“ஓஹ்…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு அவன் விரல்கள் அந்த கைபேசியை சுழற்றியது.
சட்டென ஒரு யோசனையில் பார்த்திவ் தன் மொபைலில் இருக்கும் ஸ்ருதியின் வாட்ஸ்ஆப் ப்ரபைலை பார்த்தான்.
பழையது தான் இருந்தது. மீண்டும் ஸ்டேட்டஸ் சென்று பார்க்க பார்த்தவன் முகவாயை லேசாய் தடவியபடி விழிகளை திருப்பி பின்னால் பார்க்க கண்களில் ரசனை கொஞ்சியது.
மஞ்சுளாவின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி. அடர்ந்த நீலவர்ண காப்பர் சில்க் பட்டு புடவையில் அவளின் நீண்ட கூந்தலை விரித்துவிட்டு முல்லை பூவை கூந்தலுக்கடியில் இருந்து காதோரம் சேர்த்திருந்தாள்.
முதன்முதலில் அவளை புடவையில் காண்கிறான். பார்த்ததும் ‘யட்சினி’ என்றது அவன் மனது.
இரு நொடிகளுக்கு மேல் அவளை பாராமல் விழிகளை திருப்பிக்கொண்டான் பார்த்திவ்.
“ஹலோ ஸார். நாங்க வந்துட்டோம்…” என ஸ்ருதி குறுஞ்செய்தி அனுப்ப,
“ப்ராக்ட்டிஸ் பண்ணிட்ட தானே? ஸ்டேஜ்ல உன் ஸாங் நீ தான் பாடனும்…” என அனுப்பினான் அவளிடம்.
“மறந்துட்டேன்…” என வேண்டுமென்றே சொல்லி நாக்கை துறுத்தும் பொம்மை ஒன்றை அனுப்பிவைக்க பார்த்திவ்வின் முகத்தில் இதழ்விரியா புன்னகை.
அடிப்பதை போன்ற ஒரு பொம்மையை அவன் அனுப்ப, அவள் பதிலுக்கு அனுப்ப என சில நேர விளையாட்டுக்கள் தொடர மேடைக்கு அழைக்கப்பட்டனர் அனைவரும்.
தயாரிப்பாளர் சாரங்கபாணிக்கும் பார்த்திவ்க்கும் இடையில் நின்றுகொண்டார் அங்கே.
இல்லை என்றால் பார்த்திவ்வை பிடிக்க முடியாது. கிளம்பினாலும் கிளம்பிவிடுவான் என்று அவர் இதில் வேறு கவனம் செலுத்த வேண்டும்.
மேடையில் பார்த்திவ்வை பேச அழைக்க பாடல் சம்பந்தமாக மட்டும் பேசியவன் பொதுவாக படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டான்.
ஏற்கனவே அரசல்புரசலாக இதனை பேசியவர்களுக்கு அல்வா கிடைத்ததை போலானது.
அதை பற்றிய கவலை எல்லாம் பார்த்திவ்விற்கு இல்லை. மேடையில் ஸ்ருதி பாடுவதற்கு காத்திருந்து அவள் மேடையேறவும் கண்களில் ஒளியுடன் பார்த்தான்.
மைக்கை பிடித்து நின்றவளுக்கு அந்த கூட்டத்தில் மெல்லிய நடுக்கமும், ஒரு பரபரப்பும் தான்.
அதே நேரம் பார்த்திவ்வின் கைதட்டலும் மஞ்சுளாவின் கையசைப்பும் அவளை இன்னும் உற்சாகப்படுத்தியது.
“மோளே ஸ்ருதி…” என சுபஷ்வினி எழுந்து நின்று விசிலடிக்க எங்கோ நின்ற சுபாஷும் கைதட்டி ஆர்ப்பரிக்க, மனதார வாழ்த்தியபடி பார்த்தார் சுதந்திரம்.
“யார் மம்மி இந்த பொண்ணு. கார்ஜியஸ். புது சிங்கரா?…” என்றாள் ஆராதனா சிவசங்கரியிடம்.
“ஷட்அப்…” என்ற சிவசங்கரி அங்கே வைத்து மகளை எதுவும் சொல்லமுடியாமல் ஸ்ருதியை பார்த்தார்.
கணவர் மீது அத்தனை கோபம். தானே மகள் வாழ்க்கையை சரி செய்ய என்னவெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க இவர் என்னவென்றால் மேலும் சிக்கலாகி எங்கும் வெளியே தலைகாட்டமுடியாதபடி செய்துவிடுவார் போல் என வீட்டில் அத்தனை சண்டை.
“எப்பருந்து உங்க புத்தி இப்படி போச்சு? இங்க ஏற்கனவே ஒருத்தி தெரிஞ்சே சீரழியறா. இதையே எப்படி சரி செய்யன்னு தெரியலை. எங்களுக்கு புத்தி சொல்ற நீங்களே இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்க? யார் எப்படி போனா உங்களுக்கு என்ன?…” என பேசியிருந்தார் சிவசங்கரி.
இப்போது ஸ்ருதியை பார்க்கவும் அவரின் கோபம் எல்லாம் மீண்டும் கணவர் மீது தான்.
அவரே பார்த்திவ்வின் மனதில் இப்படி தங்களின் தரத்தை இறக்கிவிட்டாரே என்று.
தான் தன் பெண்ணிற்காக இறங்கி செல்வது வேறு. ஆனால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து தன்னுடைய வெறுப்பை தணித்துக்கொள்வதை ஏற்க முடியவில்லை.
“உங்க மகளுக்காக அவனை மிரட்டுங்க, கெஞ்சுங்க. போராடுங்க. கால்ல கூட விழுங்க. அது நம்மோட. ஆனா நீங்க செஞ்சதால இப்ப என்னாச்சு…” என வாட்டி எடுத்துவிட்டார் சிவசங்கரி.
“மம்மி அழகா இருந்தா அப்ரிஷேட் பண்ணனும்…” என ஆராதனா ஸ்ருதியை பார்த்துக்கொண்டே சொல்ல,
“அந்த அழகு தான் இங்க பிரச்சனையே…” என்ற முணுமுணுப்புடன் பாடலை கேட்க ஆரம்பித்தார் சிவசங்கரி.
ஸ்ருதி சுருதி சுத்தமாக பாடி முடித்ததும் அத்தனை கரகோஷம். ஸ்ருதியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
பார்த்திவ்வை அவள் பார்க்க கைதட்டலுடன் கூடிய மெல்லிய புன்னகை மட்டுமே அவனிடம்.
‘நீ என்னோட கனவு’ என அவன் சொல்லியதை இப்போதும் நினைத்து பார்த்தவள் அதனை காப்பாற்றிவிட்ட நம்பிக்கையுடன் கீழே இறங்கிவிட்டாள்.
அடுத்தடுத்து பாடல்கள் அரங்கேற கொண்டாட்டம் நிறைவுறும் நேரம் நெருங்கிவிட்டது.
மஞ்சுளா, அறிவழகனுடன் வந்து ஸ்ருதிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு சென்றார்.
“நான் வரலைன்னு நினைக்க வேண்டாம். என் சார்பா தான் அந்த பெரியமனுஷி வராங்களே?…” என ஸ்ருதியை காண்பிக்க சுபஷ்வினி சிரித்துவிட்டாள்.
“எனக்கு பின்னாடி இந்த இசை உலகத்துல ஸ்ருதி தான் என் இடத்துல இருப்பாங்களாம். மேடம் சவால் விட்டிருக்காங்க…” என புன்முறுவலுடன் அவன் கூற,
“மோளே சொன்னா கரெக்ட்டா இருக்கும். உங்களுக்கு போட்டியா கூட வருவா. பார்த்துக்கோங்க ஸார்…” என்று சுபஷ்வினி சொல்லவும்,
“ஓகே இதே சந்தோஷத்தோட கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க. ஏற்கனவே ஒருதடவை தள்ளி போயிருச்சு இல்லையா?…” என கேட்டான் பார்த்திவ்.
“ஆமா மாப்பிள்ளையோட பாட்டி தவறிட்டாங்கன்னு தள்ளி வச்சிருந்தாங்க…” என சுபஷ்வினி சொல்ல,
“அஷ் இங்க பார்த்தியா, ப்ரீடம் ஸார் வீட்டுல அவங்க வொய்ப் தான் வருவாங்களாம்…” என சுதந்திரத்தை மாட்டிவிட,
“என் சூழ்நிலை அப்படிம்மா…” என்றார் சுதந்திரம் சுபஷ்வினியிடம்.
“நான் முன்னாடியே சொல்லிட்டேன். பார்த்திவ் ண்ணா வந்தா கூடவே காரை ஓட்டிட்டு நான் வந்திருவேன்னு. அவங்க வரலை. அதனால நானும் என் பொண்டாட்டி புள்ளைங்களை அனுப்பி வைக்கறேன். அவ்வளோ தான்?…” என முன்வந்தான் சுபாஷ்.
“ஓகே ண்ணா. இப்ப என்ன? இன்னொருதடவை எல்லாரும் வாங்க…” என சுபஷ்வினி சொல்ல,
“இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு கேளேன் அஷ்…” என்றாள் ஸ்ருதி பார்த்திவ்வை அடிக்கண்ணால் பார்த்துக்கொண்டு.
“இன்னும் அஞ்சு நிமிஷத்துல கார் காரைக்கால் பக்கம் போகலைன்னா என்னோட அசிஸ்டன்ட் அடுத்த ஒருமணி நேரத்துல என் கிளாஸ்ல இருக்கனும்…” என்றான் பார்த்திவ் ஸ்ருதியின் சேட்டைகளை ரசித்தபடி.
“கல்நெஞ்சக்காரய்ங்க. நாம அஷ் கிளம்புவோம்…” என்ற சொல்லியவள்,
“உங்களுக்கு இருக்குது…” என சுதந்திரத்தையும், சுபாஷையும் மிரட்டிவிட்டு காரில் அமர்ந்து வெளியே எட்டி பார்க்க பார்த்திவ் என்ன என்று தலையசைத்தான்.
“ப்ச், நத்திங். நீங்க கிளம்பலையா?…” என ஸ்ருதி கேட்க தோளை குலுக்கினான் பார்த்திவ்.
“இறங்கி வேணா போய் பேசிட்டு வரியா? நம்ம ட்ரைவர் சுபாஷ் அண்ணாவோட பேசிட்டிருக்கார்…” என சுபஷ்வினி கிண்டலுடன் சொல்ல,
“எதுக்கு, லீவ் கேன்சல் சொல்லி உன் க்ரஷ் என்னை ஸ்டூடியோவுக்கு பேக்கப் பண்ணவா?…” என்றதும்,
“சத்தமா சொல்லாத ஸ்ருதி…” என்று சுபஷ்வினி அதட்டினாள்.
“அப்படித்தான் சொல்லுவேன் பாரு…” என்ற ஸ்ருதி ஜன்னலில் எட்டி பார்த்து,
“க்ரஷ்…” என சத்தமாய் பார்த்திவ்வை அழைக்க அதுவரை காரில் சாய்ந்து நின்றிருந்தவன் கைகளை கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றான்.
பார்த்தவன் விழிகளை அகற்றாமல் புன்சிரிப்புடன் இருக்க ஸ்ருதியை உள்ளே இழுத்து போட்டாள் சுபஷ்வினி.
“உன்னை வச்சிக்கிட்டு….” என்று சொல்லும் பொழுதே ட்ரைவர் வந்துவிட்டார்.
“பத்திரமா போய்ட்டு வாங்க. ஊருக்கு போகவும் கால் பண்ணுங்க. தூக்கம் வந்தா தூங்குங்க. நம்ம பைய தான். பயமில்லாம போகலாம்…” என சுபாஷ் சொல்லிவிட்டு விலக அவனிடம் விடைபெற்று மீண்டும் ஸ்ருதி பார்த்திவ்வை திரும்பி பார்த்தாள்.
தலையசைக்க கூட இல்லை. பார்த்தவள் புன்னகைக்கவுமே பார்த்திவ் செல்லுமாறு கை காண்பிக்க அவ்வுருவத்தை கண்களில், மனதில் நிறைத்தபடி மீண்டும் திரும்பி இருக்கையில் சாய்ந்துகொண்டாள் ஸ்ருதி.
அந்த உணர்வை முழுதாய் அனுபவிக்கவேண்டி ஸ்ருதி மயங்க நெஞ்சமெல்லாம் மாய ஊஞ்சல்.