“என்னோட குடும்பம் அவங்க எல்லாருக்கும் தெரிஞ்சா ரொம்ப அவமானமா போயிரும். அண்ணன் பசங்க சின்ன குழந்தைகள் எல்லாம் இருக்காங்க. என்னோட அக்காவுக்கு இப்பதான் டெலிவரின்னு கூட்டிட்டு வந்திருக்கோம். ப்ளீஸ் ஸ்ருதி…” என்று கெஞ்ச,
“என்னை பலவீனப்படுத்த பார்க்கறியா தான்யா? இந்த எமோஷன்ஸ் எல்லாம் உங்களுக்கு மட்டும் தானா? உன்னை மாதிரி தான் நானும் ஒரு கருவறைக்குள்ள பத்து மாசம் இருந்தேன். எல்லா குழந்தை போல அழுதுட்டே தான் வெளில இந்த உலகத்தை பார்க்க வந்தேன். வளரும் போது தனியா ஹாஸ்டல்ல வளர்ந்தேன்…” என்றவள்,
“ஆனா எனக்கும் பெயருக்காவது அம்மா, அப்பான்னு உறவு இருக்கத்தான் செய்யறாங்க. நானும் ஒரு குடும்ப அமைப்போட தான் பிறந்தேன். தனியா இருந்தா எதுவுமே தப்பில்லைன்னு எந்த விதத்துல நினைச்சீங்க எல்லாரும்?…” என்ற ஸ்ருதியின் கேள்வியில் தான்யா வாயடைத்து பார்த்தாள்.
“செருப்பால அடிச்ச மாதிரி எங்கையோ பளார்ன்னு கேட்டுச்சுல…” என்றான் சுபாஷ் சுதந்திரத்திடம்.
“ஸாரி ஸ்ருதி…” என மிகவும் குன்றி போய் தான்யா கேட்க,
“இதை தவிர அவக்கிட்ட கேட்க எதுவுமில்லை ஸ்ருதி. விட்டுத்தள்ளு. இந்த மன்னிப்புமே எங்க அவ விஷயம் வெளில வந்துருமோன்ற பயத்தால கேட்கறது. உணர்ந்து இல்லை….” என்று சுபஷ்வினி சொல்ல,
“இல்லைங்க, நிஜமாவே தான் மன்னிப்பு கேட்கறேன்…” என்றாள் தான்யா.
“அப்படி உனக்கு செஞ்சது தப்புன்னு தெரிஞ்சிருந்தா இப்ப உணர்ந்திருக்க மாட்ட. ஸ்ருதியை வினோத் தப்பா தொடவுமே வந்து கூட்டிட்டு போயிருப்ப. அட்லீஸ்ட் பார்த்திவ் ஸார்கிட்டையாச்சும் உண்மையை சொல்லி அவரை வரவழைச்சிருப்ப…” என்ற சுபஷ்வினியின் பேச்சில் தான்யா திகைக்க,
“அவ்வளோ நேரம் இருந்து என்ன நடக்குதுன்னு பார்த்து ரசிச்சு பார்த்திவ் ஸார் வரவும் விஷயம் விபரீதமாகவும் தான் கிளம்பியிருக்கன்னா உன் மன்னிப்பு உன் செயலைவிட கேவலமா இருக்கும் தானே?…” என்ற சுபஷ்வினி,
“மேம், தப்பா நினைக்காதீங்க. இந்த கேஸ் வேண்டாம். இதனால ஸ்ருதி மட்டுமில்லை, பார்த்திவ் ஸாருக்கும் பிரச்சனை தான். அதோட கேஸ் குடுத்தா மட்டும் என்னவாகிடும்?…” என மஞ்சுளாவிடம் கேட்டாள் சுபஷ்வினி.
“ஏன்ம்மா அப்படி சொல்ற? நாங்க இருக்கோமே?…” என மஞ்சுளா கேட்க,
“உண்மை தான். நீங்க இருப்பீங்க. அதே மாதிரி தப்பிக்க நினைக்கறவங்களுக்கும் நிறையப்பேர் இருப்பாங்க தானே? கேஸானாலும் எவ்வளோ நாள் உள்ள இருப்பான் அவன்? அதிகபட்சம் ஒரு மாசம். திரும்பவும் வெளில வந்து இதை தான் பண்ணுவான்…” என்றவள்,
“அவனுங்க தப்பிச்சிருவாங்க. இந்த பொண்ணு தான் மாட்டிக்கும். இப்பவும் இவளுக்காக இல்லை. எங்க நிம்மதிக்காக தான். திரும்ப அந்த வினோத் பிரச்சனை பண்ணினா டீல் பண்ணிக்கலாம்…” என தைரியமாக சொல்லிய சுபஷ்வினி,
“அடிபொலி…” என ஸ்ருதியும் ஹைபை அடித்துக்கொள்ள மஞ்சுளாவிற்கு இரு அந்த இரு பெண்களின் மேல் அத்தனை மரியாதை பெருகியது.
பார்த்திவ்வின் மூலம் ஸ்ருதியை கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர பெயரும், அங்கே புதிதாய் பாட வந்திருப்பவள் என்பதையும் தவிர்த்து வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
இப்போது நேரில் பார்க்க அவளை, அவள் தோழியை அவர்களின் நட்பை, நம்பிக்கையை, தைரியத்தை எல்லாவற்றையும் பிடித்தது.
“குட். இப்படித்தான் இருக்கனும்…” என சொல்லிவிட்டு சுபாஷிடம் தான்யாவின் வீடியோவையும், அவள் கைப்படவே ஒரு கடிதத்தையும் எழுதிவாங்கிக்கொண்டார் மஞ்சுளா.
“ஒரு சேஃப்ட்டிக்கு நமக்கு வேணும். இந்த பொண்ணை நம்ப கூடாது…” என மஞ்சுளா சொல்ல தான்யா அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
உடனடியாக மருத்துவமனைக்கு ஸ்ருதியை அழைத்து செல்ல அங்கே அவளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இருநாட்கள் கடந்திருந்த நிலையில்,
“நீ ஓகே தானே ஸ்ருதி? ஏதாவது கவுன்ஸ்லிங் பார்ப்போமா?…” என பார்த்திவ் கேட்டான்.
வெளிப்படையாக ஸ்ருதி புன்னகையும், தைரியமுமாக தான் இருந்தாள். ஆனால் கண்களில் அந்த துள்ளல் இல்லை.
துடுக்குத்தனம் நிறைந்த அந்த விழிகளில் எப்போதும் ஒரு மிடுக்கு தென்படும். குறும்பு கூத்தாடும்.
இந்த இரு நாட்களில் அவளிடம் அந்த குறை நிவர்த்தியாகவே இல்லை. பார்த்திவ் யோசித்து தான் இதை கேட்டான்.
“எதுக்கு கவுன்ஸிலிங்?…” என ஸ்ருதியும் வினவ,
“உனக்கு அடுத்து எப்போ கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமேன்னு கேட்க தான்….” என்றான் அவனும் சற்றே கடுப்பான பதிலுடன்.
“இப்ப மட்டும் என்ன ஸார் ரெஸ்ட்லையா இருக்கேன்? ரெண்டுநாள் நல்லா தூங்கி எழுந்து வரேன்னா விடமாட்டேன்றீங்க? இங்க வான்னு சொல்லி எவ்வளவு வேலை வாங்கறீங்க? உங்க ஆர்மோனியப்பெட்டி எல்லாம் நான் தூசி தட்டனுமா?…” என கிண்டலாய் கேட்க பார்த்திவ் முறைத்தான்.
“சுதந்திரம் அங்கிள் உன்னை வாலுன்னு சொல்றது தப்பே இல்லை…” என்று பேனாவின் முனையால் அவள் தலையில் லேசாய் அடித்தான்.
“வளர்ற பிள்ளையை இப்படித்தான் அடிப்பாங்களா? இருங்க மேம்கிட்ட சொல்லி தரேன்…”
“யார் மேம்?…”
“உங்க அம்மா தான். பெரிய பாஸ். எ பிக் பாஸ்…” என்று கண் சிமிட்டியதும் ஒரு நொடி இமைக்க மறந்து அவளை பார்த்தவன் பின் சுதாரித்து,
“எங்கம்மாவுக்கே பாஸ் நான். உன்னோட சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு பழையமாதிரி இருக்க பாரு…” என்று அதட்டினான்.
“ப்ச்…” என்றவள் மௌனமாகிவிட,
“உன்னோ எல்லாருமே ஷேப் பன்றாங்க ஸ்ருதி. அழகான சிற்பமா நீ மாறவேண்டிய நேரம். அதுக்காக செதுக்கிட்டு இருக்காங்க. நிமிர்ந்தே நில்லு. இன்னும் நீ கடக்கவேண்டிய பாதை நிறைய இருக்கு…” என்றவன்,
“என் கனவுக்கப்பறமா நான் இப்ப வச்சிருக்கற பெரிய கனவு உன்னோட எதிர்காலம். நீ பெருசா அச்சீவ் பண்ணனும் ஸ்ருதி. இனி வர எந்த ஒரு படத்துலயும் பாடகி ஸ்ருதகீர்த்தி பேர் இல்லாத இசை வெளியீடு இருக்கவே கூடாது. புரியுதா?…” என்றவனின் கனவை தனக்குள் வாங்கிகொண்டாள் ஸ்ருதி.
அவனின் பேச்சில் லயித்து, ஸ்தம்பித்து. மகிழ்ந்து அமர்ந்திருந்தவள் தலையில் மீண்டும் இப்போது பேனாவால் சற்றே உரைக்கும் படி அடித்தவன்,
“நீ வளர்ந்தவரை போதும். உன்னோட ஹைட்டை சொன்னேன். இப்ப கிளாஸ் ஆரம்பிக்கலாமா? அடுத்த வாரம் ஆடியோ லான்ச் அன்னைக்கு ஊருக்கு வேற கிளம்பற. திரும்ப வர ஒருவாரமாகும். கிளாஸ் மறந்திடும்…” என்று அவளை திசை திருப்பினான் இசைக்கு.
ஒருவாரமும் தூசாய் பறந்திருந்தது. அன்று ஸ்ருதியின் முதல் படத்தின் இசை வெளியீட்டுவிழா மட்டுமல்ல, சுபஷ்வினியின் அக்காவின் திருமணத்திற்கு கிளம்பவேண்டிய நாளும் கூட.
சுபஷ்வினியுடன் ஒருவாரம் முன்பே ஸ்ருதியும் காரைக்கால் செல்லவேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் கிளம்பவேண்டும்.
அங்கிருந்து கிளம்பியே அந்த ஆடிட்டோரியத்திற்கு வந்து சேர்ந்தனர் சுபஷ்வினியும், ஸ்ருதகீர்த்தியும்.
பார்த்திவ்வின் குடும்பம் மட்டுமல்ல, சாரங்கபாணியும் குடும்பத்துடன் வருகை தந்திருந்தார்.
சுதந்திரமும், சுபாஷும் வெளியே நின்றிருந்தனர் ஸ்ருதி, அஷ் வரவும் அவர்களை அழைத்து செல்வதற்கு.
மக்கள் திரள் வேறு ஏகபோகமாய் இருந்தது இசை நிகழ்ச்சிக்கே. அத்தனை பிரமாண்டம்.
சுபாஷ் தான் தன் நண்பனிடம் சொல்லி காருக்கு ஏற்பாடு செய்திருந்தான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்வதற்கு.
அதனால் அங்கிருந்து திருமணத்திற்கு கொண்டுசெல்ல தேவையான எல்லாவற்றையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பி வந்துவிட்டனர்.
“சுபாஷ் ஸ்ருதி…” என்று காண்பிக்கவும்,
“தங்கச்சி பொண்ணா இது?…” என சொல்லி கண்களை விரித்தவன் வாயை சட்டென மூடிவிட்டார் சுதந்திரம்.
“ஆமாமா, இந்த காலடி மண்ணை கொண்டு போயி என் வீட்டுக்காரிட்ட குடுக்கனும்….” என்றான் சுபாஷும்.
“குடுத்தா?…” சுதந்திரம் கேட்க,
“என் கண்ணுமுழிய நோண்டி, வாயில கத்திய விட்டு சுத்திருவா. கண்ணு இருக்க போயி தான பாக்குது. வாய் இருக்க போய் தானே பேசுதுன்னு. அன்னைக்கே நான் புலம்பினதுல எகிறிட்டு நாலு மிதி மிதிச்சா பார்க்கனும். அம்புட்டு வலிலையும் கத்தலையே நான். கெத்து கெத்து…” என அவன் சொல்ல சுதந்திரம் தான் சிரித்தார்.
“பை அங்கிள்…” என சுபஷ்வினி சுதந்திரத்திடம் வேண்டுமென்றே சொல்லி அவரை தாண்டி செல்ல,
“பார்த்தியா சேட்டைய….” என சிரித்தபடி அவர்களுடன் உள்ளே சென்றார்.
“எங்க ஸார் காணும்?…” ஸ்ருதி கேட்க,
“அவர் முன்னாடி இருப்பார்ம்மா ஸ்ருதி. முதல்ல நீங்க உங்க சீட்ல உட்காருங்க…” என்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காண்பித்தார்.
பார்த்திவ் முன்வரிசையில் அமர்ந்திருந்தான். வந்ததில் இருந்து சாரங்கபாணியிடம் திரும்பவே இல்லை. ஒரு புன்னகையும் இல்லை.
ஆனால் மற்றவர்களிடம் எப்போதும் போல அவன் சகஜமாக பேசத்தான் செய்தான்.
விஷயம் தெரியாதவர்கள் என்னவோ என்று யோசித்து பார்த்தனரே தவிர கேட்டுக்கொள்ளவில்லை.
இன்னும் ஸ்ருதியும், சுபஷ்வினியும் அங்கே வந்துவிட்டதை அவன் பார்க்கவே இல்லை.
“அங்கிள் இன்னுமா வரலை?…” என சுதந்திரத்திற்கு அழைத்து கேட்க,