நள்ளிரவில் சுதந்திரத்திற்கு அழைத்த மஞ்சுளாவின் மனதெல்லாம் என்னவோ சரியில்லை என்பது சுட்டிக்கொண்டே இருந்தது.
இளைய மகனிடமும் எதுவும் சொல்ல இயலாது. அறிவழகனிடம் சொன்னால் இப்போதே வா போகலாம் என்பார்.
முதலில் என்னவென தான் தெரிந்துகொண்ட பின் கூறிக்கொள்ளலாம் என்ற யோசனையுடனே படுத்திருந்தவரும் உறங்கவில்லை.
காலை எழுந்ததுமே அறிவழகன் வெளியே கிளம்பியிருக்க சின்ன மகனையும் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டார் ஸ்டுடியோவிற்கு.
அவர் வந்திறங்கவும் சாரங்கபாணியுடன் அந்த தயாரிப்பாளரும் சேர்ந்து கார்கள் நிறுத்துமிடம் வரவும் சரியாக இருந்தது.
“பார்த்திவ் அம்மா…” என சாரங்கபாணி தன்னை பார்த்ததுமே தயாரிப்பாளரிடம் சொன்னதோடு முகம் கொடுக்கவில்லை.
மஞ்சுளாவின் மனது இதையும் குறித்துக்கொள்ள தானாக எதையும் கேட்கவில்லை.
ஆனால் முகம் இறுக்கமாகியிருந்தது. இதே போல தானே திருமண முறிவு நேரமும் முகம் சிறுத்து காணப்பட்டார் சாரங்கபாணி.
இன்றும் அதே முகபாவம். மீண்டும் என்னவோ என மனது திடுக்கிட்டாலும் காட்டிக்கொள்ளாமல் முன்னே செல்ல,
“வணக்கம் ம்மா…” என்றார் தயாரிப்பாளர்.
“வணக்கம் ஸார்…” என மஞ்சுளா அவருக்கு சொன்ன போதும் தலையை கவிழ்த்தபடி சாரங்கபாணி நகர்ந்துவிட்டார் மஞ்சுளாவை காணாமல்.
அவர் செல்வதை திரும்பி பார்த்தவர் முகத்தின் யோசனை சுருக்கம் தயாரிப்பாளருக்கு வேறு விதமாக தோன்றியது.
தெரிந்து தான் மஞ்சுளா இங்கே வந்திருப்பதாக நினைத்துக்கொண்டு விஷயத்தை சொல்லிவிட அதன் அதிர்வை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நின்றார் மஞ்சுளா.
“சாரங்கபாணி பார்த்திவ்வை பார்த்து மன்னிப்பு கேட்கனும்னு சொன்னதால என் கூட கூட்டிட்டு வந்தேன். செஞ்ச தப்பை நினைச்சு வருந்தறார் ரொம்ப. பார்த்திவ் பார்க்க விரும்பலைன்னு சொல்லிட்டார்…” என தயாரிப்பாளர் சொல்ல,
“அவன் சரியா தான் சொல்லியிருக்கான். வேற என்ன சொல்லுவாங்க ஸார்?…” என்றவர் வேகமாக உள்ளே சென்றார் மஞ்சுளா.
அங்கிருந்த பணியாளர் அவரை உள்ளே அனுப்புவதா வேண்டாமா என யோசித்து அருகில் வரும் முன், ஒருவேளை பார்த்திவ் வர சொல்லியிருந்தால் என நினைத்து மேல் தளத்திற்கு அனுமதித்துவிட்டான்.
மஞ்சுளா உள்ளே வரும் நேரம் தான் தான்யா அழுதுகொண்டே அனைத்தையும் கூற ஆரம்பித்தாள் அனைவரிடமும்.
“வினோத் ஸார் கூட்டிட்டு வர சொல்லி சொன்னதால தான் நான் ஸ்ருதியை அங்க கூட்டிட்டு போனேன். சாரங்கபாணி ஸார் நானும் இருக்கேன்லன்னு சொல்லி அழைச்சிட்டு வர சொன்னார். அதான் ஸார் கூட்டிட்டு போனேன்…”
“வினோத் ஸார் ஏற்கனவே இங்க ரெண்டுதடவை ஸ்ருதியை பார்த்திருப்பாங்க போல. அவங்க மூவிலே ஹீரோயினா நடிக்க வைக்க அப்ரோச் பண்ணனும். அதுக்கு பேசனும்ன்னு சொல்லி தான் என்னை கூட்டிட்டு வர சொல்லி சொன்னாங்க. கூட சாரங்கபாணி ஸாரும் இருந்தார்…” என்று மேலோட்டமாக தான்யா சொல்ல,
“உனக்கும் வினோத்க்கும் எப்பிடி பழக்கம்மா? உன்னை எப்படி கூட்டிட்டு வர சொல்லி சொன்னாங்க? அதுவும் சாரங்கபாணி ஸாரும் சேர்ந்தும்ன்னா?…” என சுதந்திரம் கேட்க தான்யா தயங்கினாள்.
“அவரோட போன படத்தோட ப்ரிவ்யூ ஷோ பார்க்க எனக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்போ தான் மீட் பண்ணி என்னை வினோத்கிட்ட இன்ட்ரோ பண்ணிக்கிட்டேன்…” என்று சொல்லி தலையை குனியவுமே புரிந்து போனது அனைவருக்கும்.
“வினோத் ஸாரோட அடுத்த படத்துல எனக்கு நடிக்க வாய்ப்பு தரதா சொல்லியிருந்தாங்க ஸார். முக்கியமான கதாபாத்திரம். சப்போர்டிங் ரோல். அதுக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு சொல்லியிருந்தாங்க. அது மூலமா ஏற்பட்ட பழக்கம் தான்…” என்று தான்யா சொல்ல,
“அசிங்கம்மா இல்ல? வாய்ப்புக்காக…” என்ற பார்த்திவ்வின் கேள்வியில் நிமிரவே இல்லை தான்யா.
“ஓகே, அது என்னோட வேலை இல்லை. உங்க விருப்பத்தோட என்னவும் பண்ணுங்க. எதுக்கு ஸ்ருதியை கூட்டிட்டு போனீங்க?…”
“ஸார் அங்க போற வரைக்கும் இவ்வளோ பெருசாகும்ன்னு நான் நினைக்கலை. ஸ்ருதியை கூட்டிட்டு வர சொல்லி சாரங்கபாணி ஸார் தான் சொன்னார். என்னால மீற முடியலை. கூட வினோத்தும். நான் செய்யலைன்னா என்னோட வீடியோஸ் எல்லாத்தையும்….” என சொல்லி அழவும்,
“இது இவ்வளோ பெருசாகும்ன்னு நினைக்கலை ஸார். வினோத் பேச தான் போறாங்கன்னு நினைச்சேன். ஆனா என்னை ஸ்ருதியை விட்டு வெளில போக சொல்லி சாரங்கபாணி ஸார் சொல்லும் போது தான் பயந்துட்டேன். அவரும் ஒன்னும் பயப்படவேண்டாம். சும்மா கேட்டுட்டு அனுப்பிருவாங்க. நான் இருக்கேன்லன்னு சொன்னார்…”
“அதோட ஸ்ருதிக்கும் ஒரு வாய்ப்பா இருக்கும். குடும்பம், பெத்தவங்க, கூட பிறந்தவங்கன்னு இருக்கற நீயே வாய்ப்புக்காக ஓகே சொல்லிட்ட. ஸ்ருதிக்கு யாருமில்லை. அதெல்லாம் அவளுக்கு பெரிய விஷயமே இல்லை. கேட்க யாருமில்லை. ஸ்ருதியோட முடிவு தான் எல்லாம். அதனால கில்ட்டா பீல் பண்ண வேண்டாம்ன்னு சொன்னார்….”
“வினோத் ஸார் அங்கவே அப்படி அத்தனைபேர் முன்னாடி ஸ்ருதிக்கிட்ட நடந்துப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. முதல்ல பேசத்தான் ஆரம்பிச்சாங்க. அது இவ்வளோ தூரம் ஆகிடுச்சு….” என தான்யா.
சுபஷ்வினிக்கு கன்னம் கன்னமாய் அவளை அறைந்து தள்ள வேண்டும் என்றளவு ஆத்திரம்.
ஸ்ருதி வேகமாய் சென்று தான்யாவை அறைந்ததில் கைகள் லேசாய் வலி எடுத்திருக்க நிற்க முடியாமல் கால்களும் இதனை கேட்டு வலுவிழந்தது.
அவளை பிடித்தபடி நின்றிருந்த சுபஷ்வினிக்கு இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்று ஆத்திரமாய் வந்தது.
“நீயெல்லாம் பொண்ணாம்மா? ஆளில்லாம வளர்ந்தா ஒன்னளவுக்கு தரமிறங்கும்ன்னு நினைப்பியா நீ? அந்த கெழவன் சொன்னானாம். இவ கேட்டாளாம். ஒங்க வீட்டுல எத்தன பேரு? அம்புட்டுபேருக்கு மத்தில வளந்த நீ மட்டும் இங்க என்ன வாழுதியாம்? ஒன்ன பெத்தவங்களுக்கு தெரியுமின்ன நாண்டுக்க….” என்று சுபாஷ் கொந்தளித்துவிட்டான்.
முகத்தை மூடிக்கொண்டு தான்யா அத்தனை முறை மன்னிப்பு கேட்டுக்கொண்டே சொல்லி அழுதாள்.
“தப்பு பண்ணிட்டேன் ஸார். இப்ப என் வாழ்க்கையும் போச்சு. மன்னிச்சிடுங்க ஸார். ப்ளீஸ். நான் வேணும்ன்னு பண்ணலை. வந்ததும் அவளுக்கு நீங்க குடுத்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு இங்க இருக்கற முக்கியத்துவம் இதெல்லாம் என்னை பொறாமை பிடிக்க வச்சிருச்சு….” என தேம்பிக்கொண்டே சொல்லியவள்,
“சாரங்கபாணி ஸார் தான் சொன்னார். ஸ்ருதி ஹீரோயினாகிட்டாலும், இல்லை வினோத்க்கு பயந்து இந்த இண்டஸ்ட்ரி பிடிக்காம போய்ட்டாலும் எனக்கு நல்லது தானேன்னு சொன்னார். ஸ்ருதி வந்ததால தான உன்னோட வாய்ப்பு அவளுக்கு போச்சு. அவ இல்லைன்னா நீ தான்னு சொன்னதும் புத்திகெட்டு நடந்துக்கிட்டேன்…” என்று அழுதாள்.
“நீயெல்லாம் ஒரு மனுஷ ஜென்மமா?…” என்ற மஞ்சுளாவின் சத்தத்தில் அனைவரும் அதிர்ந்து பார்க்க தான்யா சுருண்டு விழுந்திருந்தாள் மஞ்சுளாவின் அடியில்.
“ம்மா…” என்ற பார்த்திவ்வின் அதிர்வை எல்லாம் பொருட்படுத்தாமல் தான்யாவை வெளியேற்றும்படி சொல்லியவர் அவள் கிளம்பும் முன்,
“இப்ப நீ சொன்னதை எல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி சைன் போட்டு குடுத்துட்டு போ. நீ சொன்னது வீடியோவாவும் வேணும்…” என்றவர் சுதந்திரத்தை பார்க்க,
“மேம் ப்ளீஸ் மேம். இனிமே இந்த தப்பு பண்ணமாட்டேன். விட்டுடுங்க மேம்…” என மஞ்சுளாவின் காலில் தான்யா,
“தொடாதம்மா. பின்னாடி போ. நீ விழுந்த புதைகுழில தெரிஞ்சே இன்னொரு பொண்ணையும் இழுத்துவிட பார்த்த பாரு. அதுவும் பொறாமையில. உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது…” என்றவர் சுதந்திரத்தை பார்க்க,
“ம்மா, குடுக்காம நகண்டுருவாளா? கால ஒடிச்சிட மாட்டேன்….” என அவளை இன்று துவம்சம் செய்துவிடுவதென இருந்தான் சுபாஷ்.
“இரு சுபாஷ்…” என்ற மஞ்சுளா சுபஷ்வினி, ஸ்ருதி இருவரையும் பார்த்து,
“ஸ்ருதி…” என்றார்.
அவருக்கு அவளை யார் என்று இன்னும் தெரியவில்லை. முதல்முதலில் அவளை காண போகிறார்.
மஞ்சுளா அழைத்ததுமே ஸ்ருதி லேசாய் தலையசைக்கவும் அவரருகில் அழைத்தார்.
“இங்க வாம்மா…” என கூப்பிட அவள் வந்ததுமே,
“உன்னோட முடிவு தான். என்ன செய்யலாம் இந்த பொண்ணை…” என கேட்க தான்யாவின் முகத்தில் அச்ச ரேகைகள்.
“ப்ளீஸ் ஸ்ருதி. வேண்டாம். தெரியாம பண்ணிட்டேன். தப்பு தான். அந்த நிமிஷம் உன்னை அங்க கூட்டிட்டு போய் விடலைன்னா எனக்கு என்ன நடந்திருக்கும்னு ஒரு பயம். அதைவிட அதைவிட…” என்றவளுக்கு அடுத்ததை சொல்லும் தைரியமில்லை.
உண்மைக்குமே ஒரு குரூர ஆசை தான். இப்படி தான் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவதை போல அவளும் படட்டும் என்னும் எண்ணம் லேசாய் இருந்தது உண்மை தான்.
ஆனால் வினோத்தின் நடத்தையும் ஸ்ருதி மேல் அவன் காட்டிய மூர்க்கத்தையும் கண்டு பயந்து போனாள்.
அதையும்விட ஸ்ருதி எதையும் யோசிக்காமல் அவனை தாக்கிவிட்டு கண்ணாடி பாட்டிலால் அவன் உயிரை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்பதை போல நிற்பதும், பார்த்திவ் வந்ததும் கண்டு பயந்து வெளியேறினாள்.
அதற்கு மேல் தான் அங்கிருப்பது நல்லதில்லை என உடனடியாக கிளம்பியிருந்தாள் தான்யா.
இப்போது ஸ்ருதியை பார்க்க முடியாமல் தலை குனிந்து குறுகி போய் நிற்க ஸ்ருதி எதுவும் பேசவில்லை.