“அதெல்லாம் ஒன்னுமில்லையே. நான் நார்மலா தான் பேசறேன்…”
“ஓஹ், பார்த்திவ் எந்த மெசேஜும் கூட பண்ணலை. அதான் கேட்டேன். சரி வேலையா இருந்தா பாருங்க…” என சொல்லி வைத்துவிட்டார்.
“நான் சொல்லிட்டு வரேன்…” என எழுந்து பார்த்திவ் அருகே வந்தார் சுதந்திரம்.
பார்த்திவ் முகமெல்லாம் யோசனை. ஸ்ருதி இருந்த அந்த டிஸ்கோ ஹால் ஒருசிலர் பயன்பாட்டிற்கு மட்டுமே எனப்படும் தனிப்பட்ட பகுதி.
அது ஒரு இருட்டு உலகம். பார்த்திவ் அந்த உலகிற்குள் காலெடுத்து வைக்க பிரியப்படாதவன்.
அந்தளவிற்கு அங்கே நடக்கும் சில அருவருக்கத்தக்கும் விஷயங்கள் ஒவ்வாதவையாகவே இருக்கும்.
அத்தனை இலகுவில் அதற்குள் செல்பவர்கள் மீளவும் முடியாது. அத்தனை சீக்கிரம் மீளவும் விடமாட்டார்கள்.
அங்கு ஸ்ருதி எப்படி சென்றாள்? என யோசித்து யோசித்து மண்டை காய்ந்தான் பார்த்திவ்.
அதுவும் அங்கே சாரங்கபாணி, அவர் தன்னையும், ஸ்ருதியையும் பார்த்த பார்வை, வினோத்துடன் அங்கே நின்றது என சுருக்கென்று தைத்தது.
‘அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது பார்த்திவ். பாவங்கள் சூழ்ந்த இடம். சினிமால சாதிக்கனும்னு கனவுகளோட வர பொண்ணுங்களை ஏமாத்தி அவங்க சிந்தற கண்ணீர் தான் அவங்க தாகம் தணிக்கிற தண்ணீரேன்னு வாழறவங்க.’ தன்னிடமே எத்தனை முறை சொல்லியிருப்பார் சாரங்கபாணி?
இன்று அவரே அந்த இடத்தில் இருந்ததை பார்த்து ஜீரணிக்கவே முடியவில்லை. எதை நினைத்து எங்கு சென்று நின்றுள்ளார் இவர்?
அதிலும் ஸ்ருதி செய்தி அனுப்பாவிட்டால் நிச்சயம் தான் ஸ்ருதியை பார்த்திருக்க முடியாது.
‘நீங்க இங்க இல்லையா ஸார்? இந்த டிஸ்கோ ஹால் ரொம்ப ஸ்ட்ரேஞ். இந்த ரூம்ல இருந்து வெளில வர முடியலை. ப்ளீஸ் ஹெல்ப் மீ ஸார்’ என அவள் அனுப்பிய செய்தியை கேட்டதும் மீண்டும் அழைக்க முயல அழைப்பு செல்லவில்லை.
அந்த நேரம் அந்த நொடி தான் செல்லாவிட்டால் அங்கே நேர்ந்திருக்கும் சம்பவத்தை நினைத்தவனுக்கு உள்ளம் நடுங்கியது.
“பார்த்திவ்…” என்ற சுதந்திரத்தின் அழைப்பில் நிமிர்ந்தவன்,
“உட்காருங்க அங்கிள். ஏன் நின்னுட்டே இருக்கீங்க?…” என்றவனிடம்,
“அம்மா கால் பண்ணினாங்க பார்த்திவ். என்ன விஷயம்ன்னு சொல்லலை நான். இங்க இருக்கறதா மட்டும் தான் சொன்னேன்…”
“ஓகே அங்கிள். இப்படி உட்காருங்களேன்…” என அவர் அமர்ந்ததும்,
“உங்ககிட்ட பார்த்துக்க சொல்லிட்டு தானே போனேன்?…” என்றான் பார்த்திவ் அவரிடம் ஆற்றாமையுடன்.
“அந்த நேரம் வீட்டுல இருந்து போன் வந்துச்சுன்னு ஸ்ருதிட்ட சொல்லிட்டு தான் தள்ளி போய் பேசினேன். ஆனா அந்த ஹால்க்கு ஸ்ருதி போகலை. வெளில தான் இருந்தா. கூட தான்யாவும் இருந்தாங்களே?…” என்றார் அவர்.
“தான்யா?…” என புருவம் உயர்த்தியவன்,
“ஆனா நான் போனப்போ ஸ்ருதி மட்டும் தான் இருந்தா. தான்யா இல்ல…” என பல்லை கடித்தவன்,
“நாளைக்கு மார்னிங் தான்யா இங்க இருக்கனும் அங்கிள்…” என்றான் அவன் ஆத்திரம் அடங்காமல்.
“கண்டிப்பா பார்த்திவ்…” என்ற சுதந்திரம்,
“நல்ல நேரத்துக்கு போனப்பா…” என நிம்மதியுடன் சொல்ல,
“நான் டிஸ்கஷன்ல இருந்தேன். முதல்ல ரெண்டுதடவை ஸ்ருதி கால் பண்ணினப்போ எடுக்க முடியலை. சொல்லிட்டு கிளம்பற சூழ்நிலையில ஸ்ருதி வாய்ஸ் மெசேஜ். கேட்டதும் அங்கருந்து வரதுக்குள்ள சில நிமிஷம் போயிருச்சு அங்கிள்…” என்ற பார்த்திவ்,
“என் தப்பு தான். வரமாட்டேன்னு சொன்னா அந்த பொண்ணு. நான் கேட்கலை. எனக்கு அந்த குற்ற உணர்ச்சியே சாய்க்குது. தப்பு பண்ணிட்டேன் அங்கிள். ஒன்னு கூடவே இருந்திருக்கனும். இல்லையா டின்னர் முடியவும் அனுப்பியிருக்கனும். அங்க இருக்கறவங்க அறிமுகம் தேவைன்னு இருக்க வச்சு என்ன பண்ணிட்டேன் நான்?…” என கண்கலில் செவ்வரியோட கூறினான்.
“லேசான அந்த வெளிச்சத்துல அவ முகம் கூட எனக்கு அவ்வளவா முதல்ல தெரியலை. ஆனா போனதும் என் கை பட்டது. அவ ட்ரெஸை கிழிச்சு. ஷிட். ராஸ்கல்ஸ். எவ்வளோ தைரியம்? அங்க என்ன பண்ணினாலும் யாரும் என்னவும் கேட்கமாட்டாங்கன்னு தானே? ப்ளடி பக்கர்ஸ்…” என தரையில் காலை உதைத்து எழுந்து நின்றான் வீறுகொண்டு.
பார்த்திவ்வின் ஆவேசம் மீண்டும் உச்சம் பெற அவனால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை.
அவனின் மணிக்கட்டு கைகள் எல்லாம் லேசான வீக்கத்துடனும், ஆங்காங்க விரல்களின் மேல் பகுதியில் தோல்கள் உரிந்தும் காணப்பட்டது.
“என்ன பார்த்திவ் இவ்வளோ காயம்?…” என்று சுதந்திரம் பதற சுபாஷும் வந்துவிட்டான்.
“என்னண்ணே…” என அவன் நிற்க,
“ப்ச், இப்ப வரேன். வரேன்…” என சொல்லிய பார்த்திவ் அந்த அறை கதவை இருமுறை தட்டிவிட்டு உள்ளே செல்ல ஸ்ருதி உறக்கத்தில் இருந்தாள்.
எல் வடிவ சோபாவில் ஒரு பக்கம் சுபஷ்வினி கால் நீட்டி அமர்ந்திருக்க அவளின் மடியில் தலைவைத்து சுபஷ்வினியின் கையை தன் கழுத்தோடு கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.
பார்த்திவ் உள்ளே வரவும் சுபஷ்வினி சங்கடமாக எழ முடியாமல் பார்த்து நிமிர்ந்தமர,
“நீங்க அப்படியே இருங்க. கூல் கூல்…” என்று சொல்லியவன் என்னவோ சொல்ல வர சுபஷ்வினி அவனின் முகத்தையே என்ன என்று பார்த்தாள்.
“ஸ்ருதி ஓகே தானே அஷ்வினி?…” என பார்த்திவ் கேட்கவும்,
“ஹாங், மேபி ஸார். ஆனா ஓகே ஆகிடுவா. தைரியமான பொண்ணு…” என சொல்லும் போதே,
“அஷ்…” என்ற ஸ்ருதி உறக்கத்திலேயே லேசாய் மூக்கை இழுத்து விசும்பினாள்.
“நான் இருக்கேன்டா ஸ்ருதி மோளே…” என தோளை தட்டிக்கொடுக்க ‘ம்ம்’ என முணங்கி உறங்கினாள் ஸ்ருதி.
அங்கிருந்த ஒற்றை குஷன் இருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்துவிட்டான் பார்த்திவ்.
கண்கள் எல்லாம் ஸ்ருதியையே வெறித்தது. இப்போது அவனுக்கே ஆறுதல் தேவைப்படும் போலிருந்தது.
கால் மணிநேரத்திற்கும் மேல் அவன் இருந்த அந்த தருணங்களில் நான்கைந்து முறை ஸ்ருதி உறக்கத்திலேயே உடல் அதிர அசையவும், ‘அஷ்’ என அழைக்கவும் பின் சுபஷ்வினியின் சமாதானத்தில் அமைதியாகவுமாக இருந்தாள்.
இந்த நினைவுகள் அவளை எந்தளவிற்கு பாதித்திருக்கிறது என கண்ணார கண்டான் பார்த்திவ்.
ஏற்கனவே அவளை தான் சந்தித்த அன்றும் இப்படியான ஒரு சூழ்நிலையில் தான்.
எத்தனை தைரியமாக அவ்விடத்தில் ஸ்ருதி அதனை எதிர்கொண்டாலும் மனதளவில் எவ்வளவு காயப்பட்டு போயிருக்கிறாள் என பார்த்தவனுக்கு மனதெல்லாம் மூங்கில் காடு பற்றி எரியும் வெம்மை.
‘ஏன்டா இந்த பொண்ணை இத்தனை படுத்தறீங்க? மனுஷ போர்வைல இன்னும் என்னவெல்லாம் செய்வீங்க?’ என மனதிற்குள்ளேயே அவர்களை அர்ச்சித்தான்.
பார்த்திவ் அறைக்கு வந்து அரைமணி நேரமாகியிருந்தது. ஒருக்களித்து திறந்திருந்த கதவை சுதந்திரம் லேசாய் தட்டிவிட்டு உள்ளே வந்தார்.
“ப்ரடியூசர் உடனே பேசனும்ன்னு சொல்றார் பார்த்திவ்…” என அழைத்தார்.
“வரேன்…” என சொல்லிவிட்டு எழுந்த பார்த்திவ் வந்த விஷயத்தை எப்படி சுபஷ்வினியிடம் சொல்ல என பார்க்க,
“பரவாயில்லை ஸார் சொல்லுங்க…” என்றாள் அவள்.
“அது அஷ்வினி…” என தொண்டையை செருமிக்கொண்டவன் இன்னொரு பெண்ணிடத்தில் இதை சொல்ல தயங்கி திரும்ப அங்கே ஸ்ருதியின் அனார்கலி மடித்து வைக்கப்பட்டிருந்தது.
அதனை பார்த்ததும் உடனே எடுத்த பார்த்திவ் விரிப்பதை கண்டு சுபஷ்வினி குழப்பமாக பார்க்க,
“இந்த ட்ரெஸ்ல…” என்றவன் அதை காண்பிக்கவும் அத்தனை சங்கடம்.
“இந்த இடம், இங்…க…,,,…” என தன்னுடலில் அப்பகுதியை காண்பித்து,
“இங்க ட்ரெஸ் கிழிஞ்ச இடத்துல ஸ்ருதிக்கு காயமிருக்கு போல. கொஞ்சம் பாருங்க. பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கு தானே?…” என்றதும் சுபஷ்வினி அதிர்ந்தாள்.
அதனை பற்றி ஸ்ருதி எதுவும் சொல்லவில்லை அவளிடம். உடை மாற்றவும் உடன் வரவேண்டாம் என அவளே சென்று மாற்றி வந்துவிட கையில் உள்ள காயத்திற்கு மட்டுமே மருந்திட்டாள் சுபஷ்வினி.
இப்போது பார்த்திவ் சொல்லி முடிக்கும் முன்பே அவன் கண்கள் கலங்கிவிட்டிருக்க உடையை அமர்ந்தவாக்கிலேயே கை நீட்டி வாங்கியவள் அவ்விடம் பார்த்ததும் சத்தமின்றி முகத்தில் அறைந்துகொண்டாள்.
அத்தனை கண்ணீர், அத்தனை அழுகை. எங்கே ஸ்ருதி எழுந்துவிடுவாளோ என தேம்பிக்கொண்டிருந்தவள் கண்ணீரை காண முடியவில்லை பார்த்திவ்வால்.
சுபஷ்வினி அவளின் தோளிலிருந்து தலைமுதல் வருடி கொடுதபடி இடையையும் சற்று மேலும் தொட்டதும்,
“அவனுங்களாம் என்ன பொறப்பு ஸார்?…” என்றவள் மொழிந்த வார்த்தையை கேட்டவனுக்கும் நரம்பெல்லாம் இறுகியது.
“பார்த்திவ்…” என்ற சுதந்திரத்தின் அழைப்பில் சுபஷ்வினியையும் ஸ்ருதியையும் பார்த்திவ் பார்க்க,
“நான் பார்த்துக்கறேன் ஸார். அந்த பாக்ஸ் மட்டும் எடுத்து குடுங்க. நான் போட்டுவிடறேன்…” என சொல்ல மருந்து அடங்கிய பெட்டியை அவளிடம் தந்துவிட்டு கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தான்.
“குடுங்க அங்கிள்…” என சுதந்திரத்திடம் போனை வாங்கி தயாரிப்பாளருக்கு அழைக்க,
“பார்த்திவ் விஷயம் ரொம்ப க்ரிட்டிக்கல்…” என்றார் அவர் பதட்டமாக.