“இது அப்படி இல்லைங்கண்ணா, ட்ரைவிங்ல நாங்க ரெண்டுபேருமே தூங்கிட்டா ஒருகட்டத்துல உங்களை அறியாம ஒரு செகெண்ட் லேசா கண்ணசந்துருவீங்க. நீங்க எக்ஸ்பீரியன்ஸ் ட்ரைவரா இருந்தாலும் நாம சொல்ல முடியாது இல்லையா?…” என்ற ஸ்ருதி,
“இப்போ நாங்க யாராச்சும் ஒருத்தர் முழிச்சிருந்து உங்ககிட்ட பேசிட்டே வந்தோம்ன்னா இல்லை நாங்க முழிச்சிருக்கோம்ன்னு உங்களுக்கு தெரிஞ்சதுன்னா நீங்க இன்னும் கொஞ்சம் கவனமாவே இருப்பீங்க. இது நம்ம மூணுபேருக்குமே ஒரு பாதுகாப்புக்கு தான்…” என்றாள்.
“அதுவும் சரிதான் ம்மா. தூக்கம் வர மாதிரி இருந்தா எங்கயாச்சும் இறங்கி ஒரு டீயை போட்டுட்டு போய்டுவேன்…” என்றவனிடம்,
“வாவ், நானும் அதான் நினைச்சேன்…” என்ற ஸ்ருதி,
“அஷ் உனக்கு சாய்?…” என கேட்டதும்,
“வேண்டாம்ன்னா விடவா போற?…” என சொல்ல மெயின் ரோட்டில் ஆட்கள் இருக்கும் பகுதியில் நிறுத்தினார்கள்.
டீயை குடித்துவிட்டு மீண்டும் பயணம் துவங்க அதிகாலையில் ஊர் சென்று சேர்ந்துவிட்டனர்.
ஸ்ருதியை அத்தனைபேரும் அவர்களில் ஒருத்தியாய் அந்த குடும்பமே கொண்டாட வேறு எந்த சிந்தனையும் ஸ்ருதிக்கு இல்லை.
அத்தனை உறவுகளுக்கு மத்தியில் தன்னை குழந்தையாய் உணர்ந்தாள் ஸ்ருதி. அவளுக்கு அவ்வளவு கவனிப்பு.
எப்போதும் சுபஷ்வினியுடன் வருகையில் அவர்களின் வீட்டில் மட்டும் தான் இருந்திருப்பாள்.
இப்போதோ திருமண வீடு. அத்தனை சொந்தங்களும் நிறைந்திருக்க நேரம் போனதே தெரியவில்லை.
சென்ற அன்று பார்த்திவ்விடம் அவள் பேசியது. அதன்பின் இன்னும் பேசவில்லை.
இடையில் ஒருமுறை மஞ்சுளா அழைத்து ஸ்ருதியிடம் பேசிவிட்டு சுபஷ்வினியின் அக்காவிற்கும் வாழ்த்தை கூறினார்.
இப்படியாக அந்த வார இறுதியில் சுபஷ்வினியின் சகோதரி திருமணம். அதற்கு முதல்நாள் இரவில் சுதந்திரத்தின் மனைவியும், சுபாஷின், மனைவி குழந்தைகளும் வந்துவிட்டனர்.
அன்று திருமணம். சுபஷ்வினிக்கு எடுத்திருந்ததை போல அதே பட்டுப்புடவை. நீண்ட கூந்தலை பின்னலிட்டு தலைநிறைய அவ்வளவு முல்லை பூவை சூடியிருந்தாள் ஸ்ருதி.
“இவ்வளோ பூ, என்னால சுமக்கவே முடியலை அஷ்…” என சுபஷ்வினியிடம் சொல்ல,
“கல்யாணம்ன்னா சும்மாவா? ஒழுங்கா வச்சுக்கோ. இல்லைன்னா அம்மா தொலைச்சிருவாங்க…” என்ற சுபஷ்வினி,
“உன்னை என்ன டெய்லி உன் ம்யூஸிக் க்ளாஸ்க்கா இவ்வளோ பூ வச்சுட்டு போக சொல்றாங்க?…” என்றதும் தான்,
“அடடா மறந்தே போய்ட்டேன் பாரேன். முதல்ல உன் க்ரஷ்க்கு கல்யாணத்தை காமிக்கனும். லாஸ்ட் வரை வரலை பாரேன். ஒரு போன் கூட இல்லை…”
“நீ பண்ணுனியா ஸ்ருதி?…” என்று சுபஷ்வினி கிண்டலுடன் சொல்ல,
“நான் மேடைக்கு போறேன்…” என அவள் பேசியது காதில் விழாதவாறு சென்றுவிட,
“அழுத்தம்… என்றாள் சுபஷ்வினி.
திருமண நிகழ்வுகள் ஆரம்பிக்க முகூர்த்த நேரத்திற்கு சில நிமிடங்கள் முன் ஸ்ருதி தனது மொபைலில் பார்த்திவ்விற்கு அழைப்பு விடுத்தாள்.
காதில் ப்ளூடூத் சொருகப்பட்டு இருக்க வீடியோ காலில் அவன் வர காத்திருக்க அழைப்பு முடியும் முன் ஏற்றிருந்தான் பார்த்திவ்.
“ஹாய் ஸார்…” என்றவளுக்கு எந்தவித பாவனையும் காண்பிக்கவில்லை பார்த்திவ்.
புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க ‘பேசமாட்டாங்களாமா?’ என்று உதடு சுளித்தவள்,
“நான் பேசறது கேட்குதா ஸார்?…” என்றாள்.
அதற்கும் பதிலில்லை அவனிடமிருந்து. ஆமாம் என்று மட்டும் தலையசைத்தான் அவன்.
“உங்களுக்கு கல்யாணத்தை காண்பிக்க தான் கால் பண்ணேன்…” என்றதும் கூட ஒன்றும் சொல்லவில்லை.
குளித்துவிட்டு வந்திருந்தவன் கழுத்தை சுற்றி பூத்துவாலை கிடக்க ஸ்ருதி சொல்லவும் சாவகாசமாய் சாய்ந்தமர்ந்து கொண்டான்.
ஸ்ருதிக்கு அவனின் கோப முகம் என்னவோ போலிருக்க மனதில் இருந்த மகிழ்ச்சி எங்கோ குறைவதை போலிருந்தது.
ஒன்றும் சொல்லாமல் கேமராவை மணமக்கள் பக்கம் செயல்படுத்த திருமாங்கல்யம் மேடைக்கு வந்திருந்தது.
சுபஷ்வினி மேடையில் இருக்க ஸ்ருதி மேடைக்கு அருகில் நின்று இதனை காண்பித்துக்கொண்டிருந்தாள் பார்த்திவ்விற்கு.
தன் கையிலும் அட்சதையை வைத்திருந்தவள் அங்கே திருமணம் நடந்ததும் அட்சதையை தூவிவிட்டு கேமராவை தன் பக்கம் செயல்படுத்த,
“ஓஹ், அதுக்கு என்ன செய்யட்டும்?…” என்றவனின் பேச்சு புதிதாய் இருந்தது.
இவன் என்ன நினைக்கிறான்? ஏன் தன் இந்த கோபம்? என்று எதுவும் தெரியவில்லை.
நிஜமாக தன் மீது தானா? இல்லை அங்கே வேறு எதுவும் பிரச்சனையா எதுவும் தெரியவில்லை.
“அங்க எல்லாம் ஓகே தானே?…” என்றாள் மீண்டும்.
“எல்லாம் ஓகே ம்மா. என்ன பிரச்சனை? நான் வேற ஒரு டென்ஷன்ல இருக்கேன். நீ ஏன் இதை நினைச்சு கன்ப்யூஸ் பண்ணிக்கற?…” என அவள் முகவாட்டம் கண்டு சொல்லவும்,
“ஓஹ்…” என்றவள் இப்போது இன்னும் தெளிந்தாள்.
“அப்போ ஓகே…” என பளிச்சென்று புன்னகைக்க பார்த்திவ்வின் முகத்திலும் அது பிரதிபலித்தது.
“இதை எதையும் நினைக்காம அங்க என்ஜாய் பண்ணு ஸ்ருதி…” என்றான் பார்த்திவ்.
“இந்த ஸ்மைல் அப்பவே வந்திருந்தா நான் ஏன் டென்ஷனாக போறேன்?…” என்றவள் பேச்சில் இதழ்விரியாமல் புன்னகைத்தவன்,
“பை…” என்றான்.
“ஓகே, பை…” என சொல்லிய ஸ்ருதி,
“நான் இன்னும் ரெண்டுநாள் கழிச்சு வருவேன்….” அவன் கேளாமலே சொல்ல,
“ஓகே…” என்றான்.
“நிஜமாவே ஓகே வா?…”
“அப்போ இப்பே கிளம்பி வர சொன்னா வந்திருவியா நீ?…” என்றவன் கேட்ட கேள்வியில் பின்னிருந்த தீவிரம் ஸ்ருதியின் அகக்கண்ணில் பட்டும் படாமலும் பதிந்தது.
“என்ன இப்பவா?…” என்றதும் பார்த்திவ் தலையசைக்க,
“இப்ப எப்படி வர முடியும்?…” என்றவளுக்கு ஒரே குழப்பம்.
“ஸார் நீங்க சொன்னதை திருப்பி அதே டோன்ல சொல்லுங்க….” என்று அவனிடம் கேட்க,
“வேற வேலை இல்லையா? நான் ஸ்டுடியோ கிளம்பனும்…” என்றவன் தானே அழைப்பையும் துண்டித்துவிட்டான் முறைப்புடன்.
“அதான பார்த்தேன். எல்லாம் உன் மன பிராந்தி ஸ்ருதி…” என தன்னையே தட்டிக்கொண்டாள்.
இரு நாட்கள் சொல்லியதை அவள் போல சுபஷ்வினி வீட்டில் இருந்துவிட்டு கிளம்பியிருந்தாள் ஸ்ருதி.
சுபஷ்வினி வர மேலும் நான்கு நாட்கள் ஆகும் என்பதால் அவள் மட்டும் கிளம்பியிருந்தாள்.
வந்து முழுதாய் ஒருநாள் கடந்திருக்கவிலை. ஸ்டுடியோ வரவழைத்துவிட்டான் பார்த்திவ்.
“உங்க அண்ணாவுக்கு அவார்டா குடுக்க போறாங்க? இப்படி கிளாஸ் எடுக்கறார்?…” என சுபாஷிடம் தான் பொங்கிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தாள்.
சுபஷ்வினி வீட்டில் இருந்தவரை உணராத அலுப்பை சென்னை வந்து சேர்ந்ததும் அவள் உணர ஓய்விற்கு உடல் கெஞ்சியது.
“என்னமோ நாளைக்கே என்னை ஆஸ்காருக்கு கூப்பிட போற மாதிரி தீயா வேலை செய்யறார்…” என மூக்கை உரிந்துகொண்டே பார்த்திவ்விடம் சென்றவள் லேசாய் உறங்கி வழிய காய்ச்சி எடுத்துவிட்டான்.
“அலுப்பெல்லாம் மனசுக்கு இல்லை. ரெண்டுமணி நேரம் உன்னால கவனிக்க முடியாதா?…” என கத்த ஸ்ருதியின் காது கருகிவிட்டது அவன் தீட்டிய தீட்டலில்.
“நாளைக்கு ஸாங் ரெக்கார்டிங் இருக்கு. ரிகர்ஸல் பண்ணனும். அதை பத்தி யோசிச்சியா?…”
“இன்னைக்கு பண்ணிடுவேன்…” என அவள் முழிக்க,
“ஈஸிட்?…” என்றவன் என்ன கோபத்தில் இருந்தானோ அவளை பாட வைத்து அத்தனை பிழை கண்டுபிடித்து சுதந்திரமும் இருக்கையில் அத்தனை பேசிவிட்டான்.
“நாளைக்கு மதியம் தான் ரெக்கார்டிங். அதுக்குள்ளே கரெக்ட்டா ப்ராக்டிஸ் பண்ணியிருக்கனும்…” என்று சொல்லிவிட்டு செல்ல,
“சுமானி தேவல…” என்றாள் ஸ்ருதி சுதந்திரத்திடம்.
“சுமானியா?…” என அவர் புரியாமல் கேட்க,
“ப்ச், அச்சோ. அது சுனாமியா? உங்க ஸார் காட்டுன காட்டுல சுனாமி சுமானியாகிருச்சு. நாளைக்கு நீ தான் காப்பாத்தனும் அம்மே…” என்றபடி கிளம்பி சென்றவள் மறுநாள் அதிகாலையே ஸ்டுடியோ வந்து சேர்ந்திருந்தாள் பார்த்திவ்விற்கு முன்பே.