸ்ருதி?…” என பார்த்திவ் கேட்க,
“ஹ்ம்ம்…” என்றாள் அவளும்.
“என்ன லன்ச்?…” என்றவன் தன் போனை எடுத்து தனக்கு லன்ச் அனுப்பும்படி சொல்லிவிட்டு அவள் சாப்பிட்டதை கேட்டதும்,
“தயிர் சாதம் தானே? என்னோட ஷேர் பண்ணிக்கலாம் இன்னைக்கு…” என்று சொல்ல,
“இல்ல வேண்டாம் ஸார்…” என மறுத்தாள்.
“ப்ச், இதுல என்ன இருக்கு? அன்னைக்கு நீங்க டீ, பஜ்ஜி வாங்கிட்டு வந்தப்போ நான் நோ சொல்லலையே…” என்று புன்னகையுடன் சொல்ல ஸ்ருதியால் மறுக்க முடியவில்லை.
“ஓகே ஸார்…” என்றவள் அவனுடன் சேர்ந்து உண்டாள்.
சாப்பிடும் பொழுதும் ஸ்வரங்களை பற்றியும், ராகங்களை பற்றியும், அதன் பெயர்களை பற்றியும் தான் அவளுக்கு எடுத்துரைத்தான்.
இலகுவாக புரிந்துகொள்ள திரையிசை பாடல்களை அவளுக்கு உதாரணம் காண்பித்து அதன் ராகங்களை கூறினான்.
சாப்பிட்டு முடித்து இசைக்கருவிகள் பற்றிய பேச்சுக்கள் துவங்கியது. ஒவ்வொன்றிற்குமான தனி தன்மைகளை விளக்க,
“பாட்டு பாட இதுவுமா முக்கியம்?…” என ஒரு வேகத்தில் ஸ்ருதி கிண்டலுடன் கேட்டுவிட,
“கத்துக்கனும்னா எல்லாமே கத்துக்கலாம் ஸ்ருதி. தப்பில்லை. யாருக்கு தெரியும் பாடகி ஸ்ருதகீர்த்தி எதிர்கால இசையமைப்பாராகவும் ஆகலாமில்லையா?…” என்று சொல்ல ஸ்ருதியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
அன்றைய பாட்டு வகுப்பும் எந்தவித வசைகளும் இன்றி சிறப்பாகவே சென்றது. கவனத்துடன் சிரத்தையாய் கேட்டுக்கொண்டாள்.
அவன் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அவளின் முன்னேற்றத்தின் படிகளாகவே இருந்தது.
அன்று மட்டுமல்ல அதன் பின்னான நாட்களில் எல்லாம் வகுப்புகள் நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் என்று கூட நீடித்தது.
நாளுக்கு நாள் இருவருக்கிடையிலான புரிதல் தான் இன்னும் கூடிக்கொண்டே சென்றது.
ஸ்ருதி பாடிய முதல் பாடல் இடம்பெற்ற சாரங்கபாணியின் திரைப்படம் படப்பிடிப்பை தாமதமாக முடித்திருக்க வெளியீட்டுக்கான வேலைகள் இன்னும் மந்தமாகி இருந்தது.
இரண்டரை மூன்று மாதங்களில் வெளியிட இருந்த படம் மேலும் இரண்டு மாதங்களானது.
இந்த இடைவெளியில் ஸ்ருதி பார்த்திவ்வின் இசையில் மேலும் மூன்று பாடல்களை பாடிவிட்டாள்.
ஆனால் எதுவும் வெளியாகவில்லை. அந்த மூன்றும் படப்பிடிப்பில் தான் இருந்தது இன்னும்.
அந்த ஸ்டூடியோவில் ஸ்ருதியை தெரியாதவர் என யாருமில்லை என்றளவில் அவள் பிரசித்தம்.
தான்யா உட்பட அனைவரிடமும் தோழமையுடன் பழகியவள் யாரை எல்லைக்குள் நிறுத்தவேண்டும், யாரிடம் அளவாக பழகவேண்டும் என்பதில் அத்தனை தெளிவுடன் இருந்தாள்.
இத்தனை மாதங்கள் கடந்திருக்க இன்னும் அந்த முதல் குறுகுறுப்பும், போட்டி சம்பந்தமான உறுத்தலும் மட்டும் ஓரிடத்தில் தங்கி இருந்தது.
பார்த்திவ்விடம் கேட்டுவிடலாம் என இத்தனை நாட்களில் பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் கேட்கும் சந்தர்ப்பம் தான் அமையவில்லை.
அமையும் சந்தர்ப்பங்களையும் அவளே அடித்து விரட்டினால் என்பதும் கூட நிஜமோ நிஜம்.
இத்தனை நாட்களில் அவள் செய்யாத ஒன்று. அவன் செய்திருக்க கூடுமோ என்ற சந்தேகத்தின் பக்கத்திற்கு வழிவிட்டிருந்தாள் அவள் மனதை.
அந்த பாதை பெரிதாய் விஸ்தாரமெடுத்தது. இதில் வேறு ஏதேனும் குழறுபடிகள் நிகழ்ந்திருந்தால்? அவன் சொல்லாமலே இருந்து டிவி சேனல் சொல்லியிருந்தால்?
‘ஆமாம், அப்படித்தான் செய்தேன்’ என்று பார்த்திவ் சொல்லிவிட்டால் அதை தாங்கும் அளவிற்கு தன மனதில் வலு உள்ளதா என ஒருவித அச்சம்.
இப்படியெல்லாம் அவள் நினைத்ததே இல்லை. எங்கே எப்போதும் இந்த விதை துளிர்த்தது?
இந்த எண்ணங்கள் எங்கே ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் பார்த்திவ்வை நியாயப்படுத்த அவள் மனதிற்குள் போராட ஆரம்பித்திருந்தாள் ஸ்ருதி.
“மோளே என்ன பண்ணிட்டிருக்க நீ?…” என தன் மனதையே அதட்டி ஆண்டுகொண்டு இருக்க முயற்சி செய்தாள் சமீப காலமாக.
மனதின் ஓட்டங்கள் அவள் சொல்லும் திசைக்கு மடைமாற்ற முயற்சி செய்து சில நேரம் வெற்றியும் கண்டாள்.
அனுசரணை, அக்கறை, கனிவு, கரிசனை என எல்லாவற்றையும் தாண்டிய ஒரு பார்த்திவ்வை அவள் மனது உணர துவங்கி இருந்தது.
ஸ்ருதி என்ற அழைப்பும் பார்த்திவ்விடம் பன்மையில் இருந்து என்றைக்கு ஒருமைக்கு மாறியதோ அதில் அவனை என்ன மாற்றம் என்று அதிகமாய் கவனிக்க ஆரம்பித்தவள் இப்போது அந்த கவனிப்பில் இருந்து மீள முடியாமல் தானே மாட்டி இருந்தாள்.
“ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன். வேற ஒண்ணுமில்லை…” என தன்னை தானே சமாதானம் செய்துகொண்டவள் இதனை சுபஷ்வினியிடம் பேச முற்படவில்லை.
‘முதல்ல என்னை நானே சரி செஞ்சுக்கனும். அப்பறம் அஷ்கிட்ட சொல்லிக்கலாம்’ என முடிவெடுத்துவிட்டாள்.
காதல் என்ற ஒரு வரையறைக்குள் அவள் வரவே இல்லை. அவனை பிடித்திருக்கிறது. மனது அவன்பால் சாய்கிறது.
அவனை அதிகம் தேடுகிறது. அவன் அருகாமையை இனிமையாக உணர்கிறது என்று மட்டுமே புரிந்தது அவளுக்கு.
ஆனாலும் ஒருவித அச்சம். அதை தாண்டி யோசிக்கமுடியாத பயம். அதை விலக்கவே இன்னும் தீவிரமாக தன்னை இசையில் புதைத்துக்கொண்டாள்.